2010

2010

பஹ்ரைன் தீ விபத்தில் இலங்கைப் பெண்கள் மூவர் பலி!

பஹ்ரெய்னில் இடம்பெற்ற தீ விபத்துச் சம்பவமொன்றில் இலங்கைப் பெண்கள் மூவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் பொது முகாமையாளர் எல்.கே. ரு{ஹணகே தெரிவித்துள்ளதாக இணையத் தளம் ஒன்று செய்தி வெளியொட்டுள்ளது. பிலியந்தல பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பெண்களே இவ்வாறு உயிரிழந்திருப்பதாகவும்,  இவர்கள் மூவரும் உறவினர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மின்சார ஒழுக்கினால் தீ விபத்து ஏற்பட்டதாகவும்,  சுவாசப் பிரச்சினை காரணமாக இவர்கள் உயிரிழந்திருக்கக் கூடும் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் சடலங்களை இலங்கைக்குக் கொண்டுவர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.

62 வது சுதந்திர தின வைபவம் கண்டியில்

flag.jpgபெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி இலங்கையின் 62 ஆவது சுதந்திர தின வைபவம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கண்டி ஸ்ரீ தலதா மாளிகை பிரதேசத்தில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏகநாயக்க தெரிவித்தார்.

பொலிஸாரினதும் முப்படையினர்களதும் கண் காட்சிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் விசேடமாக இடம் பெறவுள்ளன. இதேவேளை “தேசத்தின் மகுடம்” கண்காட்சியும் கண்டி பள்ளேகலையில் அன்றைய தினம் ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

நாட்டு மக்களின் நன்றியுணர்வை உலகுக்கு எடுத்துக்காட்டிய வெற்றி – மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார் ஜனாதிபதி

mahindaநாட்டு மக்களின் நன்றி மனப்பான்மையை உலகுக்கு எடுத்துக் காட்டும் வெற்றி இதுவென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மீண்டுமொருமுறை தம்மீது நம்பிக்கை வைத்து மகத்தான வெற்றியைப் பெற்றுத்தந்த நாட்டு மக்களுக்கு தமது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தைத் தோற்கடித்ததன் பின்னர் தேசிய ரீதியில் நடைபெற்ற முதலாவது தேர்தல் இதுவெனக் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி வடக்கு, கிழக்கு உட்பட நாட்டு மக்கள் சகலரும் இவ்வெற்றியில் பங்கேற்றுள்ளனர் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தேர்தல் வெற்றியின் பின்னர் நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

இத்தேர்தலை நீதியும் சுதந்திரமானதாகவும் நடத்த முடிந்துள்ளமையையிட்டு நான் பெருமகிழ்ச்சியடைகின்றேன். இதனால் இத் தேர்தல் முடிவை எவரும் மாசுபடுத்த முடியாது. தற்போது நாம் வெற்றியடைந்தாயிற்று. இவ்வெற்றியினூடாக நாட்டு மக்கள் தமது நன்றி மனப்பான்மையை உலகுக்குக் காட்டியுள்ளனர்.

தோல்வியில்லாத இடத்திலிருந்தே உண்மையான வெற்றி உருவாகிறது. இதனடிப்படையில், இவ்வெற்றி நம் அனைவரினதும் வெற்றியாகும். இதனை அமைதியாகக் கொண்டாடுமாறு நான் நாட்டு மக்களைக் கேட்டுக்கொள்கிறேன். சட்டம் சகலருக்கும் சமமானது. சட்டம் சட்டத்தினால் பாதுகாக்கப்படுகிறது. சட்டத்தை மதிக்கின்ற அபிவிருத்தியில் முன்னேற்றமடைந்த நாடொன்றை நாம் எதிர்கால சந்ததிக்காக உருவாக்குவோம். இத் தேர்தலில் வாக்களித்த சகலருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் எத்தகைய எதிர்பார்ப்புகளுடன் வாக்களித்தார்களோ அதனை நான் இனங்கண்டுள்ளேன்.

தேர்தல் ஆணையாளர் மற்றும் செயலக அதிகாரிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். தேர்தல் கடமைகளில் ஈடுபட்டிருந்த அரச அதிகாரிகள், பொலிஸார் மற்றும் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டிருந்தோர், சகல ஊடக நிறுவனங்களுக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

டெங்கு மீண்டும் தீவிரம்: ஜன. 25 வரை 2592 பேர் பாதிப்பு விழிப்புடன் இருக்குமாறு சுகாதார அமைச்சு எச்சரிக்கை

நாட்டின் சில பிரதேசங்களில் டெங்கு காய்ச்சல் மீண்டும் தீவிரமடைய ஆரம்பித்திருப்பதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் நேற்றுத் தெரிவித்தன.

ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் 25ம் திகதி வரையும் 2592 பேர் இக்காய்ச்சலுக்கு உள்ளானவர்களாகப் பதிவாகியுள்ளனர் எனவும் அவ்வட்டாரங்கள் கூறின. இருந்தபோதிலும் கடந்த வருடம் டெங்கு காய்ச்சலுக்கு 34 ஆயிரத்து 896 பேர் உள்ளாகியுள்ளனர். இவர்களில் 345 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் அவ்வட்டாரங்கள் குறிப்பிட்டன.

இது தொடர்பாக அவ்வட்டாரங்கள் மேலும் கூறுகையில்,

நாட்டின் சில பிரதேசங்களில் டெங்கு காய்ச்சல் மீண்டும் தீவிரமடைய தொடங்கியுள்ளது. அவற்றில் கொழும்பு, கம்பஹா, யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய நான்கு மாவட்டங்களிலும் இந்நோய் வேகமடைந்துள்ளது. ஜனவரி முதலாம் திகதி முதல் 25ம் திகதி வரையும் கொழும்பு மாவட்டத்தில் 339 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 381 பேரும், யாழ். மாவட்டத்தில் 351 பேரும், வவுனியா மாவட்டத்தில் 259 பேரும் இக்காய்ச்சலுக்கு உள்ளானவர்களாகப் பதிவாகியுள்ளனர்.

ஆகவே சுற்றாடலை சுத்தமாகவும், நீர்தேங்க முடியாதபடி உலர் நிலையிலும் வைத்திருப்பதில் ஒவ்வொருவரும் அதிக கவனம் செலுத்த வேண்டும். டெங்கு காய்ச்சல் நுளம்புகளால்தான் பரப்பப்படுகின்றது. அதனால் நுளம்புகள் பல்கி பெருக முடியாதபடி கழிவுப் பொருட்களை முறையாக அகற்றி சுற்றாடலை சுத்தமாகவும் உலர் நிலையிலும் வைத்திருப்பது அவசியம் என்றார்.

நாட்டை கட்டியெழுப்ப தமிழ், முஸ்லிம் சமூகங்கள் அரசுடன் கைகோர்க்க வேண்டும் – முன்னாள் எம்.பி. சுஹைர்

suha.jpgநாட்டைக் கட்டியெழுப்புவதற்காக எம்முடன் கைகோருங்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்திருக்கும் அழைப்பை தமிழ், முஸ்லிம் சமூகத்தினர் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் எம்.பி.யான எம். எம். சுஹைர் தெரித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அமோக வெற்றி குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது,

ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமோக வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றியைத் தொடர்ந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக எம்முடன் கைகோர்க்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.  இது நல்லதொரு சந்தர்ப்பம். இந்த சந்தர்ப்பத்தைச் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் முஸ்லிம்கள் ஜனாதிபதியுடனும், ஆளும் கட்சியுடனும் இணைந்து செயற்படுவது மிகவும் அவசியம்.

வெகுவிரைவில் பொதுத் தேர்தல் நடைபெறவி ருக்கின்றது. அந்தத் தேர்தலிலும் ஜனாதிபதி தலைமையிலான ஆளும் கட்சியே அமோக வெற்றி பெறும். இந்த வெற்றியில் முஸ்லிம்கள் பங்காளர்களாக இணைந்து கொள்ள வேண்டும்.

நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்காக வும் ஸ்திரத்தன்மைக்காகவும், முஸ்லிம்கள் அரசுடன் இணைந்து செயற்படுவது அவசியம். முஸ்லிம்கள் எதிர்க்கட்சி சமூகமாக இருக்க முடியாது. முஸ்லிம் சமூகத்திற்கு பல தேவைகளும், பிரச்சினைகளும் உள்ளன. ஆளும் கட்சியுடன் இணைந்து செயற்படும் போதே அவற்றுக்குத் தீர்வுகளைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். கடந்த தேர்தலில் ஸ்ரீல. மு. கா. முஸ்லிம்களை பிழையாக வழி நடாத்தி விட்டது. இனிமேலும் முஸ்லிம்கள் ஸ்ரீல. மு கா.வின் பசப்பு வார்த்தைகளில் மயங்கிவிடாது ஆளும் கட்சியுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்றார்.

தேர்தல் முடிவு திருப்தி அளிக்கிறது – ஐ. நா. செயலாளர் நாயகம்

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் வன்முறைகள் அற்ற நிலையில் நடந்து முடிந்திருப்பது திருப்தி அளிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கூறியுள்ளார். அத்துடன் உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகளை அனைத்து கட்சிகளும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும் முடிவுகள் தொடர்பான அக்கறைகள் இருப்பின் அவற்றை சமாதானமான முறையில் முன்னெடுத்துச் செல்லுமாறும் அவர் கூறியுள்ளார்.

நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நிருபர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே செயலாளர் நாயகம் இவ்வாறு குறிப்பிட்டார். தேர்தல் பிரசாரத்தின் போது வன்முறைகள் அதிகரித்திருந்த தையிட்டு நான் கவலையடைந்தேன். எனினும் தேர்தல் தினத்தன்று ஒரு சில வன்முறை சம்பவங் களைத் தவிர அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்தது நிவாரணம் அளிக்கிறது என்று செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தைக் கலைக்க ஏற்பாடு: ஓரிரு தினங்களில் அறிவிப்பு வெளியாகும் – அமைச்சர் மைத்திரி

pr-con.jpgபாராளு மன்றம் வெகு விரைவில் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான அறிவித்தல் இன்னும் ஓரிரு வாரங்களில் விடுக்கப்படும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான மைத்திரிபால சிரிசேன தெரிவித்தார்.

ஜனாதிபதிக்கு கிடைக்கப்பெற்ற 60 வீத வாக்குகளை தக்கவைத்துக்கொண்டு எதிர்க் கட்சிக்கு வழங்கப்பட்ட 40 வீத வாக்குகளையும் வெற்றிகொள்ளும் முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பொதுத் தேர்தல் ஒன்றுக்கு முகம் கொடுப்பதற்கு தேவையான நடவடிக் கைகளை உடனடியாக ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றதை அடுத்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்திருந்த விஷேட செய்தியாளர் மாநாடு நேற்றுக் காலை நடைபெற்றது.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம் ஜயந்த், அமைச்சர்களான கலாநிதி சரத் அமுனுகம, பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், ரிஷாத் பதியுதீன், சம்பிக ரணவக்க, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச ஆகியோர் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் அமைச்சர் மைத்திரிபால மேலும் கூறுகையில்:-

தற்போதைய பாராளுமன்றத்தின் காலம் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் முடிவடையவுள்ளது. இந்நிலையில் அரசியலமைப்பின் பிரகாரம் பொதுத் தேர்தல் ஒன்றுக்கான அறிவிப்பு வெகு விரைவில் விடுக்கப்படும்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடனான பேச்சுவார்த்தைகள் இன்னும் ஓரிரு தினங்களில் நடைபெறவுள்ளது.

பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் தகவல்களை திரட்டி பெயர்ப்பட்டியலை தயாரிக்கும் நடவடிக்கைகள் நேற்று (இன்று) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் என்ற வகையில் இதற்கான ஆலோசனைகளை வழங்கியுள்ளேன் என்றார். மக்கள் எதிர்பார்க்கும் வளமான எதிர்காலம் நிச்சயம் உருவாக்கப்படும். மஹிந்த சிந்தனையில் கூறப்பட்டமை நிறைவேற்றப்படும். உலகிலேயே வளமான நாடாக மாற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் எம்மீது நம்பிக்கை வைத்துள்ள மக்கள் 60 வீத வாக்குகளையும் எதிர்க்கட்சி வேட்பாளருக்கு 40 வீத வாக்குகளையும் வழங்கியுள்ளனர். எஞ்சிய 40 வீதத்தை பெற முடியாமல் போன காரணங்கள் ஆராயப்பட்டு அந்த குறைகளை நிவர்த்தி செய்துகொண்டு ஜனநாயக முறையிலான அரசியலின் மூலம் எஞ்சிய 40 வீத வாக்குகளையும் எமது வெற்றிக்காக பெற்றுக்கொள்ள முயற்சிப்போம்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இந்த நாட்டை முன்னேற்ற எதிர்க்கட்சியின் 40 வீத வாக்காளர்களும் எம்முடன் கைக்கோர்க்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றார். சரத் பொன்சேக்கா தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாக கூறி வருகிறார். அவருக்கு நாங்கள் ஒன்றும் செய்யப்போவதில்லை, இதற்கான தேவையில்லை.

எமது கூட்டங்களில் பெருந்தொகையான மக்கள் கலந்துகொண்டனர். ஆனால் குறைவான வாக்குகளே கிடைத்துள்ளது. இது நீதியான தேர்தல் இல்லை என்று சரத் பொன்சேகா தெரிவித்தார். இதன் மூலம் அரசியல் தெரியாதவர் என்பதை தெளிவாக காண்பிக்கின்றது என்றார். மக்கள் விடுதலை முன்னணி இம்முறை தவறான முடிவுகளை எடுத்துள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஊர்வலம், கூட்டம் ஒரு வாரத்துக்கு தடை; வன்முறைகளை தடுக்க பொலிஸார் உஷார் நிலையில்

தேர்தலுக்குப் பின்னரான வன்முறைகளை தடுப்பதற்காக நாடளாவிய ரீதியில் பொலிஸார் உஷார் நிலையில் வைக்கப்பட்டு ள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ. எம். கருணாரத்ன தெரிவித்தார்.

தேர்தலுக்குப்பின் ஓரிரு சிறு அசம்பாவிதங்களே நடைபெற்றதாகவும், வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு எதிரான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேர்தல் தினத்தில் இருந்து ஒருவாரத்துக்கு ஊர்வலங்கள் செல்வது, கூட்டங்கள் நடத்துவது, வரவேற்பு நிகழச்சிகள் நடத்துவது தேர்தல் சட்டத்தின் பிரகாரம் முற்றாகத் தடுக்கப்பட்டுள்ளது. நாடு பூராகவும் அமைதியான நிலை காணப் படுவதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், நாட்டில் தொடர்ந்து அமைதி நிலையை பேண சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கோரினார்.

தேர்தலுக்குப் பிந்திய வன்முறைகளைத் தடுப்பது தொடர்பாக சகல பொலிஸாருக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. வன்முறைகள் தொடர்பாக இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை. தேர்தலுக்குப் பின்னர் இடம்பெற்ற ஓரிரு சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகள் முன்னெடு க்கப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

ஹெயிட்டியில் உணவுக்காக மக்கள் மோதல்

haitibuidling-pd.jpgமத்திய அமெரிக்காவில் உள்ள ஹெயிட்டி நாட்டில் கடந்த 12ம் திகதி பூகம்பம் ஏற்பட்டது. இதில் 2 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். தலைநகர் போர்ட் ஆப் பிரின்ஸ் நகரில் பெரும்பாலான வீடுகள், கடைகள், கட்டடங்கள் இடிந்து விழுந்தன.

வீடுகளை இழந்த லட்சக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வெளிநாடுகள் உணவு பொருட்களை வழங்கி வருகின்றன. அவற்றை பெறுவதில் மக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. மோதலை கட்டுப்படுத்த முடியாததால், பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஐ.நா. அமைதிப்படையினர், கண்ணீர் புகைக்குண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதைத் தொடர்ந்து கூட்டம் கலைந்து சென்றது.

சிறுபான்மை இனத்தவர்கள் இலங்கை அரசியலில் தீர்மான சக்தியல்ல என்பதை உணர்த்தி நிற்கும் 6வது ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள்: புன்னியாமீன்

mrpr.jpgநடைபெற்று முடிந்த ஆறாவது ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ 57.88 வீத வாக்குகளைப் பெற்று அமோக வெற்றியீட்டியுள்ளார். இவர் பொது வேட்பாளர் சரத் பொன்சேக்காவை விட 1,842,749 வாக்குகளை மேலதிகமாகப் பெற்றுள்ளதுடன், இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் கூடுதலான மேலதிக வாக்குகளைப் பெற்ற  சாதனையையும் படைத்துள்ளார். இத்தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ 16 தேர்தல் மாவட்டங்களில் அமோக வெற்றியீட்டியதுடன்,  06 மாவட்டங்களில் தோல்வியினை தழுவியிருந்தார். இந்த 06 மாவட்டங்களும் சிறுபான்மை சமூகத்தினர் செறிவாக வாழும் மாவட்டங்களாகும். வட மாகாணத்தில் யாழ்ப்பாணம்,  வன்னி தேர்தல் மாவட்டங்களிலும்,  கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு,  திகாமடுல்லை,  திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும்,  மத்திய மாகாணத்தில் தோட்டத் தொழிலாளர் அதிகமாக வாழும் நுவரெலியா மாவட்டத்திலும் இவர் தோல்வியடைந்தார்.

இதுகாலவரை இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல்களில் சிறுபான்மை சமூகத்தினரின் வாக்குகளே ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருந்துவந்துள்ளன. ஆனால், இந்தத் தேர்தல் முடிவானது பெரும்பான்மை இனத்தவர் ஒன்றிணைந்தால் வெற்றி பெறலாம் என்ற உணர்வினை பெரும்பான்மை சமூகத்தினர் மத்தியில் வெளிப்படுத்துவதாக அமைந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. இந்த நிலை எதிர்கால அரசியலுக்கு ஆரோக்கியமானதல்ல.

பொதுவாக பெரும்பான்மை இனத்தவர்கள் அதிகமாக வாழக்கூடிய மாவட்டங்களிலும், தேர்தல் தொகுதிகளிலும் மஹிந்தவின் வெற்றி சுமார் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன்  நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த வெற்றியும் இதனால் வெளிப்படுத்தப்படக்கூடிய உணர்வலைகளும் தற்போதைய மஹிந்தவுக்கு மாத்திரமல்ல எதிர்கால அரசியல் போக்குகளுக்கும் ஒரு புதிய உத்வேகத்தை தோற்றுவிக்கக்கூடிய நிலையிருப்பதை இவ்விடத்தில் சிந்தித்தல் வேண்டும்.

ஒரு ஜனநாயக நாட்டில் மக்கள் தாம் விரும்பிய தலைவனுக்கோ, கட்சிக்கோ வாக்களிக்க முடியும். இதில் யார் யாருக்கு வாக்களித்தார்கள்? என்று ஆராய்வதால் எவ்வித பலனும் கிட்டிவிடப் போவதில்லை. ஆனால்,  இலங்கைப் போன்ற பல்லின மக்கள் வாழக்கூடிய ஒரு நாட்டில் குறிப்பாக இனவாத சிந்தனைகளைக் கொண்டுள்ள ஒரு நாட்டில் இவ்விடயத்தைப் பற்றி இன்னும் தீர்க்கமான முறையில் ஆராயப்பட வேண்டியது அவசியமானதாகும்.

வெளிவந்த தேர்தல் முடிவுகளை வைத்துக் கொண்டு இலங்கையில் வாழக்கூடிய சிறுபான்மை சமூகத்தினர் என்றடிப்படையில் தமிழர்கள்,  முஸ்லிம்களின் அரசியல் நடத்தைகள் எவ்வாறு அமைந்திருந்தன என்பதை இவ்விடத்தில் நோக்குவது அவசியமானதாக இருக்கும். இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிறுபான்மை சமூகத்தவர்களே அதிகமாக வாழ்கின்றனர். தேர்தல் முடிவுகளின் படி வடக்கு,  கிழக்கு மாகாணங்களின் தேர்தல் தொகுதி ரீதியாக முடிவுகள் பின்வருமாறு அமைந்திருந்தன.

வட மாகாணம்: யாழ்ப்பாண மாவட்டம்

ஊர்காவற்துறை தேர்தல் தொகுதி
மஹிந்த ராஜபக்ஸ  4, 611  46.19%
சரத்பொன்சேக்கா 3,976  39.88 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  53,111
அளிக்கப்பட்ட வாக்குகள்  10,321

வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 11,712  62.68%
மஹிந்த ராஜபக்ஸ 4,247  22.73 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  63,991
அளிக்கப்பட்ட வாக்குகள்  19,436

காங்கேசந்துறை தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 8,216  56.90 %
மஹிந்த ராஜபக்ஸ  4,559  31.57%
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  69,082
அளிக்கப்பட்ட வாக்குகள்  14,933

மானிப்பாய் தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 13,390  62.01 %
மஹிந்த ராஜபக்ஸ  5,749  26.62 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  71,114
அளிக்கப்பட்ட வாக்குகள்  22,475

கோப்பாய் தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 13,151  64.13 %
மஹிந்த ராஜபக்ஸ  4,538  22.13%
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  65,798
அளிக்கப்பட்ட வாக்குகள்  21,133

உடுப்பிட்டி தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 8,974  67.20 %
மஹிந்த ராஜபக்ஸ  2,545  19.06 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  56,426
அளிக்கப்பட்ட வாக்குகள்  13,955

பருத்தித்துறை தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 8,585  69.30 %
மஹிந்த ராஜபக்ஸ  2,361  19.06 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  48,613
அளிக்கப்பட்ட வாக்குகள்  12,828

சாவகச்சேரி தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 11,599  62.39 %
மஹிந்த ராஜபக்ஸ  4,567  24.57%
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  65,141
அளிக்கப்பட்ட வாக்குகள்  19,450

நல்லூர் தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 11,543  70.42 %
மஹிந்த ராஜபக்ஸ  3,554  21.68 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  72,588
அளிக்கப்பட்ட வாக்குகள்  16,948

யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 7,914  66.17 %
மஹிந்த ராஜபக்ஸ  3,296  27.56 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  64,714
அளிக்கப்பட்ட வாக்குகள்  12,414

கிளிநொச்சி தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 4,717  75.11 %
மஹிந்த ராஜபக்ஸ  991  15.78 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  90,811
அளிக்கப்பட்ட வாக்குகள்  6,566

யாழ்ப்பாண மாவட்டத்தில் 11 தேர்தல் தொகுதிகளில் 10 தேர்தல் தொகுதிகளில் சரத்பொன்சேக்கா வெற்றியீட்டினார். இவர் பெற்ற மொத்த வாக்குகள் 113,877   இது  63.84வீதமாகும்.  யாழ்ப்பாண மாவட்டத்தில் மொத்தமாக பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 721,359 ஆகும். இதில் 185,132 வாக்காளர்களே தமது வாக்குகளைப் பதிவு செய்தனர். இது 25.66 வீத வாக்குப் பதிவுகளாகும். 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது யாழ்ப்பாண மாவட்டத்தில் மொத்தமாக 1.21 வீத வாக்காளர்களே வாக்களித்திருந்தனர். 1988, 1994ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்களில் முறையே 21.72.  2.97 வீத வாக்காளர்களே வாக்களித்தனர். 1982ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 46.30 வீத வாக்காளர்கள் வாக்களித்தனர். எனவே 82ம் ஆண்டை அடுத்து வந்த தேர்தல்களில் யாழ்ப்பாண மாவட்ட வாக்காளர்கள் மிகக் குறைவான வாக்கு வீதத்திலே வாக்களித்து வருகின்றனர். முன்னைய காலங்களில் இவர்களின் வாக்களிப்புக்கு சில தடைகள் இருந்திருக்கலாம். தற்போதைய நிலையில் இம்மக்களுக்கு வாக்களிக்க விருப்பற்ற நிலையிருப்பதை அவதானிக்க முடிகின்றது. ஜனநாயக நிலையில் இது ஒரு ஆரோக்கியமான நிலையல்ல. 

தேர்தல் முடிவுகளின் படி வன்னித் தேர்தல் மாவட்டத்தில் தேர்தல் தொகுதி ரீதியாக முடிவுகள் பின்வருமாறு அமைந்திருந்தன.

வன்னி மாவட்டம்

மன்னார் தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 20,157  70.19 %
மஹிந்த ராஜபக்ஸ  6,656  23.18 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  85,322
அளிக்கப்பட்ட வாக்குகள்  29,172

வவுனியா தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 31,796  66.02 %
மஹிந்த ராஜபக்ஸ  13,742  28.53 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  1,12,924 
அளிக்கப்பட்ட வாக்குகள்  49,498

முல்லைத்தீவு தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 6,882  73.47%
மஹிந்த ராஜபக்ஸ  1,126  18.43%
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  68,729
அளிக்கப்பட்ட வாக்குகள்  9,625

வன்னி மாவட்டத்தில் 03 தேர்தல் தொகுதியிலுமே சரத்பொன்சேக்கா வெற்றியீட்டினார். இவர் பெற்ற மொத்த வாக்குகள் 70,367   ஆகும்  இது 66.86வீதமாகும். வன்னி மாவட்டத்தில் மொத்தமாக பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 266,975 ஆகும். இதில் 107,680 வாக்காளர்களே தமது வாக்குகளைப் பதிவு செய்தனர். இது 40.33 வீத வாக்குப் பதிவுகளாகும். 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது வன்னி மாவட்டத்தில் மொத்தமாக 34.30 வீத வாக்காளர்களே வாக்களித்திருந்தனர்.
 
கிழக்கு மாகாணம் கிழக்கு மாகாணத்தில் திகாமடுல்லை தேர்தல் மாவட்டத்தை நோக்குமிடத்து முடிவுகள் பின்வருமாறு அமைந்திருந்தன.

