ஆகஸ்ட் முதல் யாழில் அத்தியாவசிய பொருட்கள் கொழும்பு விலையில் – அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தகவல்

ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் கொழும்பு விலைக்கே யாழ்ப்பாணத்தில் சகல அத்தியாவசியப் பொருட்களையும் பொது மக்கள் பெற்றுக்கொள்ள முடியும் என மின்சக்தி எரிசக்தி அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் யாழ். தேர்தல் பிரசார அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தகவல் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். கொழும்பில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட சுமார் 65 ஊடகவியலாளர் மத்தியில் அமைச்சர் தமிழ் மொழியில் உரையாற்றினார். அவர் தொடர்ந்தும் தகவல் தருகையில், கொழும்பு விலைக்கே அத்தியாவசிய உணவுப் பொருட்களை யாழ்ப்பாணத்திலும் விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என்ற ஜனாதிபதியின் உத்தரவு ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் அமுலாகின்றது.

யாழ். வர்த்க சமூகத்துடன் இது தொடர்பான பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் எதிர்வரும் 26 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இரு கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்கள் திறக்கப்படவுள்ளன.

கொழும்பிலிருந்து பொருட்களை ஏ 9 வீதியூடாக யாழ். கொண்டுவரும்போது விதிக்கப்படும் வரிகள் குறைக்கப்பட வேண்டும் என யாழ் வர்த்தகர்கள் விடுத்த வேண்டுகோள் கவனத்தில் கொள்ளப்பட்டு படைத்தரப்பினருடன் பேசி அதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் கூறினார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த, கொழும்பு மாவட்ட முன்னாள் முதலமைச்சர் ரெஜினோல்ட் குரே ஆகியேர் உட்பட முக்கிய அரசாங்க அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *