இலங்கையின் வடபகுதியில் அரசாங்கம் நடத்தும் இடைத் தங்கல் முகாம்களில், வைக்கப்பட்டுள்ள சுமார் மூன்று லட்சம் தமிழ் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை அகற்றப்பட வேண்டும் என்று சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இலங்கை அரசை வலியுறுத்தியுள்ளது.
இந்த முகாம்களை திறந்து விடுங்கள் என்று பெயரிடப்பட்டுள்ள பிரச்சார இயக்கம் ஒன்றை தொடங்கி வைத்து, இந்த அமைப்பின் அதிகாரிகள் பேசும்போது, இந்த முகாம்களிலுள்ள மக்கள் வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், இவை உண்மையில் தடுப்பு முகாம்கள்தான் என்று சுட்டிக் காட்டியுள்ளனர்.
விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்துக்கும் இடையில் இடம் பெற்ற கடைசி கட்ட போரின் போது, சுமார் மூன்று லட்சம் தமிழர்கள் தமது இருப்பிடங்களை இழந்தார்கள்.
இலங்கை அரசு இது பற்றி குறிப்பிடும் போது, இவர்கள் தமது இருப்பிடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படும் முன்னர், விடுதலைப் புலிகளின் போராளிகள் அடையாளம் காணப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.