2010
2010
சிறுவர்களைக் காப்பதற்கு போர் நிறுத்த உடன்படிக்கை காலப்பகுதியே சிறந்த சந்தர்ப்பமாக இருந்ததென்றும் ஆனால், அந்த வாய்ப்பு கைநழுவிப் போய்விட்டதாகவும் கலாநிதி (திருமதி) ஷிரந்தி விஜேமான தெரிவித்தார்.
புலிகள் இயக்கம் 2009 மே 19 ஆம் திகதிவரை சிறுவர்களைப் படைக்குச் சேர்க்கும் நடவடிக்கையை முன்னெடுத்தத ¡கவும் அதற்குப் பின்னர் சிறுவர்கள் சேர்க்கப்படவில்லையென்றும் அவர் கூறினார்.
கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்க மும் பற்றிய ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் முன்னிலையில் நேற்று (12) சாட்சியமளிக்கையில் கலாநிதி விஜேமான தெரிவித்தார். சிறுவர்களைப் படைக்குச் சேர்ப்பதைத் தவிர்ப்பதற்கு போர் நிறுத்த உடன்படிக்கையில் எந்த வழிமுறையும் இருக்கவில்லையென்று குறிப்பிட்ட அவர், ஆக்காலப் பகுதியில் சிறுவர் நலனைக் கவனிப்பதற்கான அரச பொறிமுறை வடக்கு, கிழக்குப் பகுதிகளில் செயற்பட்டபோதிலும், அதனை வினைத்திறன்மிக்கதாக நடைமுறைப்படுத்தக்கூடிய சூழல் இருக்கவில்லையென்று கூறினார்.
ஆணைக்குழுவின் பகிரங்க அமர்வு நேற்று (12) இரண்டாவது நாளாக கொழும்பு ஹோட்டன் பிளேசிலுள்ள லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் நடைபெற்றது. முன்னாள் சட்ட மாஅதிபர் சீ.ஆர்.டி. சில்வா தலைமையில் நடைபெற்ற ஆணைக்குழு விசாரணையில் சாட்சியமளித்த திருமதி விஜேமான, சிறுவர் புனர்வாழ்வுப் பணிகளில் ஈடுபட்டபோது தமது அவதானிப்புகளை முன்வைத்தார்.
கொங்கோ, சோமாலியா உள்ளிட்ட நாடுகளின் போர் நிறுத்த உடன்படிக்கையில் சிறுவர்களின் நலன் தொடர்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தெற்காசிய பிராந்தியத்தில் இலங்கையிலும் நேபாளத்திலும்தான் சிறுவர்களைப் படைக்குச் சேர்த்திருக்கிறார்கள். புலிகள் இயக்கத்தில் 60% – 70% வரையில் பலவந்தமாக சேர்க்கப்பட்ட சிறுவர்களே இருந்தனர்.
புனர்வாழ்வு அளிக்கப்படும் சிறுவர்களுக்குச் சிறந்த கல்வியையும் எதிர்காலத்தையும் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். இளைஞர்கள் கெளரவமாகவும் சுயமரியாதையுடனும் வாழ அவர்களைப் புனர்வாழ்வுக்குட்படுத்த வேண்டும். கல்வி கற்காதவர்களுக்கு முறைசாராக் கல்வியையும் தொழில் பயிற்சிகளையும் வழங்கி அவர்களை சமூகமயப்படுத்த வேண்டும்.
இளைஞர்களுக்கு உரிய வாய்ப்பினை வழங்குவதன் மூலமே உரிய அபிவிருத்தியை எட்ட முடியும். நாம் என்னதான் புனர்வாழ்வை அளித்தாலும் சிங்கள மக்கள் மத்தியில் புலி இளைஞர்கள் பற்றிய சிந்தனை வேறாகத்தான் உள்ளது. எனவே, முன்னாள் புலிகள் இயக்க இளைஞர்களை அவர்களின் சொந்த வாழ்விடங்களில் பெற்றோர்களுடன் வாழவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இன்று நடைபெறும் ஆணைக்குழு விசாரணையில் எஸ்.எல். குணசேகரவும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரியும் சாட்சியமளிக்கின்றனர்.
இலங்கையின் சமாதானம்,ஸ்திரத்தன்மை தொடர்பான தற்போதைய நிலைவரத்தை சீனா வரவேற்றுள்ளது. இலங்கையானது தனது பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யவும் உள்சார் கட்டமைப்பை வலுப்படுத்தவும் மேலும் உதவிகளை வழங்குவதற்கு சீனா முன்வந்துள்ளது.
பெய்ஜிங்கிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸுடனான சந்திப்பின்போது சீன உதவிப் பிரதமர் லி கெக்கியாங் இந்த உறுதிமொழியை அளித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்திருக்கிறது.
கடந்த 53 வருடங்களாக இரு நாடுகளுக்குமிடையிலான பரஸ்பர உறவுகள்,புரிந்துணர்வுகள் என்பவற்றை சீன உதவிப் பிரதமர் லி கெக்கியாங் இச்சந்திப்பின்போது நினைவுகூர்ந்துள்ளார். தாய்வான்,திபெத் தொடர்பாக சீனாவின் ஒரே சீனக்கொள்கையை இலங்கை உறுதியாக ஆதரித்து வருவதை அவர் பாராட்டியுள்ளார். அக்டோபரில் ஷங்காயில் இடம்பெறும் எக்ஸ்போ2010 இறுதி வைபவத்தில் கலந்துகொள்ள வருகைதருமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு சீன உதவிப் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். இலங்கை ஜனாதிபதியின் வருகையை சீனா எதிர்பார்த்திருப்பதாக அமைச்சர் பீரிஸுக்குக் கூறப்பட்டுள்ளது.
வெளி நாட்டு மாணவர்கள் உள்ளூரில் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் வகையில் உயர்கல்வி அமைச்சு அடுத்த வருடம் 200 புலமைப்பரிசில்களை வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நடவடிக்கையின் முதலாவது தொகுதியாக சீனா, மத்தியகிழக்கு மற்றும் ஆபிரிக்க நாடுகளில் உள்ள மாணவர்கள் பயனடைவர்.இலங்கை பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அடுத்த ஐந்து வருடங்களில் உயர் கல்வி அமைச்சு அபிவிருத்தி செய்யவுள்ளது. 10 ஆயிரம் வெளிநாட்டு மாணவர் களை கவரும் நோக்கிலேயே இந்த அபிவிருத்தி செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
“வெளிநாட்டு வருமானத்தை ஈட்டுவதற்கு இது நல்ல வழியாகும். 5 ஆயிரம் அமெரிக்க டொலர்களுக்கு பட்டமொன்றை வழங்க நாம் எதிர்பார்க்கிறோம்” என்று உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க கூறுகிறார். 13 மில்லியன் ரூபா பெறுமதியான கணனிகள், பிரின்டர்கள் மற்றும் போட்டோ பிரதி இயந்திரங்களை தென்கிழக்கு மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களுக்கு பகிர்ந்தளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இவ் வாறு கூறினார்.
அத்துடன் பல்கலைக்கழக மாணவர்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படு த்துவதற்காக இந்திய உயர் ஸ்தானிகர் 50 பஸ்களையும் 50 ஜீப் வண்டிகளையும் வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ள தாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இந்திய உயர் கல்வி அமைச்சரை அடுத்த மாதம் தான் சந்திக்க திட்டமிட்டுள் ளதாகவும் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
உயர்தர பரீட்சை எழுதச் சென்ற மாணவி கை, கால் கட்டப்பட்டு வாயில் துணி அடைக்கப்பட்டிருந்த சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணைகளை பரீட்சைகள் யாவும் முடிவடைந்த பின்னரே நடத்துவது என பொலிஸார் முடிவு செய்துள்ளனர்.
எனினும் குறித்த மாணவி பாலியல் மற்றும் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கவில்லை என்பதும் வைத்திய பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உயர்தர பரீட்சைகள் தொடர்ந்தும் நடை பெற்று வருவதால் குறித்த மாணவியை பொலிஸ் விசாரணைக்குட்படுத்தும் போது மன அழுத்தங்களுக்கு உள்ளாகலாம் என்ற நோக்கம் காரணமாகவே விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்த மாணவியின் கைக்கட்டினை அகற்றிய பாடசாலை மின்சார பிரிவு சிற்றூழியர் இக்கட்டு மாணவி தன்னைத்தானே கட்டியதாக தெரியவில்லை என கூறியுள்ளதால் விசாரணைகள் பல திசைகளிலும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மாணவி பரீட்சை முடியும் வரை தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்படமாட்டார் என பொலிஸார் தெரிவித்தனர்.
முன்னாள் பிரதியமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு வழங்கப்பட்ட அரசாங்கத்தின் பாதுகாப்பும் வாகனங்களும் குறைக்கப்படுமென தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் குலுகல்ல கூறியுள்ளார்.
சாதாரணமான எம்.பி. ஒருவருக்குரிய பாதுகாப்பே அவருக்கு வழங்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, அவரின் உத்தியோகபூர்வ வாகனங்களின் எண்ணிக்கை குறைக்கப்படுமென பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் உறுதிப்படுத்தியதாக டெய்லி மிரர் இணையத்தளம் தெரிவித்தது.
இதேவேளை, களனியில் தனது ஆதரவாளர் மத்தியில் உரையாற்றிய மேர்வின் சில்வா தனது பாதுகாப்பை வாபஸ் பெறுவதற்கு சிலர் முயற்சிப்பதாகவும் அத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் தனிப்பட்ட பாதுகாப்பை தான் உபயோகிப்பார் எனக் கூறியுள்ளார்.
இதேவேளை, களனித் தேர்தல் தொகுதியின் சு.க. பிரதம அமைப்பாளர் பதவியிலிருந்தும் மேர்வின் சில்வா அகற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் பிரதியமைச்சரான மேர்வின் சில்வா பயன்படுத்திய அலுவலகமும் பூட்டப்பட்டுள்ளது. பொலிஸார் அதனைச் சுற்றி காவல் இருந்து வருகின்றனர். அக்கட்டிடப் பகுதிக்குள் எவரும் செல்வதற்கு இடமளிக்கப்பட வேண்டாமென பொலிஸாருக்குக் கூறப்பட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க முன்னாள் நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சரான மேர்வின் சில்வாவுக்கு எதிராகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து 3 உறுப்பினர்களைக் கொண்ட ஒழுக்காற்றுக் குழு விசாரணையை மேற்கொள்ளும் என அரசாங்கம் கூறியுள்ளது.
கொழும்பு கோட்டையிலிருந்து தினமும் புறப்படும் தாண்டிக்குளம் யாழ்தேவி கடுகதி ரயில், மட்டக்களப்பு உதயதேவி கடுகதி ரயில் ஆகியவை புறப்படும் நேரங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் இந்த நேர மாற்றம் அமுலுக்கு வரும் எனவும் ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி கொழும்பு கோட்டையிலிருந்து தாண்டிக்குளம் நோக்கி புறப்படும் ரயில் காலை 5.45 க்கு புறப்படும். தாண்டிக்குளத்திலிருந்து 11.30 க்கு கொழும்பு நோக்கி புறப்படும்.
மட்டக்களப்பு நோக்கி புறப்படும் உதயதேவி புகையிரம் கொழும்பு கோட்டையிலிருந்து காலை 6.10 க்கு புறப்படும். இதேபோன்று கொழும்பு – அநுராதபுரம், கல்ஓயா – மட்டக்களப்பு, கல்ஓயா – திருமலை, திருமலை – மஹவ, பொலன்னறுவை – மட்டக்களப்பு வரையிலான ரயில் பஸ் சேவை, கல்ஓயா – மட்டு ரயில் பஸ் சேவை, குருணாகல் – மஹவ பேபி ரயில், மஹவ – பொல்கஹவல பேபி ரயில் நேரங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
வெளிநாடுகளிலுள்ள விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்கள் பிரபாகரனின் கையெழுத்துடனான ஆவணங்களைக் காட்டி புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களிடம் நிதி சேகரித்து வருவதாக சிறிலங்கா அரசின் சமாதான செயலகத்தின் முன்னாள் பணிப்பாளர் பேணாட் குணதிலக தெரிவித்துள்ளார். தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் நேற்று சாட்சியமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பிரபாகரன் உயிருடன் இருப்பதாகக் கூறி அவர் கையெழுத்திட்ட ஆவணங்களைப் பயன்படுத்தி அவர்கள் நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 2002ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும் அரசாங்கத்திற்குமிடையில் பேச்சுவார்தைகள் நடைபெற்ற போது தாம் அதில் முக்கிய பங்காற்றியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் ஆரம்பிக்கப்பட்ட தேசிய நல்லிணக்க ஆணைக்குழு அதன் முதலாவது விசாரணையை நேற்று கொழும்பில் உள்ள லக்மன் கதிர்காமர் சர்வதேச உறவுகளுக்கும் ஆய்வுகளுக்குமான நிலையத்தில் தொடக்கி வைத்தது. எதிர்வரும் காலங்களில் பல முக்கியஸ்தர்கள் இவ்வாணைக்குழுவில் சாட்சியங்களை அளிப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 17ம் திகதி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச சாட்சியமளிக்க முன்வந்துள்ளதாகவும், 25ம் திகதி அரச உத்தியோகத்தர்கள், அரசியல்வாதிகள், இராஜதந்திரிகள், புத்திஜீவிகள் சாட்சியமளிப்பர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை, இலங்கையின் தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் யுத்தக்குற்றங்களுக்கான விசாரணைகள் வெறும் கண்துடைப்பு நடவடிக்கை என நியூயோர்க்கை தளமாகக் கொண்டு இயங்கும் மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் யாழ்ப்பாணத்தில் மாபெரும் விவசாயக் கண்காட்சி நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ‘சுற்றப்பறச் சூழலுடன் நட்பான சந்தை அடிப்படையிலான விவசாயக் கண்காட்சி’ என்று இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் தொனிப்பொருளில் இக்கண்காட்சியை நடத்த ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சுற்றுப்புறச்சூழலுக்கு தீங்கு ஏற்படாத வகையில் தொழில்நுட்பம் தொடர்பான ஆக்கத்திறன்களை விவசாயிகளும், பொதுமக்களும் அறிந்து கொள்ளக்கூடியதான கணிகாட்சியாக இது அமையும் என யாழ்ப்பாண விவசாயப் பணிப்பாளர் எஸ். சிவகுமார் தெரிவித்துள்ளார்.