2010

2010

”ஜனாதிபதித் தேர்தல் போட்டியில் இருந்து விலகிக் கொள்ளும்படி சிவாஜிலிங்கத்தை கேட்போம்” தமிழ் தேசியக் கூட்டமைப்பு

Selvam Adaikalanathan TNA_TELOதமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை நிலைநிறுத்த ஜனாதிபதித் தேர்தல் போட்டியில் இருந்து விலகிக் கொள்ளும்படி எம் கெ சிவாஜிலிங்கத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கேட்க உள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இன்று (ஜனவரி 7) தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரத் பொன்சேகாவை ஆதரிக்கின்ற முடிவை முழுமையாக ஏற்றுக்கொள்கின்றீர்களா எனக் கேட்ட போது பெரும்பான்மையின் முடிவுடன் ஒத்துப் போவது மட்டுமல்ல தமிழ் மக்கள் ஒரு முகப்பட்டு அரசியலில் இயங்குவதே இன்று அவசியமானது எனத் தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு களத்தில் இறங்கி பொன்சேகாவுக்காக வாக்கு வேட்டை நடத்துமா? எனக் கேட்ட போது அது பற்றிய இறுதி முடிவுகள் இதுவரை எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவு சுயாதீனமானது எனத் தெரிவித்து செல்வம் அடைக்கலநாதன் வெளிநாடுகளினதோ அல்லது புலம்பெயர் தமிழ் அமைப்புகளினதோ அழுத்தங்களினால் இம்முடிவு எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

இந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவானது ஜனாதிபதியைத் தெரிவு செய்வது மட்டுமல்ல தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் ஒரு பரிசோதணைக் களமாக அமைய உள்ளதாகத் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்கள் அனைவரையும் வாக்களிப்பில் கலந்துகொள்ளுமாறும் சரத் பொன்சேகாவிற்கு வாக்களிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்நிலையில் தமிழ் மக்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் இருப்பதோ அல்லது சரத்பொன்சேகாவிற்கு எதிராக வாக்களிப்பதோ தமிழ் தேசியக் கூட்டமைப்பை நிராகரிப்பதாகவே கொள்ள வேண்டும் என தமிழ் செல்வம் அடைக்கலநாதன் தேசம்நெற் க்குத் தெரிவித்தார். தமிழ் மக்கள் எடுக்கின்ற எந்த முடிவையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளும் என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இத்தேர்தலில் தற்போதைய ஜனாதிபதியே மீண்டும் தெரிவு செய்யப்பட்டாலும் அவருடன் தொடர்ந்தும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளை நடாத்துவோம் எனக் குறிப்பிட்ட செல்வம் அடைக்கலநாதன் அதற்கு அரசு சம்மதிக்க மறுத்தால் தமிழ் மக்களை ஒன்றுபடுத்தி சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுப்போம் எனத் தெரிவித்தார்.

தன்னைப் போட்டியில் இருந்து விலகுமாறு யாரும் இதுவரை அணுகவில்லை எனத் தெரிவித்த எம் கெ சிவாஜிலிங்கம் தானும் மற்றைய ஜனாதிபதி வேட்பாளர் விக்கிரமபாகு கருணாரட்னாவும் தமிழ் பகுதிகளின் மூலைமுடுக்குகளுக்கெல்லாம் சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார். சென்ற இடங்களில் எலலாம் மக்கள் நூற்றுக் கணக்கில் கூடி கைதட்டி ஆதரவு தருவது தங்களுக்கு நம்பிக்கை அளித்தள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்கான உறுதியான முடிவுகளைத் தந்தாலேயொழிய இந்த சில்லறைத்தனமான உறுதி மொழிகளை தான் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை எனவும் இந்தப் போட்டியில் இருந்து விலகிக் கொள்ளப் போவதில்லை எனவும் எம் கெ சிவாஜிலிங்கம் தேசம்நெற்றுக்கு இன்று (ஜனவரி 7) தெரிவித்தார்.

10 அம்சத் திட்டத்தை உள்ளடக்கிய ஜெனரலின் “நம்பிக்கையான மாற்றம்”

pr-can.jpg“நம்பிக் கையான மாற்றம்”  என்று தலைப்பிடப்பட்ட 10 அம்ச தேர்தல் விஞ்ஞாபனத்தை நேற்று வியாழக்கிழமை கொழும்பிலுள்ள சிலோன் கொன்டினன்டல் ஹோட்டலில் வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தின் சாராம்சம் வருமாறு

1. நான் ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்டுவதுடன், சமாதானத்தையும் வெற்றிகொள்வேன்.

சர்வாதிகார ஆட்சிக்கு வழிகோலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இரத்துச் செய்து ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதே எம் முன்னால் இருக்கும் பிரதானமான சவால். நான் ஜனாதிபதியாக தெரிவானதும், சுயாதீன ஆணைக்குழுக்களை மீண்டும் நியமிக்க வாய்ப்பேற்படுத்தும் வகையில் அரசியலமைப்பு பேரவையை நியமித்து அரசியலமைப்பின் 17 ஆவது திருத்தத்தை செயற்பாட்டுக்குக் கொண்டு வருவதே எனது முதலாவது நடவடிக்கையாக இருக்கும்.

அதையடுத்து தற்போதிருக்கும் பாரிய அமைச்சரவை கலைக்கப்படும். பின்னர் எனது காபந்து அமைச்சரவை உறுப்பினர்களுக்கான பெயர்களை பிரேரிக்குமாறு தற்போது பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும். இதனையடுத்து பாராளுமன்றம் கலைக்கப்படும்.

அவசர தேவையாகக் கருதி தற்போதிருக்கும் அவசர காலச்சட்ட விதிகள் திருத்தம் செய்யப்படும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதற்கான அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை நிறைவேற்றவும், பத்திரிகைப் பேரவையை இரத்துச் செய்யும் சட்டமூலம் மற்றும் தகவல்களை அறிந்து கொள்ளும் சுதந்திரம் தொடர்பான சட்டமூலத்துக்காகவும் ஒருமாத காலத்துக்குள் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படும்.

எனது காபந்து அமைச்சரவையின் கீழ் இலங்கையில் மிகவும் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலொன்று நடைபெறுவதை உறுதிசெய்யும் பொருட்டு தேவையான நடவடிக்கைகளை நான் எடுப்பேன். இந்த புதிய சட்டமூலங்கள் புதிய பாராளுமன்றத்துக்கு ஒரு மாதத்திற்குள் சமர்ப்பிக்கப்படும்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்ததன் பின்னர் மக்களுக்கு பொறுப்புக் கூறும் ஜனாதிபதி என்ற வகையில் பாராளுமன்றத்துடன் இணைந்து செயற்பட்டு தாய் நாட்டுக்கும் மக்களுக்கும் என்னால் நிறைவேற வேண்டிய சேவைகளை குறையின்றி நிறைவேற்றுவேன்.

2.நான் ஊழல் மோசடிகளையும் வீண் விரயங்களையும் இல்லாதொழிப்பேன்.

மூன்று வார காலத்துக்குள் எனது காபந்து அமைச்சரவை ஊழல் மோசடிகளுக்கு எதிராக ஐ.நா. சாசனத்திற்கு அமைவாக இலஞ்ச, ஊழல் மோசடிகளை இல்லாதொழிப்பதற்கான புதிய சட்டங்களை தயாரிக்கும்.

இலஞ்ச, ஊழல் மோசடிகளுக்கு எதிராக செயற்படப்போதுமான அதிகாரங்களுடைய மிகவும் பலம் வாய்ந்த புதிய நிறுவனமொன்று ஸ்தாபிக்கப்படும். ஊழல் மோசடிகளின் கீழ் குற்றவாளிகளாக காணப்பட்டவர்களின் முறைகேடாக ஈட்டிய சொத்துகள் அனைத்தும் அரச உடைமையாக்கப்படும். சகல மக்கள் நிதிகள் தொடர்பாகவும் கணக்காய்வு செய்ய சுயாதீன ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படும்.

உலகில் முன்னேற்றமடைந்த ஜனநாயக நாடுகளில் நடைமுறையில் இருப்பது போன்று பாராளுமன்ற ஒழுக்க நெறிகள் தொடர்பாக சட்டமொன்றை நிறைவேற்றிக் கொள்ளுமாறு நான் புதிய பாராளுமன்றத்தைக் கேட்டுக் கொள்வேன். நிதி நிர்வாகம் தொடர்பாக பாராளுமன்ற ஒழுக்க நெறிகளை நடத்திச் செல்லவென பாராளுமன்ற ஒழுக்க நெறிமுறைகள் பற்றிய சுயாதீன ஆணையாளர் ஒருவர் நியமிக்கப்படுவார்.

பொது நிதிக் கணக்காய்வு தொடர்பாக ஏற்பட்டிருக்கும் தடைகள் மற்றும் கஷ்டங்களை நீக்கவும் கணக்காய்வு நடவடிக்கைகளை பலப்படுத்தவும் தேவையான சட்ட ரீதியானதும் நடைமுறைச் சாத்தியமானதுமான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களின் சொத்துகளை விரயமாக்குவதைத் தடுப்பதற்கு தேவையான உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனது சொத்துகளையும் பொறுப்புகளையும் வருடாந்தம் மக்கள் முன்னிலையில் சமர்ப்பிப்பேன்.

3. வருமானத்தை அதிகரித்துக் கொள்ள சகல குடும்பங்களும் உபகாரங்கள் செய்யப்படும்.

உர மானியத்தின் அடிப்படையில் யூரியா உர மூடையொன்றை 350 ரூபாவுக்கும் ஏனைய உரங்கள் மானியங்களுடன் உட்பட்டதாக திறந்த சந்தைகளில் வழங்கப்படும் என்று உறுதியளிக்கிறேன்.

அரிசி ஆலைகள் மாபியா முடக்கப்படும் என்றும் சந்தை நிலைமைகளின் அடிப்படையில் நீதியான உறுதியான விலை நிர்ணயிக்கப்படும் என்றும் உறுதியளிக்கிறேன். அத்துடன்,2010 ஆம் ஆண்டு பெரும்போகத்தின் போது சம்பா நெல் கிலோவொன்று 40 ரூபாவுக்கும் நாட்டரிசி நெல் கிலோவொன்று 35 ரூபாவுக்கும் (விவசாயிகளிடமிருந்து) விலைக்கு வாங்கப்படும் என உறுதி கூறுகிறேன். இதனால் விவசாயிகளுக்கு இதைவிட அதிக தொகையை சந்தைகளில் பெற்றுக் கொள்ள முடியும்.

காபன் விவசாயத்தை வளர்ச்சி பெறச் செய்வதிலும் நான் கவனம் செலுத்துவேன்.

பால் உற்பத்தியாளர்களுக்கு பால் லீற்றரொன்றுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச விலையை 45 ரூபாவாக அதிகரிக்கப்படும். புதுவருடப் பிறப்பின்போது பொருட்கள் பற்றாக்குறை எதுவுமின்றி தாங்கிக் கொள்ளக் கூடிய விலையில் வாங்க முடிவதை உறுதி செய்கிறேன். சகல பெருநாள் முற்கொடுப்பனவுகளையும் உரிய நேரத்திற்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தோட்டத் தொழிலாளர்களின் ஒருநாள் சம்பளத்தை 500 ரூபாவரை அதிகரிக்க மேற்கொள்ளப்படும் பேச்சுகளை முன்னெடுத்துச் செல்வதுடன், அம்மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய வங்கியின் செயற்திறன் இன்மையால் பல்வேறு நிதி மோசடிகளுக்குள்ளான குடும்பங்களுக்கு முடிந்தளவிலான அதிகபட்ச நட்டஈட்டை வழங்க உறுதியளிக்கிறேன்.

விவசாயிகளுக்கான ஓய்வூதியத்தை அதிகரிப்பதுடன், மீனவர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்ட முறைமையொன்று அறிமுகப்படுத்தப்படும். முறையற்ற தொழில்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு அவர்களின் ஓய்வு வாழ்க்கையின் போது பாதுகாப்பொன்றை வழங்க நடவடிக்கை எடுப்பேன்.

நான் அரச ஊழியர்களின் சம்பளத்தை 10 ஆயிரம் ரூபாவால் அதிகரிப்பதுடன், சகல ஓய்வூதிய முரண்பாடுகளையும் நீக்குவேன். குறைந்தபட்ச சமுர்த்திக் கொடுப்பனவை 500 ரூபாவரை அதிகரிப்பேன். அரசியல் காரணங்களால் சமூக பாதுகாப்பு இல்லாமல் செய்யப்பட்டிருக்கும் சகல குடும்பங்களுக்கும் அந்தப் பாதுகாப்பை வழங்குவேன்.

சமுர்த்தி அதிகாரிகளின் கஷ்டங்களுக்குத் தீர்வு வழங்கப்படும். நான் தனியார் துறையினருடன் கலந்துபேசி அவர்களது வியாபாரங்களில் அதிக செலவுகளை ஏற்படுத்தியுள்ள அநாவசியமான வரிகளையும் கப்பங்களையும் நீக்குவதன் மூலம் தனியார் துறையிலுள்ள ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பேன்.

ஆடைத் தொழிற்துறையில் 3 இலட்சம் ஊழியர்களது தொழில் வாய்ப்புகளைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு ஜி.எஸ்.பி+ வரிச் சலுகையை மீண்டும் இலங்கை பெறுவதை உறுதியளிக்கிறேன். அவசர நடவடிக்கையாக கருதி சிறு மற்றும் மத்திய தர வர்த்தகர்களின் ஏனைய பிரச்சினைகளைத் தீர்க்கவும் அதிகாரம் மிக்க குழுவொன்று நியமிக்கப்படும்.

4. நான் வாழ்க்கைச் சுமையைக் குறைப்பேன்

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும் அதிக வரிகளைக் குறைத்து உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்க உடனடி நடவடிக்கைகள் எடுப்பேன். டீசல் மற்றும் மண்ணெண்ணெய் மீது விதிக்கப்பட்டிருக்கும் சகல வரிகளும் நீக்கப்படும். உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கமைய பெற்றோலின் விலையும் குறைக்கப்படும்.

சமையல் எரிவாயு (எல்.பி.காஸ்) மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களின் மீது விதிக்கப்பட்டிருக்கும் வரிகளும் கணிசமானளவு குறைக்கப்படும்.

பாடசாலை மாணவர்கள் போக்குவரத்தில் ஈடுபடும் வான்களுக்கும் முச்சக்கர வண்டிகளுக்கும் புகை உறுதிப்படுத்தலுக்கென அறவிடப்படும் கட்டணத்தை நீக்குவதன் மூலமும் தனியார் பஸ் மற்றும் முச்சக்கரவண்டி உதிரிப்பாகங்களுக்கு வரிச் சலுகை வழங்குவதன் ஊடாகவும் போக்குவரத்துச் செலவு குறைக்கப்படும்.

5. நான் தேசிய ஒருங்கிணைப்பை கட்டியெழுப்புவேன்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சகல தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களுக்கும் உதவிகளை செய்வேன். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பிரதேசங்களுக்கும் உடனடி நிறுவனங்களை வழங்கும் வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்துவதுடன், அதன் மூலம் தமிழ் பேசும் மக்களின் ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை வழங்கக் கூடியதாக இருக்கும் முகாம்களில் எஞ்சியிருக்கும் இடம்பெயர்ந்த மக்களை உடனடியாக மீள்குடியேற்றம் செய்வேன்.

மீள்குடியேற்றத்தின் போது குடும்பமொன்றுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச உதவித் தொகையை ஒரு இலட்சம் ரூபாவரை அதிகரிப்பதுடன், குடும்பங்களின் தேவைகளை மதிப்பீடு செய்ததன் பின்னர் மேலதிக உதவிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நான் எனது முதலாவது மாதத்திற்குள் இதுவரை யுத்தத்தினால் இடம்பெயர்ந்த சகல தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களை பதிவு செய்ய நடவடிக்கை எடுப்பதுடன், தாமதமின்றி அவர்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள்.

பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாக கைது செய்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சகலர் தொடர்பாகவும் விசாரணைகளை துரிதப்படுத்தி நீதிமன்றத்திற்கு ஆஜர் படுத்தவோ அல்லது புனர்வாழ்வளிக்கவோ அல்லது விடுதலை செய்யவோ நடவடிக்கை எடுக்கப்படும். எமது இன, மத, மற்றும் கலாசார வேறுபாடுகளின் அடிப்படையிலான இலங்கையின் அடையாளத்தை முன்னேற்றி பலப்படுத்துவேன். நிர்வாக நடவடிக்கைகளில் தமிழ் பேசும் மக்கள் முகம் கொடுக்கும் மொழி ரீதியான பிரச்சினையை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுப்பேன்.

எந்தவொரு நபருக்கும் எந்த தடையுமின்றி குறைபாடுகளுமின்றி தமது மதத்தை பின்பற்றுவதற்கும் வழிபாடுகளில் ஈடுபடுவதற்குமான சுதந்திர உரிமையை உறுதி செய்வேன்.

6. நான் சுகாதார மற்றும் கல்வித் துறைகளை கிரமமாக முன்னேற்றுவேன்.

முதலாவது மாதத்திற்குள் சுகாதார சேவையில் அவசர நிலைமையை பிரகடனப்படுத்தி தரம் குறைந்த மருந்து பொருட்களின் இறக்குமதியை நிறுத்த நடவடிக்கை எடுப்பதுடன், உயர் தரத்திலான மருந்துப் பொருட்களை அரச வைத்தியசாலைகளில் பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் வாய்ப்பேற்படுத்தப்படும், தற்போது கட்டுப்பாடின்றி பரவிவரும் தொற்று நோய்களை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். மருந்துப் பொருட்களை தருவிப்பது தொடர்பில் தேசிய கொள்கையொன்றை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நான் முதலாவது மாதத்திற்குள் எமது கல்வி முறைமை தொடர்பாக நம்பிக்கையை மீண்டும் உறுதி செய்வேன். நம்பிக்கை மிக்க பரீட்சைத் திட்டமொன்றை ஏற்படுத்தவும் 2011 ஆம் ஆண்டு முதலாம் வகுப்புக்கு மாணவர்களை உள்ளீர்ப்பதற்கு நீதியான முறைமையொன்றை ஏற்படுத்தவும் விசேட செயலணியொன்றை நியமிப்பேன். அத்துடன், நகர்ப்புற பாடசாலைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு கிராமப்புற பாடசாலைகள் அலட்சியப்படுத்தப்படும் கொள்கை ஒழிக்கப்படும். சகல பல்கலைக்கழக மாணவர்களுக்கும் தங்குமிட வசதிகள் வழங்கப்படுவது உட்பட பல்கலைக்கழக மாணவர்களின் தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

7. நான் பெண்களின் உரிமைகளை பாதுகாக்கும் கௌரவமான நிலைமையை ஏற்படுத்துவேன்.

நான் 2 மாதங்களுக்குள் பெண்கள் உரிமைகள் சட்டமூலத்தை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பதுடன், பெண்களின் பாதுகாப்புக்காக எடுக்கப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன் என உறுதியளிக்கிறேன். பெண்கள் முன்னிலை வகிக்கும் வீடு சார்ந்த விடயங்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவென திட்டங்களை வகுக்க விசேட செயலணியொன்று நியமிக்கப்படும். கடன் வசதிகளை வழங்கவென பெண்கள் வங்கியொன்றை ஆரம்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுச்சென்றிருக்கும் இலங்கைப் பெண்களின் வருமானங்கள் அதிகரிப்பு மற்றும் பாதுகாப்பு போன்றவற்றை உறுதிப் படுத்தும் புதிய வேலைத்திட்டமொன்றை அமுலுக்கு கொண்டு வருவதுடன், அவர்களது குடும்பங்கள் முகம் கொடுத்துள்ள சமூக, பொருளாதார பிரச்சினைகளை தீர்க்கவென நேரடியாக தலையீடு செய்யும் பணியகமொன்று ஸ்தாபிக்கப்படும்.

8. நான் இளைஞர் சமுதாயத்திற்கு வேலை வாய்ப்புகளை வழங்குவேன்.

3 மாத காலத்திற்குள் “இளைய சவால்கள்’ வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பேன். 17 வயதிற்கும் 25 வயதிற்கும் இடைப்பட்ட இளைஞர், யுவதிகள் தேசத்திற்காக சேவையாற்றவும் தத்தமது வாழ்க்கையை மெருகேற்றிக் கொள்ளவும் இதன் மூலம் வாய்ப்பு கிடைக்கும்.

கணினி மென்பொருள், தகவல் தொலைத் தொடர்பாடல் தொழில்நுட்பம் ஆகியவற்றின் அடிப்படையிலான சேவைகள் மற்றும் ஆங்கில மொழி உட்பட தொழிற்பயிற்சிகளை பெற்றுக் கொள்ளும் அதேநேரம், இந்த காலப்பகுதியில் அவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாவிலான மாதாந்தக் கொடுப்பனவும் வழங்கப்படும். இந்த யோசனைத் திட்டத்திற்கு அறநெறி பாடசாலைகளின் ஆசிரியர்களும் உள்ளடங்குவர்.

இதில் இணைய விரும்பும் பட்டதாரிகள் இருப்பின் அவர்களுக்கு மேலதிகமாக 3 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும். இளைய சவால்கள் வேலைத்திட்டத்தை பூர்த்தி செய்யும் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கும் பொருட்டு அரச மற்றும் தனியார் துறைகளின் கீழ் “உழைக்கும் இளைஞர் சமுதாயம்%27 எனும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்படும்.

9. நான் நீதி, ஒழுக்கங்களை மதிக்கும் சமுதாயத்திற்கான அடித்தளத்தை இடுவேன்.

தார்மீக கோட்பாடுகளை பாதுகாக்கும் சமுதாயமொன்றை உருவாக்குவதற்காக நான் முன்னிற்பேன். நீதிமன்றத்தின் சுயாதீனத்திற்கு ஏற்பட்டிருக்கும் சகல தடைகளையும் உடனடியாக நீக்க நடவடிக்கை எடுப்பேன். பக்கச்சார்பற்ற கௌரவமான பொலிஸ் சேவையொன்றை ஸ்தாபிப்பேன். அவர்களது சேவைக்கு இருக்கும் அர்ப்பணிப்பை மதிப்பதுடன், 22 வருட சேவைக் காலத்தின் பின்னர் ஓய்வுபெற விரும்புபவர்களுக்கு முழுமையான ஓய்வூதியத்துடன் சேவையிலிருந்து ஓய்வுபெற அனுமதியளிக்கப்படும்.

மேற்குறித்த விடயங்கள் அனைத்தையும் உடனடியாக நிறைவேற்றி ஒழுக்கம் மிக்க பிரஜைகளுடன் கூடிய நாட்டில் மதிப்புமிக்க சமுதாயமொன்றை கட்டியெழுப்புவதற்கான அடிப்படையை ஏற்படுத்துவேன். பாதாள உலகத்தின் குண்டர்கள், ஆயுதம் தாங்கிய குழுக்கள் என அனைத்தையும் இல்லாதொழிக்க நான் உடனடி நடவடிக்கை எடுப்பேன். சகல கடத்தல்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பாக விசாரணை நடத்தி சட்டத்தின் ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டுவேன்.

10. நான் தேசிய பாதுகாப்பை உறுதிசெய்வேன்

அயல் நாடுகளின் பாதுகாப்பு நிலைவரங்களை கருத்திற்கொண்டு 21 ஆம் நூற்றாண்டின் சவால்களுக்கு முகம் கொடுக்கக் கூடிய வகையில் எமது பாதுகாப்புப் படையினரை நவீன மயப்படுத்துவேன்.

பாதுகாப்புப் படையினர் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையணியினருக்கு உயர் மட்டத்திலான நலன்புரித் தரங்களை நடத்திச் செல்வதை உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன். துரதிர்ஷ்டவசமாக ஊனமுற்ற பாதுகாப்பு படை உறுப்பினர்களின் நலன்புரிகளையும் நான் உறுதி செய்வேன். படையினரின் நலன்புரிக்கென மக்களின் உதவியுடன் உருவாக்கப்பட்ட “அப்பிவெனுவென் அப்பி%27 (நமக்காக நாம்) நிதியத்தின் முறைகேடான, மோசடிமிக்க நிர்வாகத்தை நீக்கி செயற்றிறனுடன் முழுமையாக படையினரின் நலன்புரிக்காக ஈடுபடுத்தப்படும்.

நாட்டுக்காக தமது உயிர்களை தியாகம் செய்த சகலரையும் நான் எப்போதும் ஞாபகம் கூர்வதுடன், அவர்களது குடும்பங்களின் நலன்புரியை உறுதி செய்வேன். எமது நாட்டின் தேவைகளுக்காக உலகின் அனைத்து நாடுகளுடனும் நட்புறவைப் பேணுவேன் என்பதையும் உறுதி கூறுகிறேன்.

நம்பிக்கை மிக்க மாற்றம்

நம்பிக்கை மிக்க மாற்றமானது ஜனவரி 26 ஆம் திகதி உங்களது தெரிவின் மூலம் தீர்மானிக்கப்படும். நீங்கள் மகிந்த ராஜபக்ஷவை தெரிவு செய்தால், இலஞ்ச,ஊழல், குடும்ப அதிகாரம் மற்றும் தனது புகழை பெருப்பித்துக் கொள்வதற்காக செய்யப்படும் வீண் செலவுகளின் சுமை மென்மேலும் உங்களது குடும்பங்களின் மீதே சுமத்தப்படும்.

இது மிகவும் தீர்க்கமான தருணம். ஜனநாயகத்தை உறுதி செய்து, ஊழல் மோசடிகளை ஒழித்து தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி வருமானங்களை அதிகரித்து வாழ்க்கைச் சுமையை குறைத்து உங்களது குடும்பத்துக்கு உதவி செய்ய உங்களது பெறுமதிமிக்க வாக்குகளை தைரியமாக சரத்பொன்சேகாவான எனக்கு வழங்கி நம்பிக்கைமிக்க மாற்றத்துக்கு வாய்ப்பளியுங்கள்.

