இலங்கையின் சமாதானம்,ஸ்திரத்தன்மை தொடர்பான தற்போதைய நிலைவரத்தை சீனா வரவேற்றுள்ளது. இலங்கையானது தனது பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யவும் உள்சார் கட்டமைப்பை வலுப்படுத்தவும் மேலும் உதவிகளை வழங்குவதற்கு சீனா முன்வந்துள்ளது.
பெய்ஜிங்கிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸுடனான சந்திப்பின்போது சீன உதவிப் பிரதமர் லி கெக்கியாங் இந்த உறுதிமொழியை அளித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்திருக்கிறது.
கடந்த 53 வருடங்களாக இரு நாடுகளுக்குமிடையிலான பரஸ்பர உறவுகள்,புரிந்துணர்வுகள் என்பவற்றை சீன உதவிப் பிரதமர் லி கெக்கியாங் இச்சந்திப்பின்போது நினைவுகூர்ந்துள்ளார். தாய்வான்,திபெத் தொடர்பாக சீனாவின் ஒரே சீனக்கொள்கையை இலங்கை உறுதியாக ஆதரித்து வருவதை அவர் பாராட்டியுள்ளார். அக்டோபரில் ஷங்காயில் இடம்பெறும் எக்ஸ்போ2010 இறுதி வைபவத்தில் கலந்துகொள்ள வருகைதருமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு சீன உதவிப் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். இலங்கை ஜனாதிபதியின் வருகையை சீனா எதிர்பார்த்திருப்பதாக அமைச்சர் பீரிஸுக்குக் கூறப்பட்டுள்ளது.