July

July

தோட்ட தொழிலாளர் சம்பள அதிகரிப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவு

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நேற்று கொழும்பில் நடந்தது. முதலாளிமார் சம்மேளன கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

சம்பள கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக நேற்று நடை பெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் முறுகல் நிலை தோன்றியதையடுத்து முடிவுகள் எடுக்கப்படாமல் கூட்டம் கலைந்தது.

இதையடுத்து இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட இ.தொ.கா, இ.தே.தோ.தொ. சங்கம், பெருந்தோட்ட தொழிற்சங்கக் கூட்டமைப்பு என்பன இது தொடர்பாக தத்தமது தொழிற்சங்கங்களோடு கலந்தாலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு எடுப்பது எனவும், ஒரு பொது கூட்டு நடவடிக்கையை மேற்கொள்வது எனவும் தீர்மானித்துள்ளன.

இத்தகவலை இ.தொ.கா. வெளியிட்டுள்ளது.

நேற்றைய பேச்சுவார்த்தையின் போது இன்றைய வாழ்க்கை சுமைக்கு ஏற்ப குறைந்த பட்சம் 500 ரூபா சம்ள உயர்வு தோட்டத் தொழிலாளர்க்கு வழங்கப்பட வேண்டும் என தொழிற்சங்கங்கள் கூட்டாக வலியுறுத்தின. இது தொடர்பான கருத்து பரிமாற்றத்தின் போது முதலாளிமார் சம்மேளனம் வருடத்திற்கு 12%  சம்பள அதிகரிப்பு வழங்க முன்வந்தது. இதனை முழுமையாக நிராகரித்த கூட்டு ஒப்பந்தம் சார்ந்த கைத்தொழிற் சங்கங்கள் மேல் நடவடிக்கைகளுக்காக பேச்சுவார்த்தையை முடித்துக் கொண்டன.

தமிழ் இளைஞரின் ஆயுதப் போராட்டத்துக்கான அடிப்படை காரணத்தை கண்டறிந்து தீர்வு வழங்குவது அவசியம்

youth.jpgதமிழ் இளைஞர்கள் ஏன் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தார்கள் என்பதற்கான காரணத்தை கண்டறிந்து அதற்கான தீர்வுத் திட்டத்தை முன்வைப்பதே அரசு தற்போது செய்ய வேண்டிய முக்கிய பணியென இலங்கைக்கான ஐ.நா. அபிவிருத்தித் திட்ட நிறுவனத்தின் (யூ.என்.டி.பி.) உதவிப் பணிப்பாளர் டி.எஸ். ரட்னாநாயக்க தெரிவித்தார்.

பசறை பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் “பதுளை எதிர்காலம் எமது கரங்களில்’ அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மொழிக் கொள்கை மொழி உரிமை எனும் தலைப்பிலான ஒருநாள் செயலமர்வு அமைப்பின் பணிப்பாளர் பிரபாத்குமார, உதவி பிரதேச செயலாளர் சாமர ஜெயசிங்க ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் அவர் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது;

கடந்த 1956 ஆம் ஆண்டு வரை தமிழ் மக்கள் தனி ஈழமோ தனி நாடோ கேட்கவில்லை. ஆட்சியில் சிங்கள மக்களுக்கு இருக்கும் உரிமையை தமிழ் மக்களுக்கும் வழங்க வேண்டும் என்றே கேட்டனர். ஆட்சியில் பங்கு வழங்கப்பட்டிருந்தால் இலங்கையில் கடந்த 30 வருடகாலமாக யுத்தம் நடைபெற்று இருக்காது. சிங்கள மொழிக்கு என்ன உரிமை அந்தஸ்து இருக்கிறதோ அதே உரிமையை தமிழ்மொழிக்கும் வேண்டுமென 1956 ஆம் ஆண்டுவரை தமிழ் அரசியல்வாதிகளும் தமிழ் மக்களும் கேட்டுவந்தனர்.அரச கருமமொழி என்ற போர்வையில் சிங்கள மொழியும், தமிழ் மொழியும் அரச கரும மொழியாக பிரகடனப்படுத்தப்பட்டாலும் சிங்கள மொழிக்கு வழங்கப்பட்ட மொழி உரிமை தமிழ்மொழிக்கு வழங்கப்படவில்லை. இதன் காரணமாகவே வட, கிழக்கு இளைஞர்கள் ஆயுதம் ஏந்தவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

தமிழ்மொழிக்கு இதுவரையிலும் உரிய அந்தஸ்து வழங்கப்படவில்லை. பொதுவாக வட, கிழக்கை தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் பொலிஸ் நிலையங்களில் தமிழ் மக்கள் தமது தேவைகளை சிங்கள மொழியிலே மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனவே, தான் தமிழ் மொழிக்கு உரிய அந்தஸ்து வழங்கப்படவில்லை என தமிழ் மக்கள் கருதுகின்றனர்.

இதேபோல் வட,கிழக்கில் பெரும்பான்மையாக தமிழ் மக்களும் சிறுபான்மையாக சிங்கள மக்களும் வசிக்கும் பிரதேசங்களில் சிங்கள மொழியால் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாத நிலையில் சிங்கள மக்கள் இருந்து வருகின்றனர். எனவே, தமிழ் மக்கள் தமிழ்மொழியில் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில் மொழி உரிமை வழங்கப்பட வேண்டும். எனவே, அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு தமிழ்மொழி தெரிந்து இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அரசாங்க திணைக்களங்களில் பணிபுரியும் பெரும்பான்மை இனத்தவர்கள் கட்டாயமாக தமிழ்மொழி படித்து இருக்க வேண்டும். தமிழ்மொழியில் தமிழ் மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் அல்லது அதற்கு மேலாக தமிழ்மொழி பயிற்சி வழங்கப்பட வேண்டும்.

இப்படியான சில அடிப்படை உரிமைகள் தமிழ்மொழிக்கு அரசியல் யாப்பின் மூலம் வழங்கப்பட்டிருந்தாலும் அவை செயல்பாட்டில் இல்லையென்பதே தமிழ் மக்களுடைய பிரச்சினையாக இருந்து வருகிறது. இன்று பசறை பிரதேசத்திலுள்ள சமுர்த்தி அதிகாரிகளுக்கே மொழி உரிமை குறித்து விளக்கமளிக்கப்படுகிறது. காரணம் பசறை லுணுகலை பிரதேசத்திலே தமிழ், சிங்கள மக்கள் சம அளவில் செறிந்து வாழ்ந்து வருகின்றனர். எனவே தான் பசறை, லுணுகலை ஆகிய இரண்டு பிரதேச செயலகங்களும் தெரிவுசெய்யப்பட்டு மொழி உரிமை குறித்த செயலமர்வுகளை நடத்தி வருகிறோம்.

இலங்கை போன்ற சிறிய நாட்டில் யுத்தம் நடைபெறுவதை எந்தவொரு நாட்டு மக்களும் விரும்பமாட்டார்கள். ஆனால், சர்வதேச அளவில் ஆயுத வியாபாரம் செய்யும் வர்த்தகர்களே யுத்தத்தை அதிகமாக விரும்புவார்கள். இந்த சர்வதேச ஆயுத வியாபார கும்பலே இரு பக்கமும் ஆயுத வியாபாரம் மேற்கொண்டு நாட்டை சீரழிப்பவர்கள்.

இலங்கையில் தமிழ் இளைஞர்கள் ஏன் ஆயுதம் ஏந்தினர் என்பதற்கான காரணத்தை கண்டறிந்து அதற்கான தீர்வை தமிழ் மக்களுக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய காலப்பகுதி இதுவாகும்.

இந்த சந்தர்ப்பத்தை ஒருபொழுதும் அரசாங்கம் தவறவிட்டுவிடக் கூடாது. தமிழ்மொழிக்குரிய உரிமை அந்தஸ்து கட்டாயமாக வழங்கப்பட வேண்டும். அதற்கான ஒழுங்குகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். தமிழ்மொழியை சிங்களவர் படிக்க வேண்டும். அதேபோல சிங்கள மொழியை தமிழர் படிக்க வேண்டுமென்ற சட்டத்தை அரசாங்கம் கொண்டு வரவேண்டும் அல்லது பிரகடனப்படுத்தப்பட வேண்டும். பாடசாலைகளில் தரம் 1 முதல் 13 வரை சிங்கள, தமிழ் பாடங்களை கட்டாய பாடங்களாக்கப்பட வேண்டும்.

இப்படியான நுணுக்கமான சட்டத்தை அரசாங்கம் மேற்கொண்டு வரும் பட்சத்தில் தமிழ்மொழிக்கு தானாகவே உரிய அந்தஸ்து கிடைத்துவிடும்

மலை உச்சிகளில் காடுகளை வளர்த்தல்

010709rnawakka.jpgஇலங்கை யிலுள்ள மலை உச்சிகளில் காடுகளை வளர்க்கும் புதிய திட்டத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான பிரேரணையை சுற்றாடல் மற்றும் இயற்கை வள அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சமர்ப்பித்திருந்தார்.

