2009

2009

மோதல் பகுதிகளில் பணியாற்றிய வைத்தியர்கள் விசாரணைக்குட் படுத்தப்பட்டுள்ளனர்

varatharaja.gifஇலங்கையின் வடகிழக்கே புதுமாத்தளன் பகுதியில் செயற்பட்ட தற்காலிக மருத்துவமனையில் பணியாற்றிய 3 மருத்துவர்கள் மீது இலங்கை சுகாதார அமைச்சு விசாரணைகளை நடத்திவருவதாக அமைச்சின் பேச்சாளர் தர்ம வன்னிநாயக்க தெரிவித்ததாக பிபிசி செய்தி தெரிவிக்கின்றது.

யுத்த பிரதேசத்தில் கடமையாற்றிய இந்த மருத்துவர்களான டி.சத்தியமூர்த்தி, டி.வரதராஜா, வி.சண்முகராஜா ஆகிய மூவரும் அந்தப் பகுதியில் காயமடைந்த பொதுமக்கள் தொடர்பாக பொய்யான தகவல்களை ஊடகங்களுக்கு வழங்கினார்கள் என்று அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் முழுமையாகத் தோற்கடிக்கப்படுவதற்கு முன்னதாக இவர்கள் மூவரும் யுத்த பிரதேசத்திலிருந்து தப்பிவந்தபோது, இவர்களை இராணுவம் கைதுசெய்து விசாரணைக்கு உட்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆடுகளம் சரி இல்லாததால் தோற்று விட்டோம்: டோனி

ipl-2009-01.jpgஐ.பி.எல். 2 வது அரை இறுதி போட்டி சனிக்கிழமை ஜோகன்ஸ்பர்க் நகரில் நடந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின.
 
முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவரில் 5 விக் கெட்டு இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய பெங்களூர் அணி 18.5 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 149 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் பெங்களூர் அணி இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பை பெற்றது.
 
தோல்வி குறித்து சென்னை அணி கேப்டன் டோனி கூறியதாவது:   நாங்கள் 160 ரன்கள் வரை எடுக்கலாம் என எதிர்பார்த்தோம் ஆனால் 15 ல் இருந்து 20 ரன்கள் வரை குறைந்து விட்டது. இந்த கூடுதல் ரன்களை எடுத்து இருந்தால் பெங்களூர் அணிக்கு நெருக்கடி கொடுத்து இருப்போம்.
 
ஆடுகளமும் சரியாக இல்லை. மந்தமான ஆடுகளமாக இருந்தால் எங்கள் பேட்டிங்கை பாதித்தது. அதே போல எங்கள் பந்து வீச்சாளர்களும் பந்து வீச்சை சரியாக செய்யவில்லை. இவற்றால்தான் தோல்வியை சந்தித்தோம் என்றார்.

மன்மோகனுடன் ஒபாமா தொலைபேசியில் வாழ்த்து – தீவிரவாதத்தை ஒழிக்க உறுதி

pm-manmogan.jpg2வது முறையாக பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள மன்மோகன் சிங்குக்கு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். மேலும், தீவிரவாதத்திற்கு எதிராக உறுதியுடன் செயல்படுவோம் எனவும் அவரிடம் தெரிவித்தார். இன்று காலை மன்மோகன் சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஒபாமா அவருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது உலகளாவிய தீவிரவாதம் , பொருளாதார சீர்குலைவு உள்ளிட்டவை குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

மேலும், தட்பவெப்ப நிலை மாற்றம் குறித்தும், இந்திய, அமெரிக்க இரு தரப்பு உறவை மேலும் வலுவாக்குவது குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.

தீவிரவாதத்தை ஒழிப்பதில் உறுதியுடன் செயல்படவும் இரு தலைவர்களும் உறுதி கூறிக் கொண்டனர். இந்தப் பேச்சின்போது மன்மோகன் சிங்கை அமெரிக்காவுக்கு வருமாறு ஒபாமா அழைப்பு விடுத்தார். லோக்சபா தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றதற்காகவும், மன்மோகன் சிங்கின் முந்தைய அரசு கடைப்பிடித்த கொள்கைகளுக்கு மக்கள் அளித்துள்ள பாராட்டே இந்த வெற்றி என்றும் ஒபாமா பாராட்டு தெரிவித்தார்.

எங்களது அமைதி சரணடைவதற்கு அல்ல – விடுதலைப் புலிகள்

எங்களது துப்பாக்கிகள் தற்காலிகமாக மெளனமாகி இருப்பது சரணடைவதற்காக அல்ல. தலைமையின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம் என விடுதலைப் புலிகளின் யாழ் குடா படைப் பிரிவுத் தளபதி வெற்றிக்குமரன் தெரிவித்துள்ளார் என இணையத்தள செய்திகள் தெரிவிக்கின்றன.

யாழ் குடா பகுதியில் தலைமறைவாக இருக்கும் விடுதலைப் புலிகள் உடனடியாக சரணடைய வேண்டும் என ராணுவம் எச்சரித்துள்ளது. இதற்கு விடுதலைப் புலிகள் தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தின் எச்சரிக்கையை புலிகள் நிராகரித்துள்ளனர்.

இதுகுறித்து யாழ் குடா பகுதிக்கான புலிகள் படைப் பிரிவின் தளபதியான வெற்றிக்குமரன் என்பவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்இ எமது துப்பாக்கிகள் தற்காலிகமாக மௌனமாகி இருப்பது சரணடைவதற்காக அல்ல, உரிய நேரத்தில் தலைமையின் உத்தரவிற்காக காத்திருக்கின்றோம்.

எங்களது இயக்கப் போராளிகள் என்றும் இல்லாத அளவு மிக உறுதியுடன் போராடத் தயாராக இருக்கின்றார்கள். அவர்கள் சிங்கள ராணுவத்தின் பசப்பு வார்த்தைகளுக்கு மயங்க மாட்டார்கள். ராணுவம் இன்று பெரும் உளவியல் மற்றும் மறைமுக புலனாய்வு போரை தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளது. எனவே மக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பயங்கரவாதத்தை அழிப்பதகாகக் கூறி சுதந்திரப் போராட்ட அமைப்பான விடுதலைப் புலிகளை அழித்துவிட்டதாக இலங்கை அரசு கூறி வரும் மாயை மிக விரைவில் உடையும் என்று அவர் கூறியுள்ளார்.

திமுகவுடன் பிரச்சனையில்லை:விரைவில் தீர்வு ஏற்படும் – குலாம்நபி ஆசாத்

gulam-azad_.jpgமத்திய மந்திரிசபையில் திமுகவுக்கு எத்தனை மந்திரிகள் ஒதுக்குவது என்பது தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மந்திரி பதவியேற்க திமுக மறுத்து விட்டது.  காங்கிரஸ் கூட்டணி அரசை வெளியில் இருந்து ஆதரிப்பது என்று தி.மு.க. முடிவு செய்தது. மத்திய மந்திரிசபையில் திமுக இடம் பெறுவதற்காக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது. பிரதமரும் அழைப்பு விடுத்து இருந்தார்.

மந்திரிசபையில் சேர்வது தொடர்பாக உயர்நிலை செயல் திட்ட குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று கருணாநிதி அறிவித்து இருந்தார். இந்த நிலையில் மந்திரி சபை விஸ்தரிப்புக்கு முன்பு திமுகவுடன் உடன்பாடு ஏற்படும் என்று தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார். டெல்லியில் அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, ’’தி.மு.க.வுடன் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இதனால் நான் சென்னை செல்லவில்லை. மந்திரிசபை விஸ்தரிக்கப்படுவதற்கு முன்பு (செவ்வாய்க்கிழமை) தி.மு.க.வுடன் தீர்வு ஏற்பட்டு விடும்’’ என்று தெரிவித்தார்.

டாக்டர்கள் மூவரையும் ஐ.சி.ஆர்.சியின் அதிகாரி வியாழன் சந்தித்துப் பேசினார்

varatharaja.gifவன்னியில், போரின் மத்தியிலும் கடைசி வரை பணிபுரிந்த அரச டாக்டர்கள் மூவரையும் சந்தித்துப்பேசி அவர்களின் நிலைமையை  செஞ்சிலுவைச் சர்வதேசக்குழு (ஐ.சி.ஆர்.சி.)அதிகாரிகள் கேட்டறிந்தனர். அவர்களைச் சந்திப்பதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்கியதாக செஞ்சிலுவைக்குழுவின் பேச்சாளர் சரசி விஜேரத்னா தெரிவித்தார்.

ஐ.சி.ஆர்.சி. வியாழக்கிழமை மூன்று டாக்டர்களையும் நேரில் கண்டு அவர்களுடன் தனிப்பட்ட முறையில் பேசியது  என்று கூறிய அவர் வேறு விவரம் எதனையும் தெரிவிக்கவில்லை. இதேவேளை அவர்களில் ஒருவர் காயமடைந்த நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று மற்றொரு தகவல் தெரிவித்தது.

கடந்த 16 ஆம் திகதி சனிக்கிழமைக்குப் பின்னர் அவர்கள் தொடர்பாக முதற் கிடைத்த தகவல் இது. அவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலைமை தொடர்பாக கருத்துக்  கூறுவது செஞ்சிலுவைச் சர்வதேச குழுவின் கொள்கையல்ல என்று ஐ. சி. ஆர்.சியின் மற்றொரு அதிகாரி தெரிவித்தார். முல்லைத்தீவு, மக்கள் பாதுகாப்பு வல யத்தில் இருந்து கடந்த 16 ஆம் திகதி வெளியேறிய பின்னர் டாக்டர் தி.சத்திய மூர்த்தி, து.வரதராஜா, எஸ்.சண்முகராஜா ஆகியோர் காணாமல் போயுள்ளனர் என தகவல்கள் வெளிவந்தமை தெரிந்ததே.         

ஐ.பி.எல்: ஐதராபாத்-பெங்களூர் அணிகள் மோதல்

ipl-2009-01.jpgஐ.பி.எல்.  20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

2 வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. கடந்த மாதம் 18 ந் தேதி தொடங்கிய இந்த போட்டியில் 8 அணிகள் கலந்து கொண்டன. லீக் ஆட்டங்கள் முடிவில் டெல்லி டேர்டெவில்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன.

முதல் அரை இறுதியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. நேற்று நடந்த 2 வது அரை இறுதி ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டி ஜோகனஸ்பர்க்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணிக்கு தொடங்கி நடக்கிறது. இதில் கில்கிறிஸ்ட் தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணியும், கும்பிளே தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.

கடந்த ஆண்டு நடந்த முதலாவது ஐ.பி.எல். போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி கடைசி இடமும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 7 வது இடமும் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற உறுப்பினர் பத்மநாதனின் பூதவுடல் காரைதீவு இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலய மண்டபத்தில்..

kpatmanathan.jpg காலஞ்சென்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை பத்மநாதனின் பூதவுடல் தற்போது காரைதீவு இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலய மண்டபத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை தமிழ்நாடு மதுரையில் காலமான அன்னாரின் பூதவுடல் நேற்று முன்தினமிரவு கொழும்புக்குக் கொண்டு வரப்பட்டு நேற்று மாலை வரை பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து நேரடியாக அவரது சொந்தக் கிராமமான காரைதீவிலுள்ள அவரது இல்லத்திற்கு நேற்று நள்ளிரவு எடுத்துவரப்பட்டது.

இன்று காலை 8.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை இராமகிருஷ்ணமிஷன் வித்தியாலய மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள பூதவுடல், பின்னர் அங்கிருந்து தம்பிலுவில் இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு நாளை திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணி வரை மக்கள் அஞ்சலிக்காக பூதவுடல் வைக்கப்படும். அன்றைய தினம் மாலை தம்பிலுவில் பொது மயானத்தில் தகனக் கிரியைகள் நடைபெறும்.

பிரபாகரனின் உடல் தகனம் செய்யப்பட்டு அஸ்தி இந்து சமுத்திரத்தில் எறியப்பட்டது- இராணுவத் தளபதி

fonseka-000.jpgதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடலை இலங்கைப் பாதுகாப்புப் படையினர் தகனம் செய்து விட்டனர் என்று இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சிங்கள வார இதழ் ஒன்றுக்கு அவர் பேட்டியளிக்கையில் மேற்கண்டவாறு கூறியதாக ஏ.எவ்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜெனரல் சரத் பொன்சேகா மேலும் கூறுகையில், “முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம் பெற்ற கடும் தாக்குதலையடுத்து செவ்வாய்க்கிழமை காலை பிரபாகரனின் உடல் அடையாளம் காணப்பட்டது. நாம் அதே பிரதசத்தில் பிரபாகரனின் உடலைத் தகனம் செய்து அஸ்தியை இந்து சமுத்திரத்தில் எறிந்தோம். பிரபாகரன் இறக்கும் முன்னர் நாங்கள் யுத்தத்தில் வெற்றியடைந்து விட்டதாக நான் அறிந்து கொண்டேன். ஆனால், அவரது மரணம் ஊர்ஜிதமான பின்னர் நான் பெரு மகிழ்ச்சியடைந்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நேற்றிரவு கருணாநிதி – நாராயணன் சந்திப்பு

karunanidhi.jpgஇலங்கைக்கு விஜயம் செய்த  தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவுடன் தான் பேசியது குறித்து முதல்வர் கருணாநிதியை சந்தித்து விளக்கினார் .

விடுதலைப் புலிகளுடனான மோதல் முடிவுக்கு வந்ததாக ராஜபக்சே அறிவித்ததைத் தொடர்ந்து நாராயணன், வெளியுறவுச் செயலாளர் எஸ்.எஸ்.மேனன் ஆகியோர் கொழும்பு சென்றனர். அங்கு ஜனாதிபதி ராஜபக்சவை சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்புக்குப் பின்னர் நாராயணன், முதல்வர் கருணாநிதியை சந்தித்து தனது பயணம் குறித்து விளக்குவார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இலங்கை செல்வதற்கு முன்பு கருணாநிதியை நாராயணன் சந்தித்துப் பேசியிருந்தார்.

இருப்பினும் இலங்கை சென்று வந்த அவர் முதல்வரை சந்திக்கவில்லை. அரசமைப்பு குழப்பம் நிலவி வந்ததால் அவர் சந்திக்கவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் நேற்று இரவு திடீரென சென்னை வந்தார் நாராயணன். இரவு எட்டரை மணியளவில் நாராயணன் முதல்வரை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். சுமார் அரை மணி நேரம் இந்த சந்திப்பு நீடித்தது. இலங்கை பயணம்,  ஜனாதிபதி ராஜபக்ச என்ன கூறினார் என்பது குறித்து கருணாநிதியிடம், நாராயணன் விளக்கியதாக தெரிகிறது.