February

February

உலக பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் இலங்கை பொருளாதாரத் துறையில் முன்னேற்றம் – பசில் எம். பி.

basil.jpgஉலக பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நமது நாடு பொருளாதாரத் துறையில் பெரும் முன்னேற்றத்தைக் கண்டு வருகிறதென ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். சுமார் 35 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மத்திய வங்கியின் மாத்தளை மாவட்ட பிரதேச காரியாலயத்தை திறந்து வைக்கும் வைபவம் நேற்று முன்தினம் முதலாம் திகதி மாத்தளையில் இடம்பெற்ற போது விஷேட அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பஸில் ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார்.

இவ்வைபவத்தில் தொடர்ந்து உரையாற்றிய அவர்:- முழு உலகிலும் பொருளாதார துறையின் விற்பன்னர்கள் எனக் கூறும் அமெரிக்கா இன்று பொருளாதாரத்துறையில் பெரும் வீழ்ச்சியைக் கண்டுள்ளது. சரித்திரத்தில் என்றும் இல்லாதவாறு அமெரிக்கா பெரும் பொருளாதார சவால்களை எதிர்நோக்கி வருகின்றது. மிகவும் குறுகிய காலத்தில் பலவிதமான சவால்களை எதிர்நோக்கி வருகின்ற அமெரிக்காவில் வேலையில்லாப் பிரச்சினை, பணவீக்கம் என்பனவற்றால் அமெரிக்கர்கள் இன்று பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். இதற்கெல்லாம் மூல காரணம் நாட்டை வழி நடத்திட சிறந்த தலைமைத்துவம் இல்லாமை, சிறந்த பொருளாதாரக் கொள்கை, சரியான முகாமைத்துவம் இல்லாமை என்பதையே உலக பொருளாதார வித்துனர்கள் எடுத்துக் கூறுகின்றனர்.

2003ஆம் ஆண்டு நம் நாட்டில் ஒரு தனிநபர் வருமானம் ஆயிரம் அமெரிக்க டொலராகவே இருந்தது. இது இன்று 2070 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. 2003ம் ஆண்டு குறைந்த வரு மானம் பெறுவோரின் எண்ணிக்கை 22.3 வீதமாக இருந்த போதும் அது இப்போது 15 வீதமாகக் குறைந்துள்ளது. ஜனாதிபதி பதவியேற்று ஒரு வருடகாலம் பூர்த்தியாகுவதற்குள் 2006ம் ஆண்டு ஏற்பட்ட மாவிலாறு பிரச்சினையுடன் விடுதலைப் புலிகளுடன் ஏற்பட்ட யுத்தத்துடன் முழு கிழக்கும் இராணுவ ரீதியாக மீட்கப்பட்டு, அதைத் தொடர்ந்து பல்லாண்டு காலமாக பயிர்ச் செய்கை பண்ணப்படாத பல ஆயிரக் கணக்கான வயல் நிலங்கள் தற்போது பயிர்ச் செய்யப்பட்டு கிழக்குப் பகுதி மக்கள் விவசாயத்துறையில் தற்போது தன்னிறைவு கண்டு வருகின்றனர். கிழக்கு பகுதிகளில் விவசாயத் துறையை முன்னேற்றிட அவர்களுக்குத் தேவையான விதை நெல், பசளை, டிரக்டர் வண்டிகள், கிருமிநாசினி என்பன மத்திய வங்கியின் பூரண அனுசரணையுடன் வழங்கப் பட்டுள்ளன. இன்று கிழக்கு மக்கள் பரிபூரண சுதந்திரத்துடன் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிழக்கை மீட்டெடுத்த இராணுவ வீரர்கள், இன்று வெற்றிகரமாக வடக்கையும் மீட்டெடுத்து பயங்கரவாதிகளை வெற்றிகொள்ள முடியும் என்பதை உலகின் பல வல்லரசுகளுக்கும் எடுத்துக் காட்டி சிறந்ததொரு இராணுவ சக்தியாக எமது இராணுவம் விளங்குகின்றது. ஜனாதிபதியின் விசேட பணிப்பின் பேரில் அண்மையில் ஐ. நா. சபையின் செயலாளர் நாயகத்தை சந்தித்தேன். அப்போது கிளிநொச்சியை எமது இராணுவத்தினர் மீட்டெடுத்ததைப் பற்றி அவருக்கு எடுத்துக் கூறினேன். உங்கள் நாட்டு இராணுவம் கிளிநொச்சி மீட்டது ஒரு பெரிய காரியமல்ல. இராணுவ ரீதியாக பயங்கரவாதிகளைத் தோல்வியடையச் செய்து ஒரு சிவிலியனும் பலியாகாமல் அவர்களின் சக்தியை உடைத் தெறிந்து அவர்களை பூஜ்யமாக்கி முழு உலகிலும் உங்கள் நாட்டு இராணுவம் தங்களின் பெயர்களைப் பதிவு செய்து சாதனை படைத்தார்களே இதுதான் உங்கள் நாடு கண்டுகொண்ட பெரும் வெற்றி என்று ஐ. நா. சபை செயலாளர் நாயகம் கூறியது நாம் பெற்ற வெற்றி.

இன்று வடக்கில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி போன்ற பகுதிகளில் எமது அபிவிருத்திப் பணிக்கு எமது அரசுக்குக் கிட்டாத, பயிர் செய்யப்படாத பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலங்கள் இராணுவத்தினரால் எமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன. காலப் போக்கில் இந்த நிலங்களையும் பயிர் செய்து அங்கே அபிவிருத்திப் பணிகளை முடுக்கிவிட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

புலிகளின் 3 இலக்குகள் மீது 6 தடவை விமானத் தாக்குதல்

jet_11-12.jpgமுல்லைத் தீவில் தரை வழியாக முன்னேறிவரும் படையினருக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் இனங் காணப்பட்ட புலிகளின் வெவ்வேறு மூன்று இலக்குகளை குறிவைத்து நேற்று ஆறு தடவைகள் விமானத் தாக்குதல்களை நடத்தியதாக விமானப்படை பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார். விமானப்படைக்குச் சொந்தமான மிக்-27, கிபீர் ஆகிய ஜெட் விமானங்களும், எம்.ஐ-24 விமானமுமே நேற்று முல்லைத்தீவில் கடும் தாக்குதல்களை நடத்தின.

புதுக்குடியிருப்பு சந்தியிலிருந்து மேற்கு நோக்கி முன்னேறிவரும் நான்காம் படையணியினருக்கு ஒத்துழை ப்பு வழங்கும் வகையில் நேற்றுக்காலை 10 மணிக்கு முதலாவது தாக்குதல் நடத்தப்பட்டது. சந்தியிலிருந்து ஒரு கிலோமீற்றர் மேற்கே இனங்காணப்பட்ட புலிகளது இலக்கு நோக்கி மிக்-27 தாக்குதல் நடத்தியது.

அதனைத் தொடர்ந்து காலை 11.20 மணிக்கு புதுக்குடியிருப்பு சந்தியிலிருந்து ஒன்றரை கிலோமீற்றர் கிழக்கிலுள்ள புலிகளின் இலக்குகள் மீது கிபீர் ஜெட் விமானம் தாக்குதல் நடத்தியது. இராணுவத்தின் 59ம் படைப்பிரிவுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் விங் கமாண்டர் கூறினார். முல்லைத்தீவு கடனீரேரியிலிருந்து ஒரு கிலோமீற்றர் வடமேற்கே அமைந்துள்ள இனங் காணப்பட்ட இலக்கின் மீது அடுத்தடுத்து நான்கு தடவைகள் விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இராணுவத்தின் 59ம் படைப்பிரிவுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையிலேயே இவை நடத்தப்பட்டுள்ளன. நண்பகல் 1.45 மணிக்கு மிக்-27 இன் மூலமாகவும் மாலை 3.30 மணிக்கு எம்.ஐ-24 விமானம் மூலமாகவும் மாலை 3.47 மணிக்கு கிபீர் ஜெட் மூலமாகவும் மாலை 5 மணிக்கு மிக்-27 ஜெட் விமானம் மூலமாகவும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இத்தாக்குதல்கள் அனைத்தும் வெற்றியளித்திருப்பதனை விமான ஓட்டிகள் உறுதி செய்திருப்பதாகவும் விங் கமாண்டர் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு வலயத்துக்குள் விரைவாக வருமாறு அரசு மீண்டும் வலியுறுத்தல

புலிகளின் பிடியில் சிக்கியிருக்கும் சிவிலியன்கள் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வலயத்துக்குள் இயன்றளவு விரைவில் வருகை தர வேண்டுமென அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காக படையினர் இறுதிக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் இந்நிலையில் புலிகள், சிவிலியன்களை அங்கிருந்து செல்லவிடாமல் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க முயற்சிக்கின்றனர்.

இவ்வாறு பலவந்தமாக புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட்டிருக்கும் சிவிலியன்களையே இயன்றளவு விரைவில் அரசாங்கத்தின் பாதுகாப்பு வலயத்துக்குள் வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருப்பதாக தேசிய பாதுகாப்புத் தொடர்பான ஊடக மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, இலங்கையின் பாதுகாப்பு படையினர் வன்னியில் மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந் நடவடிக்கைகளின் போது பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக் கூடாதென்பதில் அரசாங்கமும் படையினரும் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளனர்.  சிவிலியன்களது பாதுகாப்பை கருத்திற்கொண்டு அரசாங்கத்தினால் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் பாதுகாப்பு வலயம் ஒன்று பிரகடனம் செய்யப்பட்டது. இருந்தபோதிலும் சிவிலியன்கள் இதுவரை அதனை உபயோகத்துக்கு எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை.

வன்னியிலுள்ள சிவிலியன்கள் தமது சொந்த பாதுகாப்பை கருத்திற்கொண்டு மேற்படி பாதுகாப்பு வலயத்துக்குள் இயன்றளவு விரைவில் வந்து சேருமாறு அரசாங்கம் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களினூடாக அறிவித்து வருகின்றது. பாதுகாப்பு வலயத்தினுள் வரும் சிவிலியன்களது பாதுகாப்புக்கு மாத்திரமே அரசாங்கம் உத்தரவாதம் அளிக்கும். புலிகளது கட்டுப்பாட்டிலுள்ள சிவிலியன்களை அரசாங்கம் பொறுப்பேற்காது.  எனவே இயன்றளவு விரைவில் சிவிலி யன்கள் பாதுகாப்பு வலயத்துக்குள் வரவேண்டும்.

இரத்த தானத்திற்கு கோரிக்கை

vavuniya-_blod.jpgவன்னிப் பகுதியில் இடம்பெற்றுவரும் ஷெல் தாக்குதல்களால் படுகாயமடைந்து வவுனியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவர்களின் தொகை அதிகரித்து வருவதால் அங்கு இரத்தம் தேவைப்படுவதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து ஈ.பி.டி.பி. மற்றும் புளொட் அமைப்புகளின் ஏற்பாட்டில் இரத்ததானம் செய்யப்பட்டது.

வன்னி மாவட்ட ஈ.பி.டி.பி. அமைப்பாளர் சிவன் சிவகுமார் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசசபைத் தலைவர் செ.திஸவீரசிங்கம் ஆகியோரின் ஏற்பாட்டில் பல இளைஞர்கள் ஞாயிற்றுக்கிழமை இரத்ததானம் செய்தனர். இதேபோல, புளொட் அமைப்பின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் சூரியின் ஏற்பாட்டில் பல இளைஞர்கள் சனிக்கிழமை இரத்ததானம் செய்துள்ளனர்.

அத்துடன் புளொட் அமைப்பினர் வவுனியா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் வன்னிப்பகுதி மக்களுக்கு உடு துணிகள் ,பெற்சீற் , உணவுப்பொருட்களையும் வழங்கினார்கள். இதேவேளை, மேலும் பலர் இரத்ததானம் செய்ய முன்வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தீவிரவாதிகளை விருந்தாளிகளைப் போல் பாகிஸ்தான் நடத்துகிறது இந்தியா குற்றச்சாட்டு – எம்.கே. நாராயணன்

mk-narayanan.jpgவீட்டுக் காவலில் உள்ள விருந்தாளிகளை வீட்டு விருந்தாளிகளைப் போல் பாகிஸ்தான் நடத்துகிறது என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் குற்றம் சாட்டினார்.  மும்பையில் கடந்த நவம்பர் 26ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இவர்களுக்கு பின்னணியாக இருந்தவர்கள் பாகிஸ்தானில்  உள்ளனர். இதற்கான ஆதாரங்களை பாகிஸ்தானிடம் இந்தியா தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டது.

இதற்கு பாகிஸ்தான் தரப்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வமான பதில் வரவில்லை. அவர்கள் கேட்டால் இன்னும் அதிக தகவல்களை தரவும் இந்தியா தயாராக உள்ளது என்று வெளியுறவு அமைச்சர் பிரணாப் கூறினார்.  இந்த நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் தனியார் தொலைக்காட்சிக்கு நேற்று அளித்த பேட்டி:  இந்தியா அளித்துள்ள ஆதாரங்கள் அடிப்படையில் பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்த்தோம்.

ஆனால் இதற்கு மாறாக பாகிஸ்தான் இந்தியாவிடமே இருமுறை கேள்விக் கணைகளை தொடுத்தது. ஒருமுறை கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து விட்டோம். லஷ்கர் இயக்கத்தின் தலைவர் லக்வி உள்ளிட்ட சில தீவிரவாத தலைவர்கள வீட்டுக் காவலில் வைத்திருப்பதாக பாகிஸ்தான் கூறுகிறது. ஆனால், இந்த தீவிரவாதிகள் வீட்டு விருந்தாளிகளைப் போலத்தான் நடத்தப்படுகிறார்கள்.

மசூர் அசாத் என்ற தீவிரவாதி தெற்கு ஆப்கானிஸ்தானில் இருக்கலாம். அவர் எங்கிருக்கிறார் என்பது பாகிஸ்தான் அரசுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் அவரை பிடிக்கவில்லை. குற்றம் செய்தவர்களை விசாரணைக்காக இந்தியாவிடம் ஒப்படைப்பதில் பாகிஸ்தானுக்கு என்ன தயக்கம் என்பது தெரியவில்லை.

மும்பையில் தாக்குதல் நடத்தியவர்கள் பாகிஸ்தானில் இருந்து செயல்படவில்லை என்று லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதர் வாஜித் சம்சல் கூறியிருப்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. பாகிஸ்தான் அரசு இன்னும் செயல்படவில்லை என்று தான் என்னால் கூற முடியும். இவ்வாறு எம்.கே. நாராயணன் கூறினார்.

முழு அடைப்பு போராட்டத்திற்கு பிஜேபி ஆதரவு.

eela-ganash.jpgஇலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் நாளை  நடத்த உள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு பிஜேபி ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் இல.கணேசன் கூறியிருக்கிறார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் 4ஆம்  தேதி நடத்துவதாக அறிவித்துள்ள முழு கடையடைப்புக்கு பிஜேபி ஆதரவு  தருகிறது.

தற்போது பத்திரிகைகளில்  வரும் செய்திகள், இலங்கையில் தவிக்கும் தமிழர்களை பாதுகாக்கவும், அவர்களுக்கு நிரந்தரமாக சமஉரிமை பெற்றுத்தரவும் ஒவ்வொருவரும் தன் பங்குக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று கருதுகிறார்கள் என்பதை உணர்த்துகிறது. சிலர் உணர்ச்சிவரப்பட்டு தங்களை  மாய்த்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள். செய் அல்லது செத்து மடி என்பது ஏற்புடையதல்ல. மாறாக “வாழ்ந்து லட்சியத்தை அடைந்து காட்டு’ என்பதில் நாம் உறுதியுடன் இருக்க வேண்டும்.

அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் பங்குக்கு செய்ய வேண்டியவைகளை செய்தும், மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசின் செயல்பாடு இந்தவிஷயத்திலும் திருப்திகரமாக இல்லை. எனவே மக்கள் அனைவரும் பங்கேற்கும் ஒரு சாத்வீக போராட்டம் நடத்துவதால் மக்களுக்கு தங்களது உணர்வுகளை வெளியிட ஒரு வடிகால் கிடைக்கும். இந்த அறிவிப்பை வெற்றிகரமாக்கிட மக்கள் தானாக முன் வர வேண்டும். தங்களது ஆதரவை ஒன்றுபட்டு மத்திய அரசுக்கு உணர்த்த வேண்டும்.

