05

05

சாலைப்பகுதித் தாக்குதலில் கடற்புலிகளின் இரண்டாவது தளபதி மரணம்

வன்னியை விடுவிக்கும் நடவடிக்கையின் மிக முக்கிய இலக்கை அடைந்துள்ள படையினர் சாலைப்பகுதியில் நடத்திய தாக்குதலில் கடற்புலிகளின் இரண்டாவது தளபதி உட்பட 4 பேரை நேற்று (பெப்:04) கொல்லப்பட்டதாக படைத் தரப்பு தெரிவிக்கின்றது.  நேற்று பிற்பகல் 1.45 மணிமுதல் 2.00 மணிவரை தாக்குதல் நடத்திய 55 வது படைப்பிரிவினர் சாலைப் பகுதியில் அமைந்துள்ள கடற்புலிகளின் தளத்தை கைபற்றினர். இத் தாக்குதலில் கடற்புலிகளின் இரண்டாவது தளபதியான வினாயகம் கொல்லப்பட்டுள்ளார்.

தொடர்பு சாதனங்களை ஒட்டுக்கேட்ட போது எல்ரிரிஈயினருக்கு இவர்கள் இறந்த உடல்களை தேடமுடியாமல் படையினரின்  தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் பின்வாங்கியுள்ளதாக படையினரின் மின்னனுயியல் போர்யுக்தி பிரிவினர் தெரிவித்தனர்.

இதேவேளை பூநகரி கடற்புலிகளின் பொறுப்பாளர் காதர் எனும் பஹலவனும் இத்தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார் என மேலும் கடற்புலிகளின் விசேட தளபதியான சின்னக்கன்னன் நேற்றுக் காலை 8.50 மணியளவில் நடந்த பிறிதொரு தாக்குதலில் இப்பகுதியில் வைத்து கொல்லப்பட்டுளார். இவர் கொல்லப்பட்ட பின் அவர்களின் சொந்தப்பானியில் லெப்டினன் கேனல் பதவி உயர்வும் வழங்கியுள்ளதாக படையினரின் மின்னனுயியல் போர்யுக்தி பிரிவினர் தெரிவித்தனர். இம்மோதல்களில் 8 கடற்புலிகள் கொல்லப்பட்டுள்ளதும் ஊர்ஜீதம் செய்துள்ளனர்.

தேசத்துக்கு மகுடம் கண்காட்சியில் புலிகளின் கடல் மூழ்கிப்படகு

dayata_kirula.jpgதேசத்துக்கு மகுடம் தேசிய கண்காட்சியை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் நேற்று (பெப்:04) பிற்பகல் பண்டாரநாயக சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் திறந்து வைத்தார்.

இலங்கையின் வரலாறு அதன் கௌரவம் பற்றிய அறிவு, மஹிந்த சிந்தனையின் பிரகாரம் நாட்டில் ஏற்படுத்தியுள்ள அபிவிருத்தி மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டம் என்பன பற்றி மக்களுக்கு தெளிவு படுத்துவதாகும். கண்காட்சி எதிர்வரும் 8ஆம் திகதி வரை நடைபெறும் இதில் இராணுவத்தினால் அன்மைக்காலத்தில் வெற்றி கொண்ட ஆயுதங்கள் படைக்கலங்கள் என்பனவும் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களும்  சிரந்தி ராஜபக்கக்ஷ அவர்களும்  எல்ரிரிஈ யினரிடமிருந்து கைபற்றிய கடல் மூழ்கிப்படகை பார்வையிடுவதைப் படத்தில் காணலாம்

800 மேற்பட்டோர் இன்று (05) இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருகை

wanni-civilans.jpgபுலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து  800 க்கு மேற்பட்டோர் இன்று (05) இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளான விஸ்வமடு மற்றும் தர்மபுரம் பிரதேசங்களுக்கு வந்துள்ளரென பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

புதுக்குடியிருப்பில் இருந்து இன்னும் ஆழமான யுத்த பகுதிக்குள் மக்கள் நகர்வு – ‘புலிகளின் முக்கிய தலைவர்களுக்கு மன்னிப்பு இல்லை’ கோதபாய : த ஜெயபாலன்

