August

August

இங்கிலாந்து இன்னிங்ஸ் தோல்வி; டெஸ்ட் தொடர் சமநிலை

cricket.jpgஹெடிங் லேயில் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் 4-வது போட்டியில் முதல் இன்னிங்ஸில் 343 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்ட்ரேலியா இங்கிலாந்து அணியை இரண்டாவது இன்னிக்ஸில் 263 ரன்களுக்கு சுருட்டி, 80 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. மிட்செல் ஜான்சன் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதன் மூலம் 5 டெஸ்ட்கள் கொண்ட இத்தொடர் தற்போது 1- 1 என்று சம நிலை எய்தியுள்ளது. 82/5 என்று துவங்கிய இங்கிலாந்து 3-வது நாள் ஆட்டம் உணவு இடைவேளைக்கு சற்று பிறகு 263 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படு தோல்வி தழுவியது.

82/5 என்று துவங்கிய இங்கிலாந்து உணவு இடைவேளையின் போது 250 ரன்களை எட்டியது. அதாவது 168 ரன்களை அந்த இரண்டு மணி நேர ஆட்டத்தில் குவித்தது இங்கிலாந்து.

8-வது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த கிரகாம் ஸ்வானும், ஸ்டூவர்ட் பிராடும் 12.3 ஓவர்களில் 108 ரன்களை மின்னல் வேக அதிரடியில் குவித்தனர். எந்த ஒரு விக்கெட்டுக்கும் இடையிலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த வேகத்தில் ரன் குவித்திருப்பது இதுவே இரண்டாவது அதிகபட்சமாகும். முதலில் நேதன் ஆஸ்ட்லேயும், கிறிஸ் கெய்ன்சும் ஜோடி சேர்ந்து இதைவிட வேகத்தில் ரன் குவித்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ஆஸ்டிலும், கெய்ன்ஸும் 10-வது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்து இங்கிலாந்துக்கு எதிராக 65 பந்துகளில் 118 ரன்களைக் குவித்துள்ளனர். இதுதான் அதிகபட்சம். தற்போது பிராட், ஸ்வான் பார்ட்னர்ஷிப் 8.64 என்ற ரன் விகிதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இவர்கள் அதிரடியில் சிக்கியவர் ஸ்டூவர்ட் கிளார்க் இவர் 11 ஓவர்களில் 74 ரன்கள் கொடுத்து விக்கெட்டுகள் எதையும் கைப்பற்றவில்லை. நேற்று முதலில் ஜேம்ஸ் ஆன்டர்சன் வந்தவுடனேயே ஹில்ஃபென் ஹாஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு ஸ்கோர் 120 ரன்களாக இருந்தபோது மேட் பிரையர் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். 120/7 என்று ஆனபோது ஸ்வானும், பிராடும் இணைந்தனர். முதலில் ஸ்வான் திணறினார். அதிர்ஷ்டவசமாக இரண்டு பவுண்டரிஅகளை அடித்தார். ஆனால் ஸ்டூவர்ட் கிளார்க் பந்தில் பிராட் அடுத்தடுத்து 4 பவுண்டரிகளை ஒரே ஓவரில் அடித்தார்.

அடுத்ததாக இரண்டு 5 ரன்கள் வைடு பால் வீசிய சிடில் அதே ஓவரில் 17 ரன்களை கொடுத்தார். பிராட் அரை சதம் நோக்கி முன்னேறினார். மீண்டும் ஸ்டூவர்ட் கிளார்க் ஓவரில் 16 ரன்கள் இந்த முறை அவரை விளாசியது கிரகாம் ஸ்வான்.

அதன் பிறகு 49 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 61 ரன்களை விளாசிய பிராட், பீட்டர் சிடில் பந்தில் ஆட்டமிழந்தார்.72 பந்துகளில் 7 பவுண்டரிகள் ஒரு சிக்சர் சகிதம் 62 ரன்கள் எடுத்து ஸ்வான் ஆட்டமிழந்தார். ஹார்மிசன் களமிறங்கி 4 பவுண்டரிகளை விளாசி 19 ரன்கள் எடுத்து ஜான்சனிடம் ஆட்டமிழந்தார். கடைசியாக இன்னிங்ஸின் 62-வது ஓவரின் 3-வது பந்தில் கிரகாம் ஆனியன்ஸின் ஸ்டம்ப்களை ஜான்சன் பெயர்க்க பாண்டிங் பின்பு கூறிய “நம்பமுடியாத” வெற்றியை ஆஸ்ட்ரேலியா 3 நாட்களுக்குள் பெற்றது.

ஆட்ட நாயகனாக சதம் எடுத்த ஆஸ்ட்ரேலிய வீரர் மார்கஸ் நார்த் தேர்வு செய்யப்பட்டார்.ஆஸ்ட்ரேலிய அணியில் ஜான்சன் 5 விக்கெட்டுகளையும் ஹில்ஃபென் ஹாஸ் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.

இடம்பெயர்ந்த மக்களுக்கு அமெரிக்கா 15 மில்லியன் டொலர் பெறுமதியான உணவுப் பொருட்கள்

வவுனியாவுக்கு இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கென 1.724 பில்லியன் ரூபா (15 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) பெறுமதியான அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்குவதற்கு ஐக்கிய அமெரிக்கா முன்வந்துள்ளது. இதற்கேற்ப யு. எஸ். எயிட் நிறுவனம், உலக உணவுத் திட்டத்தின் ஊடாக இந்த அத்தியாவசிய உணவுப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பி வைக்கவிருக்கின்றது.

மூன்று இலட்சம் மக்களுக்கு சுமார் நான்கு மாத காலத்துக்குத் தேவையான கோதுமை, அவரை வகைகள் மற்றும் மரக்கறி எண்ணெய் ஆகியன உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை கப்பல் மூலம் இலங்கைக்கு எடுத்து வருவதற்கான ஏற்பாடுகள் உலக உணவுத் திட்ட அமைப்பின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிவாரணக் கிராமங்களிலுள்ள கர்ப்பிணிகள், தாய்மார்களுக்கான விசேட போஷாக்குத் திட்டம்

வவுனியாவிலுள்ள நிவாரணக் கிராமங்களிலும், நலன்புரி நிலையங்களிலும் தங்கியுள்ள கர்ப்பிணிகள் மற்றும் தாய்மாருக்கென விசேட போஷாக்குத் திட்டமொன்றைச் செயற்படுத்துவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இத்திட்டத்தைத் துரிதகெதியில் செயற்படுத்துமாறு சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அரசாங்க சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இந்த அறிவுறுத்தலுக்கு அமைய எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் மூன்று நாட்களுக்கு இந்த விசேட போஷாக்குத் திட்டத்தைச் செயற்படுத்துவதற்கான ஒழுங்குகளை குடும்ப சுகாதாரப் பணியக அதிகாரிகள் மேற் கொண்டு வருகின்றனர்.

இத்திட்டம் தொடர்பாக அமைச்சின் அதிகாரியொருவர் குறிப்பிடுகையில், வவுனியாவி லுள்ள நிவாரணக் கிராமங்க ளிலும், நலன்புரி நிலையங்க ளிலும் தங்கியுள்ள ஐந்து வயதுக்குக் குறைந்தவர்களுக்கு சின்னமுத்து மற்றும் போலியோ நிர்ப்பீடன மருந்துகளும் வயிற்றுப் புழு நோய்க்கான தடுப்பு மருந்தும் அண்மையில் பெற்றுக் கொடுக்கப்பட்டன.

இத்திட்டத்தின் மூலம் அதிக பயனைப் பெற்றுக் கொள்ளுவதில் பெற்றோர் ஆர்வம் காட்டியதுடன், 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளும் நன்மை பெற்றனர்.

இத்திட்டம் வெற்றியளித்ததைத் தொடர்ந்தே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா வவுனியாவுக்கு இடம்பெயர்ந்துள்ள கர்ப்பிணிகள் மற்றும் தாய்மாருக்கென விசேட போஷாக்குத் திட்டத்தைச் செயற்படுத்த நடவடிக்கை எடுத்திருக்கிறார்.

இத்திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகள், தாய்மாருக்கென திரிபோஷா சந்துணவு, விட்டமின் மாத்திரைகள், வயிற்றுப் பழு உபாதைக்கான தடுப்பு மருந்து என்பன பெற்றுக் கொடுக்கப்படவுள்ளன. அத்தோடு குடும்பத் திட்ட ஆலோசனைகளும் வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் சுமார் இருபதினாயிரம் தாய்மாரும், 2500 கர்ப்பிணிகளும் நன்மை பெறுவர் என்றார்.

இலங்கை – வியட்நாம் இருதரப்பு ஒப்பந்தம் கைச்சாத்து

இலங்கைக்கும் வியட்நாமுக்குமிடையிலான பரஸ்பர இருதரப்பு ஒப்பந்தம் நேற்று வெளிவிவகார அமைச்சில் கைச்சாத்திடப்பட்டது.

வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவும் வியட்நாம் வெளிவிவகார அமைச்சர் டாவு வியட் ட்ரூங் ஆகிய இருவருமே ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். இருநாடுக ளுக்குமிடையிலான பரஸ்பர இருதரப்பு ஒப்பந்தம் முதன் முறையாக 2003 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டது.

பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க 2006 ஆம் ஆண்டில் வியட்நாமுக்கு விஜயம் மேற்கொண்டதைய டுத்தும் இவ் வருடம் வெளிவிவகார அமைச்சர் போகொல்லாகம அந்நாட்டுக்கு சென்று வந்ததை தொடர்ந்தும் ஒப்பந்தம் இரண்டாவது தடவையாக புதுபித்தல் சாத்தியமாகியிருப்பதாக அமைச்சர் போகொல்லாகம செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றும்போது கூறினார்.

இதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வியட்நாம் ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் ஒக்டோபர் மாதம் அந்நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவிருப்பது இரு நாடுகளுக்குமிடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவதாக அமையுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சில் வைத்து நேற்று கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தகம், அரசியல், கலாசாரம், சமயம், மக்களுக்கிடையிலான தொடர்புகள் உள்ளிட்ட பரந்துபட்ட அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை வியட்நாமுடன் மேற்கொள்ளும் வர்த்தக நடவடிக்கைகளில் வருடத்துக்கு 60 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலாபமீட்டுகின்றது. இதனை 100 மில்லியன் அமெரிக்க டொலர்களாக்குவதை குறிக்கோளாக வைத்து வியட்நாம் வெளிவிவகார அமைச்சருடன் பேச்சு நடத்தியதாகவும் அமைச்சர் போகொல்லாகம குறிப்பிட்டார்.

பிராந்திய ரீதியாக இருநாடுகளுக்குமிடையிலான உறவு மேலும் பலப்படுத்தப்படுவதுடன் 70 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் மூடப்பட்ட வியட்நாம் தூதரகத்தை விரைவில் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அதற்கான பூரண ஒத்துழைப்பை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்குமென தான் உறுதி மொழிந்ததாகவும் அமைச்சர் சொன்னார்.

அங்கு செய்தியாளர் மத்தியில் கருத்து தெரிவித்த வியட்நாம் வெளிவிவகார அமைச்சர்; இரு நாடுகளுக்குமிடையிலான உறவு குறித்து விளக்கியதுடன் தமது தூதரகத்தை விரைவில் கொழும்பில் மீளத் திறப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் கூறினார்.

இலங்கை ஜனாதிபதி எதிர்வரும் ஒப்டோபரில் எமது நாட்டுக்கு வருகை தரவிருப்பது இலங்கையுடனான எமது உறவில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகுமெனவும் தெரிவித்தார். இந்த ஒப்பந்தத்தின் மூன்றாம் கட்டம் 2011 ஆம் ஆண்டு வியட்நாமில் வைத்து கைச்சாத்திடப் படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

தென் மாகாணசபைத் தேர்தல் வேட்பு மனு 21 முதல் 28 வரை தாக்கல்

election000.jpgதென் மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி நண்பகல் 12 மணிவரையும் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.
தென் மாகாணத்தில் உள்ள காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை மாவட்ட செயலகங்களில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யலாம்.

2008 ஆம் ஆண்டு தேர்தல் இடாப்பில் உள்ள வாக்காளர்கள் இத்தேர்தலில் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். தென் மாகாணத்தில் 17 இலட்சத்து 61 ஆயிரத்து 843 வாக்காளர்கள் உள்ளனர். இதில் காலி மாவட்டத்தில்

7 இலட்சத்து 68 ஆயிரத்து 801 வாக்காளர்களும், மாத்தறை மாவட்டத்தில் 5 இலட்சத்து 78 ஆயிரத்து 856 வாக்காளர்களும், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 4 இலட்சத்து 21 ஆயிரத்து 156 வாக்காளர்களும் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர்.

இதேவேளை, தென் மாகாண சபையில் போட்டியிடும் அரச தரப்பினர் மற்றும் அரசியல் கட்சிகள் தமது பிரசார வேலைகளை ஆரம்பித்துள்ளனர்.

இராக்கில் இரு கார் குண்டுத் தாக்குதலில் 40 பேர் பலி

000000.jpgஇராக்கின் தலைநகர் பாக்தாதிலும் வடபுற நகரான மொசூலிலும் நடந்த இரு வெவ்வேறு கார் குண்டுத் தாக்குதல்களில், நாற்பது பேர் கொல்லப்பட்டதோடு, இருநூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ஒன்றன் பின் ஒன்றாக சில நிமிட இடைவேளையில் இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. மொசூலுக்கு அருகே நடந்த தாக்குதல், ஷியா இன சிறுபான்மை மக்கள் வாழும் ஒரு கிராமத்தில் பல வீடுகளை அழித்துள்ளது. பாக்தாதிலும், ஷியா பிரிவினர் வாழும் பகுதியே இவ்வாறு குறி வைத்து தாக்கப்பட்டுள்ளது.

இராக்கிய அமைச்சர் ஒருவர் இது குறித்து கருத்து வெளியிடும் போது, இது அல் கயீதாவின் கைவரிசை என்று குறிப்பிட்டுள்ளார். வன்முறைகள் அதிகரித்திருந்தும் கூட, அமெரிக்கப் படைகள் நகர் புறங்களிலிருந்து வெளியேறிய பின்னரும் தமது பாதுகாப்பை தம்மால் கவனிக்க முடியும் என்று இராக்கிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்கள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்க வேண்டும் என்று அம்னெஸ்டி கோரிக்கை

இலங்கையின் வடபகுதியில் அரசாங்கம் நடத்தும் இடைத் தங்கல் முகாம்களில், வைக்கப்பட்டுள்ள சுமார் மூன்று லட்சம் தமிழ் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை அகற்றப்பட வேண்டும் என்று சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இலங்கை அரசை வலியுறுத்தியுள்ளது.

இந்த முகாம்களை திறந்து விடுங்கள் என்று பெயரிடப்பட்டுள்ள பிரச்சார இயக்கம் ஒன்றை தொடங்கி வைத்து, இந்த அமைப்பின் அதிகாரிகள் பேசும்போது, இந்த முகாம்களிலுள்ள மக்கள் வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், இவை உண்மையில் தடுப்பு முகாம்கள்தான் என்று சுட்டிக் காட்டியுள்ளனர்.

விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்துக்கும் இடையில் இடம் பெற்ற கடைசி கட்ட போரின் போது, சுமார் மூன்று லட்சம் தமிழர்கள் தமது இருப்பிடங்களை இழந்தார்கள்.

இலங்கை அரசு இது பற்றி குறிப்பிடும் போது, இவர்கள் தமது இருப்பிடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படும் முன்னர், விடுதலைப் புலிகளின் போராளிகள் அடையாளம் காணப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

“எப்படியும் வெற்றிபெறுவதை’ அரசாங்கம் நிறைவேற்றிவிட்டது – மாவை சேனாதிராஜா

election000.jpgயாழ்ப் பாணத்தில் 80 சதவீதமான மக்கள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை என்பதும் ஆனால், “எப்படியும் வெற்றி பெறும்’ என்ற அறிவிப்பை அரசாங்கம் நிறைவேற்றியிருப்பதாகவும் இலங்கைத் தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம், வவுனியா உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் தொடர்பாக தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது; யாழ். மாநகர சபைக்கும் வவுனியா நகர சபைக்குமான தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றுள்ள நிலையில், வவுனியா நகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றிருப்பது ஆறுதல் தரும் செய்தியாகும்.

யாழ்ப்பாணத்தில் 18.26 வீத வாக்குகளே பதியப்பட்டுள்ளன. ஒரு இலட்சத்து நாலாயிரம் வாக்காளர்களில் கிட்டத்தட்ட 40 ஆயிரம் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டிருக்கவில்லை. பல்லாயிரக்கணக்கான வாக்காளர்களிடம் தேசிய அடையாள அட்டை இல்லை. இராணுவத்தினால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளே இருந்துள்ளன. இதனால் அவர்களால் வாக்களிக்க முடியவில்லை. 81.74 வீத மக்கள் இத்தேர்தலில் பங்குபற்றவில்லை என்பது கவனிக்க வேண்டிய விடயமாகும்.

கரையோரப் பகுதி மக்கள் இராணுவத்தினால் அன்றைய தினம் காலை கடலுக்குச் செல்லவிடாமல் தடுக்கப்பட்டு வாக்களிக்க அனுப்பப்பட்டதாகச் செய்திகள் வந்துள்ளன. தேர்தலில் 18.26 வீதத்திற்கும் குறைவான வாக்குகள் பதியப்பட்டமைக்கு மக்களிடம் ஏற்பட்டிருந்த அச்சம், பீதி மட்டுமல்ல மனவிரக்தியும் அதனால் ஏற்பட்ட தேர்தலில் ஈடுபாடற்ற தன்மையும் ஒரு காரணமாகும்.

அரசின் அதிகார பலம், இராணுவத்தின் தொடர்ச்சியான பிரசன்னமும் நடமாட்டமும், அமைச்சர்கள் தொடர்ச்சியாகத் தேர்தல் காலங்களில் யாழ்ப்பாணம் வந்து அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து பல்கலைக்கழகம் முதலான பல துறைசார் அரச ஊழியர், மாணவர்களை நிர்ப்பந்தமாக அழைத்து நடத்திய கூட்டங்களில் சலுகைகளை அறிவித்து வந்தமை, தேர்தலில் அரசுக்கு ஆதரவளிக்காவிட்டால் மீனவர்கள் தொழிலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படுமென அறிவுறுத்தப்பட்ட அச்சம் மற்றும் அரசாங்கத்தில் முழு வளங்களும் இத்தேர்தலில் பாவிக்கப்பட்டுள்ளமை, அதற்கும் மேலாகப் புத்தளம் போன்ற இடங்களில் இடம்பெயர்ந்த மக்களில் 47 வீதமான வாக்குகள் பதியப்பட்டமையும், அரசாங்கக் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 10,600 வாக்குகளைப் பெறுவதற்கு காரணிகளாகும். அத்துடன் தேர்தலில் அரசு வெற்றி பெறாவிட்டால் தமக்கு ஆபத்து ஏற்படுமென மக்கள் அச்சமுற வைக்கப்பட்டிருந்தனர்.

அரசாங்கம் திட்டமிட்டவாறு, எதிர்பார்த்தவாறு தமிழ் மக்கள் பெருமளவில் வாக்களிக்கவில்லை என்பது வெளிப்படை. எப்படியும் அரசு வெற்றிபெறும் என்ற அறிவிப்பை அரசு நிறைவேற்றியுள்ளது. ஆனால், உண்மையில் அரசு எதிர்பார்த்த அளவுக்குத் தமிழ் மக்களிடம் வெற்றி பெறவில்லை. யாழ்ப்பாணத்தில் 18.26 வீத வாக்களிப்பையும் வவுனியாவில் தமிழரசுக் கட்சி வெற்றி பெற்று ஆளுங்கட்சிக் கூட்டமைப்பு மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டமையும் தமிழ் மக்களிடம் ஆளும் கட்சி எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்பதை நிரூபிப்பதாயுள்ளது.

எவ்வாறெனினும் வவுனியா நகர சபைத் தேர்தலில் எமது வேட்பாளர்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டு மக்களும் அச்சுறுத்தப்பட்டிருந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றிபெற வைத்தமைக்காக அங்குள்ள மக்களுக்கும் வேட்பாளர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பதியப்பட்டுள்ளன. பல இடங்களில் எமது மக்கள் தேர்தலில் அக்கறை காட்டாது வாக்களிக்காமல் இருந்தமை ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இத்தனை மனிதப் பேரவலம், அடக்கு முறைச் சூழல், அச்சம் நிலவிய போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்த மக்களுக்கு இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கிழக்காசியாவில் பாரிய சூறாவளி 10 இலட்சம் மக்கள் இடம்பெயர்வு – 13 பேர் பலி

கிழக்காசியாவில் திங்களன்று வீசிய பாரிய சூறாவளியால் தாய்வான், ஜப்பான், சீனா ஆகிய நாடுகளின் கரையோரங் களிலிருந்து 10 இலட்சம் பேர் வெளியேறியுள்ளனர்.

ஜப்பானில் வீசிய கடும் சூறாவளி மற்றும் கனமழை காரணமாக 13 பேர் பலியாகினர். இன்னும் பெருந்தொகையானோர் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். இவர்களை உடனடியாக மீட்கும் பொருட்டு ஆயிரம் படை வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர். இரண்டாயிரம் பேர் வெள்ளத்தி லிருந்து மிட்கப்பட்டு தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்று திங்கட்கிழமை ஜப்பான், சீனா, தாய்வான் ஆகிய நாடுகளில் இயற்கை அனர்த்தம் ஏற்பட்டது.

வேகமாக வீசிய காற்றில் மரங்கள், வீட்டுக் கூரைகள், மின்கம்பிகள் என்பன நிலத்தில் விழுந்தன. பின்னர் பெய்த கடும் மழையால் கட்டடங்களின் சுவர்கள் இடிந்து விழுந்தன. வீதியால் சென்ற வாகனங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

தலை நகர் டொக்கியோவின் சில பகுதிகளும் இந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்டன. சரிவு ஏற்பட்டதில் சுமார் 450 வீடுகள் சேதமடைந்தன. 180 கி. மீற்றர் வேகத்தில் காற்று வீசியது. இடிபாடுகளுக்குள் சில பேர் சிக்கியுள்ளதால் தேடும் பணிகள் துரிதமாக்கப்பட்டுள்ளன.

காணாமல் போனோரைத் தேடவென விசேட படகுச் சேவைகளும் நடத்தப்படுகின்றன. கிழக்காசியாவில் வீசிய இந்தப் பாரிய சூறாவளி வெள்ளம் என்பன தாய்வான், சீனா ஆகிய நாடுகளையும் தாக்கியது.

இடம்பெயர்ந்தோருக்கான உணவுகள், குடிபானங்கள், இருப்பிடங்கள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை தொண்டர் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. வெள்ள நீர் வடியும் வரை இயல்பு நிலை பாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்லுமாறு அரசாங்கம் அறிவித்ததையடுத்து தாய்வான், ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து சுமார் பத்து இலட்சம் பேர் வெளியேறியதாக ஊர்ஜிதப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.

கொழும்பு – யாழ் சொகுசு பஸ் சேவை – கட்டணம் 1000 ரூபாவென அமைச்சு அறிவிப்பு

bus_luxury.jpgகொழும் புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான சொகுசு பஸ் சேவை விரைவில் ஆரம்பிக்கப்டும் என்றும் அதற்கான ஒரு வழிக் கட்டணமாக 1000 ரூபா அரவிடப்படும் என்றும் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது, அத்துடன் யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் வவுனியா ஆகிய நகரங்களுக்கும் சொகுசு பஸ் சேவையினை ஆரம்பிக்கும் திட்டம் பரிசீலிக்கப்பட்டுவருவதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது.

கொழும்பு யாழ் சொகுசு பஸ் சேவை கொழும்பு – மதவச்சி, மதவச்சி – யாழ்ப்பாணம் என இரு கட்டங்களாக நடத்தப்படும் என்றும் முதல் கட்டமாக ஐந்து சொகுசு பஸ் வண்டிகள் சேவையிலீடுபடுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.