தமிழ் மக்களுக்கு எதிராக இனவாதத்தை தூண்டிவிட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தையும் கொண்டுவந்து அவர்களுக்கு பயங்கரவாதிகள் என முத்திரை குத்திய ஐக்கிய தேசியக் கட்சியினர் இன்று தமிழ் மக்கள் துன்பப்படுவதாக முதலைக்கண்ணீர் வடிப்பதாக தொழில் மனிதவள அமைச்சர் அதாவுட செனிவிரட்ன தெரிவித்துள்ளார். மாவனல்ல நகர ஸ்ரீ கதிரேசன் ஆலயத்தில் அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு வைபவத்தில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறினார்.
அங்கு அவர் தொடர்ந்து பேசிய அமைச்சர் அதாவுட செனிவிரட்ன;
ஐக்கிய தேசியக் கட்சியினர் ஆட்சிக்கு வரும்போது தமிழ் மக்களின் ஆதரவைக் கேட்பார்கள். தமிழ் மக்களும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு நம்பி வாக்களிப்பார்கள். ஆனால், தமிழர்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவதும் ஐ.தே.கட்சியே. இது கடந்த கால வரலாறு. இன்று தமிழ் மக்களுக்கு உரிமை வழங்கப்பட வேண்டும். தமிழ் மக்களும் இந்த நாட்டு மக்கள் என்று எல்லாம் கூறிவருகின்றனர்.
17 வருடங்கள் ஐக்கிய தேசியக் கட்சியினர் பெரும்பான்மைப் பலத்துடன் ஆட்சி செய்தபோது தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல் இன்று தீர்வு காணும்படி கேட்கின்றனர். இந்த நாட்டில் யுத்தம் ஏற்படக் காரணமானவர்களும் ஐக்கிய தேசியக் கட்சியினரே. இன்று யுத்தம் முடிவுற்று தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாண ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்த நாட்டில் சகல இன மக்களும் இலங்கையர் என்று வாழ வேண்டும் என்பதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும். அந்த சூழ்நிலையை விரைவில் ஜனாதிபதி ஏற்படுத்துவார். கடந்த 35 வருடங்களாக இன மத பேதமின்றி நான் சேவையாற்றி வருகின்றேன். சகலரும் ஒற்றுமையாகவும் ஐக்கியமாகவும் வாழ்ந்தால் நாடு முன்னேறும் என்றார்.