03

03

ஏ 9 வீதியில் தனியார் பஸ் சேவை!

bus.jpgகண்டி யாழ்ப்பாணம் ஏ 9 வீதி பொது மக்களின் போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்படுமேயானால் 580 பஸ்களை சேவையில் ஈடுபடுத்த  தீர்மானித்துள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் யாழ். மாவட்டக் கிளைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

கடந்த பல வருடகாலமாக ஏ 9 வீதி மூடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது நாட்டில் சுமுக நிலை ஏற்பட்டுள்ளதால், ஏ 9 வீதியில் போக்குவரத்துக்கு திறந்தால் பஸ்களை சேவையில் ஈடுபடுத்த தயாராக உள்ளதாக கூறுகின்றார்.

அரச பஸ்களை மாத்திரம் பயன்படுத்திக் கொண்டு வடக்கு பகுதிகளில் இருந்து கொழும்பு நோக்கிய போக்குவரத்து சேவையை முழுமையாக ஈடுசெய்ய இயலாது. தனியார் பஸ்களின் சேவையும் அத்தியாவசியமாகும்.

எனவே, அரசாங்கம் அனுமதியளிக்கும் பட்சத்தில் சாதாரண கட்டணத்தில் யாழில் இருந்து கொழும்புக்கு தனியார் பஸ் சேவையினை வழங்க எமது சங்கம் தேவையான சகல ஏற்பாடுகளையும் மேற்கொள்ளும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நீச்சலில் 5 நாட்களில் 29 புதிய சாதனைகள்!

pelps2.jpgஇத்தாலி யில் நடைபெற்றுவரும் உலக சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டியில் ஐந்து நாட்களில் 29 உலக சாதனைகள் முறியடிக்கப்படடன. தொடர்ந்து உலக சாதனைகள் முறியடிக்கப்பட்டு வருகின்றன. போட்டியின் 5 ஆவது நாளான நேற்று மாத்திரம் 7 உலக சாதனைகள் முறியடிக்கப்பட்டன. உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இதுவரை புதிதாக 29 உலக சாதனைகளின் நிலைநாட்டப் பட்டுள்ளன.  போட்டிகளில் மேலும் 3 நாட்கள் எஞ்சியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நேற்று முன்தினம் நடந்த ஆண்களுக்கான 200 மீற்றர் மெட்லே போட்டியில் அமெரிக்காவின் ரயான் லொச்டே 1 நிமிடம் 54.10 வினாடிகளில் போட்டித் தூரத்தை நீந்தி முடித்து ஒலிம்பிக் சாம்பியன் மைக்கல் பெல்பிஸின் உலக சாதனையை முறியடித்தார். பெல்ப்ஸ் இம்முறை தொடரில் பறிகொடுக்கும் இரண்டாவது உலக சாதனை இதுவாகும்.

இதனிடையே இம்முறை உலக சாதனைகள் முறியடிக்கும் வேகம் அதிகரிப்பதற்கு வீர, வீராங்கனைகள் உயரிய தொழிநுட்பத்திலான நீச்சல் உடைகளை பயன்படுத்துவதே காரணம் என்று பரவலாக விமர்சனம் எழுந்துள்ளது. இதற்கு முன்னாள் நீச்சல் வீரர்கள் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். இம்முறை உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் உலக சாதனைகள் முறியடிக்கப்படாமல் முடிவடைந்த போட்டிகள் மிகக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கதாகும

வவுனியா நிவாரணக் கிராமம் – ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நிர்ப்பீடன மருந்து வழங்கல் இன்று

vaccine.jpgவவுனி யாவிலுள்ள நிவாரணக் கிராமங்களிலும், நலன்புரி நிலையங்களிலும் தங்கியுள்ள ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சின்னமுத்து மற்றும் போலியோ நோய்களுக்கான நிர்ப்பீடன மருந்துகளும் வயிற்றுப் புழுக்களுக்கான தடுப்பு மருந்தும் இன்று 3 ஆம் திகதி முதல் வழங்கப்படவுள்ளன.