‘இதுவரை செய்த தவறையே கூட்டமைப்பு இப்போதும் செய்கிறது’ சம்பந்தனின் அறிவிப்பு தமிழ்ச்சமூகத்தின் குரல் அல்ல

anu.jpgதமிழ்த் தேசிய கூட்டமைப்பு இதுவரை காலமும் செய்து வந்த தவறையே தொடர்ந்தும் முன்னெடுத்து வருகிறதென அமைச்சரவை பேச்சாளரும், தகவல், ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ் சமூகத்தின் விடிவுக்காக இதுவரை என்ன செய்துள்ளது எனவும் அமைச்சர் கேள்வி எழுப்பினார். சம்பந்தனின் கொள்கை தமிழ் சமூகத்தின் கொள்கை அல்ல என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பான ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு நேற்றுக் காலை அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் அநுஷ பல்பிட உட்பட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே நாட்டில் சட்டம், ஒழுங்கு, சமாதானம், ஸ்திரத்தன்மை, ஜனநாயகம் மற்றும் வடக்கு, கிழக்கு தமிழர்களுக்கான வாழ்வுரிமை என்பவற்றை நிலைநாட்டினார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பல பிரிவுகளாக தற்பொழுது பிளவுபட்டுள் ளது. அதில் சம்பந்தன் பிரிவினர் ஜனாதிபதியை பழிவாங்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். புலிகளின் பிடியில் சிக்கித்த வித்து வந்த தமிழ் மக்களின் உரிமைகளை மீளப் பெற்றுக் கொள்ள சம்பந்தன் என்ன பங்களிப்பை செய்துள்ளார் என்று அமைச்சர் வினா எழுப்பினார்.

யுத்தம் முடிவடைந்த கையோடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இடம்பெயர் ந்த மக்களை மீளக்குடியேற்றுவதி லும், வட பகுதிக்கான முதலீடுகளிலும், அபி விருத்திகளிலும் மற்றும் தமிழ் சமூகத்தின் ஏனைய தேவைகளிலும் கூடிய கவனம் செலுத்தினார்.

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவி ருத்தி செய்வதற்காக பல பில்லியன் ரூபாவை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த தொகை யானது அம்பாந்தோட்டை துறைமுக அபி விருத்தித் திட்டத்துக்கு ஒதுக்கீடு செய்த தொகையை விட பெருமளவு அதிகமானதாகும் என்றும் அமைச்சர் சொன்னார். இயல்பில் பிடிவாத போக்குடைய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எல்லா சந்தர்ப்பங்களிலும் புலிகளுக்கு சாதகமான நிலைப்பாட்டையே கடைப்பிடித்து வந்ததால், தமிழ் சமூகம் அதன் தற்போதைய நிலை குறித்து அவதானமாக இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

சம்பந்தன் நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்பட்டதால் தமிழ் சமூகத்திற்கு தேவையானவற்றை அவர்களால் செய்து கொடுக்க முடியாமல் போனது. இவர்க ளால் தமிழ் சமூகத்தினர் பல்வேறு இன் னல்களுக்கே முகம் கொடுத்து வந்தனர். ஆனால், தமிழ் சமூகத்தை அழிவிலிருந்து பாதுகாத்து பூரண கெளரவத்தை பெற்றுக் கொடுத்தவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

எனவே மக்கள் ஜனாதிபதியுடன் உள்ளனர். பயங்கரவாதத்தை ஜனாதிபதி முற்றாக இல்லாதொழித்ததால் சம்பந்தன் குழுவினர் ஜனாதிபதியை வைராக்கியத்துட னும், பழிவாங்கும் நோக்குடனும் பார்க்கின்றனர். ஏற்கனவே பிரிவினை வாதத்தை ஏற்படுத்திய அவர்கள் தற்பொழுது வேறு வழிகளில் அதனை செயலுருப்பெற முயற்சிக்கின்றனர். தமிழ் சமூகத்திற்கு தேவையான சகலவற்றையும் பெற்றுக் கொடுத்தது அரசாங்கமே. நாங்கள் தனிப்பட்டவர்களுக்காக செய்வதை விட சமூகத்திற்காக செய்வதையே முக்கியமாக கருதுகின்றோம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

800 விக்கெட்டைக் கைப்பற்றுவதுடன் கிரிக்கெட் வாழ்வை முடிக்கவுள்ளேன் முரளி கூறுகிறார்

muttiah.jpgஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான முரளிதரன், சமீபத்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான போட்டித் தொடரில் காயமடைந்து ஓய்வெடுத்து வருகிறார். இந்த நிலையில், அவரது வருங்கால திட்டம் என்ன என்று கேட்டதற்கு பதிலளிக்கையில், மேற்கிந்தியாவுக்கு எதிராக இலங்கையில் நடைபெறவிருக்கும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடி 800 விக்கெட்டுகளை கடந்து டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை முடிக்கத் திட்டமிட்டுள்ளேன்.

2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டி வரை ஒருநாள் போட்டியில் விளையாட விரும்புகிறேன்.  ஆனால்,இவையெல்லாம் அப்படி நடக்குமா என்பதைப் பார்க்க வேண்டும். அணியில் நான் எந்த வகையில் தேவையாக இருக்கிறேன் என்பது முக்கியமாகும். சுயநலத்துடன் செயற்பட நான் விரும்பவில்லை. நல்லபடியாக பந்து வீச முடியுமென்ற நிலை இருந்தால் மட்டுமே நான் தொடர்ந்து விளையாடுவேன். இல்லையெனில் மகிழ்ச்சியுடன் விடைபெறுவேன்.

ஏனெனில் எனக்கு பல்வேறு கவுண்டி அணிகளிலிருந்தும் சென்னையில் இருந்தும் விளையாட அழைப்பு வந்த வண்ணமுள்ளன. எனது உடல் எந்தளவுக்கு ஒத்துழைக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். டெஸ்ட் போட்டியில் பந்து வீச எனது உடல் ஒத்துழைப்பது கடினம்.உடல் ஒத்துழைக்காவிட்டால் என்னை விளையாட நிர்ப்பந்திக்க மாட்டேன்.20 ஓவர் போட்டியில் எனது நாட்டுக்காக விளையாடவில்லை. ஒருநாள் போட்டியில் பந்து வீசுவதை சமாளிக்க முடியுமென்று நினைக்கிறேன் என்றார்.

இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினமாக இருப்பது ஏன் என்று கேட்டதற்கு, இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது எந்த அணிக்கும் எளிதான காரியமல்ல. 1997 ஆம் ஆண்டில் எங்கள் அணி நல்ல நிலையிலிருந்த போது கூட இந்தியாவில் நடந்த 3 டெஸ்ட் போட்டிகள் அனைத்திலும் டிரா தான் செய்தோம். இந்தியாவில் ஆடுவது என்பது எப்போதும் கடினமான விடயமாகும். தனது சொந்த மண்ணில் எப்படி ஆட வேண்டுமென்பது இந்திய அணியினருக்கு நன்கு தெரியும். இந்தியாவைப் போல் நாங்களும் எங்கள் சொந்த மண்ணில் பலமான அணியாகும் என்றார்.

15 மாதக் கைக்குழந்தை கல்லில் அடித்துக் கொலை – வாழைச்சேனையில் பரபரப்பு

வாழைச் சேனை பொலிஸ் பிரிவில் மீராவோடைப் பிரதேசத்தில் நேற்று முன்தினம் கைக்குழந்தை ஒன்று அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளது.

மீராவோடை ஜும்ஆப்பள்ளி, வீதியைச் சேர்ந்த காசிம் பாவா முகம்மது ஜவ்பர் (34) என்பவரின் 15 மாதக் கைக்குழந்தையே பரிதாபகரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளது. மேற்படி கைக்குழந்தையின் மூத்த சகோதரர் மீராவோடை அல் ஹிதாயா வித்தியாலய மாணவன்.

இவ்வருடத்திற்கான பாடசாலை கடந்த 04ம் திகதி ஆரம்பிக்கப் பட்டுள்ளது. இதன் பொருட்டு பாடசாலைக்குச் செல்வதற்காக கழுத்துப்பட்டி ஒன்றினை வாங்கித் தருமாறு தகப்பனிடம் கோரியிருந்தார். இவ்வேளையில், ஆத்திரம் கொண்ட தகப்பன் பாடசாலை செல்லும் தன் மகனையும், தன் மனைவியையும் தாக்கி, தன் மனைவியின் மடியிலிருந்த குறித்த கைக்குழந்தையை பறித்தெடுத்து அத்திவாரக் கல்லில் தலைகீழாக தூக்கி அடித்து கொலை செய்துள்ளதாக குடும்ப உறவினர்கள் தெரிவித்தனர்

நீதன் சண் ஸ்காபரோ நகரசபை உறுப்பினருக்கான வேட்பாளராக அறிவிக்கின்றார்

Neethan_Shanஸ்காபரோ ஒன்ஸ நீண்டகால  சமூகச் செயற்பாட்டாளரும் பொதுப்பாடசாலை அறங்காவலருமான நீதன் சண், இன்று தொகுதி 42இன் நகரசபை உறுப்பினருக்கான வேட்புமனுவை நகர மண்டபத்தில் தாக்கல் செய்தார்.

ரொறன்ரோ மாநகரில் நன்கு அறிமுகமான சமூகத் தலைவரான நீதன் சண் ஸ்காபரோ ரூச் றிவர் வதிவாளர்களை தான் நகரசபையில் திறம்பட பிரதிநிதித்துவப் படுத்துவேன் என நம்புகின்றார். வேட்பாளராக அறிவித்த, நீதன் சண்இ “42ஆம் தொகுதிக்கு தேவையான அங்கிகாரத்தையும், வளங்களை கொண்டு சேர்ப்பதற்காகவும், வதிவோரிடையேயும், நகரசபையிடையேயும் உரிய தொடர்பாடலை ஏற்படுத்தவுமே, நான் இத்தொகுதியில் போட்டியிடுகின்றேன்” எனச் சுறுசுறுப்புடன் குறிப்பிட்டார்.

நீதன் சண் ஸ்காபரோவில் கடந்த பத்தாண்டுகளாக கல்வி, குழந்தைகள், இளையோர் வேலை, வேலை வாய்ப்பு, குடிவரவு, வறுமைக் குறைப்பு உள்ளடங்கிய பல துறைகளிற் பணியாற்றியுள்ளார்.  இருபதுக்கும் கூடிய பாடசாலைகளில் மாலை நேர நிகழ்ச்சித்திட்டத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றியுள்ளார். அவரது குமுகத்தில் அவர் ஆற்றிய சேவை பல திட்டங்களும் அமைப்புக்களும் தொடக்கப்படுவதற்கும், வலுப்பெறுவதற்கும் வழியமைத்தது.

அவர் தேர்வாகியதும், நகரசபை அரசை இன்னமும் அணுகவும், விளங்கவும், நம்பவும், அனைவரும் அணுகவும் கூடியதாக அமைப்பார். நீதன் தனது பத்தாண்டுக்கு மேலான சமூக மேம்பட்டுப் பட்டறிவைக் கொண்டு நகரசபை, தொகுதி 42இன் ஒவ்வொரு வதிவாளருக்குமாக உழைப்பதை செய்வதை ஆவன செய்வார். நீதன் 21ஆம் நூற்றாண்டில் எமது தலைமைத்துவத்துக்குத் தேவையான சமநிலையைக் வழங்குபவர். அவர் நான்கு ஆண்டுகள் தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலராக அரசியற் பட்டறிவையும், அத்தோடு புதிய தலைமுறைக்கு உரித்தான புதுமை, ஆக்கம், மற்றும் உற்சாகத்தையும் கொண்டுள்ளார்.

நீதன் சண்ணுக்கு ஆதரவு வழங்கி வந்த நீண்டகால மல்வேர்ன் வதிவாளரான திரு. நடா விஜயபாலன் குறிப்பிடுகையில், “இச்சுற்றாடலுக்குத் தலைமை மாற்றம் தேவையானது, தொகுதி 42இன் வதிவாளர்கள், நகரம் எவ்வாறு செயற்படுகின்றது என்பதில் ஈடுபாடு காட்ட உரிய வாய்ப்புக் கிடைப்பதற்கு இப்பொதாவது காலம் கனியவேண்டும்.” எனத் தெரிவித்தார்.

தெற்காசிய சமுகங்கள் நீதன் சண், ஒக்டோபர் 25, 2010இல், ரொறன்ரோ மாநகரில், இளைய தெற்காசிய நகரசபை உறுப்பினராகி ஒரு வரலாறு படைப்பார் என்று எதிர்பார்க்கின்றார்கள். தற்போதைய நகரசபையில் உள்ள 44 உறுப்பினர்களில் ஒருவர் கூட தெற்காசியர் இல்லை. நீதன் தேர்வாகிய பின், ரொறன்ரோ நகரசபைக்குத் தேர்வாகும் முதற் தமிழரும் ஆவார்.