அம்பாறை தேர்தல் தொகுதி
மஹிந்த ராஜபக்ஸ  73,389  67.94 %
சரத்பொன்சேக்கா 32,895  30.45 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  145,479
அளிக்கப்பட்ட வாக்குகள்  108,634

சம்மாந்துறை தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 27,003  55.95%
மஹிந்த ராஜபக்ஸ  19,991  41.42%
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  71,442
அளிக்கப்பட்ட வாக்குகள்  48,818

கல்முனை தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 32,946  75.76 %
மஹிந்த ராஜபக்ஸ  9,564  21.95 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  66,135
அளிக்கப்பட்ட வாக்குகள்  44,030

பொத்துவில் தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 54,374  59.69 %
மஹிந்த ராஜபக்ஸ  33,979  37.42 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  131,779
அளிக்கப்பட்ட வாக்குகள்  91,862

திகாமடுல்லை மாவட்டத்தில் 04 தேர்தல் தொகுதிகளில் 03 தேர்தல் தொகுதிகளில் சரத்பொன்சேக்கா வெற்றியீட்டினார். இவர் பெற்ற மொத்த வாக்குகள் 153,105  இது  49.94  வீதமாகும்.  திகாமடுல்லை மாவட்டத்தில் மொத்தமாக பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 309,474 ஆகும். இதில் 306,562 வாக்காளர்கள் தமது வாக்குகளைப் பதிவு செய்தனர். இது 73.54 % வீத வாக்குப் பதிவுகளாகும்.

மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தை நோக்குமிடத்து முடிவுகள் பின்வருமாறு அமைந்திருந்தன.

மட்டக்களப்பு தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 69,975  68.74%
மஹிந்த ராஜபக்ஸ  28,090  27.59%
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  1,55,537
அளிக்கப்பட்ட வாக்குகள்  1,03,685

கல்குடா தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 35,608  60.45%
மஹிந்த ராஜபக்ஸ  20,112  34.14%
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  97,135
அளிக்கப்பட்ட வாக்குகள்  60,186

பட்டிருப்பு தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 36,776  80.12%
மஹிந்த ராஜபக்ஸ   5,968  13.00%
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  80,972
அளிக்கப்பட்ட வாக்குகள்  47,065

மட்டக்களப்பு மாவட்டத்தில் 03 தேர்தல் தொகுதியிலுமே சரத்பொன்சேக்கா வெற்றியீட்டினார். இவர் பெற்ற மொத்த வாக்குகள் 146,057   ஆகும்  இது 68.93வீதமாகும். மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 333,644 ஆகும். இதில் 216,287 வாக்காளர்களே தமது வாக்குகளைப் பதிவு செய்தனர்.

திருகோணமலை மாவட்ட தொகுதி ரீதியான முடிவுகள் வருமாறு

மூதூர் தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 32,631  51.09%
மஹிந்த ராஜபக்ஸ  21,002  38.03%
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  85,401
அளிக்கப்பட்ட வாக்குகள்  55,915
 
திருகோணமலை தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 35,887  69.42 %
மஹிந்த ராஜபக்ஸ  13,935  26.9 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  86685
அளிக்கப்பட்ட வாக்குகள்  52748

சேருவில் தேர்தல் தொகுதி
மஹிந்த ராஜபக்ஸ  27,932  63.10 %
சரத்பொன்சேக்கா 15,260  34.47 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  69,047
அளிக்கப்பட்ட வாக்குகள்  44,832

திருகோணமலை மாவட்டத்தில் 03 தேர்தல் தொகுதிகளில் 02 தேர்தல் தொகுதிகளில் சரத்பொன்சேக்கா வெற்றியீட்டினார். இவர் பெற்ற மொத்த வாக்குகள் 87,661 இது  54.09  வீதமாகும்.  திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 241,133 ஆகும். இதில் 152,428 வாக்காளர்கள் தமது வாக்குகளைப் பதிவு செய்தனர்.

அளிக்கப்பட்ட முடிவுகளைப் பார்க்குமிடத்து இங்குள்ள வாக்காளர்களில் அனைவரும் சரத் பொன்சேக்காவுக்கு மாத்திரமே வாக்களித்துள்ளனர் என்று எடுத்துக் கொள்ள முடியாது. மஹிந்தவுக்கும் சிறுபான்மை வாக்குகள் சென்றடைந்திருக்கும். ஆனால், மேலெழுந்த வாரியாக நோக்குமிடத்து ஒரு தேர்தல் தொகுதியின் தோல்வி, ஒரு தேர்தல் மாவட்டத்தின் தோல்வி என்று கூறும்பொழுது தமிழ், முஸ்லிம் மக்கள் மஹிந்தவுக்கு வாக்களிக்கவில்லை என்ற ஓர் உணர்வினையே ஏற்படுத்தக்கூடிய ஒரு நிலை உருவாகலாம். மஹிந்த ராஜபக்ஸ மேல் மாகாணம் கொழும்பு மாவட்டத்தில் வெற்றிபெற்றாலும்கூட, கொழும்பு மாவட்டத்திலும் சிறுபான்மை சமூகத்தினர் செறிவாக வாழக்கூடிய தேர்தல் தொகுதிகளில் மஹிந்த ராஜபக்ஸ தோல்வியுற்றிருந்தமையும் அவதானிக்கத்தக்க ஒன்றாகும்.

இந்நிலைக்கு என்ன காரணம்? என்பதையும் அவதானித்தல் வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணத்தில் வாழக்கூடிய மக்கள் குறிப்பாக தமிழ் மக்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதில் வாதப்பிரதிவாதமில்லை. மஹிந்த ராஜபக்ஸ இறுதி யுத்தத்தை முன்னெடுத்த ஜனாதிபதி. விடுதலைப் புலிகளின் தோல்விக்குக் காரணமாக இருந்த ஒரு ஆட்சியாளர். இந்நிலையில் மஹிந்த நிராகரிக்கப்பட்டது மக்களின் பார்வையில் நியாயமுண்டு. அதேநேரம், கடைசி யுத்தத்தை முன்னெடுத்த தளபதி பொன்சேக்கா. இவர் தளபதியாக இருக்கும்போது இலங்கையிலுள்ள சிறுபான்மையினர் வந்தேறுகுடிகள் என்று பகிரங்கமாக கூறியவர். மேலும், இலங்கையில் வாழக்கூடிய சிறுபான்மையினர் பெரும்பான்மையினரின் நிகழ்ச்சித் திட்டத்திற்கமையவே வாழவேண்டும் என்று கூறியவர். யுத்த நிலையுடன் ஒப்புநோக்கும்போது மஹிந்தவைவிட பொன்சேக்கா உயர்ந்தவர் என்று எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

மறுபுறமாக தமிழர்களின் பிரச்சினைக்கு மஹிந்த ராஜபக்ஸவினால் அரசியல் தீர்வு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது. அதேநேரம், பொன்சேக்கா தான் ஆட்சிக்கு வந்தால் அத்தகைய ஒரு தீர்வினை வழங்குவதாக எவ்விடத்திலும் பகிரங்கமாக அறிவிக்கவில்லை.

சர்வதேச ஊடகங்கள் குறிப்பாக மேற்குலக நாடுகள் மஹிந்த ராஜபக்ஸ ஆட்சி அமைப்பதில் விரும்பவில்லை என்பது அவர்களின் நடவடிக்கைகளின் மூலமாக வெளிப்படுகின்றது. குறிப்பாக மஹிந்த ராஜபக்ஸவுக்கு இந்தியா,  சீனா போன்ற நாடுகளுக்குமிடையிலான நெருக்கமான உறவின் காரணமாக மேற்குலக நாடுகள் மஹிந்த அரசாங்கத்தை பலவழிகளிலும் தாக்குதல்களுக்கு உட்படுத்தி வந்தமை அறிந்ததே. பொதுவாக இச்சக்திகள் அனைத்தும் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட வேண்டுமென்பதை விரும்பியது உண்மை. இந்நிலையில் இச்சக்திகளின் தூண்டுதலுக்கு சிறுபான்மையினர் இரையானார்களா என்பதும் சிந்திக்க வேண்டிய ஒரு விடயமாகவே இருக்கின்றது.

இங்கு இன்னுமொரு உண்மையை நாங்கள் ஏற்றுக் கொள்ளவே வேண்டும். அதாவது,  வடக்கு கிழக்கு பிரதேசங்களில் ஆளும்கட்சி சார்பாக இருந்த சிறுபான்மை அரசியல் தலைவர்கள் தமது மக்களுக்கு உரிய சேவையினை வழங்க தவறிவிட்டார்கள் என்பதையே இம்முடிவுகள் பெருவாரியாக எடுத்துக் காட்டுகின்றன. வடக்கிலும் சரி கிழக்கிலும் சரி, தமிழ் அரசியல்வாதிகளும் சரியே,  முஸ்லிம் அரசியல்வாதிகளும் சரியே தத்தமது ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும், தாம் சமூகத்தின் பிரதிநிதிகளாக காட்டிக் கொள்ளவும் வேண்டும் என்பதற்காக மேற்கொண்ட வியூகங்களும் இங்கு மக்களால் நேரடியாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளன. எனவே,  இது விடயம் குறித்து ஆழமான பார்வையொன்றை செலுத்த வேண்டியுள்ளது. வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஆட்சி அதிகாரத்திலுள்ள எந்தவொரு அமைச்சராலும், எந்தவொரு முதலமைச்சராலும் அவர்களின் ஆசனங்களை தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை.

தேர்தல் முடிவு வந்துமுடிந்துவிட்டது. இதனை தற்போது அலசுவதால் எவ்வித நன்மையும் பயக்கப்போவதில்லை. ஆனால்,  ஒரு உண்மையை நாங்கள் இவ்விடத்தில் விளங்கிக் கொள்ள வேண்டும்.

