July

July

கண்ணிகள் அகற்றும் பணிக்கு 500 இந்திய இராணுவத்தினர்

sarath-pon-eka.jpgவடக்கு, கிழக்கில் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் புலிகளால் புதைத்து வைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளுக்கு உதவ 500 பேர் கொண்ட இந்திய இராணுவக் குழு வெகுவிரைவில் இலங்கை வரவுள்ளதாக புதிய பிரதான பாதுகாப்பு அதிகாரி ஜெனரல் சரத் பொன் சேகா தெரிவித்தார்.

மக்களை வெகுவிரைவில் மீளக் குடியமர்த்தும் நோக்குடன் எமது பாதுகாப்புப் படைப்பிரிவினரும் வெளிநாட்டு நிறுவனங்களும் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் அதேசமயம் இவர்களுடன் இணைந்து சேவையாற்றும் வகையிலேயே 500 இந்திய இராணுவ வீரர்களை அனுப்ப இணக்கம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

புதிய பிரதான பாதுகாப்பு அதிகாரியாக நேற்று கடமைகளை பொறுப்பேற்ற ஜெனரல் சரத் பொன்சேகா ஊடகவியலாளர் மத்தியில் உரையாற்றும் போது மேலும் தகவல் தருகையில்:

புலிகளால் புதைத்து வைக்கப்பட்ட கண்ணிவெடிகளுக்கு மத்தியிலேயே எமது பாதுகாப்புப் படைவீரர்கள் களமுனையில் முன்னேறிச் சென்றனர். இதன் காரணமாக பலர் உயிர் நீத்ததுடன், மேலும் பலர் காயமடைந்தனர்.

வடக்கின் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட அதேசமயம் கிழக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் எமது படை வீரர்களும், வெளிநாட்டு நிறுவனங்களும் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.  இவற்றில் அதிகமாகவும், வேகமாகவும் இராணுவத்தினரே மீட்டெடுத்தனர்.

கண்ணிவெடி அகற்றும் பணி என்பது மிகவும் இலகுவானதும், சுருக்கமாக செய்யக்கூடியதுமான ஒரு காரியமல்ல. காட்டுப் பகுதிகளிலும், சதுப்பு நிலப் பரப்பிலும் புதைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளை மிக இலகுவாக அகற்ற முடியாது. எனினும் வெகுவிரைவில் அகற்றத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவை முழுமையாக அகற்றப்பட்ட பின்னர் மக்களை மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தபால் மூலவாக்களிப்பு: வாக்குச்சீட்டுகள் நேற்று அனுப்பி வைப்பு

வவுனியா நகர சபை தேர்தலுக்கு தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித் தவர்களில் தெரிவான 183 பேருக்குரிய வாக்குச் சீட்டு க்கள் நேற்று புதன்கிழமை அனுப்பிவைக்கப்பட்டதென மாவட்ட தேர்தல் உதவி ஆணையாளர் ஏ. எஸ். கருணாநிதி தெரிவித்தார்.

தபால் மூல வாக்களிப்பு இம்மாதம் 27ம், 28ம் திகதி களில் நடைபெறுமெனவும் அவர் சொன்னார்.

அடுத்த மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ள வவுனியா நகர சபைத் தேர்தலுக்குரிய வாக்கு சீட்டுக்கள் வவுனியா தேர்தல் அலுவலகத்திற்கு வந்து சேர்ந்துள்ளன. மிகவும் பாதுகாப்பான முறையில் வாக்குச் சீட்டுக்கள் வைக்கப் பட்டுள்ளதென மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

பங்களாதேஷ் வீரர்களுக்கு அபராதம்

16-07-2009.jpgமேற் கிந்திய தீவுகளுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் நடுவரிடம் அளவுக்கு அதிகமாக முறையீடு செய்த பங்களாதேஷ் சகலதுறை ஆட்டக்காரர் ஷகீப் அல் ஹஸன் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஷஹ்தாத் ஹொஸை ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை முடிவடைந்த பங்களாதேஷ்மேற்கிந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் பங்களாதேஷ் அணித்தலைவராக செயல்பட்ட ஷகீப் அல் ஹஸன் மற்றும் ஷஹ்தாத் ஹொஸை ஆகியோர் போட்டி நடுவரிடம் அளவுக்கு அதிகமாக முறையீடு செய்தனர்.

இது ஐ.சி.சி. ஒழுக்க விதியை மீறும் செயல் என ஐ.சி.சி. போட்டி மத்தியஸ்தர் அன்டி பைக்ரொப்ட் தெரிவித்துள்ளார். இதற்காக ஷகீப் அல் ஹஸனுக்கு போட்டிக்கட்டணத்தில் இருந்து 10 வீதமும் ஷஹ்தாத் ஹொஸைனுக்கு 5 வீதமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதே குற்றத்திற்காக பங்களாதேஷ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் இம்ருல் கைஸுக்கு ஐ.சி.சி. எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரஷ்யா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான் ஜனாதிபதிகள் 29, 30 இல் முக்கிய பேச்சுவார்த்தையில் பங்கேற்பர்

ரஷ்யா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் இம் மாதம் 29, 30 ம் திகதிகளில் சந்திக்கவுள்ளனர். தஜிகிஸ்தான் தலைநகர் டுஷான்பேயில் இச் சந்திப்பு இடம் பெறவுள்ளது.

எரிவாயு போக்குவரத்து, தொடர்பாடல், பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் சம்பந்தமாகப் பேச்சுவார்த்தை நடாத்தும் நோக்குடன் இத் தலைவர்கள் சந்திக்கவுள்ளதாக தஜிகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரஷ்ய ஜனாதிபதி மெத்விடில், பாகிஸ்தான் ஜனாதிபதி ஆஸிப் அலிசர்தாரி, ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமித் அல் கார்ஸாயி ஆகியோர் இரண்டு மாதங்க ளுக்கு முன்னர் ரஷ்யாவில் சந்தித்தனர். இதன் போது பிராந்திய பாதுகாப்பு, வர்த்தகம் பற்றிப் பேசினர்.

இப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் ஏற்பட்டுள்ள முன் னேற்றங்கள் அதிலுள்ள தடைகள் பற்றியும் தஜிகிஸ் தான் மாநாட்டில் ஆரா யப்படவுள்ளது.  சோவியத் ரஷ்யா உடைந்த பின்னர் தஜிகிஸ்தானும், ரஷ்யாவும் இறுக்கமான உறவுகளில் உள்ளன.

தஜிகிஸ்தானிலுள்ள மின்சார உற்பத்தித் திட்டங்கள் பலவற்றை ரஷ்யாவே நடாத்துகின்றது. இதனூடாக மத்தியாசியாவுக்கான மின்சாரத்தை விஸ்தரிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப் படவுள்ளன. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஜனாதிப திகளும் இந்த மின்சாரத் திட்டங்களைப்பார்வையிடுவர். பல மில்லியன் ரூபா செலவில் இந்த மின்சாரம் ஏனைய நாடுகளுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளது.

54 பணிப்பெண்கள் நாடு திரும்பினர்

housemaids.jpgசவூதி அரேபியாவில் பணிப்பெண்களாக பணிபுரிந்து வந்த 54 பெண்கள்  நாடு திரும்பியுள்ளனர்.  தாங்கள் பணிபுரிந்த இடங்களில் போதிய சம்பளம் வழங்கப்படவில்லையென்றும், கஷ்டமான வேலைகளை தங்களுக்கு வேலைத் தளங்களில் செய்யுமாறு வற்புறுத்தியதுமே நாடு திரும்பியதற்கான காரணம் என அவர்கள் தெரிவித்தனர்.

இவர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளது.

ஜென்துல்லா அமைப்பின் 13 பேர் ஈரானில் தூக்கிலிடப்பட்டனர்

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர் புடைய 13 பேர் கடந்த செவ்வாய்க்கிழமை ஈரானில் தூக்கிலிடப்பட்டனர். இவர்கள் ஷிஆ முஸ்லிம்களுக்கெதிரான பல்வேறு குற்றச் செயல்களுடன் ஈடுபட்டதால் நீண்ட காலமாக சிறையிலடைக்கப்பட்டனர்.

ஆட் கடத்தல், கொலை, கொள்ளை, போதைவஸ்து வியாபாரம் மற்றும் வெளிநாட்டோரைக் கடத்துதல் போன்ற பல்வேறு குற்றச் செயல்களை “ஜென்துல்லா” என்ற அமைப்புக்காகச் செய்து வந்தனர்.

சுன்னி முஸ்லிம்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில் வாழும் ஷியா முஸ்லிம்களுக் கெதிராக சதி வேலைகள் செய்து ஈரானின் அமைதியான ஆட்சிக்குத் களங்கம் ஏற்படுத்தியோர்களாவர். ஈரானில் ஷியா முஸ்லிம்களே பெரும்பான்மையாக உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவர்கள் அனைவரும் ஷெஹ்டான் சிறைச் சாலையில் தூக்கிலிடப்பட்டதாகவும் இவர்களின் உறவினர்களும் இதற்காக அழைக்கப்பட்டு பொது மக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டதாக மாகாண தலைமை நீதிபதி கூறினார்.

இதில் ஜென்துல்லா அமைப்பின் தலைவர் அப்துல்லா மலிகின் சகோதரரான அப்துல்லா ரஹீமும் தூக்கிலிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷெஹ்டான் ஈரானின் பலூசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரமாகும். இது ஆப் கான், பாகிஸ்தான் எல்லைகளிலுள்ளது. இங்கு தான் ஷெஹ்டான் சிறைச்சாலையுள்ளது.

போதை வஸ்துக் கடத்தல்கள் அதிகம் நடை பெறும் பகுதியான இங்கு ஈரான் அரசுக்கெதிராக ஜென்துல்லாக்கள் பல தாக்குதல்களை நடத்தியுள்ளனர். அண்மையில் ஷியா முஸ்லிம் பள்ளிவாசலில் நடந்த தாக்குதலில் 25 பேர் பலியாகினர். இதற்கு ஜென்துல்லாவே உரிமைகோரியது.

ஏடு – அங்குரார்ப்பணக் கூட்டமும் கலை விழாவும் – 18th July

aedu-image-for-thesam1.jpg
ஏடு அங்குரார்ப்பணக் கூட்டமும் கலை விழாவும்.
Launching The Association for Education Development of Underprivileged – AEDU

Venue:
HARROW TEACHERS CENTRE, TUDOR ROAD, HARROW,MIDDLESEX, HA3 5PQ
Saturday – 18th July 2009, 5PM

Programme:
Introduction to AEDU
Presentation – Underprivileged Children
Orchestra
Live Music
Read the full details in the PDF

Tickets £10.00 under five s – Free
Contact: admin@aedu.info
www.aedu.info

இலங்கையின் வடக்க கிழக்கு பகுதியில் கடந்த 30 வருடங்களாக நடைபெற்ற யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நல்வாழ்விற்கு உதவம் வகையில் இந்த ஏடு அமைப்பு உருவாக்கப்பட்டு செயற்ப்பட்டுக் கொண்டிருக்கிறது, மட்டக்களப்பு வுவுனியா திருகோணமலை மன்னார் யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் தமது குழந்தைகள் நல பராமரிப்பு பாதுகாப்புத் திட்டங்களை ஆரம்பித்து இயங்கி வருகின்றனர்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு பலவிதமான கஸ்டங்களை அனுபவித்துவரும் எமது குழந்தைகளை பாதுகாக்க
ஓரிரு அமைப்புக்களே இயங்கிய போதிலும் மேலும் பல அமைப்புக்களின் ஒத்தழைப்பும் அவசியமும் இந்த குழந்தைகளுக்கு தேவைப்படுகின்றது. கடந்த கசப்பான ஆபத்தான காலங்களிலும் இந்த அமைப்பினரும் அமைப்பின் முக்கிய உறுப்பினர்களும் பல உதவிகளை குழந்தைகளுக்கு தனிப்படவே செய்து வந்திருந்தனர். இந்த அமைப்பின் அங்குரார்பணம் இவர்களை மேலும் ஊக்குவிப்பதற்கும் இவர்களது குழந்தைகள் நலன் சேவைகளை மேலும் பரவலாக்கவும் பல ஆதரவாளர்களையும் சேவையாளர்களையும் இணைத்துக்கொள்ளவும் உதவிசெய்யும்.

பல பில்லியன்கள் யுத்தத்திற்கு வழங்கிய புலம்பெயர் மக்களின் பொறுப்பிலிருந்து இந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்பிலிருந்தும் ஒதுங்கிவிட முடியாததாகும்.

—————————————————————————————————————-

அன்புடையீர்,
வாழ்வோம் வாழ்விப்போம்.

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக எமது தாய்மண்ணில் இடம்பெற்றுவரும் யுத்தமும், அதன் விளைவான இடப்பெயர்வுகளும்,அண்மையில் ஆயிரக்கணக்கான உயிர்களைக் காவுகொண்ட ஆழிப்பேரலையும் (வுளரயெஅi) எமது மக்களைப் பேரழிவுக்குள்ளாக்கியதோடு பெருந்துயரத்தினுள்ளும் இட்டுச் செல்வதை நாம்
கண்கூடாகக் கண்டுகொண்டிருக்கின்றோம்.

இத்தகைய சூழ்நிலையில் மிக மோசமான பாதிப்புக்களுக்கு உள்ளாவோர் சிறுவர்களும் பெண்களுமேயாவர். இன்று பல்லாயிரக் கணக்கான சிறார்கள் தாயையோ,தந்தையையோ,அன்றேல் இருவரையுமோ இழந்து பரிதவிக்கின்றனர். விதவைகளாக்கப்பட்டுள்ள பெண்கள் பல்லாயிரக் கணக்கினர். பெற்றோரை இழந்த
குழந்தைகளுக்காக சிறுவர் பராமரிப்பு நிலையங்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

பெற்றோர் உயிருடனுள்ள போதிலும் தொழில் வாய்ப்புக்கள் இயற்கையாகவோ,செயற்கையாகவோ தடுக்கப்படும் காரணத்தால் வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் பலர் சிறுவர் பராமரிப்பு இல்லங்களில் வளர்கின்ற கொடுமையை இங்கு பரக்கக் காணலாம்.
புள்ளி விபரங்களை எடுத்து நோக்குவோமாயின் பெற்றோர் உயிருடனிருந்த போதிலும் தம் பிள்ளைகளைப் பராமரிக்க இயலாமையால் அவர்கள் சிறுவர் பராமரிப்பு இல்லங்களை நாடுகின்றனர்.இதன் காரணமாகப் பெருமளவு சிறார்கள் சிறுவர் பராமரிப்பு இல்லங்களில் வாழ்வது வெளிக் கொணரப்பட்டுள்ளது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி பொருளாதார பலமின்மையால் பல்லாயிரக்கணக்கான சிறார்கள் பாடசாலைக் கல்விக்கு முற்றுப்பள்ளி வைத்துவிட்டு இடைவிலகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பல சிறார்கள் பாடசாலைக்கே செல்ல முடியாத நிலைமையும் வெளிப்பட்டுள்ளது.

இத்தகைய துர்ப்பாக்கிய நிலை நீடிக்குமாயின் எமது சமூகம் பேரழிவுக்குள்ளாகும் என்பதை எவரும் மறுக்கவியலாது.

நகரப் புறங்களில் அமைந்துள்ள சில பாடசாலைகள் கல்வி அமைச்சு, கல்வித் திணைக்களம்,புலம்பெயர்ந்து வாழும் மக்கள் ஆகியோரால் பேணப்படுவதனால் சிற்சில வசதிகளைப் பெற்றபோதினும் பின்தங்கிய கிராமப்புறப் பாடசாலைகள் கவனிப்புக்குள்ளாகாததுடன் அப்பகுதி மாணவர்களது எதிர்காலம் குறித்துக்
கவலைப்படாத அவலமும் இல்லையென்று சொல்வதற்கில்லை.