நீதன் சண் ரொறன்ரோப் பல்கலைக்கழகத்தில்  அறிவியல் (science) மற்றும் கல்வியில் (education) என இரண்டு இளங்கலைப் பட்டங்களைப் பெற்றுள்ளார். தற்போது அவர் சமூககவியலில் (sociology) மற்றும் ஒப்புரவில் (equity) கலை முதுகலைப் பட்டத்தை நிறைவுசெய்கின்றார். தெற்காசிய சமூகங்களுக்குச் சேவையாற்றும் CASSA  எனும் அமைப்பில் நிறைவேற்று இயக்குநராகப் பணியாற்றுகின்றார். நீதன் சண் ஆசிரியர், குமுக சேவை அமைப்பின் நிறைவேற்று இயக்குநர்இ வானொலி, தொலைக்காட்சி ஒலிபரப்பாளர் மற்றும் சமூகத் தேவை மற்றும் பாதிப்புப் பற்றிய ஓரு நிகழ்ச்சித் தொகுப்பாளர் என்று பல சவாலான பாத்திரங்கள் ஏற்றுள்ளார். அவர் பல ரொறன்ரோ சமூக அமைப்பின் முக்கிய நபர் விருது, நகரகக் கூட்டமைபின் இனத் தொடர்பாடல் விருது முதலான விருதுகளால் சிறப்பிக்கபட்டுள்ளார். மேய்றீ நிறுவனமும் மற்றத்துக்கான தலைவர்கள் நிகழ்ச்சித்திட்டத்தை நிறைவு செய்ததற்காக சிறிப்பித்தது.

நீதன் சண்ணும் அவரது ஆதரவாளரும் பிறின்சஸ் பாங்குவற் மண்டபத்தில் தங்களது ஒன்றுகூடலை ஞாயிற்றுக்கிழமை, சனவரி 10, 2010 ஒழுங்கு செய்துள்ளார்கள். கூடுதல் விவரங்களுக்கோ, நீதனுடனான ஊடக நேர்காணலுக்கோ, ஊடக ஒருங்கிணைப்பாளர் பிரகால் திருவைத் 416-727-3034 என்ற எண்ணூடாகவோ நீதன் சண்ணை 416-824-3399 என்ற எண்ணூடாகவோ அல்லது info@neethanshan.ca என்ற மின்னஞ்சலூடாகவோ தொடர்புகொள்ளலாம்.

ஜனாதிபதி விரைவில் யாழ் செல்ல முடிவு! – ‘தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ ஜனாதிபதி புலம்பெயர்ந்த தமிழ் குழுவிற்கு உறுதி

விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டு இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார். புலம்பெயர்ந்த தமிழ் குழு ஒன்று ஜனாதிபதியை அலரிமாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்திருக்கிறார்.

மேலும் வரும் தேர்தலையொட்டிய பிரச்சாரங்களுக்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விரைவில் யாழ்ப்பாணம் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அண்மையில் எதிர்க் கட்சிக் கூட்டின் வேட்பாளர் யாழ் சரத்பொன்சேகாவின் யாழ் விஜயத்தைத் தொடர்ந்து மகிந்த ராஜபக்சவும் யாழ் செல்லத் தீர்மானித்து உள்ளதாக இக்குழுவில் இடம்பெற்ற உறுப்பினர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் மகிந்த ராஜபக்சவின் யாழ் விஜயத்தின் போது இச்சந்திப்பில் கலந்தகொண்ட பலரும் அவருடன் சமூக அளிப்பார்கள் எனத் தெரிவித்தார். இப் புலம்பெயர் குழுவில் இடம்பெற்ற சிலர் ஏற்கனவே மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களிக்கும்படி யாழ் மக்களைக் கேட்க உள்ளனர்.

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த டாக்டர் நெயல் நடேசன், சவூதி அரேபியாவிலிருந்து டாக்டர் இராஜசிங்கம் நரேந்திரன், லண்டனிலிருந்து இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த சந்திப்பில், டாக்டர் இராமநாதன் நரேந்திரநாதன் (அவுஸ்திரேலியா) மயில்வாகனம் சூரியசேகரம் (லண்டன்), சபாபதி சுப்பையா குகநாதன் (பிரான்ஸ்), இக்னேசியஸ் செல்லையா யோகநாதன் மனோரஞ்சன் (கனடா), முருகபூபதி (அவுஸ்திரேலியா) ஆகியோர் கலந்துகொண்டனர்.

தமிழ் மக்களின் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக இக்குழுவினர் மகஜர் ஒன்றைக் கையளித்ததுடன், அதுதொடர்பாக நீண்டநேரம் ஜனாதிபதியுடன் கலந்துரையாடினர்.

இடம்பெயர்ந்த மகக்ளின் மீள்குடியேற்றம், உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுதல், வடக்கு கிழக்கின் கல்வி, அபிவிருத்தி திட்டங்கள், புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்கள் தாயகம் வந்து செல்வதில் உள்ள சிக்கல்கள் போன்ற விடயங்கள் குறித்து ஜனாதிபதிடன் கலந்துரையாடினர். தமிழர்களின் அதியுயர் பிரச்னையான இனப்பிரச்னைக்கு தீர்வு காண்பது தொடர்பாகவும் இக்குழு உரையாடி உள்ளது.

சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்த போது, “எந்தத் தமிழர்களையும் தேவையில்லாமல் சிறையில் வைத்திருப்பது தமக்கு விருப்பமானதல்ல. சட்டப்படியான விசாரணைகளை துரிதப்படுத்தி அவர்களை விடுதலை செய்யுமாறு ஏற்கனவே தான் நீதி அமைச்சின் செயலாளருக்கு பணித்துள்ளேன்” என அவர் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கு இணைப்பை ஏற்படுத்தப் போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிர்த்தரப்பு ஜனாதிபதி பேட்பாளர் உறுதியளித்துள்ள நிலையில் வடக்கு கிழக்கு இணைக்கப்படுவதை தான் அனுமதிக்கப் போவதில்லை என மகிந்த ராஜபக்ச அறிவுறுத்தி உள்ளார். இந்தப் பின்னணியில் யாழ் செல்லவுள்ள மகிந்த ராஜபக்ச தமிழ் மக்களைத் திருப்திப்படுத்துவதற்கான சில விடயங்களை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் யாழில் ஜனாதிபதியின் உரை தமிழில் முழுமையாக இடம்பெறும் என்றும் அதற்கான பயிற்சிகளை அவர் எடுத்துவருவதாகவும் தெரியவருகின்றது. எதிர்க் கட்சி வேட்பாளர் நல்லூர் கந்தசாமி கோலிலில் சேட்டைக் கழற்றி விட்டு வழிபட்டதைப் போல் மகிந்த ராஜபக்சவும் ஏதாவது தேர்தல் ஸ்ரண்ட் செய்யலாம்.

புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தையின் இறுதிக் கிரியைகள் வல்வெட்டித்துறையில் நடைபெற ஏற்பாடு

prabakaeans-father.jpgஜனவரி 6ல் காலமான காலஞ்சென்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் இறுதிக் கிரியைகள் அவரின் பூர்வீக நிலமான வல்வெட்டித்துறையில் இடம்பெறவுள்ளது. ஜனவரி 10 ஞாயிற்றுக் கிழமை இவரது இறுதிக் கிரியைகள் வல்வெட்டித்துறையில் இடம்பெற்று வல்வெட்டித்துறை மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.

கொழும்பில் இராணுவ காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் நேற்று இரவு காலமானதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாயணக்கார தெரிவித்துள்ளார். நீண்டகாலமாக  பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் தமது 86 வது வயதில் காலமானதாக பிரிகேடியர் குறிப்பிட்டுள்ளார். இவர் இயற்கையாக உயிரிழந்துள்ளதாக இராணுவப் பேச்சாளார் உறுதி செய்துள்ளார்.

அன்னாரின் பூதவுடல் ஜனவரி 9ல் வல்வெட்டித்துறையில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் என திரு வேலுப்பிள்ளை குடும்பத்தினரின் உறவினரும் ஜனாதிபதி வேட்பாளருமான எம் கெ சிவாஜிலிங்கம் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். திருமதி வேலுப்பிள்ளையினதும் அவர்களுடைய கனடாவில் உள்ள மகளினதும் விருப்பத்திற்கு இணங்க இறுதிக்கிரியைகளை தான் மேற்கொள்ள உள்ளதாக எம் கெ சிவாஜிலிங்கம் தேசம்நெற் க்குத் தெரிவித்தார்.

இவற்றுக்கு முன்பாக மரணம் இயற்கையாக நிகழ்ந்தது என்பதை உறுதிப்படுத்துவதற்கான விசாரணையை மேற்கொள்ளும்படி தான் கேட்டுள்ளதாகவும் இறுதிக் கிரியையை குடும்பத்தினர் விருப்பத்தின்படி மேற்கொள்ள அரசு சம்மதித்து உள்ளதாகவும் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

கடந்த மே மாதம் நடைபெற்ற இறுதிக் கட்ட மோதல்களின் போது மோதல் வலயத்திலிருந்து இரானுவத்தினரிடம் சரணடைந்த வேளை வேலுப்பிள்ளை மற்றும் அவரது மனைவி ஆகியோர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கபபட்டிருந்தனர்.

வேலுப்பிள்ளையின் மரணத்தை அடுத்து அவரது மனைவியை விடுதலை செய்ய அரசு சம்மதித்து உள்ளதாகவும் தெரியவருகின்றது. இறுதிக்கிரியைகளில் பங்குபற்றும் திருமதி வேலுப்பிள்ளை அதன் பின்னர் தனது மகளிடம் கனடா செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.

திரு வேலுப்பிள்ளை அவர்களின் மறைவு தொடர்பாக யாழ் மாவட்ட பா உ எஸ் கஜேந்திரன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் ”இலங்கை அரசாங்கத்தின் தடுப்புக்காவலில் இருந்த வேளையில் எம்மை விட்டுப் பிரிந்த மதிப்பிற்குரிய திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துவதோடு அவரது பிரிவால் துயிருற்று இருக்கும் அவரது பிள்ளைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.” எனக் குறிப்பிட்டு உள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசியல் தலைவர்களும் தங்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளனர். ”தமிழ் ஈழ தேசிய இனத்தின் தன்னிகர் அற்ற தலைவராம் மேதகு பிரபாகரன் அவர்களின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் உயிர் நீத்தார் என்ற செய்தி, துன்பப் பேரிடியாக, மனதை வாட்டி வதைக்கிறது.” என வைகோ தனது இரங்கலில் தெரிவித்து உள்ளார்.

._._._._._.

(இது புலிகளின் எப்பிரிவு என்பது குறிப்பிடப்படவில்லை.)

தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
07/01/2010

இரங்கற் செய்தி

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் மறைவுச் செய்தி தமிழ்மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழீழத் தேசத்தின் விடுதலைப் பயணத்தைத் தலைமைதாங்க ஒரு தவப்புதல்வனைப் பெற்றெடுத்த திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் தனது இறுதிக்காலத்தில் தாயகத்தில் வாழும் ஆசையோடு இந்தியாவிலிருந்து திரும்பியிருந்தார். தாயகத்தில் நிகழ்த்தப்பட்ட பேரழிவின்போது தனது தள்ளாத வயதிலும் மக்களோடு மக்களாக இறுதிவரை வாழ்ந்துவந்தார்.

இறுதியில் சிறிலங்கா இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு, சர்வதேச நெறிமுறைகளுக்கு மாறாக உறவினர்களைச் சந்திக்கும் வாய்ப்புக்கூட மறுக்கப்பட்டு சிறைப்படுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில் உரிய மருத்துவ வசதிகளின்றி சிறிலங்காப் படையினரின் தடுப்புக்காவலில் சாவடைந்த செய்தி தமிழ்மக்கள் அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இவரது பிரிவால் துயருறும் இவரின் துணைவியாருக்கும் பிள்ளைகளுக்கும் உறவினர்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பில் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.
 

இலங்கையில் ஜனாதிபதி ஆட்சி முறையும், இதுவரை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களும்: 04 – புன்னியாமீன்-

election_box.jpg(தொடர்ச்சி…..)

500க்கு மேற்பட்ட கொலைச் சம்பவங்களுடன் நடைபெற்ற  2ஆவது ஜனாதிபதித் தேர்தல்

இலங்கையின் 2வது ஜனாதிபதித் தேர்தலுக்கான நியமனப்பத்திரங்கள் 1988 நவம்பர் 10ஆம் திகதி காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் ஏற்றுக் கொள்ளப்படுமென தேர்தல் ஆணையாளர் திரு. சந்திரானந்த டி சில்வா அவர்களினால் அறிவிக்கப்பட்டது. இதற்கிணங்க 3 அபேட்சகர்கள் தமது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.

1. திரு. ரணசிங்க பிரேமதாச (ஐக்கிய தேசியக் கட்சி)
2. திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க (ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி)
3. திரு. ஒஸி அபயகுணவர்தனா (ஸ்ரீலங்கா மக்கள் கட்சி)

தமிழ் ஈழ விடுதலைப் புலிகளினால் வடக்கு, கிழக்கு பகுதிகளில் நடத்தப்பட்டு வந்த யுத்தத்தினாலும், தென்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணி (JVP) யினரால் நடத்தப்பட்டு வந்த கலவரங்களினாலும் தேசத்திலே ஓர் அமைதியற்ற சூழ்நிலையே இடம் பெற்றுவந்ததெனலாம். இலங்கையின் 1வது ஜனாதிபதித் தேர்தலுடன் ஒப்பு நோக்கும் போது மிகவும் பிரச்சினைக்குரிய கால கட்டமாகவே இக்கால கட்டம் விளங்கியது.

பல ஆண்டுகளாக வடக்குப் பகுதியிலும், 1987 இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை அடுத்து தென்பகுதிகளிலும் வன்முறைகள் தொடர்ந்து கொண்டிருந்தன. இருப்பினும், 1988ல் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தல்கள் பிரச்சினைகளின் மத்தியிலேனும் நடத்த முடிந்தமையினால் ஜனாதிபதித் தேர்தலையும், தொடர்ந்து பொதுத் தேர்தலையும் நடாத்துவதில் அரசு உறுதியாகச் செயற்பட்டது. (மறுபுறமாக யாப்பு விதிகளின்படி ஜனாதிபதியினதும்,  பாராளுமன்றத்தினதும் பதவிக்காலங்களை நீடிக்க முடியாத நிலையும் இருந்தது)

1988ம் ஆண்டின் இறுதி அரைப்பகுதிகளில் நிலைமை மிகமிக மோசமான முறையிலே இருந்தது. மக்களின் அன்றாட வாழ்க்கை நிலை பெரும் பாதிப்புக்குள்ளாகியிருந்தது. போக்குவரத்து, தபால், தந்தித் தொலைத் தொடர்புகள் சீர்குலைந்திருந்தன. அடிக்கடி தூண்டப்பட்ட வேலை நிறுத்தங்கள், ஹர்த்தால் நடவடிக்கைகள் அரசாங்கத்தினாலும், தீவிரவாதிகளினாலும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவுகள் அரசாங்க இயந்திரத்தை ஸ்தம்பிதமடையச் செய்திருந்தன. இலங்கை பூராவும் மக்கள் மத்தியில் ஒருவித நம்பிக்கையற்ற நிலைமையே காணமுடிந்தது.

1988 டிசம்பர் 19ம் திகதியன்று தேர்தல் நடைபெறுமென அறிவிக்கப்பட்ட போதிலும்கூட, தேர்தலை நடத்துவதில் அரசாங்கமும் பாரிய இடர்பாடுகளை எதிர்நோக்கியது. தேர்தல் அதிகாரிகளை சில வாக்கெடுப்பு நிலையங்களுக்கு அனுப்பமுடியாத நிலைகூட ஏற்பட்டன. மறுபுறமாக பல பகுதிகளில் வாக்காளர்களும் அச்சுறுத்தப்பட்டனர். வாக்களிக்கச் சென்றால் கொலை செய்யப்படுவர் என்ற பகிரங்க அறிவித்தல்களும் விடுக்கப்பட்டன.

பொலிஸ் அறிக்கையின்படி ஜனாதிபதித் தேர்தலுக்கு நியமனப்பத்திரம் கோரப்பட்ட தினத்தில் இருந்து தேர்தல் நடைபெற்ற திகதிவரை 500க்கு மேற்பட்ட கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதைக் காணமுடிகிறது. இவர்களுள் மாகாணசபை உறுப்பினர்கள் நால்வரும், அரசாங்க உத்தியோகத்தர்கள் மூவரும், 360க்கு மேற்பட்ட பொதுமக்களும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், 100க்கும் மேற்பட்ட காவல், பாதுகாப்பு படையினரும் கொலை செய்யப்பட்டனர். இக்காலகட்டத்தில் நாளொன்றுக்குச் சரியாக 12 கொலைகள் இடம்பெற்றதாக அரசாங்கப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை அரசியல் வரலாற்றில் இதுவரை நிகழாத நிகழ்வாக சில வாக்கெடுப்பு நிலையங்களுக்கு ஒரு தேர்தல் அதிகாரியாயவது அனுப்பிக் கொள்ள முடியவில்லை. உதாரணமாக மொனராகலை தேர்தல் மாவட்டத்தில் 49 வாக்கெடுப்பு நிலையங்களில் இந்நிலை ஏற்பட்டதுடன், வாக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்ட பின் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களினால் கடமையாற்றக் கூடிய வாய்ப்பு உருவாகவில்லை. இதனால் 50 வாக்கெடுப்பு நிலையங்களையும் இரத்துச் செய்யும் நிலை தேர்தல் ஆணையாளருக்கு ஏற்பட்டது. போக்குவரத்து சீர்குலைவு காரணங்களினால் 800 வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்களிப்பு நீண்டநேரம் தாமதித்தே ஆரம்பிக்கப்பட்டது.

களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, திருகோணமலை, குருநாகல், அனுராதபுரம், பொலறுவை,  மொனராகலை ஆகிய தேர்தல் மாவட்டங்களில் 207 வாக்களிப்பு நிலையங்களில் ஒரு வாக்காவது பதியப்படாததையும் களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, திருகோணமலை, குருநாகல், அனுராதபுரம், பொலநறுவை, பதுளை,  மொனராகலை, இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் 375 வாக்களிப்பு நிலையங்களில் 100க்கும் குறைவான வாக்குகள் பதிவாகியுள்ளதையும் தேர்தல் ஆணையாளரின் அறிக்கை மூலமாகக் காணமுடிகிறது.

இத்தகைய சூழ்நிலைகளில் 1988 டிசம்பர் 19ம் திகதி நடைபெற்ற 2வது ஜனாதிபதித் தேர்தலில் அகில இலங்கை ரீதியாக வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த வாக்காளர் எண்ணிக்கை 9,375,742 ஆகும். இவர்களுள் 5,186,223 (55.32%) வாக்காளர்கள் வாக்களித்த போதிலும் கூட 5,094,778 வாக்குகளே செல்லுபடியான வாக்குகளாக இருந்தன.

யாப்பு விதிகளுக்கு இணங்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப் படக்கூடியவர் செல்லுபடியான வாக்குகளில் 50%க்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்றாக வேண்டும். அதாவது இத்தேர்தலில் 2,547,389 வாக்குகளுக்கு மேல் பெறுபவரே ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார். திரு. ஆர். பிரேமதாச அவர்கள் 2,569,199 வாக்குகளை அதாவது 50.43% வாக்குகளைப் பெற்றதினால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 2வது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக 1989.01.02ம் திகதி பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

1988 ஜனாதிபதித் தேர்தலில் 50% மான வாக்குகளைவிட (2,547,389) மேலதிகமாக 21,810 வாக்குகளையும், தேர்தலில் 2ம் இடத்தைப் பெற்ற ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவை விட 279,339 மேலதிக வாக்குகளையும் திரு. பிரேமதாச பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மேல் மாகாணம் –

கொழும்பு மாவட்டம்

ஆர். பிரேமதாச  (U.N.P)  361,337  (49.14%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  339,958 (46.23%)
ஓஸி அபேகுணவர்தனா  (S.L.M.P)   34,020 (4.63%)

பதியப்பட்ட வாக்குகள்  1,088,780
செல்லுபடியான வாக்குகள்  735,315 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   11,295  (1.51%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 746,610 (68.57%)

கம்பஹா மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  350,092 (48.08%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  355,553 (48.83%)
ஓஸி அபேகுணவர்தனா  (S.L.M.P)   22,467 (3.09%)

பதியப்பட்ட வாக்குகள்  969,735
செல்லுபடியான வாக்குகள்  728,112 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   10,054 (1.36%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 738,166 (76.12%)

களுத்துறை மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  169,510 (46.74%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  179,761 (49.57%)
ஓஸி அபேகுணவர்தனா  (S.L.M.P)   13,375 (3.69%)

பதியப்பட்ட வாக்குகள்  570,118
செல்லுபடியான வாக்குகள்  362,646 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   6,537 (1.77%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 369,183 (64.76%)

மத்திய மாகாணம் –

கண்டி மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  234,124 (54.88%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  186,187 (43.65%)
ஓஸி அபேகுணவர்தனா  S.L.M.P)   6,266  (1.47%)

பதியப்பட்ட வாக்குகள்  628,240
செல்லுபடியான வாக்குகள்  426,577 (98.57%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   6,167 (1.43%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 432,744 (68.88%)

மாத்தளை மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  37,007  (57.85%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  25,825  (40.38%)
ஓஸி அபேகுணவர்தனா  (S.L.M.P)   1,135  (1.77%)

பதியப்பட்ட வாக்குகள்  214,938
செல்லுபடியான வாக்குகள்  63,967  (98.29%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   1,110  (17.1%)
அளிக்கப்பட்ட வாக்குகள்  65,077  (30.28%)

நுவரெலியா மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  112,135 (62.15%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  64,907  (35.98%)
ஓஸி அபேகுணவர்தனா  (S.L.M.P)   3,371  (1.87%)

பதியப்பட்ட வாக்குகள்  229,769
செல்லுபடியான வாக்குகள்  180,413 (98.19%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   3,320 (1.81%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 183,733 (79.96%)

தென் மாகாணம்

காலி மாவட்டம்

ஆர். பிரேமதாச    (U.N.P)   124,912 (44.62%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க   (S.L.F.P)  148,615 (53.09%)
ஓஸி அபேகுணவர்தனா  S.L.M.P)   6,417  (2.29%)

பதியப்பட்ட வாக்குகள்  571,303
செல்லுபடியான வாக்குகள்  279,944 (98.43%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   4,461 (1.57%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 284,405 (43.78%)

மாத்தறை மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  45,399  (42.93%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  57,424  (54.30%)
ஓஸி அபேகுணவர்தனா  (S.L.M.P)   2,922  (2.76%)

பதியப்பட்ட வாக்குகள்  451,934 
செல்லுபடியான வாக்குகள்  105,745 (98.14%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   2,003 (1.86%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 107,748 (23.84%)

ஹம்பாந்தோட்டை மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  41,198  (49.62%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (U.N.P)  39,343  (47.39%)
ஓஸி அபேகுணவர்தனா  (S.L.M.P)   2,478  (2.98%)

பதியப்பட்ட வாக்குகள்  295,180 
செல்லுபடியான வாக்குகள்  83,019  (95.56%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   3,855 (4.44%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 86,874  (29.43%)

வடமாகாணம்

யாழ்ப்பாண மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  33,650  (28.03%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  44,197  (36.82%)
ஓஸி அபேகுணவர்தனா  S.L.M.P)   42,198 (35.15%)

பதியப்பட்ட வாக்குகள்  591,782 
செல்லுபடியான வாக்குகள்  120,045 (93.38%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   8,517 (6.62%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 128,562 (21.72%)

வன்னி மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  10,580  (55.78%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  4,889  (25.77%)
ஓஸி அபேகுணவர்தனா  (S.L.M.P)   3,500  (18.45%)

பதியப்பட்ட வாக்குகள்  142,723 
செல்லுபடியான வாக்குகள்  18,969  (96.40%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   708  (3.60%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 19,677  (13.79%)

கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பு மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  61,657  (50.99%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  21,018  (17.38%)
ஓஸி அபேகுணவர்தனா  (S.L.M.P)   38,243 (31.63%)

பதியப்பட்ட வாக்குகள்  215,585 
செல்லுபடியான வாக்குகள்  120,918 (95.91%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   5,163 (4.09%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 126,081 (58.48%)

திகாமடுல்லை மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  96,420  (50.77%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க   (S.L.F.P)  83,137  (43.78%)
ஓஸி அபேகுணவர்தனா  (S.L.M.P)   10,352 (5.45%)

பதியப்பட்ட வாக்குகள்  265,768 
செல்லுபடியான வாக்குகள்  189,909 (98.08%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   3,802 (1.92%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 193,711   (72.89%)

திருகோணமலை மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  36,841  (45.70%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  29,679  (36.81%)
ஓஸி அபேகுணவர்தனா  (S.L.M.P)   14,103 (17.49%)

பதியப்பட்ட வாக்குகள்  152,289 
செல்லுபடியான வாக்குகள்  80,623  (98.38%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   1,326 (1.62%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 81,949  (53.81%)

வடமேல் மாகாணம்

குருநாகலை மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  198,662 (51.12%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க   (S.L.F.P)  182,223 (46.89%)
ஓஸி அபேகுணவர்தனா  (S.L.M.P)   7,717  (1.99%)

பதியப்பட்ட வாக்குகள்  784,986 
செல்லுபடியான வாக்குகள்  388,602 (98.91%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   4,281 (1.09%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 392,883 (50.05%)

புத்தளம் மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  125,339 (55.89%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  94,823  (42.28%)
ஓஸி அபேகுணவர்தனா  S.L.M.P)   4,093  (1.83%)

பதியப்பட்ட வாக்குகள்  319,003 
செல்லுபடியான வாக்குகள்  224,255 (98.70%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   2,965 (1.30%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 227,220 (71.23%)

வடமத்திய மாகாணம்

அநுராதபுர மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  56,951  (42.94%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  73,154  (55.15%)
ஓஸி அபேகுணவர்தனா  S.L.M.P)   2,529  (1.91%)

பதியப்பட்ட வாக்குகள்  334,074
செல்லுபடியான வாக்குகள்  132,634 (98.36%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   2,027 (1.64%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 134,841 (40.36%)

பொலநறுவை மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  26,392  (55.54%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  20,173  (42.45%)
ஓஸி அபேகுணவர்தனா (S.L.M.P)   957  (2.01%)

பதியப்பட்ட வாக்குகள்  163,741
செல்லுபடியான வாக்குகள்  47,522  (97.62%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   1,157  (2.38%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 48,679  (29.73%)

ஊவா மாகாணம்

பதுளை மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  80,779  (60.08%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  50,223  (37.36%)
ஓஸி அபேகுணவர்தனா (S.L.M.P)   3,440  (2.56%)

பதியப்பட்ட வாக்குகள்  329,462
செல்லுபடியான வாக்குகள்  134,442 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   3,276 (2.38%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 137,718 (41.80%)

மொனராகலை மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  16,872  (63.21%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  9,123  (34.18%)
ஓஸி அபேகுணவர்தனா  (S.L.M.P)   697  (2.61%)

பதியப்பட்ட வாக்குகள்  161,927
செல்லுபடியான வாக்குகள்  26,692 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   851  (3.09%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 27,543  (17.01%)

சப்பிரகமுவ மாகாணம்

இரத்தினபுரி மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  180,622 (51.75%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க   (S.L.F.P)  159,879 (45.81%)
ஓஸி அபேகுணவர்தனா  (S.L.M.P)   8,516  (2.44%)

பதியப்பட்ட வாக்குகள்  457,224 
செல்லுபடியான வாக்குகள்  349,017 (98.84%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   4,113 (1.16%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 393,130 (77.23%)

கேகாலை மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  168,720 (57.11%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  119,769 (40.54%)
ஓஸி அபேகுணவர்தனா  S.L.M.P)   6,923  (2.34%)

பதியப்பட்ட வாக்குகள்  437,178 
செல்லுபடியான வாக்குகள்  295,412 (98.57%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   4,277 (1.43%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 299,689 (68.55%)

இரண்டாவது ஜனாதிபதித் தேர்தல் 1988

இறுதித் தேர்தல் முடிவுகள்

ஆர். பிரேமதாச   (U.N.P)  2,569,199 (50.43%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  2,289,860 (44.94%)
ஓஸி அபேகுணவர்தனா  (S.L.M.P)   235,719 (4.63%)

பதியப்பட்ட வாக்குகள்  9,375,742
செல்லுபடியான வாக்குகள்  5,094,778 (98.24%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   91,445 (1.76%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 5,186,223 (55.32%)

இம்முடிவின் படி ஜனாதிபதியாகத் தெரிவாக குறைந்த பட்சமாகப் பெறவேண்டிய வாக்குகள் (செல்லுபடியான வாக்குகளில் 50% வீதத்துக்கும் அதிகமான வாக்குகள்)
   2,547,389

குறைந்த பட்ச வாக்குகளை விட ஆர். பிரேமதாச அவர்கள் பெற்ற மேலதிக வாக்குகள்    21,810

இரண்டாம் இடத்தைப் பெற்ற திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அவர்களை விட திரு ஆர். பிரேமதாச அவர்கள் பெற்ற மேலதிக வாக்குகள்
279,339

தொடரும்…

ஜிஹாத், அல்பத்தாஹ், புலிகள், சங்கிலியன் படை. : யஹியா வாஸித்

Mosque_Bomb_Blast_Mar_2009புலிகளுக்கு சார்பான ஊடகங்கள் மட்டுமல்ல, புலிகள் சார்பான புத்தி ஜீவிகள் கூட இன்னும், இன்றும் முஸ்லீம்களை இரண்டாம் கண்கொண்டே பார்க்கின்றனர். அதிலும் கிழக்கில் முஸ்லீம்களையும், தமிழர்களையும் எவ்வாறு மோதவிடலாம் என்பதில் கண்ணும் கருத்துமாகவே உள்ளனர். அண்மையில் சகோதரர் பக்ஷீர் எழுதிய ஒரு கட்டுரையில் புலிகள் இறந்த பாறூக்குக்கு எவ்வாறு பட்டுக்குஞ்சம் கட்டி, பட்டுத்தாம்பரம் விரித்தனர் என எழுதியிருந்தார். யார் இந்த பாறூக், யார் அந்த மொகமட் ஹாசீம் மொகமட் றாபி என்பதை பார்க்க முதல், 1983 க்கு முந்தைய கிழக்கு மாகாணம் எப்படி இருந்தது என்பதை சற்று பார்ப்போம்.

1960,1970,1980 காலகட்டங்களில் கிட்டத்தட்ட மொத்த கிழக்கு மாகாணத்தவனும் படிக்காத முட்டாளாகவே இருந்தார்கள். கண்ணுக்கெட்டிய தூரம்வரை பச்சைப் பசேலென்ற வயல்வெளிகள், ஆங்காங்கே மாட்டுப்பண்ணை, ஆட்டுப்பண்ணை, வயல்வெளிகளுக்குள் குட்டிக்குட்டி தேனீர்கடைகள், நீண்ட நெடிய ஆறுகள், இடுப்பளவு தண்ணீருடன் குளங்கள், நாள்சந்தைகள், வாரச்சந்தைகள், துடிக்கத் துடிக்க கடல் மீன்களை கூறு போட்டு விற்கும் மீன் சந்தைகள், வீடுகள், பாடசாலைகள், கோயில்கள், தீர்த்தோற்சவங்கள், தீமிதிப்புகள், பெருநாட்கள், விளையாட்டுப் போட்டிகள்.

நாங்கள் வயலுக்கு பைசிக்கிளில் அதிகாலை போய்கொண்டிருப்போம். வழியில் தமிழ் சகோதரர் ஒருவர் மீன் வண்டியுடன் வந்து கொண்டிருப்பார். எங்களை கண்டதும் காக்கா நல்ல விரால் மீன் இருக்கு காக்கா வாங்கலையா என்பார். நான் வயலுக்கு போறன். வீட்ட பொண்டாட்டி இருப்பா நல்ல விரால் மீனாகப் பார்த்து ஒரு நாலு விரால் கொடு. நாளை பணம் தருகின்றேன் என சொல்லி விட்டு நாங்கள் வயலுக்கு செல்வோம். எஸ் வீ ஓல்ஆர் பிறதர்ஸ்.

புட் போல் மெச். ஒன்று யங்ஸ்டார். சித்திரவேல், நடராஜா, சின்னவன், போளையன், சங்கர், மூர்த்தி, தவராஜா என தமிழ் சகோதரர்களின் ரீம். ஆதம்பாவா, சீனிக்காக்கா, பாறூக், அஸீஸ், ஜமால், வட்டானை என முஸ்லீம் சகோதரர்களை கொண்ட ரீம். இரண்டு ரீம்காறர்களும் வெலிங்டன் தியேட்டர் அருகில் சந்தித்து அடுத்த வாரம் மோதுவதாக முடிவெடுப்பார்கள். செய்தி காட்டுத் தீயாக ஊர் முழுக்க றெக்கை கட்டிப் பறக்கும். தமிழ் பகுதிகளில் அடுத்தவாரம், காக்காமாருக்கு இருக்குது அடி எனவும், முஸ்லீம் பகுதிகளில் வாற வெள்ளிக் கிழமை தமிழனுக்கு இருக்குது குறுமா எனவும் இளைஞர்கள் பேசிக் கொள்வார்கள். மரவெட்டான் குளம் ( எழுதுமட்டுவான் மைதானம் ) வெள்ளிக் கிழமை தமிழ் முஸ்லீம் இளைஞர்களால் நிரம்பி வழியும். மச்சான் நடராஜா, பின்னால சீனிக்காக்கா வாறான் கவனம் மச்சான் என தமிழ் இளைஞர்களும், சீனிக்காக்கோவ் கோணர் கிக் ஒண்டு கொடுங்கோ சீனிக்காக்கா என முஸ்லீம் இளைஞர்களும் குரல் கொடுப்பார்கள். ஆம் யுத்தம், தர்ம யுத்தம் நடக்கும். இறுதியில் தமிழ் இளைஞர்கள் வென்று விடுவார்கள். முஸ்லீம் இளைஞர்கள் வெடி கொழுத்துவார்கள். பக்கத்தில் உள்ள யாசீன் காக்காட சினிமா தியேட்டரில் அனைவரும் ஒன்றாக 6.30 படம் பார்த்து, அடுத்தவாரம் தர்மசங்கரி மைதானத்தில மோதுவோம் மச்சான் என புறப்படுவார்கள். எஸ் வீ ஓல்ஆர் கசின்.

வீடு கட்ட வேண்டும். புது வீடுகட்ட நிலம் பார்க்க, நிலக்கால் நாட்ட தமிழ் சாத்திரிமாருக்கிட்டத்தான் அத்தனை காக்காமாரும் போவார்கள். கிழக்குமாணத்தில் உள்ள 90 வீதமான முஸ்லீம்களின் வீடுகள் 1983க்கு முதல் தமிழ் சகோதரர்களால்தான் கட்டப்பட்டது. அவ்வளவு நேர்த்தி, அவ்வளவு பொறுப்புணர்ச்சியுடன் இருந்து தங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு உதவுவது போல் செய்வார்கள். எஸ் வீ ஓல் ஆர் சேம் பிளட்.

ஆம் தமிழ் முஸ்லீம் இனக்கலவரங்கள் வரும். கல்முனை காக்காமாருக்கும், நற்பிட்டிமுனை தமிழ் சகோதரர்களுக்கும், அக்கரைப்பற்று காக்காமாருக்கும், பனங்காடு, கோளாவில் தமிழ் சகோதரர்களுக்கும், காத்தான்குடி காக்காமாருக்கும், ஆரப்பத்தை தமிழ் சகோதரர்களுக்குமிடையில் இரண்டு வருடத்துக்கொரு முறை இனக்கலவரம் வரும். இது திட்டமிட்ட புத்திஜீவிகளால் உருவாக்கப்படும் இனக்கலவரம் அல்ல. நேற்று இரவு தென்னங்கள்ளையோ அல்லது வடிசாராயத்தையோ அருந்தியவர்களால் உருவான இனக்கலவரம். முதல்நாள் இரண்டு பகுதியிலும் இரண்டு பேரின் செவியை (காது) அறுப்பார்கள்.. அடுத்தநாள் இரண்டு பகுதியிலும் கொஞ்சம் சோடா போத்தல் பறக்கும். மூன்றாம் நாள் அப்பகுதி பொலீஸ் அதிகாரி இருபகுதியிலும் கோயில் தலைவர்கள், பள்ளிவாசல் தலைவர்களை அழைத்து. ஓகே. இன்றிலிருந்து சமாதானம் சரியா என்பார். இருதரப்பாரும் தலையாட்டுவர். பகல் ஒரு மணிபோல் போலீஸ் வண்டியில் ஸ்பீக்கர் கட்டி. சரி இருதரப்பும் சமாதானம் ஆகிவிட்டது. நாளை கடை திறக்கலாம், பாடசாலைக்குப் போகலாம், எல்லாம் வழமை போல் இயங்கும் என்பார்கள். டண். இரண்டு பகுதியிலும் போத்தல் எறிந்த குறுப்புகள் அன்று பின்னேரமே சாறாட ( சிங்கள சகோதரர் ) கொட்டிலில் சோமபானம் அருந்திக் கொண்டிருப்பர். எஸ் வீ ஓல் ஆர் சக்களத்திகள்.

இந்த சக்களத்தி சண்டைகளையும், நண்பர்கள் சண்டையையும். மச்சான் மச்சினன் சண்டையையும் ஊதிப்பெருப்பித்த புண்ணியம் கிழக்கு மாகாணத்தில் 1979ல் வீசிய புயல், வெள்ளத்தையே சாரும். அன்று கிழக்கில் மருதமுனை, நீலாவணை, சின்னக்கல்லாறு, பெரிய கல்லாறு, ஓந்தாச்சிமடம், களுவாஞ்சிகுடி, களுதாவளை, பெரிய போரதீவு, கோயில் போரதீவு போன்ற இடங்களில் பாரிய சேதங்கள் ஏற்பட்டது. இப்பகுதி முழுக்க முழுக்க தமிழ் சகோதர, சகோதரிகள் வாழும் பகுதிகள். உடனடியாக அன்று பிற்பகலே பொத்துவில் தொடக்கம் கல்முனை வரையுள்ள முஸ்லீம் இளைஞர்கள் புஸ்பைக்கிலிலும், கால்நடையாகவும் சென்று அவர்களுக்கு எவ்வளவோ உதவிகள் செய்தார்கள்.. செய்தோம். ( இப்போதும் வன்னி புனிதர்களுக்கு, சட்டி பானையுடன் ஓடிப்போய் முதல் சோறு போட்டவனும் இந்த காத்தான்குடி சோனிகள்தான். திஸ் இஸ் இஸ்லாம். வட் ஹெப்பன் ரு வணங்கா மண். தற் இஸ் பக்கா கெப்பிற்றலிஷம். தற்ஸ் வை ரூ லேட் போர் எவ்ரிதிங் ) அப்போது, ஒருவாரத்தின் பின் யாழ்ப்பாணத்திலிருந்து பல இளைஞர்கள் இவர்களுக்கு உதவி செய்கின்றொம் பேர்வழி எனக்கூறிக் கொண்டு வந்து, உதவியுடன் உபத்திரவத்துக்கும் பிள்ளையார் சுழிபோட்டார்கள்.

அடியாத மாடு படியாது, அடி உதவுகின்றாப் போல் அண்ணன் தம்பி உதவமாட்டான், யாமிருக்கப் பயமேன் என ஆரம்பித்து, எங்களை, ஒன்றாக, ஒரு தாய் பிள்ளைகளாக வாழ்ந்த எங்களை, கொத்தி கூறு போட்டு, கொத்து பராட்டா போட்டு, கொக்கரித்து, கொந்தளிக்க வைத்து, டேய் காக்கா வாறான், காக்கா வாறான் கதையை நிற்பாட்டு, ஏதோ றெக்கி எடுக்கத்தான் வாறான் என்ற அளவுக்கு எங்கள் நண்பர்களை, எங்களுடன் வாழ்ந்தவர்களை, எங்களுடன் ஒன்றாக உறங்கியவர்களை கிள்ளி தொட்டிலையும் ஆட்டி, திரும்பவும் ஆட்ட நினைக்கின்றீர்களே, இது தகுமா, இது தருமமா. கோவலனை கண்ணகி மாதவி விடயத்தில் மன்னிக்கவில்லையா, நடுக்காட்டில் தன்னை விட்டு விட்டு ஓடிய நளனை தமயந்தி மன்னிக்கவில்லையா, தன்னை வைத்து சூதாடிய அயோக்கியன் தருமனை பாஞ்ஞாலி என்ற பதிவிரதை மன்னிக்கவில்லையா. பிளீஸ் எங்களை கொஞ்சம் பழையபடி சேர்ந்து வாழத்தான் விடுங்களேன். வீ ஆர் ஸ்ரில் திங்கிங் எபவுட் அவர் ஓல்ட் கல்ச்சர்.

1981இல் கிழக்கு மாகாணம் அக்கரைப்பற்றைச் சேர்ந்த பாறூக். வீட்டில் தனது குடும்பத்தாருடன் ஏற்பட்ட சிறு பிரச்சனையில் மட்டக்களப்பிலும், யாழ்ப்பாணத்திலும் அலைந்து திரிந்தார். அச்சமயங்களில் இவர் யாழ்பாணத்திலுள்ள டவுண் பள்ளி வாசலில்தான் ( இப்போதைய ஈபிஆர்எல்எப் ஒபீஸ் அருகில் உள்ள பள்ளி வாசல் ) தங்கினார். ஒரு சில நாட்கள் சுபாஸ்கபேயில் வேலையும் செய்தார். பின்னர் யாழ் பஸ் நிலையத்தில் ஒரு கூவி விற்கும் வியாபாரியுடன் சேர்ந்து சிறு சிறு வியாபாரம் செய்தார். 1982 கடைசியில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சில ஈபிஆர்எல்எப் முஸ்லீம் இளைஞர்களின் துணையுடன் யாழ்ப்பாணம் ஐந்து சந்தி பள்ளியில் தங்கியிருந்தார். அப்போது இவர் ஈபிஆர்எல்எப் இல் இணைய முயற்சி செய்தார். இவரது நடவடிக்கைகள் சிறப்பாக இல்லாததால் அவரை இணைத்துக் கொள்ளவில்லை. பின்னர் அவர் ஐந்து சந்தியில் உள்ள ஒரு இறைச்சிக் கடையில் வேலை செய்தார்.

அதன் பின் இவர் பருத்தித்துறையைச் சேர்ந்தவரும், புலிகள் இயக்கத்தவருமான கெப்டன் நரேஷ் ( இவர் இப்போது இங்கிலாந்தில் இருக்கின்றார் ) அவர்களூடாக 1984 முற்பகுதியில் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார் அல்லது இணைக்கப்பட்டார். இவரது வேகமான வளர்ச்சி, இறைச்சிக்கடை அனுபவம் புலிகளை மலைக்க வைத்தது. இவரது வெட்டுக்குத்துகளைப் பார்த்த கிட்டண்ணா இவரை தனது மெய்பாதுகாவலராக இணைத்துக் கொண்டார். ஒருசில நேரங்களில் இவரது வளர்ச்சியில் லெப்.கேணல்.ராதாவுக்கு, வளர்த்த கடா மார்பில் பாய்ந்துவிடுமோ என்ற ஒரு மன உளர்ச்சி, தளர்ச்சி இருந்தது. ஆம் அது 07-01-1987ல் சிங்கள கூலிப்படை கொன்றது என்ற பெயரில் பிற்பகல் 5.55க்கு கே.கே.எஸ்.வீதியில் ராதா தலைமையில் அரங்கேறியது. அக்கரைப்பற்று ( அக்கு, ஆர், அரை, பற்று )பெற்றெடுத்த ஒரு மறவன் செஞ்சோற்றுக்கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து, வஞ்சத்தில் வீழ்ந்தானடா, கர்ணா எய்தவன் கர்ணனடா, கர்ணா எய்தவன் ராதாவடா. இது பாறூக்கின் சரித்திரத்தில் ஒரு துளி.

முகமட் ஹாசீம் முகமட் ராபி, இவர் அட்வகேட் ஹாசீம் பி.எஸ்சி (இந்தியா) அவர்களின் இரண்டாவது மகன். கேட் முதலியார் எம்.எஸ்.காரியப்பரின் ( அமைச்சர், எம்பி )பேரன். இவர் அக்ரைப்பற்று சென்றல் கொலேஜ்ஜில் ஓஎல் வரை படித்து, ஏஎல் யாழ். மகஜனாவில் படித்தவர். 1983 ஆரம்பத்தில் பரீட்சை முடிவை எதிர்பார்த்து அக்கரைப்பற்றில் இருந்தார். அப்போது 1983 ஜூலை கலவரம் வெடித்து, குட்டிமணி, தங்கத்துரை எல்லாம் பனாகொடையில் கொல்லப்பட, தமிழ் சிறைக்கைதிகளை மட்டக்களப்பு சிறைக்கு மாற்றினார்கள். மட்டக்களப்பு சிறையுடைப்புக்கு ஆயுதப் பற்றாக்குறை ஏற்பட, அக்கரைப்பற்றில் உள்ள முஸ்லீம் இளைஞர்களும், தமிழ் இளைஞர்களும் சேர்ந்து 1983 செப்டம்பரில் திருக்கோவில், தம்பிலுவில் கிராமங்களில் பொதுமக்களின் ஆயுதங்களை கொள்ளையிட்டார்கள். சிலதை உரிமையாளர்களின் ஒப்புதலுடன் பெற்றார்கள்.

அப்போது, முஸ்லீம் இளைஞர்கள் இந்த மொகமட் ராபியையும் அந்நிகழ்வுக்கு அழைத்து வந்திருந்தார்கள். முகமட் ராபி பங்கு பற்றிய முதல் நிகழ்வு இது. அதன் பின் இவர் பல முறை ஈபிஆர்எலஎப் இல் இணைய முயற்சித்தார். அப்போது இந்திய அரசும், இந்திய ரோவும் இணைந்து தமிழ் அமைப்புகளுக்கு பயிற்சி வழங்க முன் வந்திருந்தது. இச்செய்தி பத்மநாபா ஊடாக முதல் முதலில் கிழக்கு மாகாணத்துக்கு அறிவிக்கப்பட்டது. உடனடியாக அடுத்த வாரமே கிழக்கு மாகாணத்தில் இருந்து 67 இளைஞர்கள் அனுப்பப்பட்டார்கள். இதில் இந்த முகமட் ராபியும் ஒருவர். இவர் ஒருவர்தான் முஸ்லீம் இளைஞர். யாழ்ப்பாணத்தில் ஈபிஆர்எல்எப்புக்கு அப்போது பொறுப்பாக இருந்த தோழர்கள் அவரை மட்டும் திருப்பி அனுப்பிவிட்டு, மற்றவர்களை மயிலிட்டி ஊடாக இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார்கள். ஆம் தடங்கல் அப்போதே ஆரம்பித்து விட்டது. என்றாலும் அப்போது ஈபிஆர்எல்எப்பில் கிழக்கு மாகாணத்தில் எடுபிடியாக இருந்த ஒருவரின் ( எல்லா இயக்கங்களுமே முஸ்லீம்களை எடுபிடியாகத்தான் பாவித்தார்களா என்பது கடவுளுக்கே வெளிச்சம் ) நச்சரிப்பில், அவரே நேரடியாக யாழ். வந்து தோழர்களை உண்டு இல்லை என பண்ணி, முகமட் ராபியை மயிலிட்டியில் படகில் ஏற்றிக்கொண்டு வேதாராண்யம் ஊடாக மெட்ராஸ் சூழைமேடுவரை வந்து ராபியை, நாபாவின் ஆசீர்வாதத்துடன் உத்தரப்பிரதேசம் அனுப்பி வைத்தார்.

1984 பெப்ரவரிக்குப் பின் கிழக்கு கிழக்காக இல்லை. தடி எடுத்தவன், தண்ணி அடித்தவன், மச்சான் போட்டு பேசியவன், படலைக்குள் புகுந்து மையிறு புடுங்கியவர்கள் எல்லோரும் தடியுடன் இருந்தார்கள். இது கொஞ்சம் வித்தியாசமான தடி. இவனை பார்த்தால் கோழிக் கள்ளன் போல் இருக்கின்றான் மச்சான். போடு, போடு போட்டுத்தள்ளு என போட்டுத்தள்ளிக் கொண்டிருந்தார்கள். நண்பர்கள், சகோதரர்கள், ஒன்றாக எங்களை செக்கண் சோவுக்கு அழைத்துச் சென்றவர்கள், வா மச்சான், வாடா காக்கா என அன்பாக அழைத்த நண்பர்கள். வாடா காக்கா என, அடிநாக்கு நாசியையும், தொண்டையையும் ஒட்டுற மாதிரி அழைத்தார்கள். அதில் அன்பில்லை. ஆக்ரோஷம் இருந்தது. பள்ளி வாசல்கள், கடைத்தொகுதிகள், வயல்வெளிகள் எல்லாமே அழிந்து போயின. ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகள் போல் இருந்த நாங்கள், ஒருவரை ஒருவர் பார்க்க வெட்கப்பட்டோம். வேதனைப்பட்டோம். கையில் தடி வைத்திருந்தவர்கள் தவிர, மற்ற அனைத்து சோனிகளும், தமிழனும் வாழ்வாதாரத்துக்கு கஸ்டப்பட்டார்கள். கஸ்டப்பட்டோம். கூலித்தொழிலாழிகள் ஒரு வேளை உணவுக்கு அல்லாடினர்.

இதில் இரு பகுதியினரையும் குறை சொல்ல வேண்டியுள்ளது. தமிழ் இளைஞர்கள் ஆயுதங்களுடன் இருந்து திட்டமிட்டு செய்தார்கள். மூஸ்லீம் இளைஞர்கள் எவ்வித ஆயுதமயப்படுத்தலுமின்றி கூட்டம், கூட்டமாக சென்று சில அநாகரிக செயல்களை அரங்கேற்றினர். இதற்கு அரசும் பின்னால் நின்று நெய்யூற்றியது. இவற்றின் உச்சக்கட்டம்தான் சிறிலங்காவில் ஜிஹாத் அமைப்பு தோன்ற வழி வகுத்தது. ஆம் 1984 ஜூன் 17ல் ஜிஹாத் உருவானது. முழு சிறிலங்காவிலுமிருந்து 40 நலன்விரும்பிகளின் ஒத்துழைப்புடன் அது தொடங்கியது. காலி கோட்டை, வேருவளை தொடங்கி யாழ். நயினாதீவு வரையுள்ள மனிதாபிமானிகளின் உளப்பூர்வமான செயல்பாட்டுடன் அது தொடங்கியது.

அது அக்கரைப்பற்றில்தான் உருவானது. உருவாகி அடுத்த தினமே நாடுமுழுக்க துண்டுப்பிரசுரங்களும், கையேடுகளும் வினியோகித்தது. நாங்கள் ஆள வந்தவர்களல்ல. வாழவந்தவர்கள். பிளீஸ் எங்களை விட்டுடுங்கோ என கரம் கூப்பி சகோதர இனங்களை மன்றாடியது. அதன் பின், இனி எம் பகுதியில் நடக்கும் அத்து மீறல்களை நாங்கள் தட்டி கேட்போம் என சிறிலங்கா முழுக்க பறை சாற்றியது. அதன் பின் நடந்த, ஆள் கடத்தல், வரி, கப்பம், கொலைகளுக்கெல்லாம் ஜிஹாத் உரிமையுடன் நடவடிக்கை எடுத்தது. 1985 இல் பயிற்சி முடித்துக் கொண்டு முகமட் ராபி சிறிலங்கா வந்து திருக்கோயில் பகுதியில் ஈபிஆர்எல்எப் அமைப்புடன் தங்கியிருந்தார். இவரும் ஜிஹாத்துடன் இணைந்து விடுவாரோ என்ற பயத்தில் இவரை திருக்கோவிலில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு கடத்த ஒரு தமிழ் அமைப்பு முடிவெடுத்து, இவரை சங்கிலியால் கட்டி 1985 ஜனவரியில் ஒரு கொரளா காரில் கடத்திச் சென்றார்கள். ஆம் ஜிஹாத் அமைப்பின் ஒரு அதிரடி நடவடிக்கையின் மூலம், எவ்வித சிராய்ப்புமின்றி முகமட் ராபி நிந்தவூர் பிரதான வீதியில் ஒரு அதிகாலைப் பொழுது மீட்கப்பட்டார். திஸ் ஒப்பரேஷன் புறம் சிறிலங்கன் ஜிஹாத்.

