2010

2010

உள்நாட்டு பிரச்சினைக்கு அரசியல் தீர்வூ காண்பதற்கு சிறந்த வாய்ப்பு! வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பில் பீற்றர் றிக்கெட்ஸ்

rohitha_and.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெற்றுள்ள மக்கள் ஆணையும் மோதல்கள் முடிவடைந்த நிலையும் உள்நாட்டு பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு சிறந்த வாய்ப்பாகும் என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பீற்றர் றிக்கெட்ஸ் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பீற்றர் றிக்கெட்ஸ் நேற்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார்.

இச்சந்திப்பின் போது வடக்கு, கிழக்கில் மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்தோர் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த இம்மக்கள் அங்கிருந்து விடுவிக்கப்பட்டு மீள்குடியேற்றப்பட்டதை பீற்றர் றிக்கெட்ஸ் வரவேற்றுள்ளார்.

அத்துடன் இடம்பெயர்ந்த மக்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கும் மீள்குடியேற்றம் நிறைவடைவதற்கும் மற்றும் இடம்பெயர்ந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் ஏப்ரல் மாத தேர்தலை நீதியாகவும், நியாயமாகவும் நடத்தவும் இலங்கைக்கு பிரித்தானியா உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

தமிழ்தேசியக் கூட்டமைப்பு சரியான பாதையில் செல்கிறது புலம் பெயர் தமிழர்கள் முழுமையான ஆதரவு நல்க வேண்டும்! : ஐ.தி சம்பந்தன் (லண்டன்)

Sampanthar_I_T(தமிழ் தேசிய கூட்டணியும் முன்னணியின் தலைவர் திரு சம்பந்தனை ஆதரித்தும், தமிழ்தேசிய முன்னணிக்கான பிரசாரங்களில் ஈடுபடவும் கலந்தாலோசனைக் கூட்டம் ஒன்று ஈஸ்ற்காம் லண்டனில் நேற்று மாலை திரு சீனிவாசம் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் முன்னாள் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆதரவாளர்களும் முன்னாள் தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டுள்ளனர். – இக்கூட்டத்தை திரு ஜதி சம்பந்தனே ஒழுங்கு செய்திருந்தார் என்றும் அறியப்பட்டுள்ளது.)

இலங்கையில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வட கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசங்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழர் தாயகத்தின் ஐந்து மாவட்டங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

வன்னியில் ஆயுதப்போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் அதாவது சென்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது விடுதலைப் புலிகளின் ஆதரவுடன் அமைக்கப்பட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, அவர்களின் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவு நல்கி தமது நாடாளுமன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.

கடந்த மே மாதம் 18ம் திகதியுடன் ஆயதப் போரராட்டம் மௌனமாகியது அதன்பின்பு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஈழத்தமிழர்களின் அரசியலை ஜனநாயக வழிகளில் முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

முள்ளிவாய்க்கால் போராட்ட வீழ்ச்சியின் பின் இலங்கை அரசியலில் குறிப்பாக தமிழர் அரசியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. ஹிட்லர் போன்ற சர்வாதிகார மகிந்த ராஜபக்ஸ ஒரு ராணுவ ஆட்சியைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார். அரசுக் கெதிராகக் கருத்துக்களை வெளியிடும் ஊடகவியலாளர்கள் கடத்தப்படுதல், காணாமற்போதல், வெள்ளை வான் கடத்தல், தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் அரச படைகளின் துணையுடன் ஆயதக்குழுக்களால் படுகொலை செய்யப்பட்டமை, பயரங்கரவாத் தடைச்சட்டத்தையும், அவசரகால சட்டத்தையும் பயன்படுத்தி தமிழ்மக்களை அடக்கியொடுக்கும் அரசியல் நிலையை புலம்பெயர் தமிழர்கள் நன்கு அறிவர் தமிழ்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களது தொகுதிக்கு செல்ல முடியாதளவு உயிர் அச்சறுத்தலும். பாதுகாப்பின்மையும் இருந்து வந்ததை யாவரும் அறிவர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான திரு. கஜேந்திரன் செல்வராசா, திருமதி பத்மினி சிதம்பரநாதன், திரு ஜெயானந்த மூர்த்தி, திரு.சிவாஜிலிங்கம் போன்றவர்கள் அங்கு வாழ முடியாது என்று நீண்டகாலம் வெளிநாடுகளில் தங்கியிருந்தனர். ஆனால் தலைவர் திரு. சம்பந்தன் உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் நெருக்கடியையும் பொருட்படுத்தாது நாட்டிலிருந்து தம்மால் செய்யக்கூடிய கடமைகளை ஆற்றிவந்தனர். வன்னிப்போராட்டம் முடிவடையும் வரை விடுலைப் புலிகளுக்கு முழுமையான ஆதரவு நல்கி அவ்வியக்கத் தலைமையின் வழிகாட்டலுக்கு உட்பட்டு நடந்துவந்ததையும் அணைவரும் அறிவர்.

மக்களால்தெரிவு செய்யப்பட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்ப விடுதலைப் புலிகளின் ஊதுகுழல் என்று மகிந்த அரசாங்கம் பலவழிகளில் அவர்களைப் பழிவாங்கி வந்ததை அனைவரும் அறிவர். இந்தச் சூழலில் முள்ளிவாய்கால் வீழ்ச்சியின் பின் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் தமிழ்தேசியக் கூட்மைப்பின் மீது சுமத்தப்பட்டது இந்தப் பொறுப்பை நன்கு உணர்ந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் சூழ் நிலையைக் கருத்தில்கொண்டு ராஜந்திரமாக அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது.

25 வருட ஆயுதப்போராட்டம் வீழ்ச்சியடைந்ததால் அதிலிருந்து தமிழர்களை மீட்சிபெற வைத்து தமிழ்மக்களின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டிய நிலையிலுள்ள த.தே.கூட்டமைப்பு தமிழர்களின் வலுவான கட்சியாக வளரவேண்டுமென்பதில் புலம்பெயர் தமிழர்களிடையே மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் இலங்கையிலுள்ள பயங்கரமான சூழ்நிலையில் தமிழர்தாயகத்தில் வாழும் மக்களின் அவலநிலை, இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றல், உயர்பாதுகாப்பு வலயத்திருந்து இராணுவத்தை அகற்றல், வன்னிப்பிரதேசத்தில் ராணுவ ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்தல், போன்ற அதிமுக்கியமான பிரச்சனைகள் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டியுள்ளது. இவற்றை எவ்வாறு அணுகுவது என்பதைத் தமிழ்த்தேசிய கூட்டடைமப்பு திட்டமிட்டு செயலாற்றி வருகிறது.

இந்தியா இலங்கை மீது ஆதிக்கம் செலுத்தி வருவதனால் இந்தியாவின் நல்லெண்ணத்தை கட்டியெழுப்ப வேண்டிய அவசியமும் த.தே. கூட்டமைப்புக்கு உண்டு. அதையும் அவர்கள் ராஜதந்திரமாக மேற்கொள்வார்கள் என தமிழ்மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். அதேபோல் ஒரு அரசியல் தீர்வைக் கொண்டு வருவதற்கும் இந்தியாவின் உதவி அவசியமாக இருக்கிறது. அதே வேளை சர்வதேச நாடுகளின் ஆதரவும் தேவை. முதலில் இந்தியாவுடன் நல்லுறவைப் பேணவேண்டியது அவசியம். அதற்காக இந்தியாவிடம் சரணடையக் கூடாது, ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவிடம் சரணடைந்து விட்டதாகக் குரல் எழுப்பப்படுகிறது. அதைத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை தெளிவுபடுத்த வேண்டும்.

