2010

2010

அரசியலமைப்பு மாற்றம் தொடர்பில் பிரதான எதிர்க்கட்சியுடன் ஆலோசிப்பது மட்டும் போதாது – ஐ.தே.க

அரசியலமைப்பு மாற்றம் தொடர்பில் அரசும் பிரதான எதிர்க்கட்சியும் மாத்திரம் இறுதிமுடிவை எட்ட முடியாதெனத் தெரிவித்த ஐக்கிய தேசியக்கட்சி, அரசியலமைப்புத் திருத்தம் குறித்த யோசனைகளை அரசு முன்வைத்து சகல அரசியல் கட்சிகள், மகாசங்கம் உட்பட அனைத்து சமயத் தலைவர்கள், சிவில் அமைப்புகளுடனும் பேசவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறை ஒழிக்கப்பட்டு அதிகாரம் பாராளுமன்றத்துக்கு வழங்கப்படவேண்டுமென்பதே ஐ.தே.க.வின் நிலைப்பாடெனவும் நிறைவேற்று அதிகாரம் பிரதமருக்கு வழங்க வேண்டுமென்ற எந்த உடன்பாட்டுக்கும் கட்சி முன்வரவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஐக்கிய தேசியக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க மேற்கண்டவாறு விளக்கமளித்தார். இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த கயந்த கருணாதிலக்க மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;

அரசியலமைப்புத்திருத்தம், தேர்தல் முறை மாற்றங்கள் தொடர்பில் ஆராயும் பொருட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சு நடத்தினார். இன்றைய காலகட்டத்தின் அவசியத்தைக் கருத்தில் கொண்டு அதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டு நிகழ்ச்சி நிரலைத்தயாரிப்பதற்காக குழு அமைக்கப்பட்டது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறை ஒழிப்பது, நிறைவேற்றதிகாரம் பாராளுமன்றத்துக்கே வழங்கப்படுவது போன்றவற்றுடன் இணைந்ததாக அரசியலமைப்பு முழுமையாக திருத்தப்பட வேண்டுமென்ற ஆரம்ப நிலைப்பாட்டிலேயே ஐக்கிய தேசியக் கட்சி இருக்கின்றது. இதில் எந்த விதமான மாற்றமும் கிடையாது.

அதேசமயம் அரச தரப்பும், ஐக்கிய தேசியக் கட்சியும் மாத்திரம் பேசி இதில் தீர்வை எட்ட முடியாது. அரசிலுள்ள பல கட்சிகள் கூட இது விடயத்தில் முரண்பாடான நிலைப்பாட்டிலேயே காணப்படுகின்றன. ஜே.வி.பி.தரப்பு தெரிவித்திருக்கும் கருத்து மறுக்கப்பட முடியாது. அதனுடன் நாமும் உடன்படவே செய்கின்றோம். அரசுடன் கூடி தனித்துத்தீர்மானமெடுக்க ஐக்கிய தேசியக் கட்சி முற்படவில்லை. பேச்சுக்கான அடித்தளத்தை இடுவதற்கான நிகழ்ச்சி நிரலைத் தயாரிக்கவே நாம் முன் வந்துள்ளோம். எனவும் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

பீனிக்ஸ் நிறுவனத்திற்கு தங்க விருது

adfest.jpgஇலங்கை விளம்பர நிறுவனங்களில் ஒன்றான பீனிக்ஸ் ஒகில்வி நிறுவனம் Adfest 2010 விருதுகளில் தங்க விருது ஒன்றை பெற்றுள்ளது. விளம்பரத்துறைக்காக சர்வதேச அளவில் விருதுகள் பல வழங்கப்பட்டாலும் இலங்கையைச் சேர்ந்த நிறுவனமொன்று முதற்தடவையாக இவ்வாறானதொரு விருதை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

மீள்குடியேறியோருக்கு 81 ஆயிரம் தென்னங் கன்றுகள்

வடக்கில் மீள் குடியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு வீட்டுத் தோட்ட திடடத்தின்கீழ் இந்த வருடத்தில் 81 ஆயிரம் தென்னங்கன்றுகள் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெங்கு அபிவிருத்தி சபை கூறியது. 5 வருட காலத்தினுள் ஒரு வீட்டுக்கு 3 தென்னங்கன்று வீதம் வட பகுதிக்கு ஒரு இலட்சம் தென்னங்கன்றுகள் வழங்கப்பட உள்ளன.

யுத்தத்திற்கு முன்னர் வடக்கில் 50 ஆயிரம் ஏக்கரில் தெங்கு பயிறிடப்பட்டிருந்தது. ஆனால் தற்பொழுது 37 ஆயிரம் ஏக்கரில் மட்டுமே தென்னை மரங்கள் எஞ்சியுள்ளன. எனவே வடக்கில் துரிதமாக தெங்குச் செய்கையை மேம்படுத்துவதற்காக 9 ஆயிரம் தென்னங்கன்றுகள் அங்கு அனுப்பப்பட்டுள்ளன.

கிளிநொச்சியில் மாணவியை பாலியல் வல்லுறவிற்குட்படுத்த முயன்றவர் விளக்கமறியலில்!

கிளிநொச்சி பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் வல்லுறவிற்குட்படுத்த முயன்றமை தொடர்பான வழக்கு விசாரணை ஒன்று கிளிநொச்சி நீதிமன்றில் நடைபெற்றுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கழமை கிளிநொச்சி நகரப்பகுதி பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் படசாலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, அவரை வழிமறித்த நபரொருவர் அம்மாணவியை பாலியல் வல்லுறவிற்குட்படுத்த முயன்றுள்ளார். குறித்த மாணவி சத்தமிட முயன்ற போது அவரின் வாயைப் பொத்தியிருக்கின்றார். அவ்வழியாக வந்த சில பொதுமக்கள் மாணவியை காப்பாற்றியதோடு சம்பந்த நபரையும் நையப்புடைத்து, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். பாதிக்கபட்ட மாணவி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவியை பாலியல்வல்லுறவிற்கு உட்படுத்த முயன்றவர் வியாபார நிறுவனம் ஒன்றில் விற்பனைப் பிரதிநிதியாக பணியாற்றுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வடமாகாணசபை அலுவலகங்கள் கிளிநொச்சிக்கு இடம்மாற்றும் நடவடிக்கை நிதியின்மையால் தாமதம்

uthaya_nanayakara_.jpgவடமாகாண சபை அலுவலகங்கள் விரைவில் கிளிநொச்சியில் இயங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த போதும், அதற்கான அரசின் நிதி இன்னும் கிடைக்கப் பெறாமையால் இந்நடவடிக்கை தாமதமாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

 வடமாகாண சபை ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி ஏ சந்திரசிறி  வடமாகாண சபையின் செயலாளர்களை நேற்று சந்தித்போது, இவ்விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாண சபை அமைச்சு அலுவலகங்கள் கிளிநொச்சிக்கு இடம் மாற்றவது தொடர்பாக ஆராயும் சந்திப்பு நேற்று இடம்பெற்ற போது, மாகாணசபை அலுவலகங்களுக்கான கட்டடங்கள் அமைப்பது, கட்டடங்களைப் புனரமைப்பு செய்வது தொடர்பாக ஆராயப்பட்டது. இப்பணிகளுக்கு 200 தொடக்கம் 300 மில்லியன் ரூபா வரை தேவை என மாகாணசபை செயலாளர்கள் ஆளுநரிடம் தெரிவித்தனர்.

 இதனையடுத்து, அரசிடமிருந்த இந்நிதி கிடைக்கும் வரை மாகாணசபை அலுவலகங்களை கிளிநொச்சிக்கு இடம்மாற்றும் பணியை நிறுத்தி வைப்பதாக  ஆளுநர் செயலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மருத்துவமாது தர்சிகாவின் சடலம் நாளை மருத்துவ பரிசோதனைக்காக தோண்டியெடுக்கப்படவுள்ளது!

மருத்துவமாது தர்சிகாவின் சடலம் நாளை 28ம் திகதி தோண்டியெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கொழும்பு கொண்டு செல்லப்படவுள்ளது. தர்சிகாவின் தாயார் தமது மகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை. கொலை செய்யப்பட்டுள்ளார் எனவே. அவரது சடலம் மீண்டும் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்படவேண்டும் என நீதிமன்றத்தில் மனு ஒன்றை சமர்ப்பித்திருந்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் தர்சிகாவின் சடலத்தை தோண்டியெடுத்து மீண்டும் பிரேதபரிசோதனைக்குட்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தது. இதனடிப்படையில் நாளை 28ம் திகதி தர்சிகாவின் சடலம் மீண்டும் தோண்டியெடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, தர்சிகாவின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணகள் நேற்றும் இன்றும் ஊர்காவற்றுறை நீதிமன்றில் நடைபெற்றது.

கிளிநொச்சிக்கு சீரான மின்சாரம் கிடைக்க இரண்டு வருடங்கள் செல்லும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ceb.jpgகிளி நொச்சிக்கு சீரானமுறையில் மின்சாரம் வழங்குவதற்கு இரண்டு வருடங்கள் செல்லும் என இலங்கை மின்சார சபை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் உப மின்நிலையம் ஒன்று அமைக்கப்படும் வேலைகள் நடைபெற்று வருவதாகவும், அது நிறைவுபெற இரண்டு வருடங்களில் செல்லும் எனவும், அதன் பின்னரே கிளிநொச்சிப் பகுதிகளுக்கு மின்சாரம் சீரான முறையில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மின்சாரசபையின் மின்விநியோகம் வவுனியாவிலிருந்து மின்கம்பி மூலம் கிளிநொச்சி, பரந்தன் வரை வழங்கப்படுகின்றது. மின்கம்பிகளில் படரும் மண்துகள்களால் மின் விநியோகத்தில் சில சமயங்களில் தடங்கள் ஏற்படுகின்றது. வடபகுதி காலநிலையும் இதற்கு முக்கிய காரணியாகவுள்ளது. வவுனியாவிலிருந்து கிளிநொச்சிக்கு வழங்கப்படும் ‘லக்சபான’ மின்சாரத்தை கிளிநொச்சி உப மின்நிலையத்தின் ஊடாக வழங்கப்படும் போதே கிளிநொச்சிக்கு சீரான மின்சாரம் வழங்கப்படும் என மின்சாரசபை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் முன்னர் ‘லக்சபான’ உப மின்சார நிலையம் செயற்பட்டு வந்தது. பின்னர்  எண்பதுகளின் இறுதிக்கட்டத்தில்  போர் நடவடிக்கைகளால் அது செயலிழந்து போனது. அந்த மின்சாரசபை வளாகத்தில் தொண்ணூறுகளின் ஆரம்பத்திலிருந்து விடுதலைப் புலிகளின் நிதிப்பிரிவின் அலுவலகங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தற்போது அதே இடத்தில் உப மின்நிலையம் அமைக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளமை  இங்கு குறிப்பிடத்தக்கது.

தென்மராட்சியையும் பூனகரிப் பகுதிகளையும் இணைக்கும் சங்குப்பிட்டி-கேரதீவு பாதையின் பாலத்தின் திருத்த வேலைகள் நடைபெறுகின்றன.

பூனகரியுடன் யாழ்.குடாநாட்டை இணைக்கும் சங்குப்பிட்டி – கேரதீவு  பாலம் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் வீதி அபிவிரத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்டு இது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இப்பணி டிசெம்பர் மாத்துடன் நிறைவடையும் என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆனையிறவுப்பாதை  எண்பதுகளின் பிற்பகுதியிலம், தொண்ணூறுகளின் ஆரம்பத்திலும் போக்குவரத்திற்கு தடைசெய்யப்பட்டிருந்த வேளையில், வன்னிமக்கள் சங்குப்பிட்டி – கேரதீவு பாதையூடாகவே தங்கள் பயணங்களை மேற்கொண்டிருந்தனர். அப்பாதையூடாகவே யாழ். குடாநாட்டிற்கான உணவுப்பொருட்களும் கொண்டு செல்லப்பட்டன. விடுதலைப்புலிகளின் யாழ். வன்னிக்கான போக்குவரத்துப் பாதையாகவும் இப்பாதை அவர்களால் பயன்படுத்தப்பட்டது. பின்னர், தென்மராட்சி கேரதீவு பகுதிகள் படையினரின் கட்டுப்பாட்டிற்கு வந்ததும். கிளாலி கடல் நீரேரி ஊடாகவும், கொம்படி, ஊரியான் ஊடாகவும் மக்கள் பெரும் சிரமங்களுடன் தங்கள் பயணங்களை மெற்கொண்டனர். தற்போது சங்குப்பிட்டி- கேரதீவு பால திருத்த வேலைகள் நிறைவடையும் பட்சத்தில் பூனகரிப் பிரதேசத்திலிருந்து தென்மராட்சிக்கும் யாழ்ப்பாணத்திற்கும் சுலபமாக மக்கள் பயணிக்கும் நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயத முனையில் 19 லட்சரூபா கொள்ளை. தென்னிலங்கை மிரிஹான பகுதியில் சம்பவம்!

தென்னிலங்கையின் மிரிஹானப் பகுதியில் ஆயுதமுனையில் 19 இலட்சம் ரூபா  கொள்ளையிடப்பட்டுள்ளது. மிரிஹான எத்துல்கோட்ட சந்தியில் (26-07-2010 முற்பகல் 10.40 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. எரிபொருள் நிரப்புநிலைய உரிமையாளரால் வங்கிக்கு வைப்பிலிட கொண்டு செல்லப்பட்ட பணமே இவ்வாறு ஆயுதராரிகளால் வழிமறிக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த ஆயததாரிகள் இருவரே இக்கொள்ளையில் ஈடுபட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார். இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைதாகவில்லை எனவும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும்  தெரிவித்துள்ளார்.

சட்டப்படி வேலை போராட்டத்தால் தபால் சேவைகள் பாதிப்பு – 5 இலட்சம் கடிதங்கள் தேக்கம்

post-office.jpgதபால் திணைக்கள மத்திய தபால் பரிவர்த்தனை நிலைய ஊழியர்களின் சட்டப்படி வேலைப் போராட்டத்தினால் தபால் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 5 இலட்சம் கடிதங்கள் வரை விநியோகிக்கப்படாது குவிந்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது. நான்கு தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யப்பட்டதை கண்டித்து 4 தொழிற் சங்கங்கள், கடந்த வியாழக்கிழமை முதல் சட்டப்படி வேலையில் ஈடுபட்டுள்ளன.

மோசடியில் ஈடுபட்ட ஊழியர்கள் நால்வரே வேலை நீக்கம் செய்யப் பட்டதாகவும் இந்த வேலை பகிஷ்கரிப்பு முறையற்றது எனவும் தபால் மா அதிபர் எம். கே. பி. திசாநாயக்க கூறினார். சீரான சேவைகளை வழங்குவதற்கு சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பதிவுத் தபாலில் அனுப்புவதற்காக வழங்கப்பட்ட 6 ஆயிரம் கடிதங்களுக்கு இவர்கள் 50 ரூபா வீதம் குறைவாக அறவிட்டுள்ளதாக தபால் மா அதிபர் கூறினார். இதனால் தபால் திணைக்களத்திற்கு 3 இலட்சத்து 8 ஆயிரம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேற்படி நஷ்டத் தொகையை குறித்த நிறுவனங்கள் மீள வழங்கியுள்ளன.

மேற்படி வேலை பகிஷ்கரிப்பினால் 368 பதிவுத் தபால் பொதிகள் கொழும்பிலும் 406 பொதிகள் கொழும்புக்கு வெளியிலும் விநியோகிக்கப்படாதுள்ளதோடு 23,966 கடிதங்களும் 8834 பதிவுக் கடிதங்கள் கொழும்பிலும் கொழும்புக்கு வெளியிலும் முடங்கிக் கிடப்பதாக தபால் மா அதிபர் கூறினார். மேற்படி மோசடி குறித்து விசாரணை நடத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை முறையற்ற விதத்திலே 4 ஊழியர்களும் வேலை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தபால் சேவை சங்கத் தலைவர் ஜயந்த விஜேசிங்க கூறினார். 5 ஆவது நாளாக வேலைப் பகிஷ்கரிப்பு தொடர்வதாகவும் இது குறித்து பேச்சு நடத்த அமைச்சர் முன்வரா விட்டால் அடுத்த கட்டமாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதிக்க உள்ளதாகவும் அவர் கூறினார். கொழும்பு தபால் பரிவர்த்தனை நிலைய ஊழியர்களின் வேலைப் பகிஷ்கரிப்பால் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் தபால் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 2 தினங்களுக்குள் தமது கோரிக்கைக்கு தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.