உலக பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நமது நாடு பொருளாதாரத் துறையில் பெரும் முன்னேற்றத்தைக் கண்டு வருகிறதென ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். சுமார் 35 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மத்திய வங்கியின் மாத்தளை மாவட்ட பிரதேச காரியாலயத்தை திறந்து வைக்கும் வைபவம் நேற்று முன்தினம் முதலாம் திகதி மாத்தளையில் இடம்பெற்ற போது விஷேட அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பஸில் ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார்.
இவ்வைபவத்தில் தொடர்ந்து உரையாற்றிய அவர்:- முழு உலகிலும் பொருளாதார துறையின் விற்பன்னர்கள் எனக் கூறும் அமெரிக்கா இன்று பொருளாதாரத்துறையில் பெரும் வீழ்ச்சியைக் கண்டுள்ளது. சரித்திரத்தில் என்றும் இல்லாதவாறு அமெரிக்கா பெரும் பொருளாதார சவால்களை எதிர்நோக்கி வருகின்றது. மிகவும் குறுகிய காலத்தில் பலவிதமான சவால்களை எதிர்நோக்கி வருகின்ற அமெரிக்காவில் வேலையில்லாப் பிரச்சினை, பணவீக்கம் என்பனவற்றால் அமெரிக்கர்கள் இன்று பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். இதற்கெல்லாம் மூல காரணம் நாட்டை வழி நடத்திட சிறந்த தலைமைத்துவம் இல்லாமை, சிறந்த பொருளாதாரக் கொள்கை, சரியான முகாமைத்துவம் இல்லாமை என்பதையே உலக பொருளாதார வித்துனர்கள் எடுத்துக் கூறுகின்றனர்.
2003ஆம் ஆண்டு நம் நாட்டில் ஒரு தனிநபர் வருமானம் ஆயிரம் அமெரிக்க டொலராகவே இருந்தது. இது இன்று 2070 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. 2003ம் ஆண்டு குறைந்த வரு மானம் பெறுவோரின் எண்ணிக்கை 22.3 வீதமாக இருந்த போதும் அது இப்போது 15 வீதமாகக் குறைந்துள்ளது. ஜனாதிபதி பதவியேற்று ஒரு வருடகாலம் பூர்த்தியாகுவதற்குள் 2006ம் ஆண்டு ஏற்பட்ட மாவிலாறு பிரச்சினையுடன் விடுதலைப் புலிகளுடன் ஏற்பட்ட யுத்தத்துடன் முழு கிழக்கும் இராணுவ ரீதியாக மீட்கப்பட்டு, அதைத் தொடர்ந்து பல்லாண்டு காலமாக பயிர்ச் செய்கை பண்ணப்படாத பல ஆயிரக் கணக்கான வயல் நிலங்கள் தற்போது பயிர்ச் செய்யப்பட்டு கிழக்குப் பகுதி மக்கள் விவசாயத்துறையில் தற்போது தன்னிறைவு கண்டு வருகின்றனர். கிழக்கு பகுதிகளில் விவசாயத் துறையை முன்னேற்றிட அவர்களுக்குத் தேவையான விதை நெல், பசளை, டிரக்டர் வண்டிகள், கிருமிநாசினி என்பன மத்திய வங்கியின் பூரண அனுசரணையுடன் வழங்கப் பட்டுள்ளன. இன்று கிழக்கு மக்கள் பரிபூரண சுதந்திரத்துடன் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிழக்கை மீட்டெடுத்த இராணுவ வீரர்கள், இன்று வெற்றிகரமாக வடக்கையும் மீட்டெடுத்து பயங்கரவாதிகளை வெற்றிகொள்ள முடியும் என்பதை உலகின் பல வல்லரசுகளுக்கும் எடுத்துக் காட்டி சிறந்ததொரு இராணுவ சக்தியாக எமது இராணுவம் விளங்குகின்றது. ஜனாதிபதியின் விசேட பணிப்பின் பேரில் அண்மையில் ஐ. நா. சபையின் செயலாளர் நாயகத்தை சந்தித்தேன். அப்போது கிளிநொச்சியை எமது இராணுவத்தினர் மீட்டெடுத்ததைப் பற்றி அவருக்கு எடுத்துக் கூறினேன். உங்கள் நாட்டு இராணுவம் கிளிநொச்சி மீட்டது ஒரு பெரிய காரியமல்ல. இராணுவ ரீதியாக பயங்கரவாதிகளைத் தோல்வியடையச் செய்து ஒரு சிவிலியனும் பலியாகாமல் அவர்களின் சக்தியை உடைத் தெறிந்து அவர்களை பூஜ்யமாக்கி முழு உலகிலும் உங்கள் நாட்டு இராணுவம் தங்களின் பெயர்களைப் பதிவு செய்து சாதனை படைத்தார்களே இதுதான் உங்கள் நாடு கண்டுகொண்ட பெரும் வெற்றி என்று ஐ. நா. சபை செயலாளர் நாயகம் கூறியது நாம் பெற்ற வெற்றி.
இன்று வடக்கில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி போன்ற பகுதிகளில் எமது அபிவிருத்திப் பணிக்கு எமது அரசுக்குக் கிட்டாத, பயிர் செய்யப்படாத பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலங்கள் இராணுவத்தினரால் எமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன. காலப் போக்கில் இந்த நிலங்களையும் பயிர் செய்து அங்கே அபிவிருத்திப் பணிகளை முடுக்கிவிட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.