கட்டுநாயக்காவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கான விமான சேவை பாதிப்பு

srilankan-airlines.jpgஐஸ்லாந்தில் ஏற்பட்ட எரிமலைக் குமுறலால் ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் சாம்பல் பரவி வருவதால் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கான விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

நேற்று வெள்ளிக்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஐரோப்பிய நாடுகள் சிலவற்றுக்கான விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. இதேபோல் சில ஐரோப்பிய நாடுகளிலிருந்து நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வரவேண்டிய விமான சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

இலங்கையிலிருந்து இந்த நாடுகளுக்குப் பயணம் செய்யவுள்ள பயணிகள் தமது விமானப்பயணம் தொடர்பாக அந்தந்த விமான சேவை நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு நேற்று பல பயணிகள் வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதேவேளை, ஸ்ரீலங்கன் விமான சேவைகளிலும் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்றுக் காலை 3 மணிக்கு பிறாங்போர்ட் செல்லவிருந்த விமான சேவை இடைநிறுத்தப்பட்டது. அதேபோல நேற்று நள்ளிரவு செல்லவிருந்த விமான சேவையும் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் வியாழக்கிழமை பிற்பகல் 2.55 க்கு லண்டனிலிருந்து வரவேண்டிய யு.எல்.510 விமானம் நேற்று முற்பகல் 11.40 க்கு வந்து சேர்ந்துள்ளது.லண்டனிலிருந்து நேற்று மாலை 4.55 க்கு கட்டுநாயக்கா நோக்கி புறப்படவிருந்த விமானம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.விமானச் சேவைகள் தொடர்பாக 0112252861 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு விபரங்களைப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *