ஐக்கிய அரபு இராஜ்ஜியத் தில் பணியாற்றி வந்த இலங்கையர் ஒருவர் நேற்று முன்தினம் திங்கட்கிழமை ரியாத்தில் காலமானார்.
மபாஸ் மொஹமட் சலீம் (31) என்பவரே அவரது விடுதியில் வைத்து உயிரிழந்துள்ளார். அவரை சோதனைக்குட்படுத்திய வைத்தியர்கள் மாரடைப்பின் காரணமாகவே அவர் மரணித்திருப்பதனை உறுதி செய்திருப்பதாக அந்நாட்டின் இலங்கைத் தூதரகத்தின் விவகாரங்களுக்குப் பொறுப்பான சபருல்லாகான் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவரது உறவினர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க மரணச் சடங்குகளை ரியாத்திலேயே மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளை இலங்கைத் தூதரகம் சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரிகளுடன் நடத்தி வருவதாகவும் கான் கூறினார்.
துபாயிலிருந்து கொழும்பு வந்துள்ள உயிரிழந்தவருடைய மனைவி சாஸ்னா, அவரது இறுதிக் கிரியைகளை ரியாத்திலேயே நடத்துவதற்கு கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் சம்மதம் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவரும் அவரது மனைவியும், கொழும்பு 10 ஐச் சேர்ந்தவர்கள், சலீம், ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் துணை நிறுவனமான அல் ஹொக் எயர் குறூப் நிறுவனத்தில் பணி புரிந்து வந்துள்ளார். உயிரிழந்தவர் சில காலங்களாக தொடர்ச்சியான இருமல் மற்றும் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்ததாக அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் கூறியுள்ளார்.