பிஜேபியின் தொண்டர்கள் இந்த முழு அடைப்புக்கு ஒத்துழைப்பார்கள். மக்கள் தானாக முன் வந்து தங்களது உணர்வை வெளிப்படுத்தும் வாய்ப்பு இது என்பதால் கட்சியின் தொண்டர்கள் தெருவில் இறங்கி எவரையும் வற்புறுத்த மாட்டார்கள்.
இது அச்சுறுத்தி வெற்றிகரமாக்கிய போராட்டம் என்கின்ற அவப்பெயர் வராது, தானாக வெற்றி பெறுவது சிறப்பாகும்.

ஆனால் அதே நேரத்தில், மாநில அரசும் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி ஒடுக்க முனைவதும் கூடாது. எந்தவிதமான வன்முறைச் சம்பவங்கள் நடைபெறாது. அமைதி காக்கும் பணியினை அரசு செய்யட்டும். ஆனால் போராட்டம் வெற்றி பெற்றால் அதன் காரணமான அரசியல் லாபம் யாருக்குப் போகும் எனக் கணக்கிட்டு தடுக்க முனைதல் கூடாது என அரசை வற்புறுத்துகிறேன். தமிழர்கள் அனைவரும் இலங்கை தமிழர்களை காக்கவும், அவர்களுக்கு சம உரிமை பெறவும் முனையும் விஷயத்தில் ஒன்றுபட்டு நிற்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மன்னார் ஆஸ்பத்திரிக்கு 48 நோயாளர் மாற்றம்

வன்னிப் பகுதியில் விமான மற்றும் ஷெல் தாக்குதல்களால் படுகாயமடைந்த நிலையில் வவுனியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டவர்களில் 48 நோயாளர்கள் மேலதிக சிகிச்சைக்காக 16 அம்புலன்ஸ்களில் மன்னார் வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.  நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.30 மணியளவில் இவர்கள் அம்புலன்ஸ்கள் மூலம் மன்னாருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மன்னார் ஆஸ்பத்திரியில் இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதுடன் பொதுமக்களும் பொது அமைப்புகளும் அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்துவருகின்றனர். கடந்த வாரமும் 28 நோயாளர்கள் வவுனியாவில் இருந்து மன்னார் ஆஸ்பத்திரிக்கு இடமாற்றப்பட்டிருந்தனர்.

இதேவேளை, வன்னி யுத்தத்தினால் பாதிக்கப்படும் மக்களுக்கு அவசர சிகிச்சையளிப்பதற்கு பேசாலை அரசினர் வைத்தியசாலை,முருங்கன் மாவட்ட வைத்தியசாலை என்பவற்றையும் தயாராக இருக்குமாறு மன்னார் சுகாதார பணிமனை வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஈராக் மாகாண சபை தேர்தல் முடிவுகள் அடுத்த வாரம்

iraq-elc.jpgஈராக்கில் நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தலின் முடிவுகள் அடுத்த வாரம் அறிவிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்த தேர்தல் அலுவலகம் முழு முடிவுகளையும் அறிவிக்கப் பல வாரங்கள் தேவைப்படும் எனத் தெரிவித்தது. புதுவகையான தேர்தல் முறை என்பதால் வாக்குகளை எண்ண பல நாட்கள் எடுக்கும். மற்றும் எண்ணுவதில் பெரும் சிக்கல்களும் உள்ளதென்றும் செயலகம் தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை நடந்த மாகாண சபைத் தேர்தல்களில் 15 மில்லியன் மக்கள் வாக்களித்தனர்.

440 ஆசனங்களுக்கு 14 ஆயிரம் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 400 கட்சிகள் களத்தில் குதித்தன. ஈராக்கிற்கான ஐ. நா. வின் தூதுவர் முஸ்தபாமிஸ்டிரா இதுபற்றிக் கூறுகையில் :- ஈராக்கில் இறுதியாக நடந்த தேர்தல் முடிவுகள் கணக்கிடப்பட்ட விதம் பூரண திருப்தியில்லை. விகிதாசாரம் முறையாகப் பேணப்படவில்லை.எனவே இம்முறை இந்தத் தவறுகள் இடம்பெறாமல் தவிர்க்க பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். மீள் புனரமைப்புப் பணிகள், வெளிநாட்டு உதவிகள் என்பவற்றை மாகாண சபை முன்னெடுப்பதுடன், ஆளுநர்களையும் நிர்வாகமே தெரிவு செய்கின்றது. 2.5 பில்லியன் ரூபா புனரமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தை சர்வதேசம் முழுமையாக தடைசெய்யவேண்டும் – ஐரோப்பிய ஒன்றியத்திடம் இலங்கை வலியுறுத்தல்