அந்தவகையில் இந்தியாவுடனும் சர்வதேச சமூகத்துடனும் நல்லுறவைப்பேணி தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையுடனான அரசியல் தீர்வைக் கொண்டு வருவதற்கு ராஜதந்திரமாக த.தே. கூட்டமைப்பு செயற்பட வேண்டும் இதைப்புரிந்து கொள்ளாத புலம்பெயர் தமிழர்கள் சிலர் திரு. இரா. சம்பந்தன், திரு.பிரேமச்சந்திரன் ஆகியோர் சோனியா காந்தியின் வலையில் சிக்கிவிட்டதாக கோசம் எழுப்புகின்றார்கள். இலங்கையின் களநிலைமைகளைப் புரிந்து கொள்ளாதவர்கள் கோசத்தை எழுப்பி குழப்பி வருகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டணியன் தலைவர் திரு. இரா சம்பந்தன் அவர்களைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இது மிகக் கசப்பான விடயம்.

ஈழத்தமிழர்கள் அரசியல் ரீதியாக தலைநிமிர்ந்து ஜனநாயக வழியில் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலையிலுள்ளனர். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பிளவுபட்டு விட்டதாகக் கூறுபவர்கள் இந்தப்பிளவு எத்தகையது என்பதை ஆராயவோ, யதார்த்தமாக சிந்திக்கவோ மறுக்கின்றனர்.

தமிழ்தேசிய கூட்டமைப்பு பலகட்சிகளை உள்ளடக்கிய ஒரு கட்டுப்பாடான அமைப்பு. பல கருத்துக்களைக்கொண்ட கட்சிகள் இங்கு அங்கம் வகுக்கின்றனர். முரண்பாடுகள் ஏற்படுவது தவிர்க்கமுடியாது. வன்னித் தலைமை இருக்கும் வரை கட்டுப்பாடாக விருந்தவர்கள் முள்ளிவாய்க்கால் வீழ்சியின் பின் தன்னிச்சையாக கருத்துக் கூற முற்பட்டுள்ளனர். தலைமைக்கு மதிப்புக்கொடுக்கும் நிலை குறைந்து விட்டதாகத் தெரிகிறது. இன்றைய சூழ்நிலையில் நல்ல அரசியல் அனுபமிக்க ஒருவர் கிடைத்தது பாராட்டத்தக்கது. அன்று இந்திரா காந்தியைச் சந்தித்த முத்தலைவர்களில் ஒருவராக இருப்பவர் திரு சம்பந்தன் அவர்களாகும்.

1952ல் திருகோணமலைத் தொகுதியின் பிரதிநிதியாக தந்தை செல்வாவின் தமிழரசுக் கட்சியின் சார்பில் தெரிவு செய்யப்படவர் திரு.இராசவரோதயம் அவர்கள். திரு சம்பந்தன் தமிழர் தாயத்தின் தலைநகரான திருமலையை சிங்களவர்களின் ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாத்து வருபவர்கள். தமிழர்தாயக உணர்வுமிக்க அரசியல் பரம்பரையில் வந்தவர் தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமை திரு சம்பந்தன். இவரைப் புலம்யெயர் தமிழர் சிலர் மிக மோசமாக விமர்சிப்பதுதான் வேதனைக்குரியது.

எனினும் எந்தக் குறைபாடுகளையும், கண்டனங்களையும் பொருட்படுத்தாது த.தே. கூட்டணித் தலைமை அரசியல் நகர்வுகளைச் சாதுரியமாக மேற்கொண்டு வருகிறது. பிரபாகரன் அவர்களினால் நியமிக்கப்பட இரு வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் மகிந்தா அரசிடம் சரணாகதி அடைந்துள்ளனர். தமிழ்த் தேசியத்தைக் கைவிட்டு மகிந்தாவின் சிந்தனையை ஏற்றுக்கொண்ட இவர்கள் பற்றி புலம்பெயர் தமிழர்களோ, ஊடகங்களோ பெரிதாக கூறுவதில்லை.

ஐனாதிபதி தேர்தலின்போது திரு சிறீகாந்தா, திரு சிவாஜிலிங்கம் ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டைமீறி தனிவழி மேற்கொண்டனர். இவர்கள் பற்றி புலம்பெயர் ஊடகங்கள் அவ்வளவாக எழுதுவதில்லை.
இப்படியானவர்களை நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் சேர்த்துக் கொள்ளமுடியுமா? அவர்கள் பிளவு தலைமையால் ஏற்பட்டது என்ற பிரசாரம் செய்பவர்களும் புலம்பெயர் நாடுகளில் இருக்கின்றார்கள்.

திரு கஜேந்திரகுமார், திருமதி பத்மினி சிதம்பரநாதன், திரு கஜேந்திரன் செல்வராசா ஆகியோரை தமிழத்தேசிய கூட்டமைப்பு வெளியேற விட்டிருக்கக்கூடாது. அரசியல் விவேகமுள்ளவர்களாக இருந்தால் அவர்கள் மூவரையும் த.தே கூட்டணி வேட்பாளர் பட்டியில் கட்டாயம் சேர்த்திருக்க வேணடும். அவ்வாறு செய்யாததற்கான காரணங்களை எம்மால் அறிந்துகொள்ள முடியவில்லை. அதற்கான விளக்கத்தை தலைமை வெளியீடும் என எதிர்பார்க்கின்றோம். என்ன விளக்கத்தை கொடுத்தாலும் எமது பார்வையில் அவர்களைச் சேர்த்துக்கொள்ளாதது தவறு என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

எது எப்படியென்றாலும் த.தே. கூட்டமைப்பு என்ற ஒரு தமிழ் அரசியல்கட்சிதான் தமிழர் தாயகத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது அவர்களில் பெரும்பான்மையானவர்களின் வெற்றியிலேயே தமிழர்களின் எதிர்காலம் தங்கியுள்ளது. எனவே புலம்பெயர் தமிழர்கள் அவர்களது பூரண ஆதரவை நல்க வேண்டியது அவசியமாகும்.

ஐரோப். ஆணைக்குழுவிடம் பேச்சு நடத்த அரச உயர்மட்ட குழு பிரஸல்ஸ் பயணம்

gl-p.jpgசர்வதேச அரங்கிற்கு இலங்கையின் உண்மை நிலையை எடுத்துச் செல்லும் வகையில் அரசாங்கம் ஐரோப்பிய ஆணைக் குழுவிடம் உயர்மட்ட பேச்சுவார்த்தை யொன்றை நடத்தவுள்ளது. இதற்கென அரசாங்கத்தின் உயர்மட்ட தூதுக் குழுவொன்று எதிர்வரும் 15 ஆந் திகதி திங்கட்கிழமை பிரஸல்ஸ் செல்கின்றது.

இந்தக் குழுவில் நிதியமைச்சின் செயலாளர் பீ. பி. ஜயசுந்தர, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரொமேஷ் ஜயசிங்க, நீதி, சட்ட மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் சுகத கம்லத், சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் ஆகியோர் இடம்பெறுவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

ஜீ. எஸ். பீ. பிளஸ் சலுகை உட்பட இலங்கை நலன் தொடர்பான முக்கிய விடயங்கள் குறித்து ஐரோப்பிய ஆணைக் குழுவுடன் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படுமென அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (10) முற்பகல் நடைபெற்ற செய்தியா ளர் மாநாட்டில் பேராசிரியர் பீரிஸ் தெரிவித்தார்.

வெளிநாடுகளின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வ தற்காக இலங்கையின் நலன் பாதிக்கப்படுவதற்கு இடமளிக்க முடியாததென்று கூறிய அமைச்சர் பீரிஸ் இதற்கான நிலையானதும், பலமானதுமான ஓர் அரசாங்கம் இருக்க வேண்டுமென்பதை நாட்டு மக்கள் நன்கு புரிந்துகொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இலண்டனில் நடந்த சர்வதேச தமிழர் அமைப்பின் மாநாட்டில் பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் கலந்துகொண்டுள்ளார். இந்த மாநாட்டில் எமது நாட்டுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில் முதலாவது : எமது இராணுவ அதிகாரிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவது, இரண்டாவது : இலங்கை உற்பத்திப் பொருள்களைப் பகிஷ்கரிப்பது, மூன்றாவது : சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பது. போன்ற தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர். நாடு கடந்த எல். ரி. ரி. ஈ. அரசாங்கத்தை அமைப்பதற்கு கூறியுள்ளார்கள். இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் ஆராயவென மூவர்கொண்ட நிபுணர்களை நியமிக்கப் போவதாகக் கூறுகிறார்.

இது எந்த வகையிலும் நியாயமானதல்ல’ என்று குறிப்பிட்ட பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், பான் கீ மூன் மேற்கொள்ள உத்தேசித்துள்ள நடவடிக்கையானது முற்றிலும் ஐ. நா. சபையின் கொள்கைகளை மீறும் செயலாகுமென்று சுட்டிக்காட்டினார்.’ சில மாதங்களுக்கு முன்னர் ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் மாநாடு, ஐ. நா. பாதுகாப்புச் சபை ஆகியவற்றில் இலங்கைக்குச் சார்பாக பல நாடுகள் குரல் எழுப்பியிருந்தன.

அவ்வாறு இலங்கையின் உண்மை நிலவரத்தை அறிந்த நாடுகள் கூட தலையிட முடியாதவாறு செயலாளர் நாயகம் பான் கீ மூனின் அலுவலகத்துடன் மாத்திரம் கட்டுப்படுத்தப்பட்டதான ஒரு நடவடிக்கையை மேற்கொள்ள அவர் முயற்சிப்பது ஐ. நா. சாசனத்திற்கு விரோதமானதாகும். சர்வதேசத்துடன் நல்லுறவைப் பேணுவதற்குத் தயார்.

ஒரு சவாலை வென்றுள்ள நாட்டுக்கு, பொருளாதார சவாலையும் வெல்ல வேண்டியுள்ளது. இதற்கு சர்வதேச நாடுகள் இடமளிக்க வேண்டும். அதேநேரம், அந்த நாடுகளின் அரசியல் இலாபத்திற்காக எமது நாட்டின் நலன் பாதிக்க இடமளிக்க முடியாது. வாக்குகளைப் பெறவும் தேர்தலுக்கு நிதியைப் பெற் றுக்கொள்ள நமது நாட்டைப் பலிகொடுக்க முடியாது. இதனைக் கருதிற்கொண்டுதான் ஐரோப்பிய ஆணைக் குழுவுடன் பேச்சு நடித்த அரசாங்கம் தீர்மானித்ததென்று அமைச்சர் குறிப்பிட்டார்.

தகவல் திணைக்களப் பணிப்பாளர் அனுஷ பல்பிட்டவும் கலந்துகொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் மேலும் தகவல் வழங்கிய அமைச்சர், ‘எதிர்க் கட்சி தொடர்பாக ஜனாதிபதி தேர்தலின் போது நாம் தெரிவித்த கருத்துகள் இன்று நிரூபணமாகியுள்ளன. எதிர்க் கட்சிக் கூட்டு இன்று மூன்று பிரிவுகளாகியுள்ளது.

அவர்கள் அதிகாரத்திற்கு வந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்! இந்தத் தேர்தலில் அரசாங்கம் வெல்லும் என்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். எதிர்க்கட்சி வெல்லும் நோக்கத்திலோ, அரசாங்கத்தினை அமைக்கும் நோக்கத்திலோ தேர்தலில் போட்டியிடவில்லை. அர சாங்கத்திற்கு மூன்றில் இரண்டு கிடைப் பதைத் தடுக்கவே முயற்சிக்கின்றது.