சிறுபான்மையினரின் ஆதரவு இல்லாமல் பெரும்பான்மையினரால் ஆட்சியை அமைக்க முடியுமென்ற ஒரு நிலை தற்போது இலங்கையில் தோற்றுவிக்கப்பட்டுவிட்டது. இங்கு மஹிந்தவுக்கு இந்நிலை தற்போது சாதகமாக இருககலாம்;. பெரும்பான்மை சமூகத்தினர் ஒன்றிணைய வேண்டும் என்ற ஓர் உணர்வு இனி பெரும்பான்மை அரசியல் கட்சிகளில் ஆணித்தரமான கருப்பொருளாக மாற்றமடையக் கூடிய நிலை உருவாகியுள்ளது. ஆளும் தரப்பினரால் பெற்றப்பட்ட இந்த வெற்றி எதிர்காலத்தில் எதிரணிகளின் மனங்களிலும் விதைக்கப்படமாட்டாது என்பதற்கு எவ்விதமான உத்தரவாதமுமில்லை. வடக்கு கிழக்கு மாகாணங்களில் இம்முறை வழங்கப்பட்ட வாக்குகளை விட மஹிந்த ராஜபக்ஸ பெற்ற மேலதிக வாக்குகள் அதிகமானவை. 160 தேர்தல் தொகுதிகளில் 130 தொகுதிகளில் வெற்றிபெற்றார். இந்த 130 தேர்தல் தொகுதிகளில் சிங்கள மக்கள் சார்பான தேர்தல் தொகுதிகளே அதிகம். அவர் தோல்வியடைந்த 30 தேர்தல் தொகுதிகளுள் சிறுபான்மை செரிவு அதிகம்.

இத்தேர்தல் முடிவுகளை பாடமாகக் கொண்டு இதன் பிற்பாடாவது முஸ்லிம்,  தமிழ் அரசியல்வாதிகள் தமது மக்களுக்காகவும்,  சமூகத்துக்காகவும் உண்மையான சேவையினை ஆற்ற முன்வர வேண்டும். தொடர்ந்தும் மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்க முடியாது என்பதை உணர வேண்டும். தமது மக்கள் என்றும் கற்பனையுலகில் வாழத் தயாரானவர்கள் அல்ல என்பதை இவர்கள் ஆழமாக தமது மனங்களில் பதித்துக் கொள்ள வேண்டும். பாராளுமன்றத்தில் எமக்கு இத்தனைப் பிரதிநிதிகள் இருக்கின்றார்கள். மாகாணசபையில் எமது சமூகத்தை இத்தனைப் பிரதிநிதிகள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்கள். அமைச்சரவையில் எமக்கு இத்தனை அமைச்சர்கள் இருக்கின்றார்கள் என்று கூறிக் கொள்வதால் சிறுபான்மையினராகிய எமக்கு ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை. எண்ணிக்கை முக்கியமல்ல,  செயற்றிறன்மிக்க தலைமைத்துவம் தான் இன்றைய சமூகத்தின் முக்கியத்துவம். வாக்காளர்களை என்றும் ஏமாற்ற முடியாது.

இத்தேர்தலால் ஏற்பட்ட வடுக்கள் நிச்சயமாக பெரும்பான்மை சமூகத்தினர் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பது தவிர்க்க முடியாதது. இது சடுதியாக ஏற்படாவிட்டாலும்கூட,  ஒரு நீண்ட கால அடிப்படையில் அத்தகைய உணர்வுகள் ஏற்படும். அதற்கான வழியினை இத்தேர்தலில் நாங்கள் காட்டிவிட்டோம். இந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவின் எதிரொலியினை எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலிலும் நிச்சயம் அவதானிக்க முடியும். மஹிந்தவின் இலக்காகக் காணப்படுவது எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பாராளுமன்றப் பலத்தைப் பெறுவதே. தற்போதைய தேர்தல் முடிவுகளை ஆய்வு ரீதியாக நோக்குமிடத்து இலங்கையில் காணப்படக்கூடிய விகிதாசார தேர்தல் முறையின் கீழ் அந்நிலை உருவாகக் கூடிய சாத்தியம் கணிசமான அளவிற்கு இருக்கின்றது. இத்தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸவை வெற்றியடையச் செய்வதற்கு ஒன்றிணைந்த சிங்கள வாக்காளர்கள் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் இதைவிட ஒரு ஒன்றிணைப்பைக் காட்டலாம்.

யதார்த்த நிலைகளை தமிழ் மக்களும், சரி முஸ்லிம் மக்களும் சரி உணர்ந்து கொள்ளாவிடின் அல்லது இந்தத் தேர்தல் உதாரணங்களை படிப்பினையாக எடுத்துக் கொள்ளாவிடின் எதிர்காலம் மேலும், மேலும் ஐயப்பாடுமிக்கதாக மாறும் என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்துகொள்ள வேண்டும். இவ்விடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை அல்லது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினை நாம் விமர்சிக்கலாம் ஆனாலும், இவர்களின் குரல்களுக்கு வாக்காளர் மத்தியில் ஒரு மதிப்பு உண்டு என்பதை எம்மால் ஒரேயடியாக நிராகரித்துவிட முடியாது. எனவே இக்கட்சியினரும் தமது சுயநல நோக்கங்களைக் கைவிட்டுவிட்டு தமது சமூக நலனின்பால் உண்மையானதும்,  யதார்த்த பூர்வமானதுமான ஒரு நிலையை நோக்கிச் செல்ல வேண்டிய அவசியம் தற்போது உருவாகியுள்ளது. இதனை நாம் ஒவ்வொருவரும் நன்கு ஆலோசித்து சமூகத்தின்பால் உண்மையான நோக்குடன் செல்ல வேண்டியது காலத்தின் தேவையாகும். 

மேலதிக வாசிப்புக்கு..

ஜனாதிபதித் தேர்தலில் தீர்மான சக்தி சிறுபான்மையினத்தினரே. ஆனால், ஆறாவது ஜனாதிபதியைத் தீர்மானிக்கப்போவது…? – பீ.எம். புன்னியாமீன் –
http://thesamnet.co.uk/?p=18803