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை சர்வதேசம் முழுமையாக தடைசெய்ய வேண்டியதன் அவசியத்தை ஐரோப்பிய ஒன்றியத்திடம் வலியுறுத்தியதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். ஐரோப்பிய விஐயத்தை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் மாலை நாடு திரும்பிய வெளிவிவகார அமைச்சர் போகொல்லாகம கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அவர் ஊடகவியலாளர்களிடம் மேலும் கூறியதாவது; “எனது இந்த ஐரோப்பிய விஜயத்தின்போது நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு விரிவான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டேன். யுத்தவெற்றியைத் தொடர்ந்து வடக்கில் துரித அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாக சர்வதேசத்திற்கு தெளிவு படுத்தியுள்ளேன். பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் விடயத்தில் எந்த நாடும் தனித்துச் செயற்பட முடியாது. பயங்கரவாதச் சவாலை எதிர்கொள்ளும் சகலநாடுகளும் ஒருமித்துச் செயற்படவேண்டும்.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிக்கும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை உலகின் சில நாடுகள் மட்டுமே தடைசெய்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியம் இன்னமும் அதனைச் செய்யவில்லை. தாமதமின்றி அதனை தடைசெய்வதன் மூலம் பயங்கரவாதம் மீண்டும் தலையெடுப்பதை முற்றாகத் தடுக்க முடியும் என்பதை ஐரோப்பிய ஒன்றியத்திடம் வலியுறுத்தியுள்ளேன்’ எனவும் அவர் தெரிவித்தார்.

நோயாளர்களை அழைத்துவர எந்தவேளையிலும் அரசு தயார் – அமைச்சர் சமரசிங்க

mahinda-samarasinga.jpgபுதுக் குடியிருப்பு ஆஸ்பத்திரியில் சிக்கியுள்ள 500 நோயாளிகளையும் மேலதிக சிகிச்சைக்காக அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அழைத்து வருவதற்கு சகல வசதிகளும் அளிக்க அரசாங்கம் தயாராக உள்ளதாக அனர்த்த நிவாரண மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறினார். மேலதிக சிகிச்சைக்காக அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருவதற்கென 500 நோயாளர்கள் காத்திருப்பதாகவும் இவர்களை அழைத்து வருவது தொடர்பாக அரசாங்கத்துடனும் புலிகளுடனும் பேசிவருவதாகவும் ஐ. சி. ஆர். சி அறிவித்துள்ளது.

இது குறித்து வினவிய போது கருத்துத் தெரிவித்த அமைச்சர், வன்னியில் உள்ள நோயாளிகளை அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அழைத்து வர அரசாங்கம் சகல வசதிகளும் செய்துள்ளதோடு அம்பிலன்ஸ்களும் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். கடந்த இரு தினங்களுக்கு முன் 226 நோயாளிகள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அழைத்து வரப்பட்டதாகவும் அவர் கூறினார். இதற்கு முன்பு சில நோயாளர்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு சிகிச்சைக்காக வந்து சிகிச்சை பெற்ற பின் மீண்டும் வன்னிக்குச் சென்றதாகவும் புதுக் குடியிருப்பு மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் வர விரும்பினால் அதற்கு உதவ அரசு தயாராக உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை, புதுக்குடியிருப்பு ஆஸ்பத்திரியில் உள்ள 500 நோயாளிகளுக்கும் ஐ. சி. ஆர். சி. உதவி வருவதாகவும் 100 ஐ.சி.ஆர்.சி உறுப்பினர்கள் அங்கு உள்ளதாகவும் ஐ. சி. ஆர். சி பேச்சாளர் சரசி விஜேரத்ன கூறினார்.  இவர்களை அழைத்து வருவது குறித்து அரசுடனும் புலிகளுடனும் தினமும் பேசி வருவதாகவும் குறிப்பிட்டார்.