ஆனால், அரசாங்கத்திற்குப் பூரண ஆத ரவை வழங்கி மூன்றிலிரண்டு பெரும் பான்மையைப் பெற்றுக் கொடுப்பதென மக்கள் தீர்மானித்து விட்டார்கள். புலிகள் இயக்கம் இராணுவ ரீதியில் தோற்கடிக் கப்பட்டாலும் வெளிநாடுகளில் அச்சுறுத்தல் இன்னமும் உள்ளதை மக்கள் புரிந்து கொண்டார்கள்’ என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

“2/3 பெரும்பான்மை பலத்துடன் அரசியல் யாப்பில் பல மாற்றங்கள்”

srisena.jpgநிறை வேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையின் கீழ் நடைபெறும் இறுதித் தேர்தலாகவே எதிர்வரும் பொதுத் தேர்தல் அமையும். மக்களின் 2/3 பெரும்பான்மை பலத்தைப்பெற்று அரசியல் யாப்பில் உள்ள பல விடயங்களை அரசாங்கம் மாற்ற உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிரிசேன தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலைப் போலவே இந்த தேர்தலிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே வாக்களிக்குமாறு மக்களைக் கோருகிறோம். வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதும் உள்ள 70 வீதத்திற்கும் அதிகமான மக்கள் ஐ.ம.சு. முன்னணியின் வெற்றிக்குப் பங்களிக்க உள்ளனர். எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்து இந்த தேர்தலில் எதுவித போட்டியும் இல்லாததால் தேர்தல் பிரசாரங்கள் மந்தமாகவே உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று (10) மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர், மேலும் கூறியதாவது, நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஐ.ம.சு. முன்னணிக்கு 60 வீத வாக்குகளை மக்கள் வழங்கினர். பயங்கரவாத்தை ஒழித்து நாட்டில் அமைதியை ஏற்படுத்தியதற்கு மக்கள் தமது நன்றிக் கடனை செலுத்தினர். எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலிலும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு மக்கள் இரண்டாவது தடவையாக வாக்களிக்க வேண்டுகிறோம்.

மஹிந்த சிந்தனை தொலைநோக்கு திட்டத்தில் உள்ள விடயங்களை செயற்படுத்த இலங்கையை சுபீட்சமான நாடாக கட்டியெழுப்புவதற்கும் சர்வதேச அழுத்தங்களுக்கு முகம்கொடுப்பதற்கும் பலமான அரசாங்கமொன்று தேவை. எனவே ஜனாதிபதித் தேர்தலில் வழங்கியதை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஐ.ம.சு. முன்னணியை வெற்றிபெறச் செய்யுமாறு மக்களை கோருகிறோம்.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் போலன்றி இம்முறை வடக்கு கிழக்கிலுள்ள மக்கள் மஹிந்த ராஜபக்ஷவுடனே உள்ளனர். விகிதாசார தேர்தல் முறையின் கீழ் முதற்தடவையாக 2/3 பெரும்பான்மை பலத்தை மக்கள் எமக்கு வழங்க உள்ளனர். இதனூடாக 1978ஆம் ஆண்டின் அரசியல் யாப்பை திருத்த உள்ளோம். முதலில் தேர்தல் முறையை மாற்றவும் அடுத்த 17ஆவது திருத்தத்தின் கீழ் உள்ள சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான அதிகாரங்களை அதிகரிக்கவும் முறையாக அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசியலமைப்பு சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் உள்ள சிக்கலும் தீர்க்கப்படும். யாப்பில் உள்ள அதிகமான விடயங்களை 2/3 பெரும்பான்மை பலத்துடன் மாற்ற முடியும். சில விடயங்களை திருத்தவே சர்வஜன வாக்கெடுப்பு நடத்தவேண்டியுள்ளது.

தேர்தலில் வெற்றியீட்ட முடியாது என்பதால் ஐ.தே.க. செயலாளர் இம்முறை தேர்தலில் போட்டியிடாமல் தேசியப் பட்டியலினூடாக பாராளுமன்றம் வரத்திட்டமிட்டுள்ளார். ஆனால் ஐ.ம.சு. முன்னணி செயலாளர் சுசில் பிரேம் ஜெயந்த்தும் சு.க. செயலாளரான நானும் இம்முறை தேர்தலில் போட்யிடுகிறோம்.

நாம் பிரதமர் வேட்பாளராக எவரையும் அறிவிக்கமாட்டோம். 1978ஆம் ஆண்டின் பின் ஒருபோதும் பிரதமர் வேட்பாளர் ஒருவர் அறிவிக்கப்படவில்லை. வெற்றிபெரும் கட்சி எம்.பி.களிடையே கூடுதல் விருப்புள்ள நபர் ஜனாதிபதியினால் பிரதமராக நியமிக்கப்படுவார். பிரதமர் நியமனம் தொடர்பில் ஐ.ம.சு. முன்னணி கூட்டுக் கட்சிகளிடையே எதுவித பிரச்சினையும் கிடையாது என்றார்.

சகலரும் சம உரிமையுடன் வாழும் வாய்ப்பு கிடைத்துள்ளது – யாழ்ப்பாணத்தில் இராணுவ தளபதி

jj.jpgஒற்றை யாட்சியின் கீழ் ஜனாதிபதியின் தலைமைத்துவத்துடன் அனைவரும் சுதந்திரமாக சம உரிமையுடன் வாழும் வாய்ப்பு கிடைத்திருப்பதாக இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய கூறினார். மக்களுடனான நல்லுறவுகளை தொடர்ந்து பேணும் நோக்கில் இராணுவ அலுவலக மொன்றை நேற்று யாழ்ப்பாணத்தில் திறந்து வைத்துப் பேசிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

இனப் பிரச்சினையை அரசியல் தலைவர்கள் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு பயன்படுத்தும் அதிகாரத்தை தொடர்ந்து பேணுவதற்கும், அதன் மூலம் அரசியல் லாபம் சம்பாதிக்கும் சுயநலமிக்க யுகத்தை ஜனாதிபதி முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.

உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் வரும் தெல்லிப்பளை மற்றும் திரு நெல்வேலியில் உள்ள வீடுகள், கட்டடங்கள் மற்றும் வயல் நிலங்களை மீண்டும் அவற்றின் சொந்தக்காரர்களுக்கே கையளிக்கும் நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும்.

அதேவேளை தெல்லிப்பளை புற்றுநோய் ஆஸ்பத்திரி, தள வைத்தியசாலை ஆகியவை உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து அகற்றப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

பச்சிலைப்பள்ளியில் இடம்பெயர்ந்தோர் 15 ஆம் திகதி முதல் மீள்குடியேற்றம்

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பச்சிலைப்பள்ளி (பளை) பிரதேச செயலர்களினால் நான்கு கிராம சேவையாளர் பிரிவுகளில் எதிர்வரும் 15 ஆம் திகதி திங்கட்கிழமையும் 16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையும் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் என கிளிநொச்சி அரசாங்க அதிபர் திருமதி றூ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இம்மீள்குடியேற்றம் குறித்து கிளிநொச்சி அரசாங்க அதிபர் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆனால் தற்காலிகமாக வெளிமாவட்டத்தில் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் வசிக்கும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட புலோப்பளை மேற்கு, புலோப்பளை, முல்லையடி, பளை நகரம் ஆகிய கிராமசேவையாளர் பிரிவுகளைச், சேர்ந்தவர்களே மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளனர்.

தற்காலிக பதிவு நீக்கத்துடன் வருபவர்கள் மட்டுமே மீள்குடியேற்றத்திற்கு அனுமதி க்கப்படுவார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தெற்கு ரயில் சேவை புனரமைப்புக்கு இந்தியா 67.4 மில். டொலர் உதவி

railway.jpgகொழும்பு-  மாத்தறை தென்பகுதி ரயில் பாதையை மேம்படுத்தும் திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்காக இந்தியா 67.4 மில்லியன் டொலர் கடனுதவியை வழங்கியுள்ளது.

இதற்கான ஒப்பந்தம் நேற்று கொழும்பில் செய்து கொள்ளப்பட்டது. நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர இலங்கையின் சார்பாகவும் இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியின் நிறைவேற்று இயக்குநர் பிரபாகர் தலாலும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

இரண்டாம் கட்ட மேம்படுத்தலையடுத்து கொழும்பு – மாத்தறை ரயில் மணித்தியாலயத்துக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடியதாக இருக்கும்.

இதன்படி கொழும்புக்கும் காலிக்கும் இடையிலான தூரத்தை இரண்டு மணி நேரத்தில் ரயில் மூலம் செல்லக் கூடியதாக இருக்கும். கொழும்பு – மாத்தறை ரயில் பாதையை மேம்படுத்தும் திட்டத்தின் முதலாம் கட்டத்துக்கு இந்தியா ஏற்கனவே 100 மில்லியன் டொலர் கடனுதவியை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் மார்க்க அறிஞர் தந்தாவி ரியாத்தில் காலமானார்

எகிப்து அல் – அஸ்ஹர் பல்கலைக்கழக வேந்தரும், முன்னணி முஸ்லிம் மார்க்க அறிஞருமான அஷ்ஷெய்க் முஹம்மத் அல் தந்தாவி தனது 81 ஆவது வயதில் நேற்று (10) ரியாத்தில் காலமானார். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் மக்காவில் இடம் பெற்றது.

மாரடைப்பு காரணமாக இவர் ரியாதில் வைத்து மரணமடைந்தார். பிரபல மார்க்க அறிஞரான இவர் பல முக்கிய மார்க்கத் தீர்ப்புகளை (பத்வா) வழங்கியுள்ளார். இவர் உலக முஸ்லிம்களால் பெரிதும் மதிக்கப்படும் அறிஞர்களில் ஒருவருமாவார்.

கிழக்கு மாகாண நீர்பாசனத் திட்டம்!

he_the_president.jpgகிழக்கு மாகாண மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும்  திட்டத்தை ஆரம்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிதி அமைச்சர் என்ற ரீதியில் சமர்ப்பித்திருந்தார்.

இந்தத் திட்டத்துக்கு குறைந்த வட்டிக் கடனுதவியாக ஜப்பான் அரசாங்கம் 4904 மில்லியன் யென்களை வழங்குகிறது.

இத்திட்டத்தின் கீழ் இரக்காமம், சம்மாந்துறை, பொத்துவில், தெஹிஅத்தகண்டிய, மஹஒய, உஹன, தமன, ஹிங்குரானை போன்ற பிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்கு குடிநிர் வசதி ஏற்படுத்திக்கொடுக்கப்படவுள்ளது.

மிலிபேண்ட்டின்; பிரதிநிதியாக சேர் பீட்டர் ரிக்கெட்ஸ் இன்று இலங்கை வருகை.

david-miliband.jpgபிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் டேவிட் மிலிபேண்ட்டின்; பிரதிநிதியாக அந்த அமைச்சின் நிரந்தர உதவிச் செயலாளர்சேர் பீட்டர் ரிக்கெட்ஸ் இன்று இலங்கை வருகிறார்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரும் இவர் இன்று காலை 10:30 மணிக்கு வெளிவிவகார அமைச்சர்  ரோஹித்த போகொல்லகமவைச் சந்தித்து பேச்சு நடத்தவிருப்பதாக அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இப்பேச்சுவார்த்தையில் இலங்கை தொடர்பில் டேவிட் மிலிபேண்ட் தெரிவித்த கருத்து பற்றியும் பேசப்படும்; என அறிவிக்கப்பட்டுள்ளது