அன்று முதல் அவர் ஜிஹாத் அமைப்பின் இராணுவ தளபதியாக செயல்பட்டார் ( இவர் எக்காலத்திலும் புலிகள் அமைப்பில் இருக்கவில்லை ). ஜிஹாத் அமைப்பின் வளர்ச்சி கண்ட அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி நேரடியாக இவர்களை அழைத்து, இரண்டு மூன்று பேச்சு வார்த்தைகள் நடாத்தி, ஆயுத உதவி செய்வதாக உறுதியளித்தார். ஆம் பயிற்சியும் வளங்கப்பட்டது. ஜிஹாத் பல முறை புலிகளுடன் அக்கரைப்பற்றிலும், காரைதீவிலும், மூதூரிலும் பேச்சு வார்த்தை நடாத்தியுள்ளது. ஜிஹாத் அமைப்பின் மிக, மிக பொறுப்பானவர்கள் எவ்வித உயிரச்சமுமின்றி புலிகள் சொன்ன இடங்களுக்கு சென்று பேச்சு வார்த்தைகள் நடாத்தியுள்ளனர். பேச்சு வார்த்தைகளுக்கு சென்றவர்களை கடத்த முயன்னற போதும், வார்த்தை ஜாலங்களால் தப்பி வந்ததுமுண்டு.

ஆம் 1985 மே 21ம் திகதி இரவு 7.15க்கு ராபி கிழக்கு மாகாண ஈரோஸ் அமைப்பினரால் நெஞ்சில் 27 துப்பாக்கி சன்னங்கள் விளாச சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை கொன்ற அக்கரைப்பற்றைச் சேர்ந்த அவ்விளைஞர் கடந்த 12 வருடங்களாக பிரான்சில் இருந்து, போன வருடம் இங்கிலாந்துக்கு மலையேறியுள்ளார் என்பதையும் தாழ்மையுடன் கூறிக்கொள்ளலாம். அக்கொலைக்கு கட்டளை இட்டவர் இப்போது முஸ்லீம் சகோதரர்களுடன் வியாபாரங்கள் செய்கின்றார். ஆம் மன்னிப்பை விட உயர்ந்த பண்பு இந்த உலகத்தில் வேறு என்ன மண்ணாங்கட்டி இருக்கின்றது.

இந்த ஜிஹாத் அமைப்பு அரசு செய்த சில கூலிக்கு மாரடிக்கும் வேலைகளை செய்ய மறுத்தது. ஆம் சகோதர இனத்தை இரத்த வெறி கொண்டு தாக்குவதை ஜிஹாத் குழுவினர் அங்கீகரிக்க மறுத்ததின் பயனாய், அரசு கட்டாக்காலிகளை அழைத்து துப்பாக்கிளை கொடுத்து என்னென்னவோ செய்ய தூண்டியது. கூலிக்கு மாரடிக்கும் அக்குழு நிறைய செய்தது. அவை அனைத்தும் ஜிஹாத் அமைப்பின் தலையில் கட்டப்பட்டது. ஆம் இவ்வாறு ஒன்று நடந்தால் எப்படி சமாளிப்பது என ஜிஹாத் அமைப்பினர் ஆரம்பத்திலேயே திட்டமிட்டனர். ஆம். ஜிஹாத் அமைப்பிலிருந்து பலர் மறைமுகமாக தெரிவு செய்யப்பட்டு, அல்பத்தாஹ் என்ற அமைப்பு கட்டப்பட்டது. இதுவும் 1984 ஒக்டோபரில் உதயமானது. அல்பத்தாஹ். நிறைய மார்க்க , சன்மார்க்க பணிகள் மற்றும் விதவைகளுக்கு உதவுதல், நோயாளிகளுக்கு, பாடசாலைக்கு செல்ல வழியில்லாதவர்களுக்கு உதவுதல் எனவும் செயல்பட்டதுடன், சில நாகரிக நடவடிக்கைகளிலும் இறங்கியது.. ஆம் 1985 மே 21ல் சுட்டுக் கொல்லப்பட்ட ராபியின் ஞாபகார்த்தமாக, அக்கொலைக்கு துணைபோன சகலரையும் 1985 ஜூன் 21 இரவு 7.15 க்கும், 1986 மே 21 இரவு 7.15 க்கும் கழுவிலேற்றியது. இறுமாப்புடன் உரிமையும் கோரியது.

ராபி மரணமாகி இரண்டு மணி நேரத்தில் சிறிலங்கா முழுக்க ஒண்ணரை லட்சம் துண்டுப்பிரசுரங்கள் வெளியாகியது. அல்பத்தாஹ் என்ற தலைப்பில், அல்லாஹ் அக்பர், அல்பத்தாஹ் அமைப்பின் இராணவத் தளபதியும், முகமட் ஹாசீம் அவர்களின் மகனுமான முகமட் ராபி, 1985-05-21 இரவு 7..15 க்கு தமிழ் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டு, மேலும் பல ஆயிரம் ராபிக்கள் உருவாக வழி வகுத்துள்ளனர் என்பதை, மிக, மிக பெருமையுடன் அறியத்தருகின்றோம். அல்பத்தாஹ், மத்திய செயற்குழு என நாலுக்கு நாலங்குலத்தில் அது வெளியாகி அரபு நாட்டு எம்பஸிகளின் கதவுகளையும் தட்டியது.

1985 மே 21 ராபி மரணமாகி இரண்டு மணி நேரத்தில் சிறிலங்காவின் முழு பாதுகாப்பு தலைமைகளும் அக்கரைப்பற்றில் நின்றன. அம்பாரையில் இருந்தும், கொண்டைகட்டுவான் இராணுவ முகாமில் இருந்தும் ஆயுதங்கள் வந்து கொண்டிருக்கின்றன. தயாராகுங்கள். அழியுங்கள் தமிழர்களின் குடியிருப்புக்களையும், வரலாறுகளையும் என்றார்கள். ஆம் உடனடியாக ஜிஹாத், அல்பத்தாஹ் பொறுப்பாளர்கள் கூடி இது தருணமல்ல, இது பொருத்தமுமல்ல, இது நாகரிகமும் அல்ல என முடிவெடுத்தார்கள். அரசுடன் ஒத்துழைப்பதில்லை என ஒரு சேர அத்தனை மத்திய குழு உறுப்பினர்களும் முடிவெடுத்தார்கள் ( சம்மாந்துறையைச் சேர்ந்த, மறைந்த அன்வர் இஸ்மாயீல் எம்பி அவர்கள் அல்பத்தாஹ் அமைப்பில் மத்திய செயற் குழு உறுப்பினராக இருந்தவர்களில் ஒருவர் என்பதை இங்கு பெருமையுடன் சொல்லலாம். ) பாதுகாப்பு பிரிவும், கொஞ்சம் ரத்தம் துடிப்பவர்களும் எவ்வளவோ தலையணை மந்திரங்கள் ஓதினார்கள். ஆனால் அன்பு, மனிதாபிமானம், பொறுப்புணர்ச்சி, எதிர்காலம் என்பதில் முழு நம்பிக்கை கொண்ட சிறிலங்கா ஜிஹாத் அமைப்பு, எய்தவனிருக்க அம்பை நோக வைக்க விரும்பவில்லை. ஆனால்,

ஆயுதம் தருகின்றோம், கொழுத்து முஸ்லீம்களின் பள்ளிவாசல்களை என்றதும் கொழுத்தியவர்களும், ஆயுத கப்பலே அனுப்புகின்றோம் விரட்டு சோனிகளை என்று இஸ்ரேல் சொன்னதும் ஒரு மாவட்ட முஸ்லீம்களின் வரலாறையே அழிக்க முற்பட்டவர்கள்தான் இந்த தமிழீழ விடுதலைப் புலிகள் என்றால் அது மிகையாகாது. ஆனால் அமைப்பு ரீதியாக செயல்பட்ட எந்த முஸ்லீம்களும் எக்காலத்திலும் கூலிக்கு மாரடிக்கவில்லை. மாரடிக்கவும் மாட்டான். தற் இஸ் இஸ்லாம்.

இந்த அல்பத்தாஹ் அமைப்பின் செயல்பாடுகளில்தான் அனைவரும் அக்காலங்களில் கவனம் செலுத்தினர். யார் இவர்கள். எங்கிருந்து தொழில்படுகின்றார்கள் என கண்ணுக்குள் விளக்கெண்ணை போட்டு தேடினார்கள். அதன் ஒரு வெளிப்பாடுதான் பிற்காலங்களில். ஓ இப்படியும் ஒரு ஆள்மாறட்டம் செய்யலாமோ என தோன்றிய சங்கிலியன் படை. ஆம் 1991 முஸ்லீம்கள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறியதும், முஸ்லீம்களின் வீட்டுத் தொகுதியொன்றை விடுதலைப்புலிகள் தமது அச்சகமாக பாவித்தார்கள். அந்த அச்சகத்துக்கு வே.பிரபாகரன் அவர்கள் வந்து போவது வழமை. ஆனால் ஒரு நாள் தலைவர் வந்து ஒரு முக்கால் மணி நேரத்தின் பின் வெளியேறி இரண்டு நிமிடத்தில் அவ் அச்சகம் வெடித்துச் சிதறியது. அதற்கும் இந்த அல்பத்தாஹ்வுக்கும் தொடர்பு இருக்குமோ என்ற போர்வையில், யாழ்ப்பாணத்தில் ஆங்காங்கே அக்காலங்களில், தமிழ் பெண்களை திருமணம் செய்து கொண்டிருந்த முஸ்லீம் சகோதரர்களை இந்த சங்கிலியன் படை வறுத்தெடுத்ததாகவும் அப்போது பட்சிகள் பேசிக்கொண்டன.

இப்போது சிறிலங்காவில் ஜிஹாத் இருக்கிறதா, இயங்குகின்றதா என்பதுதான் அனைவரின் கேள்வியும். ஜிஹாத் என்பது வாழ்க்கையுடன், வாழ்க்கைக்காக போராடுவது. அடுத்தவனைப் போய் வம்புக்கிழுப்பதல்ல. வம்புக்கிழுக்க இஸ்லாம் எந்த இடத்திலும் கூறவில்லை. அப்போதைய ஜிஹாத்தை சிலர் வம்புக்கிழுத்து, வம்பில் மாட்டிவிட நினைத்தனர். அதனால் நடப்பது தர்மயுத்தம், தமிழ் பேசும் தமிழ் மக்களுக்கும், சிங்கள அரசுக்கும் இடையில் ஒரு தர்மயுத்தம், அது தன் வழியில் நடக்கட்டும், நாம் முதலில் எம்மை புடம் போட்டுக் கொள்வோம். இக்கால கட்டங்களில் எம்மிடமும் ஆயுதம் இருந்தால் அது வேறு, வேறு பின் விழைவுகளை ஏற்படுத்தும் என்பதை பல மார்க்க அறிஞர்களும், புத்தி ஜீவிகளும் எடுத்துரைக்க, ஜிஹாத், அல்பத்தாஹ் அமைப்புக்களின் பைல்கள் மூடப்பட்டு அனைவரும் 1987 டிசம்பரில் நாடு கடந்தனர். கடந்து, முஸ்லீம்களின் கல்வி, வியாபார விடயங்களில் 100 வீத கவனம் செலுத்தினர். செலுத்திக் கொண்டுமிருக்கின்றனர். அதன் பயன்தான் இன்றைய முஸ்லீம்களின் கல்வி, வியாபார எழுச்சிகளெல்லாம். இல்லாவிட்டால், இன்றைய எமது முஸ்லீம் இளைஞர்கள் எங்கேயோ அகதி அந்தஸ்துக்கு விண்ப்பித்துக் கொண்டிருப்பர்.

இனி ஒரு ஜிஹாத்தோ, ஒரு அல்பத்தாஹ்வோ சிறிலங்காவில் தோன்றவும் கூடாது, தோன்றவும் மாட்டாது. இப்போது அனைவருக்கும் தேவை ஒரு பொருளாதாரப் புரட்சி. அந்தப் புரட்சி வெடிக்க நிச்சயம் சிறிலங்கா ஜிஹாத் கொடிபிடிக்கும். அப்புறம் மகிந்தவின் காதையோ, ரணிலின் காதையோ, சரத்பொன்சேகாவின் காதையோ கடித்து, மானில சுயாட்சியாவது எங்களுக்கு தாங்கோ மக்காள் என கேட்போம். ஒன்று பட்டால்தால் உண்டு வாழ்வு.

இதில் உள்ள தகவல்கள் எமது உள்ளக் கிடக்கைகளின் ஒரு பனித்துளி அன்பின் பக்ஷீர் காக்கா. இவ்வாறு ஆயிரம் கோடி பனித்துளிகள் வன்னியில் உறங்கிக் கிடக்கின்றன சகோதரர்களே. இனி இவைகளை மறந்துவிட்டு நல்லதோர் உலகம் செய்வோம்.