2010

2010

அமெரிக்கா, இலங்கை படைகள் மனிதாபிமான கூட்டு செயற்பயிற்சி

அமெரிக்கக் கடற்படையும் இலங்கை இராணுவமும் கூட்டு மனிதாபிமான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளன. திருகோணமலைத் துறைமுகத்தில் இதற்கான பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டதாக அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.

இடர் முகாமைத்துவ நிலையம், சுகாதார அமைச்சு ஆகியவற்றிலிருந்து சிவிலியன்களும் இந்த செயற்திட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மனிதாபிமான பயிற்சிகள் வழங்கப்பட்டு 27 கிராமங்களுக்கு அனுப்பப்படுவார்கள். அதேநேரம், 700க்கும் மேற்பட்ட குடும்பங்களுடன் தொடர்பு கொள்ள வைக்கப்படுவார்கள்.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த லெப். கேர்ணல் லறி சிமித்; மனிதாபிமான செயற் திட்டம், மனிதாபிமான சவால்களை எதிர்கொள்வதற்கு வாய்ப்பாக அமையும் என்றார்.

பொன்சேகா நாளுக்குநாள் பலவீனம் பேச முடியாமல் கஷ்டப்படுகிறார் – அனோமா

anma.jpgஇராணு வத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா கடந்த சில தினங்களாக பேச முடியாமல் கஷ்டப்படுவதாகவும்,அவருக்கு சுவாசக்குழாய் மார்புச்சளி நோய் ஆரம்ப கட்டத்தில் காணப்படுவதாக அவரை பரிசோதித்த விஷேட வைத்திய நிபுணர்கள் தெரிவித்திருப்பதாகவும் சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

தனது கணவரின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகின்ற போதிலும் அரசாங்கம் அதனை மூடி மறைத்து வருவதாகவும் அனோமா பொன்சேகா அரசு மீது குற்றம் சுமத்தினார்.நேற்று வெள்ளிக்கிழமை ஜெனரல் சரத்பொன்சேகாவின் றோயல் கல்லூரி வீதியிலுள்ள அரசியல் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அனோமா பொன்சேகா மேற்கண்ட தகவல்களை வெளியிட்டார்.

அவர் இவ்விடயம் தொடர்பாக மேலும் தெளிவுபடுத்துகையில் கூறியதாவது:பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதாக நாம் முறையிட்ட போது அவருக்கு போதிய மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருப்பதாகவும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு மக்களின் அனுதாபத்தை தேடுவதற்காக நாம் பொய் சொல்வதாக இராணுவப்பேச்சாளர் மேஜர் ஜெனரல் சமரசிங்க தெரிவித்திருந்தார். நான் எனது கணவரைச்சந்தித்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவரது உடல் நிலையில் தாக்கம் ஏற்பட்டு வருவதை உணரமுடிந்தது. இப்போது அவரால் பேசமுடியாது. கஷ்டப்பட்டு வருகிறார். வார்த்தைகள் தொண்டையிலிருந்து வெளிவரமுடியாது அவஸ்தைக்குள்ளாகி வருகிறார்.

அவரைப் பரிசோதிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட வைத்திய நிபுணர்கள் குழு சுமார் மூன்று நாட்களாக தொடர்ந்து பரிசோதித்த பின்னர் அவருக்கு சுவாசக்குழாய் மார்புச்சளி நோய் ஏற்பட்டிருப்பதாகவும் அது ஆரம்பகட்டத்தில் இருப்பதாகவும் தெரிவித்து ஆறு வகையான மருந்துகளை பாவிக்க நியமித்திருக்கின்றனர்.

என்னைப் பொறுத்தவரை எனது கணவருக்கு மருந்துகளை விட சூழல் வசதிகளே முக்கியமானதாகக் கருதுகின்றேன். அவரை அடைத்து வைத்து நோய்க்குள்ளாக்கி இயற்கை மரணத்தின் பக்கம் தள்ளிவிடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுச் செயற்படுவதை உறுதியாகத் தெரிவிக்கின்றேன்.சிறைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் எனது கணவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமானால் அதற்கான முழுப்பொறுப்பையும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் அவரது அரசுமே ஏற்கவேண்டியேற்படுமெனவும் அனோமா பொன்சேகா தெரிவித்தார்.

