இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்குதலுடன் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு இருப்பதாக தங்கள் நாட்டு அரசு சந்தேகிப்பதால் செல்வராசா பத்மநாதனை விசாரிக்க பாகிஸ்தான் பொலிஸாரை அனுப்ப பாகிஸ்தான் அரசு தீர்மானித்தள்ளது. அதன் விபரம் வருமாறு:-
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் செல்வராசா பத்மநாதனை மலேசியாவில் இருந்து இலங்கை இராணுவம் கைது செய்துள்ளது. அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு தொடர்பாக இவரிடம் விசாரணை நடத்த இந்தியாவின் மத்திய புலனாய்வுத்துறை அனுமதி கேட்டுள்ளது. இதற்காக இந்திய குழு இந்த மாத இறுதியில் கொழும்பை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இவரிடம் விசாரணை நடத்த பாகிஸ்தானும் முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இந்தத் தாக்குதல் பின்னணியில் விடுதலைப்புலிகளின் தொடர்புகள் இருப்பதற்கான சாத்தியங்கள் உள்ளது என்று அந்நாட்டின் பிரதமர் இலானி தெரிவித்து இருந்தார்.
அதைத்தொடர்ந்தே பத்மநாதனிடம் விசாரணை நடத்த பாகிஸ்தான் அரசு ஆர்வம் காட்டுகிறது. இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர்கள் மீது நடந்த தாக்குதலுக்கு விடுதலைப் புலிகள் நிதி உதவி அளித்திருக்கலாம் என்ற தகவல் கிடைத்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக அவரிடம் விசாரணை நடத்த பாகிஸ்தான் தனது புலனாய்வுக் குழு ஒன்றை விரைவில் கொழும்புக்கு அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகின்றது.