Makeshift Hospitalபுலிகளுடன் சரணடைவது பற்றி பேசுவதற்கு எதுவும் இல்லை அவர்கள் எவ்வித நிபந்தனையும் இல்லாமல் சரணடைய வேண்டும் என இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோதபாய ராஜபக்ச தெரிவித்து உள்ளார். புலிகளின் கீழ் நிலை உறுப்பினர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு தொழிற்பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் பிரதான சமூகத்துடன் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று தெரிவித்துள்ள கோதபாய ராஜபக்ச புலிகளின் தலைமை உறுப்பினர்களுக்கு எவ்வித மன்னிப்பும் இல்லை என்று தெரிவித்து உள்ளார். பிபிசி உலகசேவைக்கு இணைத் தலைமைநாடுகளின் வேண்டுகோள் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே பாதுகாப்புச் செயலர் இதனைத் தெரிவித்து உள்ளார்.

மஹிந்த ராஜபக்சவின் சகோதரரான இவரை குறிவைத்து விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தற்கொலைத் தாக்குதல் தோல்வியடைந்தது தெரிந்ததே. மேலும் தற்போதைய இராணுவத் தளபதி சரத்பொன்சேகா மீதான தற்கொலைத் தாக்குதலும் தோல்வியடைந்தது. அடிபட்ட பாம்புகளின் சீற்றத்தில் புலிகளுக்கு எதிரான இந்த யுத்தம் தற்போது முடக்கி விடப்பட்டு உள்ளது. மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த போது அவருடைய சகோதரர் கோதபாய ராஜபக்சவே முக்கிய முடிவுகளில் ஆளுமை செலுத்துகிறார் என்று அரசியல் வட்டாரங்கள் நம்புகின்றன.

இலங்கை அரசினால் பாதுகாப்பு வலயம் என்று அறிவிக்கப்பட்ட உடையார் கட்டுப்பகுதியில் இடம்பெற்ற தாக்குதல்கள் காரணமாக கடந்த சில தினங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனால் அங்கு இயங்கி வந்த ஒரே மருத்துவ நிலையமும் செயலிழந்து போய் உள்ளது. அங்கு கடமையாற்றிய 15 யுஎன் பணியாளர்களும் அவர்களது 81 குடும்ப உறுப்பினர்களும் மருத்துவமனையை விட்டு வெளியேற் உள்ளதாக கொழும்பில் உள்ள யுஎன் பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்து உள்ளார்.

சர்வதேச அழுத்தங்கள் பலமுனைகளில் இருந்து வந்த போதும் புதுக்குடியிருப்பில் உள்ள 250000 மக்களது உயிர்களைப் பணயம் வைத்து இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் தங்கள் இராணுவ நடவடிக்கையைத் தொடர்கின்றனர். உலகின் முக்கிய தலை நகரங்களில் எல்லாம் ஆயிரக் கணக்கில் தமிழர்கள் ஒன்றுதிரண்டு குரல் எழுப்பிய போதும் அவை கவனத்திற்கொள்ளபடுவதாக இல்லை.

கடந்த நான்கு நாட்களாக பெப்ப்ரவரியில் மட்டும் 85க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். அவர்களில் ஒருவர் ஐசிஆர்சி மருத்துவப் பணியாளர்.
01 பெப் 13 பேர் கொல்லப்பட்டனர்
02 பெப் 9 பேர் கொல்லப்பட்டனர்
03 பெப் 52 பேர் கொல்லப்பட்டனர்
04 பெப் 12 பேர் கொல்லப்பட்டனர்
05 பெப் 7 பேர் கொல்லப்பட்டனர்

மருத்துவமனை மீதான தொடர்ச்சியான தாக்குதலை அடுத்து காயப்பட்டவர்கள் நோயாளர்கள் இன்னும் ஆழமான யுத்த பகுதிகள்  நோக்கி நகர நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளதாக அல்ஜசீரா செய்தி தெரிவிக்கின்றது. கரையோரப் பிரதேசமான அங்கு குடிநிர் வசதிகளே இல்லையென ஐசிஆர்சி பெச்சாளர் சரசி விஜயரட்னே தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் காயப்பட்டவர்களும் நோயாளிகயளும் மருத்துவப் பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதற்கு அல்லது யுத்தப் பகுதியில் இருந்து வெளியேறுவதற்கான பாதுகாப்பான வழி ஒன்றை ஏற்படுத்தமாறு அரச படைகளையும் புலிகளையும் கேட்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்றும் உடையார்கட்டு மருத்துவமனை மீது பாரதுரமான தாக்குதல் நடத்தப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ள Office for the Coordination of Humanitarian Affairs (OCHA) உலக உணவுத் திட்டம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான உணவு விநியோகத்தை மேற்கொள்வதற்கான வழியை ஏற்படுத்துவதற்காக தொடர்ந்தும் போச்சு வார்த்தையில் ஈடுபட்டு உள்ளதாக தெரிவிக்கிறது. நாளை உணவு விநியோகத்தை மேற்கொள்ள முடியும் என்று தாம் நம்புவதாகவும் தெரிவித்து உள்ளது.

இணைத் தலைமை நாடுகளின் சரணடைவது பற்றிய வேண்டுகோள் தொடர்பாக புலிகள் உத்தியோகபூர்வமாக எதனையும் குறிப்பிவில்லை. குறிப்பாக நோர்வேயும் அந்த வேண்டுகோளில் தன்னையும் இணைத்துக் கொண்டது புலிகளுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்ததாகவே உள்ளது. பேச்சு வாரத்தைகளின் போது நோர்வே விடுதலைப் புலிகளுக்கு சாதகமாகச் செயற்பட்டது என்று குற்றச்சாட்டப்பட்டது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இந்த யுத்தம் முற்றிலும் இந்தியாவின் அணுசரணையுடன் மேற்கொள்ளப்படுகிறது என்பது இந்தியாவின் நீண்ட மெளனத்தில் இருந்து தெரியவருகிறது. தமிழ்நாட்டை உசுப்பி இந்தாயவைப் பணிய வைக்கும் முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை. அமெரிக்காவில் பதவியேற்றுள்ள புதிய ஆட்சியாளர்களும் வழமையான கோரிக்கைகள் கண்டனங்களுடன் நிறுத்திக் கொண்டுள்ளனர். அவர்களுடன் பிரித்தானியாவும் இணைந்து தனது கண்டனத்தை வெளிப்படுத்தி உள்ளது. கிட்டத்தட்ட புலிகள் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டு ஒரு குறுகிய நிலப்பரப்பிற்குள் ஒதுக்கப்பட்டு உள்ளனர்.

எவ்வித அரசியல் செயற்பாடுகளையும் கொண்டிராத முற்றிலும் இராணுவ அமைப்பான புலிகள் சக இன மக்களுடன் நல்லுநவைக் கொண்டிராத சக தேசிய சர்வதேசிய விடுதலை அமைப்புகளுடன் உறவுகளைக் கொண்டிராத மக்களை நம்பாது ஆயுதங்களை மட்டுமே நம்பிய புலிகளை அந்த ஆயுதங்கள் இன்று காப்பாற்றவில்லை. 250 000 மக்கள் விரும்பியோ விரும்பாமலோ இன்று தங்களைப் பணயம் வைத்து புலிகளைக் காக்கின்றனர்.

தற்போதைய யுத்தத்தில் சிக்குண்டுள்ள 250 000 மக்களில் கணிசமானவர்கள் விடுதலைப் புலி உறுப்பினர்களின் குடும்பங்கள் அவர்களது அலுவலகங்களில் பணியாற்றியவர்கள் விரும்பியோ விரும்பாமலோ இராணுவப் பயிற்சிக்கு உட்பட்டவர்கள். கடந்த இரு தசாப்தங்களாக தங்களது பூரண கட்டுப்பாட்டில் இருந்த மக்களை புலிகள் தங்களது நோக்கங்களுக்காகப் பயன்படுத்தி இருப்பார்கள் என்பதும் அதனை அந்த மக்களால் மறுப்பதற்கு வாய்ப்பிருந்திருக்காது என்பதும் யதார்த்தம்.

அந்த வகையில் இலங்கை அரசு அந்த மக்களின் நம்பிக்கையைப் பெறாத வரையில் அவர்கள் ஒரு போதும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நுழையமாட்டார்கள் என்பது உறுதி. இதற்கிடையே யுத்தப் பகுதியில் இருந்து தப்பி வந்த சிலர் கைது செய்யப்பட்டு காணாமல் போகிறார்கள் என்ற செய்திகள் வெளியெ கசிகின்றன. கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படுபவர்களதும் நிலை மோசமாக உள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது.

இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்தின் பொறுப்பில் பாதுகாப்பு வலயங்களை ஒப்படைக்க வேண்டும். சரணடைய விரும்புபவர்கள் சர்வதேச மனிதாபிமான அமைப்புகளிடம் சரணடைவதற்கான வழிவகைகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும். இலங்கை இராணுவத்தை எந்தவொரு வன்னிக் குடிமகனும் குடிமகளும் நம்புவார்கள் என்று அரசோ சர்வதேச சமூகமோ எதிர்பார்க்க முடியாது.

மாற்றுக் கருத்து தளத்தில் செயற்பட்டவர்கள் மாற்றுக் கருத்து என்பது  புலியெதிர்ப்பு என்றளவில் செயற்படாமல் இலங்கை அரசு மீதான தங்களுடைய அழுத்தங்களை பிரயோகிப்பது அவசியம். இந்த வன்னி மக்கள் சந்திக்க உள்ள அவலத்தை தடுத்து நிறுத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். பெயருக்கு அறிக்கைவிட்டு தங்கள் கடமை முடிந்துவிட்டது என்றளவில் இல்லாமல் தொடர்ச்சியான அழுத்தங்களை நேரடியாகவும் சர்வதேச சமூகத்திற்கு ஊடாகவும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். புலி எப்ப காலியாகும் நாங்கள் எப்ப போய் குந்தலாம் என்ற எண்ணத்தில் செயற்பட்டால் அது அவர்கள் வன்னி மக்களுக்கு இழைக்கும் பாரிய துரோகச் செயலாக அமையும்.

இன்றைக்கு தமிழ் மக்களுடைய போராட்டங்கள் யுத்தத்தை நிறுத்துவதையும் சர்வதேச சமூகத்தின் பொறுப்பில் பாதுகாப்பு வலயங்கள் உருவாக்கப்படுவதையும் அரசியல் தீர்வு முன் வைக்கப்படுவதையும் மையமாக வைத்து நடத்தப்பட வேண்டும். மாறாக புலிகளின் நலன்கருதி மேற்கொள்ளப்படும் எவ்வித போராட்டமும் பயனற்றதாகவே அமையும். எங்கள் தலைவர் பிரபாகரன் புலிகளின் தடையை நீக்குங்கள் எங்களுக்கு தமிழீழம் வேண்டும் என்ற கோசங்கள் வன்னி மக்களுக்கு எவ்வகையிலும் உதவாது. யதார்தத்தைப் புரிந்து கொண்டு ஏற்படப் போகும் மனித அவலத்தை தடுத்து நிறுத்த போராடுவதே இன்றுள்ள முக்கிய கடமை.

பெயர் குறிப்பிட விரும்பாத ரிஎன்ஏ பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார் ”நாங்கள் எங்களுடைய வரலாற்றுத் தவறுகளை எழுதப் போனால் புத்தகம் புத்தகமாக எழுதலாம். பாவம் மக்கள். ரொம்பவும் கஸ்டப்படுத்திவிட்டோம்” என்று. அவர் மேலும் கூறுகையில் ”இன்றைக்கு பணயம் வைக்கப்பட்டுள்ள 250 000 மக்களில் 5000 – 10 000 மக்களைப் பலிகொடுத்துத் தான் அரசியல் பேரம் பேச வேண்டி இருக்கிறது” என்று குறிப்பிட்டார்.

முரளிதரன் ‘ஒரு நாள் போட்டியி’லும் உலகசாதனை

_murali.jpgஇலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் ஒரு நாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்துவதியவர் என்ற உலக சாதனையை இன்று (05.02.2009) ஏற்படுத்தியுள்ளார்.

இன்று கொழும்பில் இந்தியாவுக்கு எதிரான 4 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது கௌத்தம் கம்பீரின்  விக்கெட்டை கைப்பற்றிய முரளிதரன் பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் அவர்களின் சாதனையான 502 விக்கெட்டுகள் என்கிற இலக்கைத் தாண்டி 503  விக்கெட்டுகள் பெற்று  புதிய உலக சாதனை சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.

இன்று தனது 328 ஆவது ஒரு நாள் போட்டியில் விளையாடிய போதே முரளிதரன் இந்த உலக சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.

உலக அளவில் டெஸ்ட் போட்டிகளிலும் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள வீரர் என்கிற பெருமையும் முரளிதரனையே சாரும். 125 டெஸ்ட் போட்டிகளில் அவர் 769 விக்கெட்டுகளை இதுவரை வீழ்த்தியுள்ளார்.

Top-Five Bowlers 

Player                  Team          Matches       Wkts 

M Muralitharan      SL                 328                   503 
Wasim Akram         Pak               356                   502 
Waqar Younis         Pak                262                   416 
C Vaas                      SL                  322                   401 
SM Pollock               SA                 302                   391 

வன்னிப்பகுதியிலுள்ள மக்கள் வவுனியாவுக்கு வரும்பட்சத்தில் சகல அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படும். – அமீர் அலி

ameerali.jpgஅரச கட்டுப்பாடற்ற வன்னிப்பகுதியிலுள்ள மக்கள் அரச கட்டுப்பாட்டு பகுதியான வவுனியாவுக்கு வரும்பட்சத்தில் தேவையான நடவடிக்கையெடுக்கப்படும். இவர்களுக்கென இராமநாதன் சுதந்திரபுரம், அருணாச்சலம் விடுதலைபுரம் மற்றும் கதிர்காமர் எழுச்சிக்கிராமம் ஆகிய மீள் குடியேற்ற கிராமங்கள் உருவாக்கப்படவுள்ளது.  இக்கிராமங்கள் ஒவ்வொன்றிலும் 8000 வீடுகள் அமைக்கப்படவுள்ளதுடன் பாடசாலை, வீதி, குடிநீர் மற்றும் மின்சாரவசதி உட்பட சகல அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.  தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அனர்த்த சேவைகள் அமைச்சர் அமீர் அலி பேசுகையில் கூறியதாவது;

அவர்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருப்பதுடன் மருத்துவ வசதியும் செய்து கொடுக்கப்படவுள்ளது. ஊடகங்கள் எண்ணிக்கையையே பார்க்கின்றது. அரசு தரமான தேவையை அம்மக்களுக்கு வழங்க காத்திருப்பதை மறந்துவிடுகின்றது. இது தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் தெரிவிக்கப்படுகின்றது. நாம் மக்களுக்கு செய்யவேண்டியதை எந்தவித தாமதமுமின்றி உடனடியாக நிறைவேற்றுவோம். இதற்கு தன்னார்வ மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் உதவவேண்டும். சகல மனிதாபிமான சேவைகளையும் அரசு உறுதியாக செய்ய காத்திருக்கிறது என்றார்.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட 40 பேர் மயக்கமடைந்து வைத்தியசாலையில் அனுமதி

பொத்துவில் பிரதேச செயலகம் முன்பாக கடந்த மூன்று நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 40 பேர் மயக்கமடைந்த நிலையில், நேற்று புதன்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  கடந்த ஆறு மாதத்திற்கு முன்னர் பொத்துவில் காட்டுப் பிரதேசத்தில் விறகு வெட்டச் சென்றபோது கைது செய்யப்பட்ட 30 முஸ்லிம்கள் வழக்கு விசாரணை எதுவுமின்றி தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் மனைவி, பிள்ளைகள், உறவினர்கள் காலவரையறையற்ற உண்ணாவிரத போராட்டத்தை திங்கட்கிழமை காலை 8 மணிக்கு பொத்துவில் பிரதேச செயலகத்தின் முன் ஆரம்பித்தனர்.

தொடர்ந்து மூன்று நாட்களாக இரவு, பகலாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் மயக்கமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இவர்கள் பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 10 மாணவர்களும் அடங்குவர்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் கோரிக்கை அடங்கிய மகஜர் பிரதேச செயலாளர், பிரதேச சபைத் தவிசாளர் உட்பட பலரிடம் கையளிக்கப்பட்ட போதிலும் நேற்று வரை இவர்கள் தொடர்பாக அதிகாரிகளோ அரசியல் வாதிகளோ எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் உறவினர்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.

வன்னி மக்களின் பாதுகாப்பை வலியுறுத்தி கொழும்பில் அடையாள உண்ணாவிரதம்

வன்னியில் இன்னல்களை அனுபவித்துவரும் பொதுமக்களின் பாதுகாப்பை வலியுறுத்தி தலைநகர் கொழும்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்றுக்கு சுதந்திர மாணவர் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக சுதந்திர மாணவர் முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

“யுத்த அபாயத்திலிருந்து மக்களைக் காப்பாற்றுங்கள்! எமக்குத் தேவை சமாதானம் மட்டுமே! மக்களை மக்களாக நடத்துங்கள்!’ ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இந்த உண்ணாவிரதம் இடம் பெறவுள்ளது. இந்த உண்ணாவிரதம் பம்பலப்பிட்டி, இராமநாதன் இந்து மகளிர் கல்லூரிக்கு முன்பாக நாளை வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு ஆரம்பமாகி மாலை 5 மணிக்கு நிறைவடையவுள்ளது.

இலங்கைத் தமிழரை பாதுகாக்க முல்லைத்தீவுக்கு படகுப்பயணம் – தூத்துக்குடி சட்டத்தரணிகள் சங்கம் முடிவு

“இலங் கையில் தமிழர்கள் மீதான தாக்குதலை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்வரும் 9 ஆம் திகதி படகு மூலம் முல்லைத்தீவு செல்வோம்’ என தூத்துக்கடி சட்டத்தரணிகள் சங்கம் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழகம் முழுவதும் சட்டத்தரணிகள், மாணவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கைப் பிரச்சினை குறித்து ஆலோசிப்பதற்காக தூத்துக்குடி சட்டத்தரணிகள் சங்கத்தின் அவசர கூட்டம் அதன் தலைவர் பிரபு தலைமையில் நடந்தது. தமிழகத்தில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் நடத்தும் அனைத்து போராட்டங்களுக்கும் ஆதரவு அளிப்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ரயில் மறியல் மற்றும் 7 ஆம் திகதி நடக்கும் கறுப்புக் கொடி பேரணியில் பங்கேற்பது. அதன் பிறகும் இப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாவிட்டால் எதிர்வரும் 9 ஆம் திகதி தூத்துக்குடியில் இருந்து படகுகள் மூலம் முல்லைத்தீவு நோக்கி செல்வது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இது குறித்து சட்டத்தரணிகள் சங்க தலைவர் பிரபு கூறுகையில்; “இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் கடும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை கணக்கிட முடியாது. இனியும் தாமதிக்காமல் மத்திய அரசு உடனடியாக இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். படுகாயம் அடைந்துள்ள தமிழர்களை இந்தியா அழைத்து வந்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்காக தமிழக அரசும் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

வவுனியா ஆஸ்பத்திரி உணவக உரிமையாளர் கடத்தப்பட்டார்

வவுனியா பொது வைத்தியசாலை உணவக உரிமையாளர் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு இனந்தெரியாத சிலரால் விசாரணைக்கெனக் கூறி கொண்டு செல்லப்பட்டுள்ளார்.  24 மணிநேரமும் வைத்தியசாலையின் உள்ளேயும் வெளியேயும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு வைத்தியசாலைக்குள் செல்பவர்கள் அடையாள அட்டைகள் உட்பட அனைத்தும் பரிசோதிக்கப்பட்டு அனுமதிக்கப்படும் நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணியளவில் ஆஸ்பத்திரி உணவக உரிமையாளர் கடத்தப்பட்டுள்ளார்.

இதையடுத்து நேற்று ஆஸ்பத்திரி உணவகம் திறக்கப்படாததால் வார்ட்களில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் பெருமளவு நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தனது கணவன் கடத்தப்பட்டது தொடர்பாக மனைவி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.