பெற்றாரை இழந்து ஆதரவற்றுக் காணப்படும் சிறார்களும்,வறுமைக்கோட்டின் கீ;ழ் வாழ்ந்துவரும் குடும்பங்களைச் சேர்ந்த சிறார்களும் தம் பாடசாலைக் கல்வியைத் தடையின்றித் தொடரவும் அன்பும் அரவணைப்பும் பெற்றுத் தத்தம் குடும்பங்களுடனோ, உற்றார் உறவினர்களுடனோ குடும்பச் சூழலில் தங்கி வளரும் வாய்ப்பை வழங்கவும், இப்பிள்ளைகள் நிறுவனப்படுத்தப்படுவதைத் தவிர்க்கவும், பின்தங்கிய கிராமப்புறப் பிரதேசப் பாடசாலைகளின் கல்வித்தர மேம்பாட்டுக்கு உதவுவதையும், நோக்கங்களாகக்
கொண்டு தாபிக்கப்பட்டதே எமது அமைப்பு.

இந்த நோக்கங்களை எய்தும் பொருட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள இவ்வமைப்பு வெற்றிகரமாகத் தன் பணியைத் தொடர்கிறது. இவ்வமைப்பின் செயற்பாட்டாளர்களது நோக்கங்களைப் பலப்படுத்தவும், மேற்படி செயற்பாடுகளை வட-கிழக்கின் அனைத்து மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கவும,; தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம்.. இதன்பொருட்டுத் தங்களது ஆக்கபூர்வமான ஆதரவையும் ஊக்குவிப்பையும் நாடி நிற்கின்றோம்.

18.07.2009 சனிக்கிழமை நடைபெறவுள்ள எங்கள் அமைப்பின் அறிமுக நிகழ்வில் கலந்து கொள்வதன் மூலம் தங்கள் மேலான ஆதரவை நல்குமாறு பணிவன்புடன் வேண்டுகின்றோம்.

[Launch of AEDU on Saturday the 18th of July 2009 @ 5.00 pm at Harrow Teachers’ Centre, Tudor Road, Wealdstone, Harrow, Middlesex Ha3 5PQ, Nearest tube station- Harrow & Wealdstone. Contact us for Dinner tickets (£10 per person)].

ஆதரவற்ற மற்றும் வறுமையில் வாடும் சிறார்களுக்கு கல்வி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதோடு, அவர்கள் நிறுவன மயப்படுத்தப்படுவதைத் தவிர்த்து வளமுள்ள நற்பிரஜைகளாக்குவதே எமது இலக்காகும்.

பெற்றாரையும், உற்றாரையும், உடன் பிறப்புக்களையும் காலத்தின் கட்டாயத்தால் பிரிந்து, அன்பையும் அரவணைப்பையும் இழந்து பரிதாபகரமான சூழலில் அல்லலுற்றுக்கொண்டிருக்கும் சின்னஞ்சிறாரை காப்பும் கணிப்பும் உடையவர்களாக மாற்றியமைக்க உதவுவதே எமது நோக்காகும்.

இது தொடர்பான மேலதிக விபரங்களும், நடைமுறைப் படுத்தப்படும் முறையும், எமது அறிமுக நிகழ்வின்போது தெளிவுறுத்தப்படும்.

அன்ன சத்திரம் ஆயிரம் நாட்டல்
ஆலயம் பதினாயிரம் கட்டல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர்ஏழைக்(கு) எழுத்தறிவித்தல் — மகாகவி பாரதி.

இங்ஙனம்,

Admin-AEDU

ஈரான் விமான விபத்தில் 169 பேர் பலி

iran-plane.jpgஈரானில் 169 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த அனைவரும் பலியாகிவிட்டதாக அஞ்சப்படுகிறது.

காஸ்பியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானம் தெஹ்ரானில் இருந்து ஆர்மீனிய தலைநகர் யெரவான் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது விழுந்து நொறுங்கியது.

தெஹ்ரானுக்கு வட மேற்கே 75 கி.மீ. தொலைவில் கஸ்வின் என்ற நகருக்கு அருகே ஜன்னதாபாத் என்ற கிராமத்தில் விமானம் விழுந்தது.

விமானம் சிதறிவிட்டதாகவும் அதன் பல பாகங்கள் எரிந்து நாசமாகிவிட்டதாகவும் கஸ்வின் அவசரகால உதவி மையம் தெரிவித்துள்ளது. இதனால் அதிலிருந்த யாரும் உயிர் தப்பியிருக்க வாய்ப்பிலை என்று தெரிகிறது.காஸ்பியன் ஏர்லைன்ஸ் ஈரான்-ரஷ்யா இணைந்து நடத்தி வரும் கூட்டு நிறுவனமாகும்.

ஜனாதிபதியுடன் பேச்சு நடத்த தமிழ் கூட்டமைப்பினர் ஆர்வம்

sampanthr.jpgவவுனியா முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள சுமார் மூன்று லட்சம் தமிழ் அகதிகளின் வாழ்வியல் பிரச்சினைகள் மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு போன்ற முக்கிய விடயங்கள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தனித்துவமான சந்திப்பு ஒன்றை மேற்கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இத்தகைய சந்திப்புக்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருமாறு கோரும் கடிதம் ஒன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் அடுத்த ஓரிரு தினங்களில் ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பார் என தெரியவருகின்றது.

அணிசேரா நாடுகளின் உச்சிமாநாட்டில் பங்குபற்றுவதற்காக எகிப்துக்குச் சென்றிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாடு திரும்பியதும்  பெரும்பாலும் இந்த வார இறுதியில் அவரது பரிசீலனைக்குக் கிடைக்கக்கூடியதாகக் கூட்டமைப்பின் தலைமைப்பீடம் இக்கடிதத்தை அவருக்கு அனுப்பிவைக்கும் என்றும் கூறப்படுகின்றது.
இக்கடிதம் கிடைத்து, கூட்டமைப்பினரைத் தனியாகச் சந்தித்துப் பேசுவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இணங்குவாரானால்  பெரும்பாலும் அடுத்த வாரம் அளவில்  இந்தச் சந்திப்பு இடம்பெறக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன என்றும் கூறப்படுகின்றது.

இலங்கையில் பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாத்தமைக்கான விருது “உதயன்”, “சுடர் ஒளி” நிறுவனத்துக்கு

sudaroli_.gifஇலங் கையில் பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாத்தற்கான  அதிஉயர் கௌரவ விருது “உதயன்” “சுடர் ஒளி” பத்திரிகைக்கு வழங்கப் பட்டிருக்கிறது. இதழியல் துறையில் சிறந்த செயற்பாடுகளுக்கான விருது வழங்கும் விழா கொழும்பில் நேற்று இடம்பெற்ற போது இந்த விருது வழங்கப்பட்டது.

இலங்கைப் பத்திரிகை ஆசிரியர் சங்கமும் இலங்கைப் பத்திரிகை நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்து நடத்திவரும் இதழியல் துறையில் சிறந்த செயற்பாடு களுக்கான பத்தாவது விழா நேற்றிரவு கொழும்பு மவுண்ட்லவேனியா ஹொட்டலில் நடைபெற்றது. 2008 ஆம் ஆண்டில் சிறந்த இதழியல் பெறுபேறுக்கான இந்த விருது வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாக இந்தியாவின் பிரபல்யமான சமூக செயற்பாட்டாளர் திருமதி அருணா றோய் பங்குபற்றினார்.

இந்த விருது வழங்கும் நிகழ்வில் முக்கிய அம்சமாக இலங்கையில் பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாத்தமைக்கான ” சேபால குணசேன”விருது வழங்கும் கௌரவம் இடம்பெற்றது. அச்சுறுத்தல்கள், வன்முறை மிரட்டல்கள், உச்ச நெருக்கடிகள் போன்றவற்றுக்கும் மத்தியிலும் யாழ்.குடாநாட்டில் இருந்து சளைக்காது போராடி வரும் “உதயன்”நிறுவனத்துக்கும் அதன் பிரதம ஆசிரியருக்கும் ஏனைய ஊழியர்களுக்கும் இந்த விருது வழங்கிக் கௌரவிக்கப்படுவதாக நிகழ்வில் அறிவிக்கப்பட்டது. பலத்த கரகோஷத்தின் மத்தியில் “உதயன்”,”சுடர் ஒளி”ஆசிரியர் என். வித்தியாதரன் விருதைப் பெற்றுக்கொண்டார்.
 
பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இந்த வருடாந்த  விருது வழங்கும் நிகழ்வு ஆரம் பிக்கப்பட்ட போதும்  “துணிச்சலான பத்திரிகைக்கான விருது” உதயன் பத்திரிகைக்கு பத்திரிகை ஆசிரியர் சம்மேளனத்தால் வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.