வவுனியாவிலுள்ள நிவாரணக் கிராமங்களிலும், நலன்புரி நிலையங்களிலும் தங்கியுள்ள கர்ப்பிணிகள் மற்றும் தாய்மாருக்கென விசேட போஷாக்குத் திட்டமொன்றைச் செயற்படுத்துவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இத்திட்டத்தைத் துரிதகெதியில் செயற்படுத்துமாறு சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அரசாங்க சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இந்த அறிவுறுத்தலுக்கு அமைய எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் மூன்று நாட்களுக்கு இந்த விசேட போஷாக்குத் திட்டத்தைச் செயற்படுத்துவதற்கான ஒழுங்குகளை குடும்ப சுகாதாரப் பணியக அதிகாரிகள் மேற் கொண்டு வருகின்றனர்.
இத்திட்டம் தொடர்பாக அமைச்சின் அதிகாரியொருவர் குறிப்பிடுகையில், வவுனியாவி லுள்ள நிவாரணக் கிராமங்க ளிலும், நலன்புரி நிலையங்க ளிலும் தங்கியுள்ள ஐந்து வயதுக்குக் குறைந்தவர்களுக்கு சின்னமுத்து மற்றும் போலியோ நிர்ப்பீடன மருந்துகளும் வயிற்றுப் புழு நோய்க்கான தடுப்பு மருந்தும் அண்மையில் பெற்றுக் கொடுக்கப்பட்டன.
இத்திட்டத்தின் மூலம் அதிக பயனைப் பெற்றுக் கொள்ளுவதில் பெற்றோர் ஆர்வம் காட்டியதுடன், 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளும் நன்மை பெற்றனர்.
இத்திட்டம் வெற்றியளித்ததைத் தொடர்ந்தே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா வவுனியாவுக்கு இடம்பெயர்ந்துள்ள கர்ப்பிணிகள் மற்றும் தாய்மாருக்கென விசேட போஷாக்குத் திட்டத்தைச் செயற்படுத்த நடவடிக்கை எடுத்திருக்கிறார்.
இத்திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகள், தாய்மாருக்கென திரிபோஷா சந்துணவு, விட்டமின் மாத்திரைகள், வயிற்றுப் பழு உபாதைக்கான தடுப்பு மருந்து என்பன பெற்றுக் கொடுக்கப்படவுள்ளன. அத்தோடு குடும்பத் திட்ட ஆலோசனைகளும் வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் சுமார் இருபதினாயிரம் தாய்மாரும், 2500 கர்ப்பிணிகளும் நன்மை பெறுவர் என்றார்.