15

15

கிளிநொச்சியில் கண்ணிவெடியகற்றும் வாகனம் தட்புரண்டதில் ஆறு பெண் பணியாளர்கள் படுகாயமடைந்தனர்!

‘ஹலோட்ரஸ்ற்’ நிறுவனத்தின் கண்ணிவெடியகற்றும் வாகனம் ஒன்று நேற்று (15th May 2010) கண்ணிவெடியகற்றும் பணியினை முடித்துக் கொண்டு அலுவலகம் திரும்பும் வழியில், கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தில் வைத்து தடம்புரண்டது. இதன்போது இவ்வாகனத்தில் பயணித்த அறு பெண் பணியாளர்கள் படுகாயமடைந்தனர். ஒன்பது பணியாளர்களை ஏற்றிக்கொண்டு குறித்த வாகனம் சென்று கொண்டிருக்கையில், எதிரே பாடசாலை மாணவர்கள் சென்றதால் சடுதியாக வாகனம் நிறுத்தப்பட்டபோதே இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

படுகாயமடைந்த பெண்பணியாளர்கள் உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதே வேளை, தற்போது வன்னியில் கண்ணிவெடியற்றும் பணிகளில் அதிகளவிலான தமிழ் யுவதிகள் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

”குடாநாட்டில் குற்றச்செயல்கள் தொடருமானால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்” யாழ். படைத்தளபதி

Mahinda_Hathrusinge_Major_Genயாழ். குடாநாட்டில் தொடர்ந்து குற்றச்செயல்கள் இடம்பெற்று வரும் நிலையில் தேவைப்பட்டால் மேலும் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என யாழ்.படைத்தளபதி  மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மக்கள் பீதியும் அச்சமுமின்ற வாழ வசதியாக பாதுகாப்பு விடயத்தில் சில கடும் நடவடிக்கைகளை முன்னெடுக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்.மேல் நீதிமன்றத்தில் நேற்று முற்பகல் நடைபெற்ற சட்டத்தரணிகளுடனான சந்திப்பிலேயே அவர் இவற்றைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:

”குடாநாட்டில் தொடர்ந்து நடைபெறும் குற்றச்செயல்களை முடிவிற்கு கொண்டுவர அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. இச்சம்பவங்களுக்கு காரணமான பலரை கைது செய்துள்ளோம். பொலிசார்  தொடர்ந்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு  வருகின்றனர். இக்குற்றச்செயல்களுக்கு பின்னணியில் இருப்பவர்களைக் கண்டு பிடித்து, சட்டம், ஒழுங்கைப் பேணி, மக்களின் அச்சத்தை நீக்க அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. குடாநாட்டில் சாவகச்சேரி மாணவனின் படுகொலையுடன் ஆரம்பித்து பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.  இதனால் மக்கள் மிகுந்த அச்சத்திற்குள்ளாகி வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

”வன்செயல்களை முடிவிற்கு கொண்டுவருவது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுடன் கலந்தரையாடியுள்ளேன். சட்டம் ஒழங்கை நிலைநாட்டி. மக்களின் அச்சநிலையைப் போக்கி, அவர்களுக்கான இயல்பு வாழ்வினை ஏற்படுத்த ஏற்பாடு செய்யுமாறு அவர் எமக்கு அறிவுறுத்தியுள்ளார். அவரது வழிகாட்டலில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். தற்போது எடுத்துள்ள நடவடிக்கைகள் போதாமல் விட்டால் மேலும் பல நடவடிக்கைளை எடுக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நீதிபதிகளுக்கோ, சட்டத்தரணிகளுக்கோ, வேறு எவருக்குமோ அச்சுறுத்தல் விடுக்கப்பட்டால் அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பை நாம் வழங்குவோம்” என்றும் படைத்தளபதி குறிப்பிட்டார்.

”சட்டத்தரணிகள் தங்கள் பகிஸ்கரிப்பு நடவடிக்கையை நிறுத்தி சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும். இச்செய்தியை உங்களிடம் கூறுமாறு பாதுகாப்புச் செயலாளர் என்னைப் பணித்துள்ளார்” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.  நேற்று நடைபெற்ற இச்சந்திப்பில்; யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி இ.த.விக்னராஜாவும் கலந்து கொண்டார்.

சட்ட விரோத ஆட்கடத்தலை தடுக்க அவுஸ்திரேலியாவில் கடும் சட்டம்

australias.jpgதமது நாட்டுக்கு ஆட்களைக் கடத்தி வருவதைத் தடுப்பதற்காக அவுஸ்திரேலிய அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது.  இதற்கென ‘ஆட்களைக் கடத்துவதற்கு எதிரான சட்டமூலம் 2010’ அறிமுகப் படுத்தப்படுகிறது. இதன்மூலம், ஆட்களைக் கடத்தும் சம்பவங்களைப் பல்வேறு அணுகுமுறைகள் மூலம் கையாள்வதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு வழி வகுக்கப்படுகிறது.

அவுஸ்திரேலிய சட்ட மா அதிபர் றொபர்ட் மெக்கலண்ட் எம்.பி, குடிவரவு மற்றும் பிரஜாவுரிமை விவகாரங்களுக்கான அமைச்சர் செனட்டர் கிறிஸ் ஈவன்ஸ், உள்துறை அமைச்சர் பிரண்டன் ஓ ‘ கொனர் எம்.பி. ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் ஆட்கடத்தலைக் கட்டுப்படுத்து வதற்கான சட்ட மூலத்தை விபரித்துள்ளனர்.

புதிய சட்ட மூலத்தின் பிரகாரம், அவுஸ்திரேலிய பாதுகாப்புப் புலனாய்வுத் துறையினருக்கு, ஆட்கடத்தல் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள முடியும்.  தவிரவும், ஆட்கடத்தலுக்கு நிதியுதவி அளிப்பது ஆதரவளிப்பதும் பாரதூரமான குற்றமாகக் கருதப்படும்.

அவ்வாறு உதவிபுரிந்து குற்றவாளியாகக் காணப் படுபவருக்கு 10 ஆண்டு கடூழியச் சிறைத் தண்டனையோ அல்லது 110,000 டொலர் அபராதமோ அல்லது இரண்டு தண்டனையுமோ விதிக்கப்படும்.

கடத்தலில் ஈடுபடுவதுடன் அவர்களிடம் பணம் பரித்தல் உயிராபத்தை ஏற்படுத்தல் அல்லது கடுமையான பாதிப்புகளை உண்டுபண்ணுவோருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனையோ அல்லது 2,20,000 டொலர் அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படும்.

வெள்ளத்தில் மூழ்கிய தலைநகர் – இயல்பு நிலை ஸ்தம்பிதம்

9colombo.jpgகொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் நேற்று (14) இரவு முதல் தொடர்ச்சியாக பெய்த கடும் மழையின் காரணமாகவும் பலத்த காற்றின் காரணமாகவும் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. மேல் மாகாணத்திலும் தென் மாகாணத்திலும் கூடுதலான பாதிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இடி, மின்னல் காரணமாகவும் பலத்த காற்றின் காரணமாகவும் வீடுகளும் இதர கட்டடங்களும் சேதமாகியுள்ளன. அதில் ஒருவர் உயிரிழந்து பலர் காயமுற்றுள்ளனர். வீதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்ததனாலும் வெள்ளப் பெருக்கினாலும் போக்குவரத்துகள் ஸ்தம்பிதமடைந்தன.

கொழும்பு நகரின் பல வீதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அன்றாட அலுவல்கள் ஸ்தம்பிதமடைந்தன. வீதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டு பல மணிநேரம் போக்குவரத்துகள் முடங்கின. பொதுமக்கள் பெரும் அசெளகரியத்திற்கு உள்ளானதோடு, அரச, தனியார் அலுவலகப் பணியாளர்கள் கடமைகளுக்குச் செல்ல முடியாமல் அவதியுற்றதைக் காண முடிந்தது.

சனப்புழக்கம் கூடுதலாக உள்ள கேந்திர முக்கியத்துவமான வியாபார வீதிகளில் வர்த்தக நிலையங்கள் பல மூடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. கடைகளுக்குள் வெள்ளம் புகுந்ததால், பொருள் சேதமும் ஏற்பட்டிருந்ததையும் காண முடிந்தது. சில பாடசாலைகள் மூடப்பட்டதுடன், இயங்கிய பாடசாலைகளில் மாணவர்கள் வரவு குறைவாகக் காணப்பட்டது. நேற்றுப் பிற்பகல் வரை கொழும்பு நகரில் இந்த ஸ்தம்பித நிலை நீடித்தது.

கொழும்பில், கொட்டாஞ்சேனை, ஜோர்ஜ் ஆர். டி. மாவத்தை, ஆமர் வீதி, ஹெட்டியாவத்தை, புலுமெண்டல் வீதி, ஜம்பட்டா வீதி, கிராண்ட்பாஸ், தெமட்டகொட பேஸ் லைன் வீதி, தர்மராஜ வீதி, கிருலப்பனை பொலிஸ் நிலையம் முன்பாக உள்ள பகுதி, கறுவாத்தோட்ட பகுதியில் பல்கலைக்கழக வீதி, தேஸ்டன் கல்லூரி வீதி, பிளவர் வீதி, ஹோர்டன் வீதி, உட்பட பல வீதிகள் நீரில் மூழ்கியிருந்தன. இதனால் காலை வேளையில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

களுத்துறை பகுதியில் கொழும்பு- மத்துகம வீதி, வெலிபென், ஹொரன, பன்னல, அளுத்கம- மதுகம வீதிகள் நீரில் மூழ்கின. கம்பஹா, காலி ஆகிய பகுதிகளிலும் பல வீதிகள் நீரில் முழ்கியதால் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டன. மாலபே- கண்டி வீதி பியகம வீதி என்பனவும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டன.

மேல் மாகாணத்தில் ஓரிரு தினங்கள் தொடர்ந்து காலை வேளையில் மழை பெய்யும் என எதிர்பார்ப்பதாகவும் நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை வேளைகளில் மழையை எதிர்பார்ப்பதாகவும் காலநிலை அவதான நிலையம் கூறியது. இதேவேளை மின்னல் தாக்கியதில் கொழும்பு பெரியாஸ்பத்திரியின் ஒரு பகுதி கூரை சேதமாகியுள்ளது.

9colombo.jpg

நுவரெலியா மாவட்டத் தமிழ் எம்.பி.க்களின் கவனத்துக்கு : த.மனோகரன்

up-country.jpgமத்திய மாகாணத்திற்குட்பட்ட நுவரெலியா மாவட்ட மொத்த மக்கள் தொகையில் 60 வீதத்திற்கும் அதிகமானவர்கள் தமிழர்கள் என்பது எவரும் அறிந்ததே. யாழ்ப்பாண மாவட்டத்திற்கு அடுத்ததாக நுவரெலியா மாவட்டத்திலிருந்தே அதிகமான தமிழர்கள் நடந்து முடிந்த பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ளனர். அதாவது, ஆளும் கட்சி சார்பில் மூவரும் எதிர்க்கட்சி சார்பில் இருவரும் தெரிவாகியுள்ளனர். அத்துடன், ஆளும்கட்சி, எதிர்க்கட்சி சார்பாக நுவரெலியா மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடியதாக தலா ஒருவர் வீதம் இருவர் தேசியப் பட்டியல் மூலம் நியமனம் பெற்றுள்ளனர். அதன்படி நுவரெலியா மாவட்டத் தமிழ்மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடியதாகப் பாராளுமன்றத்தில் ஏழு பிரதிநிதிகள் உள்ள அதேவேளை, அவர்களில் ஒருவர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகவும் ஒருவர் பிரதியமைச்சராகவும் உள்ளனர்.

மேலும், இம்மாவட்டத்திலுள்ள அம்பகமுவ, நுவரெலியா, கொத்மலை, வலப்பனை, ஹங்குரங்கெத்த ஆகிய ஐந்து பிரேதசசபைகளில் அம்பகமுவ, நுவரெலியா ஆகிய இரு பிரதேசசபைகளின் தலைவர்களாகத் தமிழர்களே பதவியிலுள்ளதுடன், சகல பிரதேசசபைகளிலும் கணிசமான தமிழர்கள் அங்கம்வகிக்கின்றனர்.

அத்துடன், மாவட்டத்திலுள்ள ஒரே மாநகரசபையான நுவரெலியா மாநகரசபையின் பிரதி முதல்வராகத் தமிழர் ஒருவரே செயற்படுவதுடன், மாவட்டத்தில் இரு நகரசபைகளான அட்டன் டிக்கோயா மற்றும் லிந்துல தலவாக்கலை ஆகிய நகரசபைகளின் தலைவர்களாகவும் தமிழர்களே உள்ளனர்.

அரசியல் அமைப்புகளில் மக்களின் பிரதிநிதிகளாக இடம்பெற்று செயற்படுவதானது, தாம் சில பதவிகளைப் பெற்றுக்கொள்வது என்ற கருத்து நாட்டில் பரவலாக அரசியல்வாதிகளிடமுள்ளது. இது மறுக்கவோ, மறைக்கவோ முடியாத உண்மை நிலை.

அரசியல் அமைப்புகளில் மக்களின் பிரதிநிதிகளாக அவர்களது வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டவர்கள் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கவும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்து உறுதிப்படுத்தவும் செயற்பட வேண்டும். அதுவே அவர்களின் பொறுப்பு. அதற்காகவே மக்கள் அவர்களைத் தம்சார்பாகத் தமது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்துள்ளனர் என்பது புரிந்துகொள்ளப்பட வேண்டும்.

நுவரெலியா மாவட்டத்தின் தமிழ்மக்களால் பாராளுமன்றத்திற்கும் மாகாணசபைக்கும் மாநகர, நகர, பிரதேசசபைகளுக்கும் தமது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ஒவ்வொருவரும் தமிழ்மக்களின் மொழி, கல்வி, தொழில், சுகாதாரம், இருப்பிடம் உட்பட பல அடிப்படை விடயங்களில் கவனம் செலுத்த வேண்டிய கடப்பாடு கொண்டவர்கள்.

அவர்களுக்குரிய கடப்பாட்டில் மொழியுரிமையைப் பேணுவது முக்கிய இடம் வகிக்கின்றது. இந்த நாட்டின் அரசகரும மொழிகளில் தமிழ்மொழியும் ஒன்று. ஒரு தமிழர் தனது அரசாங்கத் தொடர்புகளையும் அன்றாடக் கடமைகளையும் தமிழ்மொழியில் ஆற்றிக்கொள்ளும் உரிமை அரசியலமைப்பின் கீழ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், அரசியலமைப்பால் வழங்கப்பட்டுள்ள இந்த மொழியுரிமையை மேலும் வலியுறுத்தும் முகமாக நுவரெலியா மாவட்டத்தின் ஐந்து பிரதேசசபைகளின் எல்லைக்குள்ளும் தமிழ் மொழியை நிர்வாக மொழியாகச் செயற்படுத்த வேண்டுமென்று விசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, நுவரெலியா, அம்பகமுவ, வலப்பனை, கொத்மலை, ஹங்குரங்கெத்த ஆகிய நுவரெலியா மாவட்டத்திலுள்ள ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளிலும் தமிழ்மொழி நிர்வாக மொழியாகச் செயற்படுத்தப்படவேண்டுமென்று 1999 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் திகதி 1105/25 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கு முன்பே பொது நிர்வாக அமைச்சு ஊடாக பல்வேறு தமிழ்மொழியின் செயற்பாடு தொடர்பான சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்மொழியின் நிர்வாக உரிமை தொடர்பாகவும் செயற்படுத்தும் முறைமை தொடர்பாகவும் தெளிவான விளக்கங்கள், வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளபோதும் நடைமுறையில் தமிழ்மொழிப் புறக்கணிப்பு ஏன் இடம்பெறுகின்றது என்பது பற்றி ஆராயவேண்டும். இதற்கு முதற்படியாகத் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் நுவரெலியா மாவட்டத்தைக் கவனத்தில் கொள்வது பொருத்தமாயமையும்.

நுவரெலியா மாவட்டத்திலுள்ள சகல அரச அலுவலகங்களிலும் மொழிப் பிரச்சினையால் தமிழ்மக்கள் பல்வேறு சிரமங்களுக்குள்ளாகின்றனர். அரச அலுவலகங்களில் பணி புரிபவர்கள் சிங்கள மொழி மூலம் பணியில் சேர்ந்தவர்கள், உயர் அதிகாரிகளும் அவ்வாறே இந்நிலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பணியாற்றும் தமிழ் அலுவலர்கள் தமிழ்மொழியில் கடமையாற்றும் வாய்ப்போ வசதியோ அற்றவர்களாக வெறும் தொடர்பு அலுவலராகவே அதாவது, மொழி பெயர்ப்பாளர்களாகச் செயற்படவேண்டியுள்ளது.

மாநகர,நகரப் பிரதேசங்களின் நிலையும் அதுவே.  தமிழர்கள் அரசியல் ரீதியாக குறிப்பிட்ட அரசியல் அமைப்புகளில் அதிகாரம் செலுத்தினாலும் நிர்வாக மொழியாகத் தமிழை நடைமுறைப்படுத்த முடியாத நிலையில் கையாலாகாத நிலையிலேயே உள்ளனர்.மேற்படி அமைப்புகளில் அதிகாரம் செலுத்தும் தகைமையில் உள்ளவர்கள் இது தொடர்பில் சிந்திக்கவேண்டும்.அதிகாரம் செலுத்தச் சட்டப்படி உரிமையிருந்தும் ஏவலாளாக இருப்பது சமூகத்தின் மதிப்பை கீழிறக்கம் செய்துவிடும். ஏனையவர்கள் ஆளும் இனமாகவும் சட்டப்படி உரிமைகளிலிருந்தும் தமிழர்கள் ஆளப்படும் இனமாகவும் கருதப்படுவது மட்டுமல்ல, கொள்ளப்படவும் வழியமைத்துவிடும். தற்போது நடைமுறையில் நுவரெலியா மாவட்டத்தில் தமிழர்கள் அரசியல் ரீதியாகக்கூடிய பிரதிநித்துவங்களைக் கொண்டவர்களாகவிருந்த போதும் யதார்த்த நிலையில் மொழியுரிமை இழந்து ஆளப்படும் மக்கள் கூட்டமாகவேயுள்ளனர்.

அரசியல் தனிப்பட்ட கொள்கை வேறுபாடுகளுக்கப்பாலிருந்து நுவரெலியா மாவட்டத் தமிழ்மக்களின் அடிப்படை உரிமையான மொழியுரிமையை எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம், பேணலாம், உறுதிப்படுத்தலாம் என்பது தொடர்பில் சகல தமிழ்மக்கள் பிரதிநிதிகளும் கவனம் செலுத்த வேண்டும். பொறுப்புணர்ந்து செயற்பட மக்கள் பிரதிநிதிகள் முன்வருவார்களா?

நன்றி: தினக்குரல்

இந்தியாவில் புலிகள் இயக்கம் மீதான தடை மேலும் 2 ஆண்டுகள் நீடிப்பு

எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தின் மீதான தடையை இந்திய அரசாங்கம் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடித்துள்ளது. புலிகள் இயக்கத்தினர் தமிழ்நாட்டில் தங்களது செயற்பாட்டை மீளமைக்க முயல்வது தொடர்பாக புலனாய்வுத் துறையினருக்குக் கிடைத்த தகவல்களை யடுத்து இந்த நீடிப்புச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1992ம் ஆண்டு முதல் இந்தியாவில் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டைத் தளமாகக் கொண்டு புலிகள் இயக்கம் மீண்டும் செயற்படத் தொடங்குவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக இந்திய உளவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையிலிருந்து 2800 பேருக்கு ஹஜ் அனுமதி வழங்க உறுதியளிப்பு – 8000 பேர் அனுமதி குறித்து சவூதி ஆலோசனை

hajj.jpgஹஜ் முன்னேற்பாடுகளை கவனிப்பதற்காக சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்த அமைச்சர் ஏ. எச். எம். பெளஸி தலைமையிலான குழு சவூதி அரேபிய ஹஜ் விவகார அமைச்சர் பவுட் பின் அப்துல் சலாம் அல் பாஸியை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளது.

இதன் போது இலங்கையிலிருந்து 2800 பேருக்கு ஹஜ் கடமையை நிறைவேற்ற ஹஜ் கோட்டா வழங்குவதாக சவூதி அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

ஆனால் இலங்கையில் இருந்து 8 ஆயிரம் பேரை ஹஜ் கடமையை நிறைவேற்ற அனுமதிக்குமாறு அமைச்சர் பெளஸி கோரியுள்ளார். இது குறித்து உயர் மட்டத்துடன் கலந்துரையாடி அறிவிப்பதாக சவூதி அமைச்சர் உறுதியளித்துள்ளார். இதேவேளை அமைச்சர் பெளஸி சவூதி அமைச்சருடன் ஒப்பந்தமொன்றிலும் கைச்சாத்திடவுள்ளார்.

நுவரெலியா தோட்டத்தில் ரோனடோ சூறாவளி – ஒருவர் பலி, வீடுகள் சேதம்

lightning-01.jpgநுவரெலியா நெஸ்லி தோட்டத்தில் நேற்று திடீரென ஏற்பட்ட ரோனடோ சூறாவளியினால் ஆறு வீடுகள் சேதமடைந்ததோடு ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 36 வயதுடைய உதயகுமார் என அடையாளங் காணப்பட்டுள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் நேற்று இலேசான மழை பெய்து கொண்டிருந்தது. நண்பகல் இரண்டு மணியளவில் திடீரென ரொனடோ சுழல்காற்று ஏற்பட்டது. இதில் வீடுகள் தூக்கி வீசப்பட்டதோடு மின்கம்பங்களும் பாதிக்கப்பட்டன. இந்த வேளையில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த உதயகுமார் மீது வீட்டுச் சிதைவுகள் மோதி வெட்டியதிலேயே உயிரிழந்தாரென பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

நுவரெலியா மாவட்ட எம்.பி. வே. இராதாகிருஷ்ணன் ஸ்தலத்திற்கு விரைந்து நிலைமைகளை ஆராய்ந்ததோடு பாதிக்கப்பட்டோருக்கு உலர் உணவு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தார்.