06

06

போர் முடிவுற்று ஒரு வருடமாகின்ற போதும், போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்வு வழமைக்குத் திரும்பவில்லை!

House_Without_Roofவிடுதலைப் புலிகள் வெற்றி கொள்ளப்பட்டு, போரை முடிவிற்குக் கொண்டு வந்து ஒரு வருடம் பூர்த்தியாகின்றது. இவ்வெற்றியை சிறிலங்கா அரசாங்கம் தற்போது கொண்டாடுகின்றது. ஆனால், போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலத்திட்டங்களை மேற்கொள்வதில் அரசாங்கம் துரித செயற்பாடுகளை மேற்கொள்ள வில்லை என போரினால் பாதிக்கப்பட்ட வன்னி மக்கள் தெரிவிக்கின்றனர். வன்னியின் மேற்குப் பகுதிகளில் மீள் குடியேற்றப் பணிகள் இன்னமும் முழுவதுமாக நிறைவடையவில்லை. அதாவது கிளிநொச்சியின் ஏ-9 பிரதான பாதையின் மேற்குப் பக்கமாக மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். எனினும்,  அங்கு சில பகுதிகளில் இன்னமும் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. தற்போது கிளிநொச்சியின் கிழக்குப் பகுதிகளில் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

திருவையாறு, வட்டக்கச்சி போன்ற பகுதிகளிலுள்ள மக்கள் தற்போது அவரவர்களின் காணிகளில் குடியமர்த்தப்படும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு மீள் குடியமர்த்தப்படும் மக்கள் வவனியா முகாம்களிலுள்ளவர்களும், முகாம்களிலிருந்து ஏற்கனவே வெளியேறி வவுனியாவில் உறவினர், நண்பர்கள் விடுகளில் தங்கியிருந்தவர்களுமாவர். இறுதிக்கட்டப் போரின் போது, இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் வீடுகளின் கூரைகளைக் கழற்றித் தம்முடன் கொண்டு சென்றதுடன், வீட்டு உடமைகளையும் முடிந்தவரையில் எடுத்துச்சென்றனர். போர் தீவிரமான போது, மக்கள் அடுத்தடுத்து இடம்பெயர வேண்டியிருந்த போது, சகல உடமைகளையும் விட்டு விட்டு வெறுங்கையுடனேயே சென்றனர். சிலர்  உடமைகளை தங்கள் வீடுகளிலேயே விட்டுச்சென்றனர். தற்போது அவர்கள் மீளக் குடியமர்த்தப்பட்டு வரும் நிலையில் தங்களின்  உடமைகள் வீட்டுக்கூரைகள் என்பன களவாடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

House_Without_Roofஇதே வேளை, இன்னமும் மீள் குடியமர்த்தப்படாதுள்ள சில இடங்களிலிருந்து மக்கள் விட்டுச்சென்ற அவர்களின் உடமைகளை எடுத்த வருவதற்கு தற்போது படையினரால் அனுமதி வழங்கப்பட்டு வருகின்றது. ஆனாலும், அப்பகுதிகளுக்குச் செல்லும் மக்கள் தங்கள் உடமைகள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கின்றனர். சிலர் எஞ்சியுள்ள பொருட்களை வாகனங்களில் ஏற்றி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

யாழ் குடாநாட்டின் சட்டம், ஒழுங்கு குறித்த மாநாடு நீதிபதி விக்னராஜா தலைமையில் நடைபெற்றுள்ளது.

Judge_R_T_Vignarajaயாழ்.குடாநாட்டில் நடைபெறுகின்ற குற்றச்செயல்களைத் தடுத்து, சட்டம், ஒழுங்கு தொடர்பில் தற்போதுள்ள நிலை பற்றி ஆராய்ந்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள யாழ்.மேல் நீதிமன்ற நீதவான் விக்னராஜா தலைமையில் மாநாடு ஒன்று இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. யாழ் நிதிமன்றக் கட்டடத்தொகுதயில் நடைபெற்ற இம்மாநாட்டில் குடாநாட்டில் பணியாற்றும் நீதிபதிகள், சட்டத்தரணிகள், வடமாகாணப் பிரதி பொலிஸ்மா அதிபர், சகல பொலிஸ் நிலையங்களினதும் பொறுப்பதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். குடாநாட்டில் சட்டம், ஒழுங்கு நடவடிக்கைகளில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து இம்மாநாட்டில் விரிவாக ஆராயப்பட்டது. சட்டம், ஒழங்குமீறல்களுக்கெதிராக முறையான நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும் ஆராயப்பட்டது.  பொதுமக்களின் இயல்பு வாழ்வை சீர்குலைக்கும் சக்திகளுக்கெதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படுவது குறித்தும் இம்மாநாட்டில் ஆராயப்பட்டது.

கசாபுக்கு தூக்குத் தண்டனை

kasab.jpgமும்பை தீவிரவாதத் தாக்குதல் வழக்கில் பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் அமீர் கசாபுக்கு தூக்குத்தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

இவ்வழக்கில் கசாப் குற்றவாளி என மூன்று நாட்களுக்கு முன் நீதிபதி தஹில்யானி தீர்ப்பளித்தார். தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்திருந்தார். 166 பேர் பலியான இவ்வழக்கை அரிதினும் அரிதாகக் கருதி அவருக்கு தூக்குத்தண்டனை விதிக்க வேண்டும் என அரசு வழக்கறிஞர் தனது வாதத்தின்போது தெரிவித்தார். கசாபின் இளம்வயதைக் கருத்தில்கொண்டு அவருக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என கசாபின் வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார்.

இந்தியாவுக்கு எதிராகப் போர் தொடுக்கும் நோக்கத்துடன் கசாப் இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாக நீதிபதி தஹில்யானி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். கொலை, சதிசெய்தல், தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுதல் உள்ளிட்ட 5 குற்றங்களுக்காக அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார்.

தீர்ப்பு விவரத்தை கேட்டவுடன் கசாப் நீதிமன்றத்தில் தேம்பி அழுதார். தீர்ப்பைப் படித்து முடித்ததும், தீர்ப்பு விவரத்தை கசாபுக்கு நீதிபதி இந்தியில் விளக்கினார். தீர்ப்பு குறித்து ஏதேனும் கூற விரும்புகிறீர்களா என கசாபிடம் நீதிபதி கேட்டார். எனினும் அதற்கு கசாப் பதிலேதும் கூறாமல் தலையை மட்டும் அசைத்தார். இதைத்தொடர்ந்து அவரைச் சிறையில் அடைக்க போலீசார் அழைத்துச் சென்றனர்.

கிளிநொச்சியில் நினைவுத் தூபி

gotabaya.jpgகிளி நொச்சியில் படை நடவடிக்கைகளின்போது உயிர்நீத்த படைவீரர்களை நினைவுகூறும் வகையில் இன்று காலை அங்கு நினைவுத்தூபி ஒன்று திறந்து வைக்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ இந்த வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். வடக்கு மண்ணை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுத்ததுபோல் வடபகுதி மக்களின் உள்ளங்களையும் படையினர் வென்றெடுக்க வேண்டும் என்று இந்த வைபவத்தில் பேசிய அவர் கூறினார்.

மே 6 1986 / மே 18 2009 : வரலாற்றை கற்றுக்கொள்ள மறுப்பவர்கள் மீது வரலாறு ஈவிரக்கம் காட்டுவதில்லை! : த ஜெயபாலன்

Sri SabaratnamPirabakaran V_LTTEஏப்ரல் 29, 1986 என்றும் போல அன்றும் தமிழர் தாயகத்தின் தலைநகரான யாழ்ப்பாணத்தில் அந்த காலைப் பொழுது மலர்ந்தது. காலைச் செவ்வானம் தமிழீழம் கேட்டு போராடச் சென்ற இளைஞர்களின் குருதியில் தோய்வதற்காய் உதித்தாக எண்ணி இருக்கவில்லை. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான அடித்தளத்தையிட்ட அதே மண்ணில் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றின் மிக மோசமான பக்கங்கள் எழுதப்படப் போகின்றது என்பதை அறியாமலேயே தமிழ் மக்கள் விழித்தெழுந்து தத்தமது கடமைகளுக்குத் தயாராகினர்.

ஆம். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பத்துடனேயே சகோதரப் படுகொலைகளும் ஆரம்பித்து விட்டது. ஆனால் 1986 ஏப்ரல் 29ல் இடம்பெற்றதே மிக மோசமான ஸ்தாபன மயப்படுத்தப்பட்ட திட்டமிடப்பட்ட கூட்டுப் படுகொலை. தமிழீழ விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,000க்கும் அதிகம் என மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் அமைப்பு தெரிவிக்கின்றது. இவற்றைவிட ஏனைய விடுதலை அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் குறிப்பாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமும் உட்படுகொலைகளிலும் சகோதரப் படுகொலைகளிலும் ஈடுபட்டிருந்தனர். ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது எதிரி எமது இனத்தின் மீது மேற்கொண்ட இனச் சுத்திகரிப்பிற்கு எவ்விதத்திலும் குறையாமல் நாம் வளர்த்துவிட்ட விடுதலை அமைப்புகளும் எம்மை அழித்துள்ளன. தமிழீழ விடுதலை நியாயமானதா? சாத்தியமா? என்பதற்கு அப்பால் 1986 ஏப்ரல் 29லேயே எமது தமிழீழ விடுதலைக் கனவு கலைக்கப்பட்டுவிட்டது என்பதே உண்மை.

”உங்கள் கைவசம் உள்ள ஆயுதங்களை எம்மிடம் ஒப்படைத்து சரணடையாவிட்டால் உங்கள் வீடு புகுந்து உங்களையும் உங்கள் குடும்பங்களையும் சுட்டுத்தள்ளுவோம்.”
என 24 ஆண்டுகளுக்கு முன் தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழர் தாயகம் எங்கும் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கைகளை வழங்கினர். ரெலோவின்  முகாம்கள் மோட்டார் செல் தாக்குதல்களுக்கு இலக்கானது. ஆயுதங்கள் வைத்திருந்தவர்கள், ஆயுதம் தாங்காதவர்கள், நித்திரையில் இருந்தவர்கள், நோய்வாய்ப்பட்டு இருந்தவர்கள், சரணடைந்தவர்கள் என்று எவ்வித பேதமுமற்று அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இன்னும் சிலர் சித்திரவதைக்கு உள்ளாகி மக்கள் முன்னிலையில் உயிருடன் எரிக்கப்பட்டனர். தங்களை எதிர்ப்பவர்களுக்கு என்ன நடக்கும் என்ற பாடத்தை புகட்டுவதற்காக இவை திட்டமிட்ட முறையில் நடாத்தப்பட்டது. தமிழ் மக்கள் பயப்பீதிக்குள் தள்ளப்பட்டு வாய்மூடி மௌனிக்க வைக்கப்பட்டனர். அன்று ஒடுக்கப்பட்ட அவர்களது குரல்கள் இன்றும் ஒடுங்கியே உள்ளது. ஒடுக்குபவர்கள் மட்டுமே மாறியுள்ளனர்.

வரலாற்றுத் தவறுகளைக் கற்றுக் கொள்ள மறுப்பவர்களை வரலாறு மன்னிப்பதில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் தாம் இழைத்த வரலாற்றுத் தவறை கற்றுக்கொள்ளவில்லை. தொடர்ந்தும் எதேச்சாதிகாரத்துடன் தங்கள் அதிகார வெறிக்கான யுத்தத்தைத் தொடர்ந்தனர்.

”தமிழீழ விடுதலை இயக்கம் அழிக்கப்பட்டு 23 ஆண்டுகள் கடந்த 2009 ஏப்ரல் இறுதிப் பகுதியில் ”புலிகளின் தலைவர் பிரபாகரன் எஞ்சியுள்ள தனது போராளிகளுடன் சரணடையாவிட்டால் அவர் தனது தலைவிதியை சந்திக்க நேரிடும்.”
என்ற எச்சரிக்கையை அப்போதைய இலங்கையின் இராணுவத் தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா பனை மரங்களில் ஒலிபெருக்கியைக் கட்டி அறிவித்தார். அவருடைய எச்சரிக்கை வெளியாகி சில வாரங்களுக்கு உள்ளாகவே  மக்களுக்குள் ஒழிந்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் மீது இலங்கை இராணுவம் கண்மூடித்தனமான தாக்குதலை நடாத்தியது ஆயிரக்கணக்கான  பொது மக்கள் போராளிகள் கொல்லப்பட்டனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் உட்பட சரணடைந்த விடுதலைப் புலிகளின் தலைமை படுகொலை செய்யப்பட்டது. ஏனையவர்கள் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர்.

தமிழீழ விடுதலை இயக்கமோ அல்லது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமோ அல்லது ஆயுதம் ஏந்திய தமிழீழ விடுதலை இயக்கங்களோ அடிப்படையில் ஒரே விதமானவர்கள். இவர்கள் மக்கள் விடுதலை என்பதிலும் பார்க்க தங்கள் அதிகாரத்தை தமிழ் மக்கள் மீது நிறுவுவதற்குப் போராடியவர்கள். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த அமைப்புகளின் அரசியல் மற்றும் இராணுவத் தவறுகளினால் தமிழ் மக்களே மிகப் பாரதூரமான பின்னடைவுகளைச் சந்தித்து உள்ளனர். அதனால் தமிழீழ விடுதலை இயக்கத்தை அழித்தொழித்த தமிழீழ விடுதலைப் புலிகள் அழித்தொழிக்கப்பட்டதை வரவேற்கவோ அல்லது ஒரு தவறை மற்றுமொரு தவறு மூலம் சரிசெய்துவிட்டதாகவோ கொள்ள முடியாது.

இந்த வரலாற்று நிகழ்வுகளில் இருந்து நாம் விட்ட வரலாற்றுத் தவறுகளில் இருந்து நாம் எதனைக் கற்றுக்கொண்டோம் என்பதே மிக முக்கியமானது. இவ்வளவு அனுபவங்களுக்குப் பிற்பாடும் தமிழ் சமூகத்தின் அரசியல் தலைமைகள் என்பது இன்னமும் தங்களின் அரசியல் தளத்தில் ஊன்றி நின்று தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கவில்லை. ஒருசாரார் இலங்கை அரசுடன் இணக்கப்பாட்டு அரசியலை மேற்கொள்ள மறுசாரார் இலங்கை அரசின் ஒடுக்குமுறையை வைத்து அரசியல் செய்பவர்களாகவே உள்ளனர்.

இலங்கை சுதந்திரமடைந்தது முதல் இன்று வரையுள்ள காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டம் தமிழ் மக்களுக்கு வென்றெடுத்த உரிமைகளிலும் பார்க்க அழிவுகளே அதிகம் மிஞ்சியுள்ளது. அந்த வகையில் அதற்கான காரணங்களை தமிழ் மக்களுக்குத் தலைமை தாங்குவதாகக் கூறிக்கொள்பவர்கள் மீளாய்வு செய்வது தவிர்க்க முடியாதது. ஆனால் அதற்கான முனைப்புகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. எதேட்சையான உணர்ச்சிகரமான கோசங்களுக்குப் பின்னால் தமிழ் மக்களை அணிதிரட்டுவது அந்த அழிவு வரலாற்றை மீள நிகழ்த்தவே உதவும்.

வே பிரபாகரனும் சிறிசபாரட்னமும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். இவர்களுடைய முடிவுகள் மட்டுமல்ல உமாமகேஸ்வரனது முடிவும் இவ்வாறு அமைந்ததில் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால் இந்த அழிவு வரலாற்றில் இருந்து இதுவரை நாம் எதனையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதும் கற்றுக்கொள்ள மறுக்கின்றோம் என்பதும் ஆபத்தான உண்மைகள்.

