July

July

யாழ். டிப்போவுக்கு இன்னும் இரு தினங்களில் 50 பஸ் வண்டிகள் – அமைச்சர் டளஸ் அழகப்பெரும தகவல்

யாழ். பஸ் டிப்போவுக்கு இன்னும் இரு தினங்களில் 50 பஸ் வண்டிகள் வழங்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெரும இன்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் யாழ். தேர்தல் பிரசார அலுவலகத்தில் இன்று காலை தமது தலைமையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தகவல் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். கொழும்பில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட சுமார் 65 ஊடகவியலாளர் மத்தியில் அமைச்சர் தொடர்ந்தும் தகவல் தருகையில்,

வட பகுதி போக்குவரத்து நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் யாழ். பஸ் டிப்போ இன்றும் இரு தினங்களில் முன்மாதிரி டிப்போவாக தரம் உயர்த்தப்படும். அதனை முன்னி;ட்டே 50 பஸ் வண்டிகளும் 20 மில்லியன் ரூபா பெறுமதியான வாகன உதிரிப்பாகங்களும் வழங்கப்படவுள்ளன.

அத்துடன் யாழ் – கொழும்பு, யாழ் – கண்டி, யாழ் -புத்தளம், மற்றும் யாழ் – அநுராதபுரம் புதிய பஸ் சேவைகளும் விரைவில் ஆரம்பிக்கப்படும். மேலும் ஏ 9 வீதியினூடாக இலங்கை போக்குவரத்து சபை பொதுப் போக்குவரத்தை ஆரம்பிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்றும் அமைச்சர் கூறினார்.

புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான எரிபொருட்கள் மீட்பு!

புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் படையினர் நேற்று நடத்திய தேடுதலின்போது 25,000 லீடர் பெற்றோல் மற்றும் 9 பெரல்கள் அடங்கிய இன்ஜின் ஒயில் என்பன கைப்பற்றப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

படையினருக்குக் கிடைத்துவரும் இரகசியத் தகவலையடுத்து இராணுவத்தின் 56 ஆவது படைப்பிரிவினர் புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டுள்ள பெருந்தொகையான ஆயுதங்கள் மற்றும் எரிபொருட்கள் என்பவற்றைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட இந்த எரிபொருட்கள் கடற்புலிகளின் தேவைகளுக்காக ஆனந்தபுரம் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுவிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் தொடர்ந்து நடைபெறுவதாக படைத்தரப்பினர் தெரிவித்துள்ளனர்

பாதாள உலகக் குழுவினரை ஆயுதங்களுடன் சரணடையுமாறு கோத்தபாய உத்தரவு

kottabaya.jpgஆயுதங்களுடன் சரணடையுமாறு பாதாள உலகக் குழுவினருக்கு, பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அருகில் இருக்கும் காவல்துறை நிலையத்தில் ஆயுதங்களுடன் பாதாள உலகக் குழுவினர் சரணடைய வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு அரசியல் தலைவரும் பாதாள உலகக் குழுவினருடன் தொடர்புகளைப் பேணக் கூடாது எனவும் அவ்வாறு பேணுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

துறைமுகத்தில் தேயிலை ஏல விற்பனை நடைபெறும் போது கூட பாதாள உலகக் குழுவினர் லஞ்சம் பெற்றுக் கொள்வதாகத் தமக்கு தகவல் கிட்டியுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில உயர் காவல்துறை அதிகாரிகளும் பல்வேறு வழிகளில் கப்பம் கோரி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். கப்பம் அல்லது லஞ்சம் பெற்றுக் கொள்ளும் காவல்துறை அதிகாரிகள் குறித்து தகவல்களை வழங்குமாறு அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பாதாள உலகக் குழுவினரைப் பூண்டோடு அழிக்கும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதென கோதபாய ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு நிரந்தரக் காணிகள் – அமைச்சர் டி.எம் ஜயரத்ன நடவடிக்கை

முதற் தடவையாக தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கத்தினால் சொந்தமாகக் காணிகள் வழங்கப்படுகின்றன. பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் டி.எம். ஜயரத்னவின் தோட்டக் கிராம ஒருங்கிணைப்புத் திட்டத்தின் கீழ் தோட்டத் தொழிலாளர்களுக்கு சொந்தமாகக் காணிகள் வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின் கீழ் தோட்டப் பகுதிகளில் தற்காலிக வசிப்பிடங்களில் உள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏழு பேர்ச் வீதம் காணிகளை வழங்கி அதற்கான நிரந்தர அனுமதிப் பத்திரங்களும்; வழங்கப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக கண்டி மாவட்டத்தில் கம்பளை தேர்தல் தொகுதியில் இந்தத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஊவா மாகாணத்தில் பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இவ்வாறு வழங்கப்படும் காணிகள் உள்ள பகுதிளுக்கு குடி நீர், மின்சாரம், வீதி அபிவிருத்தி உட்பட அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. மஹிந்த சிந்தனைக்கு ஏற்ப தோட்டத் தொழிலாளர்களின் மேம்பாட்டுக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசகை;கு ஏற்ப இத்திட்டம் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் ஜயரத்ன தெரிவித்தார்

ஆகஸ்ட் முதல் யாழில் அத்தியாவசிய பொருட்கள் கொழும்பு விலையில் – அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தகவல்

ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் கொழும்பு விலைக்கே யாழ்ப்பாணத்தில் சகல அத்தியாவசியப் பொருட்களையும் பொது மக்கள் பெற்றுக்கொள்ள முடியும் என மின்சக்தி எரிசக்தி அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் யாழ். தேர்தல் பிரசார அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தகவல் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். கொழும்பில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட சுமார் 65 ஊடகவியலாளர் மத்தியில் அமைச்சர் தமிழ் மொழியில் உரையாற்றினார். அவர் தொடர்ந்தும் தகவல் தருகையில், கொழும்பு விலைக்கே அத்தியாவசிய உணவுப் பொருட்களை யாழ்ப்பாணத்திலும் விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என்ற ஜனாதிபதியின் உத்தரவு ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் அமுலாகின்றது.

யாழ். வர்த்க சமூகத்துடன் இது தொடர்பான பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் எதிர்வரும் 26 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இரு கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்கள் திறக்கப்படவுள்ளன.

கொழும்பிலிருந்து பொருட்களை ஏ 9 வீதியூடாக யாழ். கொண்டுவரும்போது விதிக்கப்படும் வரிகள் குறைக்கப்பட வேண்டும் என யாழ் வர்த்தகர்கள் விடுத்த வேண்டுகோள் கவனத்தில் கொள்ளப்பட்டு படைத்தரப்பினருடன் பேசி அதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் கூறினார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த, கொழும்பு மாவட்ட முன்னாள் முதலமைச்சர் ரெஜினோல்ட் குரே ஆகியேர் உட்பட முக்கிய அரசாங்க அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

மைக்கல் ஜாக்ஸனின் குழந்தைகளில் இரண்டுக்கு நானே தந்தை – அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் தகவல்

மறைந்த பிரபல பொப் இசைப் பாடகர் மைக்கல் ஜாக்ஸன் குழந்தைகள் விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஜாக்ஸனுக்கு, மூன்று குழந்தைகள் உள்ளனர். அந்தக் குழந்தைகளை யார் பராமரிப்பது என்பது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில்; நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், ஜாக்ஸனின் இரண்டு குழந்தைகளுக்கு தாமே தந்தை என அவருக்கு 25 ஆண்டுகளுக்கு மேலாக தோல் நோய் சிகிச்சை அளித்து வந்த டாக்டர் ஆர்னால்ட் கெலின் கூறியுள்ளார்.

ஜாக்சனின் மூன்று குழந்தைகளில், மூத்த இரண்டு குழந்தைகளான பிரின்ஸ் மைக்கல் (வயது 12) மற்றும் பாரிஸ் (வயது 11) ஆகியோருக்கு நானே உண்மையான தந்தை. அதனால், அவர்களை என் பாதுகாப்பில் வளர்க்க உரிமை கோரி, கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமது வக்கீல்களுடன் ஆலோசித்து வருவதாகவும் பிரின்ஸ், பாரிஸ் இருவரும் ஜாக்ஸனின் மனைவியான டெப்பி மூலம் தமக்குப் பிறந்தவர்கள். எனவும் கூறியுள்ளார். அவர்கள், என் குழந்தைகள் தான் என்பதை என்னால் நிரூபிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஜாக்ஸனின் இரண்டாவது மனைவியான டெப்பி ரோவே, 1996ம் ஆண்டில் டாக்டர் ஆர்னோல்ட் கெலினிடம்; தொழில் புரிந்துள்ளார். அப்போது தான் ஜாக்ஸன் அவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

நிலவில் மனிதன் காலடி எடுத்து வைத்து இன்றுடன் 40 வருடங்கள் நிறைவு. – புன்னியாமீன்

moon.jpg40 வருடங்களுக்கு முன்பு அதாவது 1969ம் ஆண்டு ஜூலை மாதம் 20ம் திகதி நீல் ஆம்ஸ்ட்ரோங், எட்வின் ஆல்ட்ரின், மைக்கேல் கொலின்ஸ் ஆகியோருடன் சென்ற அமெரிக்காவின் அப்பல்லோ விண்கலம் சந்திரனுக்கு மறுபக்கத்தில் இருக்கும்போது, “ஈகிள்” என்று பெயர் கொண்ட சந்திரக் கூறு, “கொலம்பியா”விலிருந்து பிரிந்தது. கொலின்ஸ் கொலம்பியாவிலேயே இருக்க, ஆம்ஸ்ட்ரோங்கையும், அல்ட்ரினையும் சுமந்துகொண்டு ஈகிள் நிலாவின் மேற்பரப்பை நோக்கி இறங்கியது.

நிலவில் காலடி எடுத்து வைத்த முதல் மனிதன் என்ற பெருமையை நீல் ஆம்ஸ்ட்ரோங் பெற்றுக் கொண்டார். இப் பிரதேசம் பின்னர் “அமைதித் தளம்” (Tranquility Base) என அழைக்கப்பட்டது. சந்திரனில் நீல் ஆம்ஸ்ட்ராங் கூறிய கூற்று – ஒரு மனிதனைப் பொறுத்த அளவில் இது ஒரு சிறிய காலடி, மனித இனத்துக்கு ஒரு பாரிய பாய்ச்சல். அப்பல்லோ 11 ( Apollo 11 ) பயணத்திட்டமே சந்திரனிலிறங்கிய முதல் ஆளேற்றிய இறக்கமாகும். இது அப்பல்லோ திட்டத்தில் 5 ஆவது ஆளேற்றிய பயணத் திட்டம்.

ஜோன் எப். கென்னடி தலைமையிலான அமெரிக்க அரசு மேற்கொண்ட இந்த வியப்புக்குரிய பயணம் அமெரிக்கர்களை விண்வெளித்துறையில் தனியிடத்தில் அமர வைத்தது. அறிவியல் துறையின் வளர்ச்சியி்ல் சாதனைக்குரிய மைல் கல் இந்த நிகழ்ச்சி என்றாலும் கூட, சோவியத் யூனியனுக்குப் போட்டியாக உருவானதே நிலவுப் பயணம் என்பதே நிஜம். இது ஒரு வரலாற்று நிகழ்வாக காணப்பட்டாலும் கூட இந்த நிகழ்வு பற்றியும் பல்வேறு விமர்சனங்களும் சந்தேகங்களும் வெளிவரத்தான் செய்தன.

அப்பல்லோ திட்டம் என்பது 1961-1972 வரை, ஐக்கிய அமெரிக்காவினால் நடைமுறைப்படுத்தப்பட்ட, ஒரு தொடரான மனித விண்வெளித் திட்டமாகும். இது, 1960களுக்குள் ஒரு மனிதனைச் சந்திரனில் இறக்கிப் பாதுகாப்பாகப் பூமிக்குத் திருப்பிக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. 1969ல் அப்பல்லோ 11 திட்டத்தின் மூலம், இந்த நோக்கம் நிறைவேறியது. சந்திரனில், பாதம் பதித்த முதல் மனிதனால் மேற்கொள்ளப்பட்ட அறிவியல் ஆய்வுகளை தொடர்வதற்காக, இத் திட்டம், 1970களின் முற்பகுதிவரை நீட்டிக்கப்பட்டது. ஆரம்பத்தில் அப்பல்லோ திட்டத்தில் சில சறுக்கல்கள் ஏற்பட்டன. 3 விண்வெளி வீரர்கள் உயிரிழந்தனர். இதனால் நாசா இத்திட்டம் குறித்து மறு பரிசீலனை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டது. ஆனால் அப்பல்லோ 11 விண்கலம், 1969ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி 39A ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டு நீல் ஆம்ஸ்ட்ரோங், எட்வின் ஆல்ட்ரின், மைக்கேல் கொலின்ஸ் ஆகிய மூன்று அமெரிக்க விண்வெளி வீரர்களுடன் பயணத்தைத் தொடங்கியது.

சந்திரனை அடைந்த அப்பல்லோவின் கட்டுப்பாட்டு ஓடத்தில் மைக்கேல் கொலின்ஸ் தங்கிக் கொள்ள, முதலி்ல் நிலவில் காலடி எடுத்து வைத்தார் நீல் ஆம்ஸ்ட்ரோங். அவரைத் தொடர்ந்து 19 நிமிடங்கள் கழித்து நிலவில் இறங்கினார் எட்வின் ஆல்ட்ரின். நான்கு நாள் நிலவுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு பெருமை பொங்க பூமிக்குத் திரும்பியது அப்பல்லோ. உலகமே வியந்து போய் நின்ற நேரம் அது. அந்த தருணம் குறித்து எட்வின் ஆல்ட்ரின் கூறுகையில், மிகப் பெரிய நிகழ்வு அது, பெருமைக்குரிய தருணம் அது என்றார்

சந்திரனில் இறங்கிய ஆம்ஸ்டிராங்கும், எட்வின் ஆல்ட்ரினும் கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் அங்கு இருந்தனர். நிலவில் மாதிரி மண்ணை எடுத்துக் கொண்டனர். புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் நாசா நேரடியாக ஒளிபரப்பு செய்து உலகையே வியப்பில் ஆழ்த்தியது. நிலவுப் பயணத்தை முடித்துக் கொண்டு ஜூலை 24, 1969 திரும்புவதற்கு முன்பு நிலவில் எட்வின் ஆல்ட்ரின், நீல் ஆம்ஸ்ட்ரோங்கும் அமெரிக்க கொடியை நாட்டினர்.

தமிழ் முஸ்லிம் உறவில் ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகளை மறந்துவிட வேண்டும் – சிவநேசதுரை சந்திரகாந்தன்

தமிழ் மக்களின் போராட்ட காலங்களில் தமிழ் – முஸ்லிம் உறவில் சில கசப்பான நிகழ்வுகள் இடம் பெற்றிருக்கலாம் இதனை நாம் மறந்து விட வேண்டும் .இரண்டு இனங்களும் ஒற்றுமையுடன் வாழ்வதன் மூலமே எமது உரிமைகளையும்; கௌரவத்தையும் பாதுகாத்துக் கொள்ள முடியும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று பிரதேச சபையின் ஏற்பாட்டில் அல் – சிராஜ் மகாவித்தியாலய மண்டபத்தில் நடைபெற்ற நூலக வாரம் மற்றும் புத்தகக் கண்காட்சியில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனை அவர் தெரிவித்துள்ளார். ஆவர் தொடர்ந்து தெரிவிக்கையில்.

கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தங்களிடையே ஒற்றுமையை பலப்படுத்துவதன் மூலமே அம்மாகாணத்தில் ஓர் நிலையான அரசியல் ஸ்த்திரத்தினை ஏற்படுத்த முடியும்.”

கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த எமது மூதாதையர்கள் எவ்வாறு தமிழ் முஸ்லிம் உறவுகளைப் பேணி வந்தார்களோ அவ்வாறே நாம் எமது உறவுகளைப் பேண வேண்டும். அதற்கான சரியான தருணமாக இக் காலகட்டத்தை நான் பார்க்கின்றேன்.

கிழக்கு மாகாணத்தில் தற்போது பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் . நிலையானதும் நீண்ட காலத்திற்குமான அபிவிருத்தி என்று நோக்குகின்ற போது அதனை நாம் இன்னும் எட்டவில்லை . காரணம் தமிழ் பேசும் சமூகம் அதிலும் குறிப்பாக தமிழ் சமூகம் அரசியலில் மிகவும் பின் தங்கியே காணப்படுகின்றது. குறிப்பாக கிழக்கு வாழ் தமிழ் மக்களில் அதிகமானவர்கள் அரசியல் சிந்தனைகளில் நாட்டம் குறைந்தவர்களாகவே காணப்படுகின்றார்கள். காரணம் காலம்காலமாக இம்மக்கள் அரசியல் வாதிகளால் ஏமாற்றப்பட்ட வரலாறுகள் உண்டு.

எது எவ்வாறு இருந்த போதிலும் நாம் இனிவருகின்ற காலங்களில் ஒற்றுமையாகவும் இன நல்லுறவோடும் வாழ்வதன் மூலமே எமக்கான அரசியல் தனித்துவத்தினைப் பேண முடியும் “என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந் நிகழ்வில் மத்திய தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைச்சர் ஏ.எல்.எம் அதாவுல்லாää மற்றும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி மற்றும் கிராமிய மின்சாரம் வீடமைப்பு அமைச்சர் எம். எஸ் உதுமாலெப்பை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர மீராலெப்பை துல்ஹார் நஹீம் உட்பட பலரும் கலந்து கொண்டு உரையாற்றினர்

சனத்தொகை கணக்கெடுப்பு 2011 இல் மேற்கொள்ள ஏற்பாடு

நாடு முழுவதுமான சனத்தொகை கணக்கெடுப்பு 2011 இல் நடத்தப்படவுள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடு பூராகவும் சனத்தொகை கணக்கெடுப்பு 1981 ஆம் ஆண்டு முதல் முதலில் மேற்கொள்ளப்பட்டதாக திணைக்களத்தின் முக்கியஸ்தரான சுரஜ்ஜன வைத்தியரட்ன தெரிவித்துள்ளார்.

சனத்தொகை கணக்கெடுப்புக்கென திணைக்களம் தற்போது தேவையான வரைபடத்தையும் வீட்டு விபரங்களையும் சேகரித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். இது தொடர்பிலான அறிவுரை செயல்திட்டம் 11 மாவட்டங்களில் ஆரம்பித்துள்ளதுடன் குறுகிய காலத்தில் ஏனைய மாவட்டங்களிலும் நடத்தவுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மனோகணேசனின் வாகனத் தொடரணி மீது கடும் தாக்குதல்

ஊவா மாகாண சபைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோகணேசன் எம்.பி.யின் வாகனத் தொடரணி மீது நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை பசறை மடுல்சீமை பகுதியில் நடத்தப்பட்ட கடும் தாக்குதலில் பலர் படுகாயமடைந்ததுடன் வாகனங்கள் பலவும் அடித்து நொருக்கப்பட்டுள்ளன.
மடுல்சீமைபசறை வீதியில் பல்உல்ல தோட்டத்திற்குச் சமீபமாக சனிக்கிழமை மாலை நடைபெற்ற இந்தக் கடும் தாக்குதலிலிருந்து மனோ கணேசன் எம்.பி.மயிரிழையில் தப்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸை சேர்ந்தவர்களே தங்கள் மீது கடும் தாக்குதலை நடத்தியதாகத் தெரிவித்த மனோகணேசன், இது தொடர்பாக மடுல்சீமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கட்சியின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; ஊவா மாகாண சபைத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மனோகணேசன் தீவிரமாக இறங்கியுள்ளார். அங்கு மக்களின் செல்வாக்கு எமது கட்சியினருக்கு அதிகரித்து வருகிறது. நடைபெறும் கூட்டங்களில் மிகப் பெருமளவில் மக்கள் திரண்டு அமோக ஆதரவு வழங்குகின்றனர்.

இது போன்றதொரு கூட்டம் மடுல்சீமை கல்உல்ல தோட்டத்தில் நடைபெற்றது. அங்கு பெருமளவில் மக்கள் திரண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தை முடித்துவிட்டு அடுத்த இடத்தை நோக்கி பிரசார வாகனத் தொடரணி சென்று கொண்டிருந்தது. மனோகணேசனும் அந்த வாகனத்தொடரணியில் வந்து கொண்டிருந்தார். இவ்வேளையில் மடுல்சீமைபசறை வீதியில் வாகனத்தொடரணி சென்று கொண்டிருந்தபோது ஒரு கோஷ்டி வாகனத்தொடரணியை வழிமறித்தது. அவர்கள் கைகளில் பொல்லுகள், தடிகள், கற்கள் இருந்ததால் வாகனங்களை நிறுத்தாது செல்ல முற்பட்ட போது கடும் தாக்குதல் நடத்தப்பட்டது.

தொடரணியில் சென்ற பஸ் ஒன்றும் வேறு வாகனங்களும் அடித்து நொருக்கப்பட்டன. வாகனங்களின் கண்ணாடிகள் உடைத்தெறியப்பட்டன. கடுமையான கல்வீச்சாலும் தாக்குதலாலும் வாகனங்களில் இருந்த பலர் படுகாயமடைந்தனர். சில வாகனங்களின் பக்கவாட்டில் ஐ.தே.க.தலைவர் ரணில் விக்கிரமசிங்க, மனோகணேசன், வேட்பாளர்களின் கட்டவுட்களும் பதாகைகளுமிருந்தன. அவையும் கிழித்தெறியப்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்டன.

இச்சம்பவத்தில் முன்னணியின் மூன்று தொண்டர்கள் படுகாயமடைந்துள்ளனர். மனோகணேசனின் வாகனமும் பலத்த கல் வீச்சுக்கிலக்கானது எனினும் அவரது பாதுகாவலர்கள் அவரை உடனடியாக வேறு இடத்திற்கு அழைத்து சென்றதால் அவர் காயமின்றித் தப்பினார். படுகாயமடைந்தவர்கள் பசறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக மடுல்சீமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்தியவர்கள் மதுபோதையில் இருந்தனர். தாக்குதல் நடத்தியபோது மலையக அமைச் சர் ஒருவரை “வாழ்க, வாழ்க’ என்று கோஷம் எழுப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மனோகணேசன் எம்.பி.கூறுகையில்;

எங்கள் அணியின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் காரர்களே இக்கட்சியின் மடுல்சீமை பிரதேச சபை உறுப்பினரும் இன்னும் சிலரும் மதுபோதையில் இந்த அராஜகத்தில் ஈடுபட்டனர். பதுளை மாவட்டத்திற்கு எமது கட்சியின் வருகையையும் மக்கள் மத்தியில் பெருகிவரும் ஆதரவையும் சகித்து கொள்ள முடியாமலேயே இவர்கள் இவ்விதம் நடத்துகொள்கின்றார்கள். நுவரெலியாவைப்போல பதுளை மாவட்டத்திலும் தமிழ் மக்கள் இத்தகைய அராஜக அரசியலுக்கு தகுந்த ஜனநாயக பதிலை மக்கள் வழங்குவார்கள் என்றார்.