ஆறு கிராமசேவகர் பிரிவுகளில் 1500 குடும்பங்கள் மீள்குடியேற்றம் – இம்மாத இறுதிக்குள் வவுனியாவில் குடியமர்வு

வவுனியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஆறு கிராம சேவகர் பிரிவுகளில் இம்மாத இறுதிக்குள் 1500 குடும்பங்கள் மீள்குடியேற்றப்படவிருப்பதாக வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார்.

பாலமோட்டை, மருதம்குளம், மருதமடு, பன்றிக்கேதகுளம், சேமமடு, ஆறுமுகத்தான் புதுக்குளம், ஆகிய கிராம சேவகர் பிரிவுகளிலேயே மீள்குடியேற்றம் இடம்பெறவுள்ளது.

இது தொடர்பான தகவல்கள் நிவாரணக் கிராமங்களில் திரட்டப்பட்டு வருகின்றன. அதனைத் தொடர்ந்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தங்கியிருக்கும் இடம் பெயர்ந்தோரையும் மேற்படி ஆறு கிராம சேவ கர் பிரிவுகளில் மீளக் குடியமர்த்தத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் அரச அதிபர் சார்ள்ஸ் கூறினார்.

கட்டுநாயக்காவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கான விமான சேவை பாதிப்பு

srilankan-airlines.jpgஐஸ்லாந்தில் ஏற்பட்ட எரிமலைக் குமுறலால் ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் சாம்பல் பரவி வருவதால் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கான விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

நேற்று வெள்ளிக்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஐரோப்பிய நாடுகள் சிலவற்றுக்கான விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. இதேபோல் சில ஐரோப்பிய நாடுகளிலிருந்து நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வரவேண்டிய விமான சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

இலங்கையிலிருந்து இந்த நாடுகளுக்குப் பயணம் செய்யவுள்ள பயணிகள் தமது விமானப்பயணம் தொடர்பாக அந்தந்த விமான சேவை நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு நேற்று பல பயணிகள் வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதேவேளை, ஸ்ரீலங்கன் விமான சேவைகளிலும் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்றுக் காலை 3 மணிக்கு பிறாங்போர்ட் செல்லவிருந்த விமான சேவை இடைநிறுத்தப்பட்டது. அதேபோல நேற்று நள்ளிரவு செல்லவிருந்த விமான சேவையும் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் வியாழக்கிழமை பிற்பகல் 2.55 க்கு லண்டனிலிருந்து வரவேண்டிய யு.எல்.510 விமானம் நேற்று முற்பகல் 11.40 க்கு வந்து சேர்ந்துள்ளது.லண்டனிலிருந்து நேற்று மாலை 4.55 க்கு கட்டுநாயக்கா நோக்கி புறப்படவிருந்த விமானம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.விமானச் சேவைகள் தொடர்பாக 0112252861 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு விபரங்களைப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

உரிமம் பெற்ற வங்கிகளின் கிளைகளை வடக்கு, கிழக்கில் திறக்க மத்திய வங்கி அனுமதி

உரிமம் பெற்ற வங்கிகள் பலவும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பொருளாதார செயற்பாடுகளிற்கு துணைபுரி வதற்கு மிகுந்த ஈடுபாட்டினை காட்டி வருகின்றன. அதன்படி கொமர்சல் பாங்க் ஒப் சிலோன் பிஎல்சி, அட்டன் நசனல் பாங்க் பிஎல்சி, தேசிய சேமிப்பு வங்கி, மக்கள் வங்கி, சம்பத் பாங்க் பிஎல்சி மற்றும் செலான் பாங்க் பிஎல்சி என்பன அக்கரைப்பற்று, அச்சுவேலி, களுவாஞ்சிகுடி, கிளிநொச்சி, மல்லாவி, மானிப்பாய், மாங்குளம், மன்னார், பரந்தன், துணுக்காய் மற்றும் வாழைச்சேனை ஆகிய இடங்களில் அடுத்து வரும் ஒருசில மாதங்களில் கிளைகளை திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

இதற்குத் தேவையான அனுமதிகள் மத்திய வங்கியினால் வழங்கப்பட்டுள்ளன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது செயற்பட்டுக் கொண்டிருக்கும் உரிமம் பெற்ற வங்கிகளும் 2010ஆம் ஆண்டில் ரூ. 56 பில்லியன் பெறுமதியான புதிய கடன்களை வழங்குவதற்கும் 2011ம் ஆண்டில் ரூ. 70 பில்லியன் பெறுமதியான புதிய கடன்களை வழங்குவதற்கும் அர்ப் பணிப்புடன் செயற்படுகின்றன.

எதிரணி என்ற முறையில் தேசத்தை மீளக்கட்டியெழுப்ப அரசுடன் பணியாற்றுவோம் – ஹக்கீம்

rauff-hakeem.jpgசிறுபான் மைச் சமூகங்களுக்கு நீதியை உறுதிப்படுத்துவதே சிறுபான்மைக் கட்சிகளின் பிரதான கரிசனையாகும். சமத்துவம், நியாயம், நல்லாட்சிக்கான சூழ்நிலை போன்றவற்றை சிறுபான்மைச் சமூகங்களுக்கு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் ஹக்கீம் கூறியுள்ளார்.இதேவேளை அரசாங்கத்துடன் அவர் பேச்சுவார்த்தை நடத்துகிறாரா? என்று கேட்கப்பட்டபோது அதனை அவர் நிராகரித்துள்ளார். ஐ.தே.க.வுடன் கூட்டணி அமைத்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“ஜனாதிபதியுடனோ அல்லது அரசாங்கத்திலுள்ள எவருடனுமோ நான் எந்தப் பேச்சுவார்த்தையையும் நடத்தவில்லை. அவர்கள் என்னை அணுகவும் இல்லை. ஐ.தே.க.வுடன் நாம் கூட்டணி அமைத்திருக்கும் நிலையில் அந்த மாதிரியான நோக்கம் கிடையாது என்று ஹக்கீம் கூறியுள்ளார்.ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்தால் அரசாங்கத்துடன் இணைவது தொடர்பாக மீள்பரிசீலனை செய்வீர்களா என்று கேட்கப்பட்டபோது அதனை மறுத்த ஹக்கீம் நாட்டைக் கட்டியெழுப்ப எதிரணியுடன் இணைந்து பணியாற்றப் போவதாகக் கூறியுள்ளார். “அரசில் இணைவது தொடர்பான இந்தக் கதைகள் அடுத்தவாரம் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் எனது பிரதிமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வழியைக் கொண்டவையாகும். ஐ.தே.க.வாக்காளர்களின் அதிகளவு வாக்குகளை நான் கொண்டுள்ளேன். எனக்கு அத்தகைய திட்டம் எதுவும் இல்லை. எதிரணி என்ற முறையில் தேசத்தை மீளக்கட்டியெழுப்ப அரசுடன் பணியாற்றுவோம் என்று ஹக்கீம் தெரிவித்ததாக டெய்லி மிரர் இணையத்தளம் தெரிவித்தது.

காதல் காவியம் ‘மாதா’ கணனியிலிருந்து திருட்டு – ரூ. 4 கோடியில் தயாரிக்கப்பட்ட விவரணச் சித்திரம்

வன்னியில் இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கையைச் சித்திரிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட விவரணத் திரைப்படம் கணனியின் ‘ஹார்ட் டிஸ்க்’ இல் இருந்து முழுமையாகக் களவாடப்பட்டுள்ளதாக மிரிஹான பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வன்னியில் இடம்பெற்ற இறுதிநேர நடவடிக்கையின் போது இடம்பெற்றதாகச் சித்திரிக்கப்பட்டுத் தயாரிக்கப்பட்ட அற்புதமானதொரு காதல் காவியமாக வடிவமைக்கப்பட்டிருந்த இந்த விவரணச் சித்திரம் சர்வதேச விருதுக்கு போட்டியிடுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் சுமார் நான்கு கோடி ரூபா செலவில் தயாரிக்கப்பட்டிருந்த ‘மாத்தா’ (மாதா) என்ற இந்தச் சிங்கள விவரணச் சித்திரம் மிகவும் நுட்பமான முறையில் கணனியின் ஹார்ட்டிஸ்க்கிலிருந்து முழுமையாகக் களவாடப்பட்டிருப்பதாக அதன் தயாரிப்பாளர் விஸ்வநாத் புத்திக்க கீர்த்திசேன தினகரனுக்குத் தெரிவித்தார்.

முழுக்க முழுக்க உள்ளூர்க் கலைஞர்களைக் கொண்டு இந்த விவரணச் சித்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார். சில இடங்களில் இராணுவ வீரர்களும் நடித்துள்ளனர்.மனிதாபிமான நடவடிக்கைகளின் இறுதிக் காலகட்டத்தில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட ‘மாதா’ படம் 120 நிமிடங்கள் ஓடக்கூடிய விவரணச் சித்திரமாகும்.

பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் நான்கு கோடி ரூபா செலவில் சுமார் ஒரு வருட காலமாக வட மாகாணத்தில் வைத்து இது படமாக்கப்பட்டுள்ளது. சர்வதேச விருதில் போட்டியிடும் வகையில் இந்த விவரணச் சித்திரம் தயார்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே கடந்த இரு தினங்களுக்கு முன்னர் விவரணச் சித்திரம் அடங்கிய சகல ஆவணங்களும் கொண்ட ஹார்ட் டிஸ்க் களவாடப்பட்டிருப்பதாக அதன் தயாரிப்பாளர் கூறினார்.

நாவலையில் அமைந்துள்ள அவர்களது, ‘ரூம் சினிமா கிரியேஷன்ஸ் ஹவுஸ்’ எனும் ஸ்டூடியோவில் வைத்தே திட்டமிட்ட சதிகார கும்பலொன்று கணனியிலிருந்து இதனை திருடிச் சென்றிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

வரணச் சித்திரமடங்கிய ஹார்ட்டிஸ்க் திருட்டுப் போன சம்பவம் குறித்து மிரிஹானை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் சந்தேக நபர்களை தேடிக் கண்டுபிடிக்கும் நோக்கில் பல்வேறு கோணங்களிலும் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர். இலங்கைக்கு எதிரான அவதூறுப் பிரசாரங்களை முன்னெடுக்கும் வகையில் சில சதிக் கும்பல்கள் இதனைத் திருடியிருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

ஐ.ம.சு.முவின் மே தினக் கூட்டம் கொழும்பு மாநகர சபைத் திடலில்!

alavi.jpgஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மே தினக் கூட்டம் இம்முறை கொழும்பு மாநகர சபைத் திடலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளதென மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா தெரிவித்தார்.

இதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் எதிர்வரும் 19ம் திகதி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தலைமையில் கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெறவுள்ளது.

தொழிலாளர் வர்க்கத்தினருக்குப் பல்வேறு பிரச்சினைகள் உள்ள போதும் நாட்டைப் பாதுகாக்கும் செயற்பாடுகளில் அவர்கள் வழங்கிய பங்களிப்புக்கு நன்றி தெரிவிப்பது தொடர்பிலும் இம் மே தினத்தில் கவனம் செலுத்தப்படுமெனவும் அவர் தெரிவித்தார்

கண்டி மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் நாவலப்பிட்டி வாக்காளர் கைகளில் உள்ளது மனோகணேசன்

mano-ganesan.jpgஎதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தல் மறுவாக்களிப்பில் நாவலப்பிட்டி தொகுதி தமிழ்பேசும் வாக்காளர்கள் அளிக்கின்ற வாக்குகளில்தான் கண்டி மாவட்ட தமிழ் பிரதிநிதித்துவம் தங்கியுள்ளதென ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். நாவலப்பிட்டி மறுவாக்களிப்பு தொடர்பில் கருத்துத் தெரிவித்த மனோ மேலும் கூறியதாவது

இதுவரை கிடைத்துள்ள முடிவுகளின்படி நான் வெற்றிபெறக்கூடிய நிலையில் இருக்கின்றேன். நாவலப்பிட்டி வாக்காளர்கள் தேர்தல் மறுவாக்களிப்பில் அளிக்கப்போகின்ற வாக்குகளின் மூலமாகவே எமது வெற்றி மேலும் உறுதிப்படுத்தப்படும். சின்னத்திற்கு வாக்களிப்பதுடன், விருப்பு வாக்கு இலக்கத்திற்கு விழிப்புணர்வுடனும் விவேகத்துடனும் வாக்களிப்பதன் மூலமாக இதை சாத்தியமாக்கலாம். நாவலப்பிட்டி தொகுதியில் தமிழ்பேசும் மக்கள் கணிசமாக வாழ்கின்ற வாக்களிப்பு பிரதேசங்களில் மறுவாக்களிப்பு நடைபெறுவதற்கு முதற்காரணமாக இருந்ததன் மூலமாக வெற்றி பெறுவதற்கு முன்னாலேயே நான் கண்டி மாவட்ட மக்களுக்கு வழங்கிய முதல் வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கின்றேன்

மீள்குடியேற்ற செயற்பாடு இன்று முதல் துரிதகதியில் – இன்று முல்லைத்தீவில் 1200 பேர்; 18ந் திகதி மேலும் 1300 பேர்

வவுனியா நிவாரணக் கிராமங்களில் எஞ்சியுள்ளவர்களை மீளக்குடியேற்றும் பணிகளை துரிதப்படுத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் நேற்றுத் தெரிவித்தார்.

இதனடிப்படையில் இன்று (16) முல்லைத்தீவு நகரில் 1200 பேரும் எதிர்வரும் 18ம் திகதி 1300 பேரும் மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர் என்றும் அவர் கூறினார். இதேவேளை நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தங்கியிருக்கும் இடம்பெயர்ந்தவர்களையும் எதிர்வரும் 20ம், 22 ஆம் திகதிகளில் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்த திட்டமிட்டி ருப்பதாகவும் இதற்கமைய அவர்களது தகவல்கள் தற்போது திரட்டப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

முல்லைத்தீவு நகரிலுள்ள முள்ளியவளை மத்தி, கள்ளப்பாடு, வண்ணான்குளம், உன்னாப்பிளவு, கரச்சிக்குடியிருப்பு ஆகிய ஐந்து கிராம சேவகர் பிரிவுகளிலேயே இவர்கள் குடியமர்த்தப்படவுள்ளனர். பொதுத் தேர்தலைத் தொடர்ந்து மீள்குடியேற்றும் பணிகள் இன்று முதல் மீண்டும் துரிதப்படுத்தப்படுகின்றது.

முல்லைத்தீவு நகரிலுள்ள மேற்படி ஐந்து கிராம சேவகர் பிரிவுகளிலும் நிலக்கண்ணி வெடிகள் முழுவதும் அகற்றப்பட்டு, அவை மீள்குடியேற்றத்துக்கு ஏற்ற வகையில் தயார் செய்யப்பட்டதையடுத்தே அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் தெரிவித்தார்.

இதனையடுத்து நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்கியிருப்போரை எதிர்வரும் 20, 22 ஆம் திகதிகளில் முல்லைத்தீவின் மேற்படி ஐந்து கிராம சேவகர் பிரிவுகளிலும் மீளக்குடியமர்த்த தீர்மானிக்கப்பட்டிருப்பதனால் அவர்கள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

வவுனியாவிலிருந்து இன்று முல்லைத்தீவுக்கு அழைத்துச் செல்லப்படும் மக்கள் வற்றாப்பளை பாடசாலையில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்குரிய கொடுப்பனவு, உலர் உணவுகள் ஆகியவை வழங்கப்பட்ட பின்னர் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர். நிலக்கண்ணி வெடிகள் முழுமையாக அகற்றப்பட்டிருக்கும் மேற்படி ஐந்து கிராம சேவகர் பிரிவுகளிலும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் கமநெகும வேலைத் திட்டம் அமுல்படுத்தப்படவிருப்பதாகவும் சேதமடைந்த வீடுகளை கட்டுவதற்கு பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முன்வந்திருப்பதாகவும் அவர் கூறினார்.

வவுனியா நிவாரணக் கிராமத்தில் மீளக்குடியமர்த்தப்படுவதற்காக இன்னமும் 80 ஆயிரத்து 669 பேர் இருப்பதாகவும் குறுகிய காலத்துக்குள் இவர்களனைவரையும் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் வவுனியா அரசாங்க அதிபர் சார்ள்ஸ் மேலும் தெரிவித்தார்.