12

12

பலாலி ஆரோக்கிய அன்னை ஆலயத்திற்கு மக்கள் செல்ல 20 வருடங்களின் பின்னர் படையினரால் அனுமதிக்கப்பட்டுள்ளது!

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் திருவிழா நடத்த அப்பகுதி மக்களுக்கு சிறிலங்கா பாதுகாப்புப் படையினர் அனுமதி வழங்கியுள்ளனர். சுமார் 20 வருடங்களின் பின் எதிர்வரும் 15ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு திருவிழாத் திருப்பலி நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது. இருபது வருடங்களின்  பின்னர் இந்த ஆலயத்திற்குச் செல்ல மக்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது. மக்கள் கடற்கரை வீதியால் தொண்டைமானாறு ஊடாக பயணிப்பதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. இத்திருவிழா உற்சவத்தில் பங்கு கொள்ள விரும்புகின்றவர்கள் அன்றைய தினம் காலை 6.30 மணிக்கு தொண்டைமானாறு சந்தியில் ஒன்று கூடுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் தொடரும் குற்றச்செயல்கள்!

வடமராட்சி மாணவி ஒருவர் இனந்தெரியாத சிலரால் வானில் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டுள்ளார். வல்லைவெளிப் பற்றையொன்றிற்குள் மயங்கிய நிலையில் பெண்ணொருவர் மீட்கப்பட்டுள்ளார்.

வடமராட்சி மகளிர் கல்லூரி ஒன்றில் உயர்தர வகுப்பில் பயிலும் மாணவியொருவர் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில், அடி காயங்களுடன் நேற்று செவ்வாய் கிழமை மாலை 5 மணியளவில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  பருத்தித்துறை ஆத்தியடியைச் சேர்ந்த மாணவியான சண்முகராஜா அனுசியா (வயது 18) என்ற மாணவிக்கே இந்நிலை ஏற்பட்டது. வான் ஒன்றில் வந்தவர்கள் இவரை பலவந்தமாக அதில் ஏற்றிச்சென்று, கடுமையாக தாக்கிய பின் பருத்தித்துறை சாரையடிப் பகுதியில்  தள்ளி விழுத்திவிட்டுச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் நால்வர் தொடர்பு பட்டிருப்பதாகவும், அவர்கள் அம்மாணவியின் வாயினுள் திராவகம் ஒன்றை பருக்கியதாகவும், மாணவி கூக்குரலிடவே அவரைத்  தள்ளி விழுத்தி விட்டுச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது இது கடத்தல் சம்பவமா அல்லது தனிப்பட்ட பிரச்சினையா என்பது தெரியவரவில்லை.

இது இவ்வாறிருக்க, வல்லை வெளியில் பற்றை ஒன்றிற்குள் காயங்களுடன் மயங்கிய நிலையில் பெண்ணொருவர் மீட்கப்பட்டுள்ளார். அவ்வழியால் சென்றவர்களின் தகவலையடுத்து அச்சுவேலி பிரதேச வைத்தியசாலை அம்புலன்ஸ் மூலம் இப்பெண் மீட்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று முற்பகல் 10 மணியளவில் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த  குறித்த பெண் வழங்கிய தகவலில், தான் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து, நலன்புரி முகாமில் தங்கியிருந்து விட்டு பின் கரவெட்டிப் பகுதியில் வசித்து வந்ததாகவும்,  கடந்த திங்கள் கிழமை காலை வீதியில் தன்னை வழிமறித்த நான்குபேர் வான் ஒன்றில் கடத்திச் சென்றதாகவும், செவ்வாய்கிழமை கண்விழித்து பார்த்த போது பற்றையொன்றில் கிடப்பதை உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார். இவரின் கழுத்து, பிடரிப் பகுதிகளில் சிறிய கத்தியொன்னிறனால் கீறப்பட்ட காயங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில்  இப்பெண்மணி வழங்கிய முறைப்பாட்டில் அவரின் பெயர் வி.லங்காதேவி வயது 37 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரிட்டனின் புதிய பிரதமர் டேவிட் கேமரன்

britton-1.jpgபிரிட்டனின் புதிய பிரதமாராக செவ்வாய்க்கிழமை பதவியேற்ற கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் டேவிட் கேமரன் புதிய கூட்டணி அமைச்சரவை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். கன்சர்வேடிவ் கட்சி தலைமையில் கூட்டணி அரசில் சேரும் லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவர் நிக் க்ளெக் துணைப்பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கன்சர்வேடிவ் கட்சியின் ஜார்ஜ் ஒஸ்போர்ன் நிதி அமைச்சராகவும், கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த வில்லியம் ஹேக் வெளியூறவுத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பெரும்பாலான அறிவிக்கப்பட்ட அமைச்சுப் பதவிகள் கன்சர்வேடிவ் கட்சி தலைவர்களுக்கே கிடைத்துள்ளன.

லிபரல் ஜனநாயகக் கட்சிக்கு துணைப்பிரதமர் உட்பட ஐந்து கெபினட் இடங்கள் கிடைக்கும் என்று தெரியவருகிறது 

கடற்கொள்ளையர் விடுவித்த 20 இலங்கையர்களுடன் இலங்கை அதிகாரிகள் சந்திப்பு.

somali_pirates.jpgசோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட பின்னர்  நேற்று விடுவிக்கப்பட்ட 20 இலங்கையர்களும் ஓமானிலுள்ள இலங்கை அதிகாரிகளைச் சந்தித்துள்ளனர் என்று வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. அவர்களுக்கான அனைத்து வசதிகளும் அந்நாட்டிலுள்ள இலங்கைக்கான தூதுவராலயத்தினால் செய்துகொடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரியொருவர் கூறினார்.

கடந்த மார்ச் 23ஆம் திகதி சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டிருந்த இக் கப்பலில் 20 இலங்கையர்கள் உட்பட 22பேர் பயணித்திருந்தனர்.

கடற்கொள்ளையர்களால் கேட்கப்பட்டிருந்த பணம் கொடுக்கப்பட்டதை அடுத்து கப்பலையும் கப்பலில் இருந்தவர்களையும் கடற்கொள்ளையர்கள் விடுதலை செய்தமை குறிப்பிடத்தக்கது.

இராணுவ வெற்றி வாரம் : நியாயம் இல்லை – ஜயலத் ஜயவர்தன

dr-jayalat.jpg“ஆயிரக் கணக்கான மக்கள் நிவாரண கிராமங்களில் சுதந்திரம் இன்றித் தவித்துக்கொண்டிருக்க, மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் இராணுவ வெற்றியை கோலாகலமாகக் கொண்டாடுகிறது. ஓர் இனம் அந்நியப்படுத்தப்பட்டிருக்கையில் நாட்டின் வெற்றி எனக் கொண்டாடுவது எந்த வகையில் நியாயம்?” என ஐக்கிய தேசிய கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன கேள்வி எழுப்பியுள்ளார்..  அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“நாட்டுக்குச் சுதந்திரம், விடுதலை கிடைத்து விட்டதாக அரசாங்கம் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்துள்ளது. யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் உள்ளவர்கள் இன்னும் மீள்குடியேற்றப்படவில்லை. அவர்களுக்கு சுதந்திரம் கொடுக்காமல் முழு நாட்டுக்குமான விடுதலை என எவ்வாறு கூற முடியும்?  தமிழ் மக்களும் இந்த நாட்டின் பிரஜைகள் என்பதை அரசாங்கம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்” என்றார்.

கொழும்பில் போக்குவரத்து நடைமுறையில் மாற்றம்!

gall-face.jpgதேசிய படைவீரர் வாரத்தை முன்னிட்டு கொழும்பில் நடைபெறவுள்ள யுத்த வெற்றிக் கொண்டாட்டம் மற்றும் அதற்கான ஒத்திகை நிகழ்ச்சிகளின் போது போக்குவரத்து நடைமுறையில் மாற்றங்களை ஏற்படுத்த பொலிஸ் போக்குவரத்து பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, கொள்ளுப்பிட்டி சந்தியிலிருந்து ஹில்டன் ஹோட்டல் வரையான காலி முகத்திடல் வீதி, யுத்த வெற்றிக் கொண்டாட்ட ஒத்திகைகளுக்காக நாளை முதல் காலை 6 மணியிலிருந்து  பிற்பகல் 2 மணி வரையில் மூடப்படவுள்ளது.

இதேவேளை, பஸ் வண்டிகளும் கனரக வாகனங்களும் கொள்ளுப்பிட்டி பித்தளைச் சந்தியினூடாக கொம்பனித் தெருவுக்கு வந்து அங்கிருந்து கோட்டைக்கும் புறக்கோட்டைக்கும் செல்ல முடியும். இந்த நடைமுறை நாளை முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் பின்பற்றப்படும் என்று பொலிஸ் போக்குவரத்து பிரிவு அறிவித்துள்ளது.

தேசிய படைவீரர் வாரம் – முதல் கொடி ஜனாதிபதிக்கு அணிவிப்பு

z_p_ranawiru_kodi.jpgதேசிய படைவீரர் வாரத்தை ஆரம்பிக்கும் முகமாக முதல் கொடியை அணிவிக்கும் நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் நேற்று நடைபெற்றது.

முகமாலை யுத்தத்தின் போது உயிர் தியாகம் செய்த சார்ஜன் சந்ரசிறியின் புதல்வன் வருன ரஷ்மின் முதல் கொடியை ஜனாதிபதிக்கு அணிவித்தார்.

தாய் நாட்டின் ஒருமைப்பாடு இறைமை மற்றும் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காக பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்க உயிரைத் தியாகம் செய்த படை வீரர்களை கௌரவிக்கும் முகமாக தேசிய படை வீரர் வாரம் கொண்டாடப்படுகிறது.  தேசிய படை வீரர் வாரம் நேற்று ஆரம்பமானதுடன் எதிர்வரும் 18 ஆம் திகதி தேசிய படைவீரா; தினமாகும்

மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையப் போவதில்லை : காதர்

cadar.jpgமீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையப் போவதில்லை என கண்டி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் காதர் தெரிவித்துள்ளார்.
 
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சுய விருப்பின் அடிப்படையில் செயற்பட்டு வருவதாகவும், இதனால் கட்சிக்கு நன்மைகள் கிட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி தனி ஒரு நபரின் கட்சியாக உருவெடுத்துள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் ஒரு கண்கட்டி வித்தை எனவும், மாற்றங்கள் எதுவும் நிகழப்போவதில்லை எனவும் காதர் தெரிவித்துள்ளதாக லக்பிம செய்தி வெளியிட்டுள்ளது. கட்சியில் பாரிய பிரச்சினை எழுந்துள்ளதாகவும், எந்த சந்தர்ப்பத்திலும் கட்சித் தலைமையுடன் இணைந்துகொள்ளப் போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பார்வதி அம்மாள் இலங்கை திரும்பினார்

parwathy.jpgவிடு தலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயாரான பார்வதி அம்மாள் மலேசியாவிலிருந்து இலங்கை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பகிறது

பார்வதி அம்மாள் சிகிச்சை பெறுவதற்காக இந்தியாவுக்குச் செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட போதும், இந்திய மத்திய அரசு நிபந்தனைகளின் அடிப்படையில் அவருக்கான அனுமதியை வழங்கியுள்ளது. இந்நிலையில் மலேசியா, ஆறு மாத தங்குமிட விசாவை வழங்கி சிகிச்சை பெற அனுமதியளித்திருந்தது.

களனி விஹாரையில் கடத்தப்பட்ட குழந்தை மாரவிலயில் மீட்பு – பின்னணியை கண்டறிய பொலிஸ் தீவிர விசாரணை

kalaniya.jpgகளனி விஹாரையில் ஞாயிறன்று வயதான பெண்மணியால் கடத்தப்பட்ட 2 1/2 வயது குழந்தை மாரவில பகுதியில் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார். அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் மிக பொறுப்பாக செயற்பட்டதன் காரணமாகவும் பொலிஸாரின் தீவிர முயற்சியின் பயனாகவும் 48 மணி நேரத்துள் குழந்தையை மீட்க முடிந்தது என பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய நேற்று தெரிவித்தார்.

2 1/2 வயது செனுரி லிமன்சா மாபலகம என்ற குழந்தையும் அவரது பெற்றோரும் நேற்று பொலிஸ் தலைமையகத்துக்கு வரவழைக்கப்பட்டதுடன் ஊடகவியலாளர் சந்திப்பிலும் கலந்துகொண்டனர். குழந்தையை கடத்திச் சென்ற பெண் தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட மாரவில, மற்றும் கல்கிஸை பகுதி தொலைபேசி இலக்கங்கள் தொடர்பாகவும் கடத்தியதன் நோக்கம் தொடர்பாகவும் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.

கடந்த ஞாயிறன்று களனி விஹாரையில் போதி பூஜைக்காக சென்றபோது குழந்தையை கடத்திச் சென்ற பெண், குழந்தையை விற்பதற்காக சென்றாரா அல்லது எவருடையதாவது தூண்டுதலின் பேரில் செய்தாரா என்பது பற்றி தீவிர விசாரணைகள் செய்யப்படுகின்றன. தன்னுடன் விஹாரையில் போயா தின சில் அனுஷ்டானத்தில் ஈடுபடும் மற்றுமொரு பெண்ணின் வீட்டிலேயே ஞாயிறு இரவு குழந்தையுடன் தங்கியுள்ளார்.

மறுநாள் காலை களனிபட்டிய ஹந்திய எனும் இடத்திலுள்ள தொலைத்தொடர்பு நிலையமொன்றில் இரண்டு தொலைபேசி அழைப்புகளை எடுத்துள்ளார். இத்தொலைபேசி இலக்கங்களையும் பொலிஸார் பதிவு செய்துள்ளனர்.

மாரவில பகுதி வீடொன்றுக்குச் சென்ற பெண் குழந்தைக்கு ஒரு சோடி செருப்பு வேண்டும் என கேட்டுள்ளார். அந்த வீட்டிலிருந்த இளைஞனுக்கு பெண் தொடர்பாக சந்தேகம் எழுந்துள்ளதுடன் குழந்தை யார்? உங்களுக்கு எவ்வாறு கிடைத்தது எனக் கேட்டுள்ளார். எனக்கு தெரிந்த ஒருவர் குழந்தையை தந்தார் எனக் பெண் கூறியதும் சந்தேகம் வந்தவுடன் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் வெளியான குழந்தைதான் இது என ஊர்ஜிதம் செய்த பின் முச்சக்கர வண்டியொன்றின் மூலம் பெண்ணையும் குழந்தையையும் மாரவில பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

மிகவும் பொறுப்புடன் செயற்பட்ட மேற்படி இளைஞனை பாராட்டியதுடன் பொலிஸ் திணைக்களம் அறிவித்த பரிசுத் தொகையையும் வழங்க நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.  கடந்தப்பட்ட குழந்தையின் பாட்டனார் நோய்வாய்ப்பட்டிருந்ததன் காரணமாகவே போதி பூஜை செய்வதற்கு களனி விஹாரைக்கு சென்றுள்ளனர். குழந்தை கடத்தப்பட்ட விடயம் கேள்வியுற்ற பாட்டனர் மரணமாகியதாகவும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

தங்களது மகளை மீட்பதற்காக பூரண ஒத்துழைப்பை வழங்கிய ஊடகங்களுக்கும், குழந்தையை மீட்க உடனடியாக செயற்பட்ட மாரவில இளைஞருக்கும் பொலிஸாருக்கும் பெற்றோர் நன்றிகளை பொலிஸ் தலைமையகத்தில் வைத்து தெரிவித்துக் கொண்டனர்.