மனோகணேசனின் வாகனத் தொடரணி மீது கடும் தாக்குதல்

ஊவா மாகாண சபைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோகணேசன் எம்.பி.யின் வாகனத் தொடரணி மீது நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை பசறை மடுல்சீமை பகுதியில் நடத்தப்பட்ட கடும் தாக்குதலில் பலர் படுகாயமடைந்ததுடன் வாகனங்கள் பலவும் அடித்து நொருக்கப்பட்டுள்ளன.
மடுல்சீமைபசறை வீதியில் பல்உல்ல தோட்டத்திற்குச் சமீபமாக சனிக்கிழமை மாலை நடைபெற்ற இந்தக் கடும் தாக்குதலிலிருந்து மனோ கணேசன் எம்.பி.மயிரிழையில் தப்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸை சேர்ந்தவர்களே தங்கள் மீது கடும் தாக்குதலை நடத்தியதாகத் தெரிவித்த மனோகணேசன், இது தொடர்பாக மடுல்சீமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கட்சியின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; ஊவா மாகாண சபைத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மனோகணேசன் தீவிரமாக இறங்கியுள்ளார். அங்கு மக்களின் செல்வாக்கு எமது கட்சியினருக்கு அதிகரித்து வருகிறது. நடைபெறும் கூட்டங்களில் மிகப் பெருமளவில் மக்கள் திரண்டு அமோக ஆதரவு வழங்குகின்றனர்.

இது போன்றதொரு கூட்டம் மடுல்சீமை கல்உல்ல தோட்டத்தில் நடைபெற்றது. அங்கு பெருமளவில் மக்கள் திரண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தை முடித்துவிட்டு அடுத்த இடத்தை நோக்கி பிரசார வாகனத் தொடரணி சென்று கொண்டிருந்தது. மனோகணேசனும் அந்த வாகனத்தொடரணியில் வந்து கொண்டிருந்தார். இவ்வேளையில் மடுல்சீமைபசறை வீதியில் வாகனத்தொடரணி சென்று கொண்டிருந்தபோது ஒரு கோஷ்டி வாகனத்தொடரணியை வழிமறித்தது. அவர்கள் கைகளில் பொல்லுகள், தடிகள், கற்கள் இருந்ததால் வாகனங்களை நிறுத்தாது செல்ல முற்பட்ட போது கடும் தாக்குதல் நடத்தப்பட்டது.

தொடரணியில் சென்ற பஸ் ஒன்றும் வேறு வாகனங்களும் அடித்து நொருக்கப்பட்டன. வாகனங்களின் கண்ணாடிகள் உடைத்தெறியப்பட்டன. கடுமையான கல்வீச்சாலும் தாக்குதலாலும் வாகனங்களில் இருந்த பலர் படுகாயமடைந்தனர். சில வாகனங்களின் பக்கவாட்டில் ஐ.தே.க.தலைவர் ரணில் விக்கிரமசிங்க, மனோகணேசன், வேட்பாளர்களின் கட்டவுட்களும் பதாகைகளுமிருந்தன. அவையும் கிழித்தெறியப்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்டன.

இச்சம்பவத்தில் முன்னணியின் மூன்று தொண்டர்கள் படுகாயமடைந்துள்ளனர். மனோகணேசனின் வாகனமும் பலத்த கல் வீச்சுக்கிலக்கானது எனினும் அவரது பாதுகாவலர்கள் அவரை உடனடியாக வேறு இடத்திற்கு அழைத்து சென்றதால் அவர் காயமின்றித் தப்பினார். படுகாயமடைந்தவர்கள் பசறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக மடுல்சீமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்தியவர்கள் மதுபோதையில் இருந்தனர். தாக்குதல் நடத்தியபோது மலையக அமைச் சர் ஒருவரை “வாழ்க, வாழ்க’ என்று கோஷம் எழுப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மனோகணேசன் எம்.பி.கூறுகையில்;

எங்கள் அணியின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் காரர்களே இக்கட்சியின் மடுல்சீமை பிரதேச சபை உறுப்பினரும் இன்னும் சிலரும் மதுபோதையில் இந்த அராஜகத்தில் ஈடுபட்டனர். பதுளை மாவட்டத்திற்கு எமது கட்சியின் வருகையையும் மக்கள் மத்தியில் பெருகிவரும் ஆதரவையும் சகித்து கொள்ள முடியாமலேயே இவர்கள் இவ்விதம் நடத்துகொள்கின்றார்கள். நுவரெலியாவைப்போல பதுளை மாவட்டத்திலும் தமிழ் மக்கள் இத்தகைய அராஜக அரசியலுக்கு தகுந்த ஜனநாயக பதிலை மக்கள் வழங்குவார்கள் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *