புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அண்மையில் படையினரால் கைப்பற்றப்பட்ட புலிகளின் கனரக பீரங்கிகள் நேற்று முதல் புலிகளுக்கெதிரான தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டு வருவதாக படைத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
பிரிகேடியர் கமல் குணரத்ன தலைமையிலான இராணுவத்தின் 53ஆம் படையணியினர் சில தினங்களுக்கு முன்னர் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த 130 மி.மி. கனரக பீரங்கி இரண்டைக் கண்டுபிடித்திருந்தனர். 27 கிலோ மீற்றர் சுடுதூரத்தைக் கொண்ட இந்த பீரங்கிகள் நேற்று முதல் புலிகளுக்கு எதிராக வன்னியில் குண்டுகளை ஏவி வருகின்றன.
இது தொடர்பாக களமுனையில் உள்ள படை வீரர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், வன்னிப் பிரதேசம் முழுவதையும் கைப்பற்றும் நோக்குடன் நாம் மேற்கொண்டுவரும் இந்நடவடிக்கையில் பல வெற்றிகளை ஈட்டியுள்ளோம். புலிகளின் இந்த கனரக பீரங்கிகள் கைப்பற்றப்பட்டமை வியக்கத்தக்க வெற்றியாகும். இந்தப் பீரங்கிகளினூடாக நாம் இன்று எமது எதிரியை தாக்கி வருகின்றோம் எனக்கூறினார்.