(தமிழ் தேசிய கூட்டணியும் முன்னணியின் தலைவர் திரு சம்பந்தனை ஆதரித்தும், தமிழ்தேசிய முன்னணிக்கான பிரசாரங்களில் ஈடுபடவும் கலந்தாலோசனைக் கூட்டம் ஒன்று ஈஸ்ற்காம் லண்டனில் நேற்று மாலை திரு சீனிவாசம் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் முன்னாள் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆதரவாளர்களும் முன்னாள் தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டுள்ளனர். – இக்கூட்டத்தை திரு ஜதி சம்பந்தனே ஒழுங்கு செய்திருந்தார் என்றும் அறியப்பட்டுள்ளது.)
இலங்கையில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வட கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசங்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழர் தாயகத்தின் ஐந்து மாவட்டங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
வன்னியில் ஆயுதப்போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் அதாவது சென்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது விடுதலைப் புலிகளின் ஆதரவுடன் அமைக்கப்பட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, அவர்களின் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவு நல்கி தமது நாடாளுமன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.
கடந்த மே மாதம் 18ம் திகதியுடன் ஆயதப் போரராட்டம் மௌனமாகியது அதன்பின்பு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஈழத்தமிழர்களின் அரசியலை ஜனநாயக வழிகளில் முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
முள்ளிவாய்க்கால் போராட்ட வீழ்ச்சியின் பின் இலங்கை அரசியலில் குறிப்பாக தமிழர் அரசியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. ஹிட்லர் போன்ற சர்வாதிகார மகிந்த ராஜபக்ஸ ஒரு ராணுவ ஆட்சியைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார். அரசுக் கெதிராகக் கருத்துக்களை வெளியிடும் ஊடகவியலாளர்கள் கடத்தப்படுதல், காணாமற்போதல், வெள்ளை வான் கடத்தல், தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் அரச படைகளின் துணையுடன் ஆயதக்குழுக்களால் படுகொலை செய்யப்பட்டமை, பயரங்கரவாத் தடைச்சட்டத்தையும், அவசரகால சட்டத்தையும் பயன்படுத்தி தமிழ்மக்களை அடக்கியொடுக்கும் அரசியல் நிலையை புலம்பெயர் தமிழர்கள் நன்கு அறிவர் தமிழ்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களது தொகுதிக்கு செல்ல முடியாதளவு உயிர் அச்சறுத்தலும். பாதுகாப்பின்மையும் இருந்து வந்ததை யாவரும் அறிவர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான திரு. கஜேந்திரன் செல்வராசா, திருமதி பத்மினி சிதம்பரநாதன், திரு ஜெயானந்த மூர்த்தி, திரு.சிவாஜிலிங்கம் போன்றவர்கள் அங்கு வாழ முடியாது என்று நீண்டகாலம் வெளிநாடுகளில் தங்கியிருந்தனர். ஆனால் தலைவர் திரு. சம்பந்தன் உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் நெருக்கடியையும் பொருட்படுத்தாது நாட்டிலிருந்து தம்மால் செய்யக்கூடிய கடமைகளை ஆற்றிவந்தனர். வன்னிப்போராட்டம் முடிவடையும் வரை விடுலைப் புலிகளுக்கு முழுமையான ஆதரவு நல்கி அவ்வியக்கத் தலைமையின் வழிகாட்டலுக்கு உட்பட்டு நடந்துவந்ததையும் அணைவரும் அறிவர்.
மக்களால்தெரிவு செய்யப்பட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்ப விடுதலைப் புலிகளின் ஊதுகுழல் என்று மகிந்த அரசாங்கம் பலவழிகளில் அவர்களைப் பழிவாங்கி வந்ததை அனைவரும் அறிவர். இந்தச் சூழலில் முள்ளிவாய்கால் வீழ்ச்சியின் பின் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் தமிழ்தேசியக் கூட்மைப்பின் மீது சுமத்தப்பட்டது இந்தப் பொறுப்பை நன்கு உணர்ந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் சூழ் நிலையைக் கருத்தில்கொண்டு ராஜந்திரமாக அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது.
25 வருட ஆயுதப்போராட்டம் வீழ்ச்சியடைந்ததால் அதிலிருந்து தமிழர்களை மீட்சிபெற வைத்து தமிழ்மக்களின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டிய நிலையிலுள்ள த.தே.கூட்டமைப்பு தமிழர்களின் வலுவான கட்சியாக வளரவேண்டுமென்பதில் புலம்பெயர் தமிழர்களிடையே மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் இலங்கையிலுள்ள பயங்கரமான சூழ்நிலையில் தமிழர்தாயகத்தில் வாழும் மக்களின் அவலநிலை, இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றல், உயர்பாதுகாப்பு வலயத்திருந்து இராணுவத்தை அகற்றல், வன்னிப்பிரதேசத்தில் ராணுவ ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்தல், போன்ற அதிமுக்கியமான பிரச்சனைகள் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டியுள்ளது. இவற்றை எவ்வாறு அணுகுவது என்பதைத் தமிழ்த்தேசிய கூட்டடைமப்பு திட்டமிட்டு செயலாற்றி வருகிறது.
இந்தியா இலங்கை மீது ஆதிக்கம் செலுத்தி வருவதனால் இந்தியாவின் நல்லெண்ணத்தை கட்டியெழுப்ப வேண்டிய அவசியமும் த.தே. கூட்டமைப்புக்கு உண்டு. அதையும் அவர்கள் ராஜதந்திரமாக மேற்கொள்வார்கள் என தமிழ்மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். அதேபோல் ஒரு அரசியல் தீர்வைக் கொண்டு வருவதற்கும் இந்தியாவின் உதவி அவசியமாக இருக்கிறது. அதே வேளை சர்வதேச நாடுகளின் ஆதரவும் தேவை. முதலில் இந்தியாவுடன் நல்லுறவைப் பேணவேண்டியது அவசியம். அதற்காக இந்தியாவிடம் சரணடையக் கூடாது, ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவிடம் சரணடைந்து விட்டதாகக் குரல் எழுப்பப்படுகிறது. அதைத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை தெளிவுபடுத்த வேண்டும்.
அந்தவகையில் இந்தியாவுடனும் சர்வதேச சமூகத்துடனும் நல்லுறவைப்பேணி தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையுடனான அரசியல் தீர்வைக் கொண்டு வருவதற்கு ராஜதந்திரமாக த.தே. கூட்டமைப்பு செயற்பட வேண்டும் இதைப்புரிந்து கொள்ளாத புலம்பெயர் தமிழர்கள் சிலர் திரு. இரா. சம்பந்தன், திரு.பிரேமச்சந்திரன் ஆகியோர் சோனியா காந்தியின் வலையில் சிக்கிவிட்டதாக கோசம் எழுப்புகின்றார்கள். இலங்கையின் களநிலைமைகளைப் புரிந்து கொள்ளாதவர்கள் கோசத்தை எழுப்பி குழப்பி வருகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டணியன் தலைவர் திரு. இரா சம்பந்தன் அவர்களைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இது மிகக் கசப்பான விடயம்.
ஈழத்தமிழர்கள் அரசியல் ரீதியாக தலைநிமிர்ந்து ஜனநாயக வழியில் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலையிலுள்ளனர். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பிளவுபட்டு விட்டதாகக் கூறுபவர்கள் இந்தப்பிளவு எத்தகையது என்பதை ஆராயவோ, யதார்த்தமாக சிந்திக்கவோ மறுக்கின்றனர்.
தமிழ்தேசிய கூட்டமைப்பு பலகட்சிகளை உள்ளடக்கிய ஒரு கட்டுப்பாடான அமைப்பு. பல கருத்துக்களைக்கொண்ட கட்சிகள் இங்கு அங்கம் வகுக்கின்றனர். முரண்பாடுகள் ஏற்படுவது தவிர்க்கமுடியாது. வன்னித் தலைமை இருக்கும் வரை கட்டுப்பாடாக விருந்தவர்கள் முள்ளிவாய்க்கால் வீழ்சியின் பின் தன்னிச்சையாக கருத்துக் கூற முற்பட்டுள்ளனர். தலைமைக்கு மதிப்புக்கொடுக்கும் நிலை குறைந்து விட்டதாகத் தெரிகிறது. இன்றைய சூழ்நிலையில் நல்ல அரசியல் அனுபமிக்க ஒருவர் கிடைத்தது பாராட்டத்தக்கது. அன்று இந்திரா காந்தியைச் சந்தித்த முத்தலைவர்களில் ஒருவராக இருப்பவர் திரு சம்பந்தன் அவர்களாகும்.
1952ல் திருகோணமலைத் தொகுதியின் பிரதிநிதியாக தந்தை செல்வாவின் தமிழரசுக் கட்சியின் சார்பில் தெரிவு செய்யப்படவர் திரு.இராசவரோதயம் அவர்கள். திரு சம்பந்தன் தமிழர் தாயத்தின் தலைநகரான திருமலையை சிங்களவர்களின் ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாத்து வருபவர்கள். தமிழர்தாயக உணர்வுமிக்க அரசியல் பரம்பரையில் வந்தவர் தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமை திரு சம்பந்தன். இவரைப் புலம்யெயர் தமிழர் சிலர் மிக மோசமாக விமர்சிப்பதுதான் வேதனைக்குரியது.
எனினும் எந்தக் குறைபாடுகளையும், கண்டனங்களையும் பொருட்படுத்தாது த.தே. கூட்டணித் தலைமை அரசியல் நகர்வுகளைச் சாதுரியமாக மேற்கொண்டு வருகிறது. பிரபாகரன் அவர்களினால் நியமிக்கப்பட இரு வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் மகிந்தா அரசிடம் சரணாகதி அடைந்துள்ளனர். தமிழ்த் தேசியத்தைக் கைவிட்டு மகிந்தாவின் சிந்தனையை ஏற்றுக்கொண்ட இவர்கள் பற்றி புலம்பெயர் தமிழர்களோ, ஊடகங்களோ பெரிதாக கூறுவதில்லை.
ஐனாதிபதி தேர்தலின்போது திரு சிறீகாந்தா, திரு சிவாஜிலிங்கம் ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டைமீறி தனிவழி மேற்கொண்டனர். இவர்கள் பற்றி புலம்பெயர் ஊடகங்கள் அவ்வளவாக எழுதுவதில்லை.
இப்படியானவர்களை நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் சேர்த்துக் கொள்ளமுடியுமா? அவர்கள் பிளவு தலைமையால் ஏற்பட்டது என்ற பிரசாரம் செய்பவர்களும் புலம்பெயர் நாடுகளில் இருக்கின்றார்கள்.
திரு கஜேந்திரகுமார், திருமதி பத்மினி சிதம்பரநாதன், திரு கஜேந்திரன் செல்வராசா ஆகியோரை தமிழத்தேசிய கூட்டமைப்பு வெளியேற விட்டிருக்கக்கூடாது. அரசியல் விவேகமுள்ளவர்களாக இருந்தால் அவர்கள் மூவரையும் த.தே கூட்டணி வேட்பாளர் பட்டியில் கட்டாயம் சேர்த்திருக்க வேணடும். அவ்வாறு செய்யாததற்கான காரணங்களை எம்மால் அறிந்துகொள்ள முடியவில்லை. அதற்கான விளக்கத்தை தலைமை வெளியீடும் என எதிர்பார்க்கின்றோம். என்ன விளக்கத்தை கொடுத்தாலும் எமது பார்வையில் அவர்களைச் சேர்த்துக்கொள்ளாதது தவறு என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
எது எப்படியென்றாலும் த.தே. கூட்டமைப்பு என்ற ஒரு தமிழ் அரசியல்கட்சிதான் தமிழர் தாயகத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது அவர்களில் பெரும்பான்மையானவர்களின் வெற்றியிலேயே தமிழர்களின் எதிர்காலம் தங்கியுள்ளது. எனவே புலம்பெயர் தமிழர்கள் அவர்களது பூரண ஆதரவை நல்க வேண்டியது அவசியமாகும்.