வவுனியாவிலுள்ள நிவாரணக் கிராமங்களிலும், நலன்புரி நிலையங்களிலும் தங்கியுள்ள குழந்தைகளின் நலன்கருதி இந்நிர்ப்பீடன மருந்து வழங்கல் மற்றும் வயிற்று புழுக்களுக்கான மருந்து விநியோகத் திட்டம் இன்று முதல் மூன்று நாட்களுக்குச் செயற்படுத்தப்படவிருப்பதாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சின் அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார்.

வவுனியாவுக்கு இடம்பெயர்ந்துள்ளவர்கள் புலிகளின் பிடியில் சிக்குண்டிருந்த சமயம் தமது குழந்தைகளுக்கு, நோய்த் தடுப்பு நிர்ப்பீடன மருந்துகளையோ, வயிற்று புழுக்களைத் தடுப்பதற்கான மருந்துகளையோ ஒழுங்கு முறையாக பெற்றுக் கொடுத்ததில்லை. இக்குழந்தை களின் நலன் கருதியே இத்திட்டத்தை சுகாதார அமைச்சு, யுனிசெப், உலக சுகாதார ஸ்தாபனத்துடன் இணைந்து செயற்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

இப்பணியில் 140 அரசாங்க மருத்துவ மாதுகள் ஈடுபடுத்தப்படவிருப்பதுடன் 130 நிலையங்களும் அமைக்கப் படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இத்திட்டத்தின் மூலம் இடம்பெயர்ந்துள்ள சுமார் 40 ஆயிரம் குழந்தைகள் நன்மை பெறுவர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தென் மாகாண எதிர்க்கட்சித் தலைவர் ஜஸ்டின் அரசுடன் இணைய தீர்மானம்

election_fingercolur.jpgதென் மாகாண சபை எதிர்க் கட்சித் தலைவரும் மாத்தறை தொகுதி ஐ. தே. கட்சி அமைப்பாளருமான ஜஸ்டின் கலப்பத்தி, அரசில் இணைய முடிவு செய்துள்ளார்.

தென் மாகாண சபை கலைக்கப்பட்டதும், தான் அரசாங்கத்துடன் இணைந்து, தென் மாகாண சபையின் அங்கத்துவம் பெற்று ஐ. ம. சு. முன்னணியில் தென் மாகாண சபைக்கு போட்டியிடப்போவதாகவும் தெரிவித்தார்.

அவரது இல்லத்தில் கடந்த 1 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில், உரை நிகழ்த்திய ஜஸ்டின் கலப்பத்தி கூறியதாவது:- யுத்தத்தை மூன்றே வருடங்களில் முடிவுக்கு கொண்டு வந்து, பிளவுபட்டிருந்த நாட்டை ஒன்றிணைத்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மக்களின் துயரங்களை போக்கி நாட்டில் சுபீட்சத்தை ஏற்படுத்துவார் என்ற நம்பிக்கை இருப்பதால், அவரின் கரங்களைப் பலப்படுத்தும் நோக்கில் தான் அரசுடன் இணைய தீர்மானித்ததாக அவர் கூறினார்.

சுற்றுலாத் துறையை மேம்படுத்த சங்காய் பிரதிநிதிகள் இலங்கை வருகை

kandy-parahara.jpgஇலங்கை, சீனா ஆகில நாடுகளுக்கிடையே சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் சங்காய் மாநகர சுற்றுலாப் பணியகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கை வந்துள்ளது.

சங்காய் மாநகர சுற்றுலாப் பணியகத்திலிருந்து நேற்று இலங்கை வந்திருக்கும் 10 பிரதிநிதிகளைக் கொண்ட குழு எதிர்வரும் 08 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்குமென வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இக்குழுவினர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், சங்காய் மாநகர சுற்றுலாப் பணியகம் மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புச் சபை ஆகியவற்றுக்கிடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலும், சீனாவில் இலங்கையின் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையிலும் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவிருப்பதாகவும் அமைச்சின் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, சங்காயிருந்து இலங்கை வந்திருக்கும் பிரதிநிதிகள் குழு சுற்றுலாத்துறை அமைச்சர், சுற்றுலாத்துறையுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்திப்பதுடன், கண்டி பெரஹெராவில் கலந்து கொள்வரெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.  சங்காய் மாநகர சுற்றுலாப் பணியகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு வருகை தந்திருப்பது இதுவே முதல் தடவையாகு மெனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

சவூதி அரேபியாவில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அலுவலகம்

iran-plane.jpgசவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் கீழ் செயற்படக் கூடியவகையில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அதன் உப அலுவலகங்களை சவூதி அரேபியாவின் வெவ்வேறு பிரதேசங்களில் அமைப்பதற்குத் தீர்மானித்துள்ளது.

சவூதி அரேபியாவில் பணிபுரியும் இலங்கையரின் நலன் கருதி இந்த உப அலுவலகங்களைத் திறப்பதற்கு முடிவு செய்திருப்பதாக பணியகத்தின் பேச்சாளர் நேற்றுத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், சுமார் ஆறு இலட்சம் இலங்கையர்கள் சவூதி அரேபியாவில் பணிபுரிகின்றனர். இவர்கள் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக ரியாத்திலுள்ள தூதரகத்துக்கோ அல்லது கிளையான தமாமுக்கோ செல்ல வேண்டிய நிலைமையுள்ளது.

இதனால் சவூதி அரேபியாவில் பணிபுரியும் இலங்கையர்கள் பல அசெளகரியங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் சவூதி அரேபியாவில் இலங்கையர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் தூதரகத்தின் கீழ் செயற்படக் கூடியவகையில் உப அலுவலகங்களை மேலும் திறக்கவும், அங்கு பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் முன்னெடுப்பதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தலைமையிலான குழு சவூதி சென்றுள்ளது.

இதேவேளை, பல்வேறு குற்றச் செயல்களை புரிந்துள்ளதாக காரணம் காட்டி தமாம் மற்றும் ரியாத் ஆகிய இடங்களிலுள்ள தற்காலிக முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சுமார் 250 இலங்கையர்களை விடுவிப்பதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் பணியகத்தின் தலைவர் முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புலிகளின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதாகத் தகவல்; கிளிநொச்சி அரச அதிபர் மீது தொடர்ந்தும் விசாரணை

ranjith-gunasekara.jpgபயங்கர வாத புலனாய்வுப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தொடர்ந்தும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர நேற்றுத் தெரிவித்தார்.

பொலிஸாரால் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே கிளிநொச்சி அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் கடந்த வெள்ளிக்கிழமை பயங்கரவாத புலனாய்வு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தகவல் தருகையில்:- பயங்கரவாத புலனாய்வு பிரிவு பொலிஸாரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள புலிகள் இயக்க உறுப்பினர்கள் பலர் தொடர்ந்தும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் புலிகளின் பல்வேறு செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளதுடன் பல்வேறு தொடர்புகளை வைத்திருந்தார் என்று தடுப்பு காவலில் உள்ள ஒரு புலி உறுப்பினர் தகவல்களை வழங்கினார்.
இதனை அடிப்படையாகக் கொண்டே பயங்கரவாத புலனாய்வு பிரிவு பொலிஸார் கொழும்பிலிருந்து வவுனியாவுக்குச் சென்று அவர் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டார் என்றும் தெரிவித்தார்.

பயங்கரவாத புலனாய்வு பிரிவு பொலிஸாரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தொடர்ந்தும் பல்வேறு கோணங்களில் விசாரணைக்கு ட்படுத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

காத்தான்குடியில் ஷ¤ஹதாக்கள் தினம்

காத்தான்குடியில் பிரதி வருடந்தோறும் நடைபெற்று வரும் ஷ¤ஹதாக்கள் தினம் இன்று (3) அனுஷ்டிக்கப்படுகின்றது. 03.08.1990ம் ஆண்டு காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப்பள்ளிவாசல், ஹ¤ஸைனிய்யாப் பள்ளிவாசல்களில் இஷாத் தொழுகையை நிறைவேற்றிக்கொண்டிருந்தபோது தொழுகையில் வைத்து 103 பேர் பயங்கரவாதிகளினால் படுகொலை செய்யப்பட்டு ஷஹீதாக்கப்பட்டனர்.

இவற்றை நினைவு கூர்ந்து இவ் ஷ¤ஹதாக்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. ஷ¤ஹதாக்கள் தினத்தையொட்டி காத்தான்குடி மீராஜும் ஆப்பள்ளிவாசலில் இன்று காலை கதமுல குர் ஆன் பிரார்த்தனை என்பன நடைபெறவுள்ளன. ஷ¤ஹதாக்கள் தினத்தை அமைதியாகவும், பிரார்த்தனை நாளாகவும் கழிக்குமாறு ஷ¤ஹதாக்கள் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழர்களுக்கு எதிராக செயற்பட்ட ஐ.தே.க. இன்று முதலைக் கண்ணீர் வடிக்கிறது – அமைச்சர் அதாவுட செனிவிரட்ன

தமிழ் மக்களுக்கு எதிராக இனவாதத்தை தூண்டிவிட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தையும் கொண்டுவந்து அவர்களுக்கு பயங்கரவாதிகள் என முத்திரை குத்திய ஐக்கிய தேசியக் கட்சியினர் இன்று தமிழ் மக்கள் துன்பப்படுவதாக முதலைக்கண்ணீர் வடிப்பதாக தொழில் மனிதவள அமைச்சர் அதாவுட செனிவிரட்ன தெரிவித்துள்ளார். மாவனல்ல நகர ஸ்ரீ கதிரேசன் ஆலயத்தில் அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு வைபவத்தில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து பேசிய அமைச்சர் அதாவுட செனிவிரட்ன;

ஐக்கிய தேசியக் கட்சியினர் ஆட்சிக்கு வரும்போது தமிழ் மக்களின் ஆதரவைக் கேட்பார்கள். தமிழ் மக்களும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு நம்பி வாக்களிப்பார்கள். ஆனால், தமிழர்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவதும் ஐ.தே.கட்சியே. இது கடந்த கால வரலாறு. இன்று தமிழ் மக்களுக்கு உரிமை வழங்கப்பட வேண்டும். தமிழ் மக்களும் இந்த நாட்டு மக்கள் என்று எல்லாம் கூறிவருகின்றனர்.

17 வருடங்கள் ஐக்கிய தேசியக் கட்சியினர் பெரும்பான்மைப் பலத்துடன் ஆட்சி செய்தபோது தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல் இன்று தீர்வு காணும்படி கேட்கின்றனர். இந்த நாட்டில் யுத்தம் ஏற்படக் காரணமானவர்களும் ஐக்கிய தேசியக் கட்சியினரே. இன்று யுத்தம் முடிவுற்று தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாண ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த நாட்டில் சகல இன மக்களும் இலங்கையர் என்று வாழ வேண்டும் என்பதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும். அந்த சூழ்நிலையை விரைவில் ஜனாதிபதி ஏற்படுத்துவார். கடந்த 35 வருடங்களாக இன மத பேதமின்றி நான் சேவையாற்றி வருகின்றேன். சகலரும் ஒற்றுமையாகவும் ஐக்கியமாகவும் வாழ்ந்தால் நாடு முன்னேறும் என்றார்.

ஊவா, யாழ்ப்பாணம், வவுனியாவில் இன்னும் 5 தினங்களில் வாக்களிப்பு – 909 வேட்பாளர்கள் களத்தில்; 66 பேர் தெரிவு செய்யப்படுவர்

election_cast_ballots.jpgஊவா மாகாணசபை, யாழ்ப்பாண மாநகரசபை, வவுனியா நகரசபைக்கான வாக்களிப்பு எதிர்வரும் 8 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்தச் சபைகளுக்கு 66 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ள நிலையில் 909 பேர் போட்டியிடுகின்றனர்.

யாழ்.மாநகர சபை தேர்தலில் 23 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 4 அரசியல் கட்சிகள் மற்றும் 2 சுயேச்சைக்குழுக்களைச் சேர்ந்த 174 பேர் போட்டியிடுகின்றனர். மாநகரசபையின் மொத்த வாக்காளர் தொகை 1,00,417 ஆகும். 67 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப் பதிவு இடம்பெறவுள்ளது.

வவுனியா நகரசபை தேர்தலில் 11 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 6 அரசியல் கட்சிகள், 3 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 135 பேர் போட்டியிடுகின்றனர். நகர சபையின் 24,626 பேர் 18 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்கவுள்ளனர்.

ஊவா மாகாண சபை தேர்தலில் மொத்தமாக 8,75,456 வாக்காளர்கள் 814 நிலையங்களில் வாக்களிக்கவுள்ள நிலையில் 32 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 600 பேர் போட்டியிடுகின்றனர். இவர்கள் 23 அரசியல் கட்சிகளையும் 7 சுயேச்சைக் குழுக்களையும் சேர்ந்தவர்களாவர்.

ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் 21 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 14 அரசியல் கட்சிகள் மற்றும் 4 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 432 பேர் போட்டியிடுகின்றனர். 9 தொகுதிகளிலுள்ள 574,814 பேர் 507 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்கவுள்ளனர்.

மொனராகலை மாவட்டத்தில் 11 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 9 அரசியல் கட்சிகள் மற்றும் 3 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 168 பேர் போட்டியிடுகின்றனர். இதில் 3 தொகுதிகளைச் சேர்ந்த 3,00,642 பேர் 307 தொகுதிகளில் வாக்களிக்கவுள்ளனர்.

இதேவேளை, ஊவா மாகாண சபை மற்றும் யாழ்.மாநகரசபை, வவுனியா நகரசபை ஆகியவற்றில் மொத்தமாக 25,360 பேர் தபால் மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்றிருந்த நிலையில் ஊவாவில் 75 சதவீதமும் வவுனியா நகரசபை மற்றும் யாழ். மாநகரசபையில் 75 வீதமும் தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதை தாம் மதிப்பிட்டுள்ளதாக தேர்தலை கண்காணிப்பதற்கான பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

அத்துடன் தபால் மூல வாக்களிப்பு நீதியாகவும் நேர்மையாகவும் இடம்பெற்ற நிலையில் தேர்தல் தினத்தில் இதே சூழ்நிலையை பாதுகாப்பதற்கு அரசியல் கட்சிகளும் சுயேச்சைக்குழுக்களும் தொடர்ந்து முன்வரவேண்டுமென கேட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்து புத்தளம் மாவட்டத்தில் வாழ்ந்த மக்களில் 4,388 பேர் யாழ்.மாநகர சபை தேர்தலில் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளதாக புத்தளம் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஏ.ஏ.எம்.நபீல் தெரிவித்துள்ளதுடன் இவர்கள் வாக்களிப்பதற்கு அங்கு 6 வாக்குச் சாவடிகள் ஏற்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

தில்லையடி முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் இரு வாக்குச் சாவடிகளும் புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி, பாலாவி சிங்கள மஹா வித்தியாலயம், கற்பிட்டி அல்அக்ஷா தேசிய கல்லூரி, புளிச்சாக்குளம் உமர் பாஷருக் முஸ்லிம் வித்தியாலயம் ஆகியவற்றில் தலா ஒரு வாக்குச்சாவடியும் அமைக்கப்படவுள்ளது.

வாக்குகள் யாவும் புத்தளம் மாவட்ட செயலகத்தில் எண்ணப்பட்டு அதன் பெறுபேறுகள் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்படுமென்றும் அம்மாவட்ட பிரதித் தேர்தல் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, தேர்தல் தொடர்பில் 29 முறைப்பாடுகளை பெற்றுள்ளதாக தேர்தலை கண்காணிப்பதற்கான மற்றுமொரு அமைப்பான கபே தெரிவித்ததுடன், இதில் தாக்குதல் சம்பவங்கள் 15 இடம்பெற்றிருப்பதாக தெரிவித்துள்ளது.

15 சம்பவங்கள் பதுளையில் இடம்பெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக மொனராகலையில் 7, வவுனியாவில் 4, யாழ்ப்பாணத்தில் 3 சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

தேர்தல் சட்டவிதிகளை மீறிய சம்பவங்கள் 7 இடம் பெற்றுள்ள நிலையில் அச்சுறுத்தல் தொடர்பில் 3 சம்பவங்களை பதிவு செய்துள்ளோமெனவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

யாழ்.மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபைக்கான தேர்தல் 1998 இல் இடம்பெற்றது. 1998 க்கு பின்னர் இவ்விரு உள்ளூராட்சி மன்றங்களும் 2003 வரை விசேட ஆணையாளரின் கீழ் இருந்தன.

ஊவா மாகாண சபை மே 28 ஆம் திகதி கலைக்கப்பட்டது.