முன்னாள் பிரதியமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு வழங்கப்பட்ட அரசாங்கத்தின் பாதுகாப்பும் வாகனங்களும் குறைக்கப்படுமென தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் குலுகல்ல கூறியுள்ளார்.
சாதாரணமான எம்.பி. ஒருவருக்குரிய பாதுகாப்பே அவருக்கு வழங்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, அவரின் உத்தியோகபூர்வ வாகனங்களின் எண்ணிக்கை குறைக்கப்படுமென பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் உறுதிப்படுத்தியதாக டெய்லி மிரர் இணையத்தளம் தெரிவித்தது.
இதேவேளை, களனியில் தனது ஆதரவாளர் மத்தியில் உரையாற்றிய மேர்வின் சில்வா தனது பாதுகாப்பை வாபஸ் பெறுவதற்கு சிலர் முயற்சிப்பதாகவும் அத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் தனிப்பட்ட பாதுகாப்பை தான் உபயோகிப்பார் எனக் கூறியுள்ளார்.
இதேவேளை, களனித் தேர்தல் தொகுதியின் சு.க. பிரதம அமைப்பாளர் பதவியிலிருந்தும் மேர்வின் சில்வா அகற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் பிரதியமைச்சரான மேர்வின் சில்வா பயன்படுத்திய அலுவலகமும் பூட்டப்பட்டுள்ளது. பொலிஸார் அதனைச் சுற்றி காவல் இருந்து வருகின்றனர். அக்கட்டிடப் பகுதிக்குள் எவரும் செல்வதற்கு இடமளிக்கப்பட வேண்டாமென பொலிஸாருக்குக் கூறப்பட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க முன்னாள் நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சரான மேர்வின் சில்வாவுக்கு எதிராகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து 3 உறுப்பினர்களைக் கொண்ட ஒழுக்காற்றுக் குழு விசாரணையை மேற்கொள்ளும் என அரசாங்கம் கூறியுள்ளது.