ஓவ்வொரு மனிதனும் தான் விட்ட தவறுகளை ஏற்றுக்கொள்ளாதவரை அவன் அத்தவறைத் திருத்திக் கொள்ளப் போவதில்லை. இது ஒரு தனிமனிதனுக்கானது மட்டுமல்ல அமைப்புகளுக்கும் பொருந்தும். ஏந்தவொரு அமைப்பும் தங்கள் அமைப்பு விட்ட தவறுகளை ஏற்றுக்கொள்ளாதவரை அத்தவறுகளைத் திருத்திக்கொள்வதில்லை. இதுவே தமிழீழ விடுதலைக்குப் போராடிய அமைப்புகளிலும் நடந்தது. ஓவ்வொரு தடவையும் இவ்வமைப்புகள் தவறுகளைவிட்ட போது அவற்றை நியாயப்படுத்தி வந்தன. நியாயப்படுத்துவதற்கான காரணங்களைக் கண்டுபிடித்தன. துரோகிகளைச் சுட்டுக்கொல்வது என்று ஆரம்பித்து தாங்கள் காப்பாற்ற வேண்டிய மக்களையே சுட்டுக் கொல்வதில் வந்து நின்றது தமிழீழ விடுதலைப் போராட்டம். மனித அவலமும் அழிவும் எல்லையைத் தாண்டும் போது தான் சர்வதேசம் தலையிட்டு நிரந்தரமான தீர்வு கிட்டும் என்று அதற்கும் அவர்கள் ஒரு நியாயம் வைத்திருந்தனர்.

இவ்வளவு அழிவுகளின் பின்னும் மதிப்பீடுகள் எதுவும் இன்றி வரலாற்றை ஆராயாமல் மீண்டும் விட்ட இடத்தில் இருந்து ஆரம்பிக்கிறார்கள். இப்போது அவர்கள் நாட்டில் இல்லாததால் கடல் கடந்து நாடுகள் கடந்து சென்று தமிழீழம் கேட்கின்றனர். நாடுகடந்த தமிழீழம்.

மே 6ல் சரணடைந்த நிலையில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறிசபாரட்ணம் கிட்டு என்றழைக்கப்பட்ட அன்றைய யாழ் மாவட்ட விடுதலைப் புலிகளின் தளபதி சதாசிவம் கிருஸ்ணகுமாரினால் சுட்டுக்கொல்லப்பட்டார். மே 18ல் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் சரணடைந்த நிலையில் இலங்கை இராணுவத் தளபதியினால் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளார். படுகொலைக்குப் பிற்பாடு இருவரது உடல்களுக்கும் என்ன நடந்தது என்று தெரியாது. இரு சம்பவத்திலும் கொலையாளிகள் கொலை செய்யப்பட்டவரின் வரலாற்றை அவர்களுடன் சேர்த்து எரிக்கவோ புதைக்கவோ செய்தனர். அதனால் அவர்கள் எரிக்கப்பட்ட அல்லது புதைக்கப்பட்ட இடங்களும் மர்மமாகவே வைக்கப்பட்டது.

சிறிசபாரட்ணம் படுகொலை செய்யப்பட்டு கால் நூற்றாண்டுகள் ஆகின்ற போதும் அவருக்கான அஞ்சலி நிகழ்வுகள் ஆங்காங்கே நடைபெறுகின்றது. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருக்கு இதுவரை எவ்வித அஞ்சலிகளும் நிகழ்த்தப்படவில்லை. அவர் இறந்துவிட்டதனை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பதிலேயே அவ்வமைப்புக்குள் பிளவு ஏற்பட்டு விட்டது. ஒரு தலைவனது மரணத்தையோ வாழ்வையோ உறுதிப்படுத்தத் திரணியற்ற அமைப்பு தற்போது நாடுகடந்த தமிழீழம் பெற்றுத் தீருவோம் என்று அறைகூவல் விடுகின்றது.

உண்மைகளை ஏற்றுக் கொள்ள மறுத்த வரலாற்றைக் கற்றுக்கொள்ள மறுத்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனும் தற்போது வரலாறாகிவிட்டார். 24 ஆண்டுகளுக்கு முன் வே பிரபாகரனது தலைமை மேற்கொண்ட கோரத்தனமான அழித்தொழிப்பு மீளவும் தமிழர் தாயகத்தில் நிறைவேறியது. அன்று கோரத்தனத்தை மேற்கொண்டவர்கள் இன்று அதற்குப் பலியாகி உள்ளனர். வரலாறு ஈவிரக்கம் பார்ப்பதில்லை என்பதை மீண்டும் ஒருமுறை தமிழர்களுக்கு உணர்த்தி உள்ளது.

தமிழ் மக்கள் மீதானது மட்டுமல்ல அனைத்து மக்களினதும் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். ஆனால் அவை உணச்சி வேகத்தில் பழிவாங்கும் நோக்கில் அல்ல. கடந்த கால வரலாற்றைக் கற்றுக்கொண்டு வரலாற்றுத் தவறுகளைக் திருத்திக் கொண்டு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

காலி மாவட்டத்தில் பல இடங்கள் நீரில் மூழ்கின; இயல்பு பாதிப்பு

galle-rain.jpgகாலி மாவட்டத்தில் குறுகிய மூன்று மணித்தியாலயங்களில் 181.6 மில்லி மீட்டர் அதிகூடிய மழை வீழ்ச்சி நேற்று பதிவாகி இருப்பதாக வானிலை அவதான நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் எஸ். ஏ. ஆர். ஜயசேகர தெரிவித்தார்.

அண்மைக்காலத்தில் குறுகிய நேரகாலத்தில் காலி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் பெற்றுக்கொண்ட அதிகூடிய மழை வீழ்ச்சி எனவும் அவர் கூறினார். நேற்று காலை 8.30 மணி முதல் முற்பகல் 11.30 மணி வரையான காலப்பகுதிலேயே இம்மழை வீழ்ச்சி கிடைக்கப்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார். காலி மாவட்டத்தின் பல பிரதேசங்களில் நேற்று அதிக மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டிருப்பதுடன் பல வீதிகளும் வெள்ளத்தால் மூழ்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் காலி மாவட்ட இணைப்பாளர் லெப்டீனண்ட் கேர்ணல் அசித ரணசிங்க தெரிவித்தார். வக்வெல்ல வீதியிலுள்ள சங்கமித்த, கொக்கலகட சந்தி, பத்தேகம வீதியிலுள்ள தங்கெதா சந்தி, கஹத்துவவத்தை சந்தி, பலப்பிட்டி மடபாத்த கிராமம், கராப்பிட்டிய வீதியிலுள்ள பேகல சந்தி உட்பட பல பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

இதன் காரணத்தினால் பல பிரதேசங்களுக்கான சீரான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளன. கராப்பிட்டிய பொதுவைத்தியசாலையின் 16 வது வார்ட், நீதிவான் நீதிமன்ற கட்டடம் உட்பட பல இடங்களும் நீரில் மூழ்கி இருந்ததாகவும் அவர் கூறினார்.

வானிலை அவதான நிலையம் 24 மணி நேரப்படியே மழை வீழ்ச்சியைப் பதிவு செய்கிறது. அந்தவகையில் 1992 ஆம் ஆண்டில் கொழும்பு மாவட்டத்தில் 492 மில்லி மீட்டர் அதிகூடிய மழை வீழ்ச்சியும் கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி அங்கொடையில் 207 மில்லி மீட்டர் அதிகூடிய மழை வீழ்ச்சியும் பதிவானதாகவும் வானிலை அவதான நிலைய அதிகாரி கூறினார்.

நடைபாதை வியாபாரிகளுக்கு புதிய வர்த்தக தொகுதி நிர்மாணம்

president.jpgஇரு வாரத்தினுள் கட்டிமுடிக்க ஜனாதிபதி பணிப்பு; தற்காலிகமாக ரூ. 2 ஆயிரம் வழங்கவும் நடவடிக்கை

கொழும்பு நகரின் நடைபாதை வியாபாரிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் போதிராஜ மாவத்தையில் புதிய வர்த்தக தொகுதியொன்றை நிர்மாணிக்குமாறும், அதனை 2 வார காலத்தில் கட்டி முடிக்குமாறும், அதுவரை அவர்களுக்கு 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் (4) பிற்பகல் புறக்கோட்டை சுயவேலையாளர் சங்க பிரதிநிதிகளை அலரிமாளிகையில் சந்தித்து பேசினார். புறக்கோட்டையில் நடைபாதை வியாபாரிகளின் கடைகள் அகற்றப்பட்டதைய டுத்து ஏற்பட்ட நிலை தொடர்பாக பேசுவதற்காக இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நடைபாதையில் செல்வோருக்கு அசெளகரியம் ஏற்படாத வகையிலும், நகரத்தின் அழகுக்கு பங்கம் ஏற்படாத வகையிலும் சிறிய வர்த்தகர்கள் தமது வர்த்தக நடவடிக்கைகளை நடத்திச் செல்வதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையிலும் முறையான திட்டமொன்றை துரித கதியில் செயற்படுத்துமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

யாழ்ப்பாணத்தில் இந்திய விசா விண்ணப்ப நிலையம் நேற்று திறப்பு

ashok-a-kanth.jpgஇந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே காந்த நேற்று யாழ்ப்பாணத்தில் இந்திய விசா விண்ணப்ப நிலையத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

2008 பெப்ரவரி மாதத்திலிருந்து இந்திய விசா விண்ணப்ப நிலையத்தைக் கொழும்பில் வெற்றிகரமாக நடத்திவரும் குளோபல் நிறுவனத்தினரே இதையும் நடத்துவர்.

இந்த வைபவத்தில் உரையாற்றிய இந்திய உயர் ஸ்தானிகர் இந்த நிலையமானது நீண்ட தூரம் கொழும்புக்குப் பிரயாணம் செய்து இந்திய விசா விண்ணப்பங்களைக் கையளிக்கும் யாழ்ப்பாணத்திலும் மற்றும் அயல் பிரதேசங்களிலும் வசிக்கும் மக்களுக்குப் பேருதவியாகவிருக்கும் எனக் கூறினார். இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் ஆரம்பிக்கப்படும் இந்த வசதிக்கமைய விசா விண்ணப்பதாரர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள விசா நிலையத்தில் தங்கள் விண்ணப்பங்களைப் பாரம் கொடுத்து மீண்டும் அந்த நிலையத்திலேயே தங்கள் கடவுச் சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.

இல. 8 பிறவுண் றோட் யாழ்ப்பாணம் என்ற முகவரியில் அமைந்துள்ள இந்திய விசா விண்ணப்ப நிலையம் திங்கள் முதல் வெள்ளிவரை 8.00 மணி முதல் 7.00 மணி வரை திறந்திருக்கும்.

இணையத்தளம் www.vfs-in-lk.com ஊடாக விண்ணப்பப் பத்திரங்கள் மற்றும் விசா சம்பந்தமான அறிவுறுத்தல்களைப் பெற்றுக்கொள்ளலாம். விசா சம்பந்தமான விசாரணைகளை info.inlk@vfshelpline.com என்ற மின் அஞ்சல் மூலம் பெறலாம்.

IVAC யின் துணைபுரி தொலைபேசி 011-4505588.

மஹரகமவில் ‘டெய்லி மிரர்’ ஊடகவியலாளர் மீது தாக்குதல்

jeyasekara.jpg ‘டெய்லி மிரர்’ பத்திரிகையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் சந்துன் ஏ. ஜயசேகர நேற்று காலை மஹரகமவில் வைத்துத் தாக்கப்பட்டுள்ளார். மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்ட வைபவம் தொடர்பாகச் செய்தி சேகரிக்கச் சென்றபோதே, பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் சிலர் இவரைத் தாக்கியதாக ‘டெய்லி மிரர்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.

ஊடக அடையாள அட்டையைக் காண்பித்தும் உள்ளே சென்று செய்தி சேகரிக்கக் குறித்த ஊடகவியலாளருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் சிலர் அவரை தகாத வார்த்தைளால் ஏசியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.மேற்படி வைபவ செய்தியைச் சேகரிப்பதற்கு, ஊடகத் துறைக்கான உத்தியோகபூர்வ அழைப்பிதழ் கிடைக்கப் பெற்றதையடுத்தே அவர் அங்கு சென்றதாகவும், கூறப்படுகிறது. தாக்குதலுக்கு இலக்கான ஊடகவியலாளர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ‘டெய்லி மிரர்’ தெரிவிக்கின்றது.