விடுதலைப் புலிகள் தென்னிந்தியாவின் பொருளாதார மற்றும் பொதுமக்கள் இலக்குகள் மீது விமானத்தாக்குதல்களை நடத்தக் கூடுமென இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா எச்சரித்துள்ளார். படையினரின் தாக்குதல்களால் ஏற்பட்டிருக்கும் விரக்தி நிலை காரணமாகவே விடுதலைப்புலிகள் இந்தியாவை இலக்காகக் கொள்ளக் கூடுமென இந்திய தினசரி பத்திரிகையொன்றுக்கு வழங்கியிருக்கும் பேட்டியில் லெப். ஜெனரல் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டியிருக்கிறார்.
அண்மையில் கொழும்பு மீது மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதல் முயற்சியின் போது விடுதலைப்புலிகளின் இரு விமானங்களும் சுட்டு வீழ்த்தப்பட்டதையடுத்து, புலிகளின் வான் பலம் அதிகளவில் குறைக்கப்பட்டுள்ள போதிலும் இந்திய இலக்குகளைத் தாக்கும் திறன் இன்னும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். இந்திய மத்திய அரசாங்கம் விடுதலைப்புலிகளின் வழியில் நீண்டு இழுபட்டுக் கொண்டிராமல் தற்போது பொதுமக்களின் நிலைமைகள் பற்றி மட்டுமே பேசுவதால் விடுதலைப் புலிகளும் தென்னிந்தியாவிலுள்ள அவர்களது அனுதாபிகளும் ஆத்திரமடைந்துள்ளனர் என்று இலங்கை இராணுவத் தளபதி தெரிவித்திருப்பதாகவும் அந்தப் பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.
அவர்கள் (புலிகள்) இலங்கையின் வடக்கு, கிழக்கு முழுவதுமாக பறந்து வந்து கொழும்பிலுள்ள இலக்குகள் மீது தாக்குதல் நடத்திவிட்டு மீண்டும் திரும்பிச் செல்லும் திறனைக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் இந்தியாவிலும் இதையே செய்ய முடியும் என்றும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சுட்டிக்காட்டியிருக்கிறார். இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதல் நடவடிக்கை மூலம் விடுதலைப் புலிகளின் 7 விமான ஓடுபாதைகளும் கைப்பற்றப்பட்டுவிட்ட போதிலும் கூட அவர்களால் கொழும்பு மீது விமானத் தாக்குதல் நடத்த முடிந்தமையானது இந்தியாவுக்கான அச்சுறுத்தல் நம்பக் கூடியதாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், விடுதலைப் புலிகளின் தாழப் பறக்கும் விமானத்தைக் கண்டறிவது கடினமென்பதுடன் அதற்கு இந்தியாவினுள் 150170 கிலோ மீற்றரை விட அதிகமான தூரம் சென்று இலகுவாகத் தாக்குதல்களை நடத்த முடியுமென்று சரத் பொன்சேகா கூறியிருக்கிறார். இதேநேரம் அது தற்கொலைத் தாக்குதல் நடவடிக்கையாக இருந்தால் விமானத்துக்கு மேலும் நீண்ட தூரம் உள்ளே பயணிக்க முடிவதுடன் விமானம் திரும்பியும் வராது என்றும் அவர் எச்சரித்திருக்கிறார்.
இதேவேளை, இடம்பெயர்ந்த தமிழ்ப் பொதுமக்களை மோதல்கள் நடைபெறும் பிரதேசத்திலிருந்து வெளியேற அனுமதிப்பதில்லையென குற்றஞ்சாட்டி விமர்சனங்கள் அதிகரித்திருக்கும் நிலையில், இந்தியாவை இலக்கு வைப்பதால் விடுதலைப் புலிகளுக்கு ஏதேனும் பயன் இருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்திருக்கும் லெப். ஜெனரல் பொன்சேகா; ராஜீவ் காந்தியை (இந்திய முன்னாள் பிரதமர்) இந்திய மண்ணிலேயே படுகொலை செய்யுமளவிற்கு போதுமானளவு துணிச்சலோ அல்லது முட்டாள்த்தனமோ புலிகளுக்கு இருந்தது. அவர்கள் சமாதானத்தையோ அல்லது பேச்சுகளையோ நம்பவில்லை. தற்போது, அவர்கள் முல்லைத்தீவில் வெறும் சுமார் 35 சது கிலோமீற்றர் பரப்புடைய நிலப்பரப்பிற்குள்ளும் 20 சதுர கிலோமீற்றர் பரப்புடைய கடற்கரை பிரதேசத்திற்குள்ளும் முடக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விரக்தியடைந்துள்ளனர் என்று கூறியிருக்கிறார்.