விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை சர்வதேசம் முழுமையாக தடைசெய்ய வேண்டியதன் அவசியத்தை ஐரோப்பிய ஒன்றியத்திடம் வலியுறுத்தியதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். ஐரோப்பிய விஐயத்தை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் மாலை நாடு திரும்பிய வெளிவிவகார அமைச்சர் போகொல்லாகம கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அவர் ஊடகவியலாளர்களிடம் மேலும் கூறியதாவது; “எனது இந்த ஐரோப்பிய விஜயத்தின்போது நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு விரிவான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டேன். யுத்தவெற்றியைத் தொடர்ந்து வடக்கில் துரித அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாக சர்வதேசத்திற்கு தெளிவு படுத்தியுள்ளேன். பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் விடயத்தில் எந்த நாடும் தனித்துச் செயற்பட முடியாது. பயங்கரவாதச் சவாலை எதிர்கொள்ளும் சகலநாடுகளும் ஒருமித்துச் செயற்படவேண்டும்.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிக்கும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை உலகின் சில நாடுகள் மட்டுமே தடைசெய்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியம் இன்னமும் அதனைச் செய்யவில்லை. தாமதமின்றி அதனை தடைசெய்வதன் மூலம் பயங்கரவாதம் மீண்டும் தலையெடுப்பதை முற்றாகத் தடுக்க முடியும் என்பதை ஐரோப்பிய ஒன்றியத்திடம் வலியுறுத்தியுள்ளேன்’ எனவும் அவர் தெரிவித்தார்.