அவுஸ்தி ரேலியாவுக்கு இலங்கையரை சட்ட விரோதமாகக் கடத்தி வரும் நடவடிக்கையில் பிரிட்டனைச் சேர்ந்த ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக அவுஸ்திரேலியப் பொலிஸார் குற்றஞ்சாட்டியுள்ளனர். தனது போர்டிங் அனுமதி அட்டையை இலங்கையைச் சேர்ந்த ஒருவர் பயன்படுத்திக்கொண்டு கடந்த திங்கட்கிழமை அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்க 63 வயதுடைய ஒருநபர் இடமளித்ததாகக் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஏனைய பயணிகளின் போர்டிங் அட்டைகளைப் பயன்படுத்தி மேலும் இரு இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்க இந்த நபர் உதவியதாகவும் நம்பப்படுகிறது.
சிங்கப்பூரிலிருந்து டார்வினுக்கு திங்கட்கிழமை விமானம் மூலம் வந்த இந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அந்த நபர் மீது 3 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவர் குற்றவாளியென நிரூபிக்கப்பட்டால் ஆகக்கூடியது 10 வருடங்கள் அவர் சிறைவாசம் அனுபவிக்க நேரிடும். டார்வின் நீதிவான் நீதிமன்றத்தில் இந்த நபர் ஆஜர் செய்யப்படவிருப்பதாக “நெரால்ட் சன்’ பத்திரிகை நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளது.