புதுக் குடியிருப்பு ஆஸ்பத்திரியில் சிக்கியுள்ள 500 நோயாளிகளையும் மேலதிக சிகிச்சைக்காக அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அழைத்து வருவதற்கு சகல வசதிகளும் அளிக்க அரசாங்கம் தயாராக உள்ளதாக அனர்த்த நிவாரண மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறினார். மேலதிக சிகிச்சைக்காக அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருவதற்கென 500 நோயாளர்கள் காத்திருப்பதாகவும் இவர்களை அழைத்து வருவது தொடர்பாக அரசாங்கத்துடனும் புலிகளுடனும் பேசிவருவதாகவும் ஐ. சி. ஆர். சி அறிவித்துள்ளது.
இது குறித்து வினவிய போது கருத்துத் தெரிவித்த அமைச்சர், வன்னியில் உள்ள நோயாளிகளை அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அழைத்து வர அரசாங்கம் சகல வசதிகளும் செய்துள்ளதோடு அம்பிலன்ஸ்களும் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். கடந்த இரு தினங்களுக்கு முன் 226 நோயாளிகள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அழைத்து வரப்பட்டதாகவும் அவர் கூறினார். இதற்கு முன்பு சில நோயாளர்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு சிகிச்சைக்காக வந்து சிகிச்சை பெற்ற பின் மீண்டும் வன்னிக்குச் சென்றதாகவும் புதுக் குடியிருப்பு மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் வர விரும்பினால் அதற்கு உதவ அரசு தயாராக உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை, புதுக்குடியிருப்பு ஆஸ்பத்திரியில் உள்ள 500 நோயாளிகளுக்கும் ஐ. சி. ஆர். சி. உதவி வருவதாகவும் 100 ஐ.சி.ஆர்.சி உறுப்பினர்கள் அங்கு உள்ளதாகவும் ஐ. சி. ஆர். சி பேச்சாளர் சரசி விஜேரத்ன கூறினார். இவர்களை அழைத்து வருவது குறித்து அரசுடனும் புலிகளுடனும் தினமும் பேசி வருவதாகவும் குறிப்பிட்டார்.