இதன்படி கடல் மட்டத்திலிருந்து 1200 மீற்றர் உயரமான மலைப் பிரதேசங்களில் தேசிய சுற்றாடல் சட்டத்தின் கீழ் சுற்றாடல் பிரதேசமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ்க் கொண்டுவரப்படும். இதில் காடு வளர்க்கும் திட்டத்துக்கான நிதியை திறைசேரியிலிருந்தோ அல்லது வெளிநாட்டு உதவியாகவோ பெற்றுக்கொள்ளப்படும்.

இலங்கை அகதிகளின் பிள்ளைகளை அனுமதிப்பதற்கு தயாராக இருங்கள் – தமிழக பாடசாலைகளுக்கு மாநில அரசு அறிவுறுத்தல்

world-maps.jpgஇலங்கை அகதிகளின் பிள்ளைகளை அனுமதிப்பதற்கு தயாராக இருக்குமாறு தமிழக அரச பாடசாலைகளுக்கு மாநில அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அனுமதி கோரி பல்வேறு திணைக்களங்களுக்கு பாடசாலைகல்வித்துறை செயலாளர் எம்.குற்றாலலிங்கம் கடிதம் எழுதியுள்ளார்.

இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் முகாம்களின் நிலைமையில் முன்னேற்றம் ஏற்படாவிடின் அதிக எண்ணிக்கையான மாணவர்கள் வருகை தரக்கூடும் என்று ஈழம் அகதிகள் புனர்வாழ்வு அமைப்பின் பொருளாளர் எஸ்.சி.சந்திரகாசனை மேற்கோள்காட்டி , ரைம்ஸ் ஒவ் இன்டியா நேற்று தெரிவித்திருந்தது.

“இலங்கையின் முகாம்களில் சுமார் 3 இலட்சம் அகதிகள் உள்ளனர். அவர்கள் வெளியேறுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. அவர்களின் சொந்தக்கிராமங்களில் அவர்களை மீளக்குடியேற்றுமாறு இலங்கை அரசாங்கத்திடம் இந்தியா கோரிக்கை விடுத்து வருகிறது. இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. முகாம்களுக்குள் பாடசாலைகள் இருக்கின்றபோதும் அவை பொருத்தமானவையாக இல்லை. ஒழுங்கானபாடசாலைகளில் தமது பிள்ளை கல்வி கற்பதையே பெற்றோர் விரும்பக்கூடும். அதனால் இங்கு (தமிழகம்) வருவதற்கு அவர்கள் விரும்புவார்கள் என்று சந்திரகாசன் கூறியுள்ளார்.

இதேவேளை 29 ஜூன் 2009 திகதியிடப்பட்ட கடிதமொன்று பாடசாலை கல்விச் செயலாளரால் பாடசாலைக் கல்வி, ஆரம்பக்கல்வி, ஆதிதிராவிடர், பழங்குடிநலன், வருவாய் நிர்வாகம், பின்தங்கிய வர்க்கத்தினர், மிகப்பின்தங்கிய வர்க்கத்தினர், சிறுபான்மையினர் நலன், சமூகநலன், போஷாக்கு உணவு செயல்திட்ட திணைக்களங்கள் ஆகியவற்றின் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

12 ஆம் வகுப்பு வரை இலங்கை அகதிகளின் பிள்ளைகளை பாடசாலைகளில் அனுமதிக்குமாறு அக்கடிதத்தில் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. புதிதாக அனுமதிக்கப்படும் பிள்ளைகளுக்கு சீருடை, பாடசாலைப் புத்தகங்கள், தொப்பிகள், நண்பகல் உணவு என்பனவற்றை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை விவகாரம்; தலைமை தாங்குமாறு அமெரிக்க ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்

இலங்கையில் அண்மையில் முடிவடைந்த யுத்தத்தின்போது இடம்பெற்றதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரிக்க சர்வதேச ஆணைக்குழுவொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவிடம் 6 முன்னணி மனித உரிமைக்குழுக்கள் கேட்டுள்ளன.

இது தொடர்பாக ஒபாமாவிற்கு இந்த அமைப்புகள் கடிதம் எழுதியிருப்பதாக “ஸீநியூஸ் கொம்’ தெரிவித்திருக்கிறது. யுத்தத்தின் போது இலங்கை அரசபடையினராலும் விடுதலைப்புலிகளாலும் சர்வதேச மனிதாபிமான சட்டம் பாரதூரமான முறையில் மீறப்பட்டதை தாங்கள் ஆவணப்படுத்தியுள்ளதாக ஓபாமாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்த அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன சர்வதேச விசாரணைக்குழு ஒன்றுக்கு பகிரங்கமாக அழைப்பு விடுக்குமாறும் அதனை வென்றெடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவை ஒபாமாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன.

அத்துடன், இடம்பெயர்ந்த மக்களுக்கு முழுமையான பாதுகாப்பை அளிப்பதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சுயாதீனமான மனித உரிமை அமைப்புகள், ஊடகங்கள் முகாம்களுக்கும் முன்னர் மோதல் இடம்பெற்ற பகுதிகளுக்கும் மற்றும் மோதலால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் உள்ள இடங்களுக்கும் முழு அளவில் செல்வதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் இந்த மனித உரிமை அமைப்புகள் ஒபாமாவை கேட்டுள்ளன.

இந்த நடவடிக்கைகள் தொடர்பாக சர்வதேச சமூகத்திற்கு அமெரிக்கா தலைமை தாங்குவது இப்போது அவசியமானது என்றும் இதன் மூலம் உயிர்தப்பியுள்ள பொதுமக்களை பாதுகாக்கவும் மனிதப் பேரனர்த்தத்துக்கு பொறுப்பானவர்களை பதிலளிக்கும் கடப்பாடுடையவர்களாக்க இது தேவையெனவும் நேற்று முன்தினம் எழுதியுள்ள கடிதத்தில் இந்த அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இவ்வாறு செய்வதற்கு தவறுவதானது பெறுபேறுகள் குறித்து அச்சம் இல்லாமல் அரசாங்கங்கள் பாரிய அடாவடித்தனங்களில் ஈடுபடுவதை ஊக்கிவிப்பதாக அமையும். ஆதலாலேயே இந்தத்தருணத்தில் தங்களின் உடனடியான நடவடிக்கை முக்கியமானது என்றும் கடிதத்தில் இந்த மனித உரிமை அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.

ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர்களின் கல்வி நிலை பாதிப்பு; பெற்றோர் விசனம்

schoolgirls-sri-lanka.jpgமத்திய மாகாண கம்பளை கல்வி வலய புப்புரெஸ்ஸ க/கலைவாணி தமிழ் வித்தியாலயத்தில் கணிதம், விஞ்ஞானம், தமிழ்மொழி, ஆரம்பக்கல்வி ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதால் தமது பிள்ளைகளின் கல்வி நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர் விசனம் தெரிவிக்கின்றனர். 576 மாணவர்களைக் கொண்டு இயங்கிவரும் இப்பாடசாலையில் கற்பித்தல் பணிகளுக்கு 32 ஆசிரியர்கள் தேவையான நிலையில் தற்போது 13 ஆசிரியர்களே கடமையாற்றுகின்றனர்.

19 ஆசிரியர்கள் புதிதாக நியமனம் பெற்ற ஆசிரியர்களோடு அடங்கலாக கற்பித்து வந்த நிலையில் 5 ஆசிரியர்கள் பயிற்சியின் பொருட்டு ஆசிரியர் கலாசாலைக்கு சென்றுள்ளனர்.

அண்மையில் 11 ஆசிரியர்கள் புதிதாக நியமனம் பெற்ற போதும், பாடசாலையில் ஏற்கனவே இருந்த 11 ஆசிரியர்கள் மாற்றலாகிச் சென்றுவிட்டனர்.

இந்நிலையில், கணிதம், விஞ்ஞானம், தமிழ்மொழி பாடங்களைக் கற்பிக்க ஆசிரியர் இல்லாத நிலை தோன்றியுள்ளதுடன், ஆரம்பக்கல்வி ஆசிரியர்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது.

பிரதான பாடங்களைக் கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் இல்லாமையால் இப்பாடசாலையில் கற்கும் மாணவர்களின் கல்வி நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இங்கு நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுக்கின்றனர்.

இலங்கை விண்ணப்பித்திருக்கும் கடன் நாணய நிதியத்தின் நோக்கத்திற்கு “பரீட்சை’

சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை விண்ணப்பித்திருக்கும் 1.9 பில்லியன் உயர் கடன் நான்கு அல்லது ஐந்து வாரங்களில் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுவதாகவும் இது அந்த அமைப்பின் நோக்கத்திற்கான பரீட்சையாக அமையும் என்றும் பிரதி நிதியமைச்சரான சரத் அமுனுகம கூறியுள்ளார்.

இக் கடன் தொடர்பான பேச்சு வார்த்தைகள் சாதகமாக இருந்த நிலையில் அமெரிக்காவும் பிரிட்டனும் இலங்கையின் கடன் விண்ணப்பம் தொடர்பாக அறிக்கைகளை வெளியிட ஆரம்பித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

சர்வதேச அரசியலுக்குள் இலங்கை அகப்பட்டுள்ளது. இது பொருளாதார விவகாரம் அல்ல. அடுத்த நான்கு அல்லது ஐந்து வாரங்களுக்குள் பதில் என்னவென்பது பற்றி எமக்குத் தெரியவரும் என்று கொழும்பில் இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மாநாட்டில் அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார்.

1.9 மில்லியன் டொலரை அவர்கள் வழங்குவார்களா என்பது தொடர்பாக அந்த நிறுவனத்தின் நோக்கத்திற்கு இது பாரிய பரீட்சையாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேசமயம், பேச்சு வார்த்தைகள் வெற்றிகரமாக பூர்த்தியடைந்துள்ளதாகவும் கடனை வழங்காவிடின் அவர்கள் தரப்பில் (நாணய நிதியம்) சங்கடமான சூழ்நிலை ஏற்படும் என்றும் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் கூறியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் சரியான விடயத்தை மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது என்றும் கப்ரால் கூறியுள்ளார்.

அன்பென்று கொட்டு முரசே!!! – தோழர் சிவம் நினைவு நிகழ்வு : தேடகம்

Comrade_Siva_Meetingதோழர் சிவம் அவர்களின் நினைவு நிகழ்வு ரொறன்ரோவில் நிகழ்கிறது. தேடகம் அமைப்பினரால் யூலை 4ல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில் இலங்கையில் இருந்து சி சிவசேகரம் கலந்துகொள்கிறார். இவரே தோழர் சிவம் பற்றிய நினைவுப் பேருரையை ஆற்றுகிறார். சமூக ஒடுக்குமுறைக்கு எதிராய் போராளியாய் எழுந்து தன் வாழ்நாய் முழுவதும் மானிடத்திற்காய் உழைத்தவர் தோழர் சிவம் என்ற தோழர் கணேசமூர்த்தி சிவகுமாரன் என தேடகம் அவரை கௌரவித்து உள்ளது. அன்பென்று கொட்டுமுரசே என்ற தலைப்பில் இந்நிகழ்வை தேடகம் குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

Further Details : Comrade_Siva_Meeting

Related Articles:

கம்யூனிஸ்ட் ஆர்வலர் சிவம் கனடாவில் மரணம்

கொம்யூனிஸ்ட் சிவா காலமானார்! : தேடகம் (செய்திக் குறிப்பு)

கனடாவில் நாளை ‘உயிர்த்தெழுவோம்’: மாபெரும் எழுச்சி நிகழ்வு

kalam-pulam.jpgகனடியத் தமிழ் மாணவர் சமூகம், கனடியத் தமிழர் சமூகத்துடன் இணைந்து முன்னெடுக்கும் ‘உயிர்த்தெழுவோம்’ எழுச்சி நிகழ்வு ரொறன்ரோவில் குயின்ஸ்பாக் – ஒன்ராரியோ பாராளுமன்ற முன்றலில் நாளை சனிக்கிழமை 4 ம் திகதி மாலை 4.00 மணி- முதல் 8.00 மணி வரை நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

இலங்கையரை ஆஸி.க்கு கடத்தியதாக பிரிட்டிஷ் பிரஜை மீது குற்றச்சாட்டு

boat.jpgஅவுஸ்தி ரேலியாவுக்கு இலங்கையரை சட்ட விரோதமாகக் கடத்தி வரும் நடவடிக்கையில் பிரிட்டனைச் சேர்ந்த ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக அவுஸ்திரேலியப் பொலிஸார் குற்றஞ்சாட்டியுள்ளனர். தனது போர்டிங் அனுமதி அட்டையை இலங்கையைச் சேர்ந்த ஒருவர் பயன்படுத்திக்கொண்டு கடந்த திங்கட்கிழமை அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்க 63 வயதுடைய ஒருநபர் இடமளித்ததாகக் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஏனைய பயணிகளின் போர்டிங் அட்டைகளைப் பயன்படுத்தி மேலும் இரு இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்க இந்த நபர் உதவியதாகவும் நம்பப்படுகிறது.

சிங்கப்பூரிலிருந்து டார்வினுக்கு திங்கட்கிழமை விமானம் மூலம் வந்த இந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அந்த நபர் மீது 3 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவர் குற்றவாளியென நிரூபிக்கப்பட்டால் ஆகக்கூடியது 10 வருடங்கள் அவர் சிறைவாசம் அனுபவிக்க நேரிடும். டார்வின் நீதிவான் நீதிமன்றத்தில் இந்த நபர் ஆஜர் செய்யப்படவிருப்பதாக “நெரால்ட் சன்’ பத்திரிகை நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளது.