20

20

வடமராட்சி கிழக்கு,வன்னியிலிருந்து இதுவரை 1,796 பேர் தென்மராட்சிக்கு வருகை

displace.jpgவடமராட்சி கிழக்கு மற்றும் வன்னியில் படையினரால் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களிலிருந்து தென்மராட்சிக்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை 1,796 பேர் வந்துள்ளதாக யாழ். செயலக புனர்வாழ்வுத்திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில்167 குடும்பங்களைச் சேர்ந்த 440 பேர் கோப்பாய் ஆசிரிய பயிற்சிக்கல்லூரி இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பழைய பூங்கா வீதியிலுள்ள திருநகர் இடைத்தங்கல் முகாமில் 24 குடும்பங்களைச் சேர்ந்த 61 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 416 குடும்பங்களைச் சேர்ந்த 1,296 பேர் மிருசுவில் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையிலும் அருகாமையிலுள்ள தேவாலயக் கட்டிடங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் மூன்று நாட்களுக்கு சமைத்தஉணவு வழங்கப்பட்டு வருவதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கே. கணேஷ் தெரிவித்தார். அரசசார்பற்ற தொண்டர் நிறுவனங்கள், பாய்கள்,அரிக்கன் லாம்புகள்,உடுதுணிகள், பாவனைப் பொருட்களை வழங்கி வருகின்றன. அகதிகள் வருகை அதிகரித்து வருவதால் இடைத்தங்கல் முகாம்களை அமைப்பது, நிவாரணப் பணிகளை மேற்கொள்வது குறித்து அரசசார்பற்ற நிறுவனங்களுடன் யாழ். செயலகத்தில் நேற்று அவசர சந்திப்பொன்றையும் அரசஅதிபர் நடத்தியுள்ளார்.

வன்னியில் இருந்து இடம்பெயரும் மக்கள் தனித்தனி வீடுகளில் குடியமர்த்தப்படுவார்கள் – அமைச்சர் ரிசாட் பதியுதீன்

risard.jpgவன்னியில் தொடரும் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து வருகின்ற மக்களுக்கு ஐந்து நலன்புரி நிலையங்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கும் மீள் குடியேற்ற அநர்த்த நிவாரண அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு , இடம்பெயர்ந்து அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வருகின்ற மக்களின் விடயத்தில் அதிக கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இடம்பெயர்ந்து வருபவர்களில் வவுனியா வடக்குப் பிரதேச மக்களுக்கு ஓமந்தையிலும், மன்னார் பிரதேச மக்களுக்கு கட்டைஅடம்பனிலும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் மக்களுக்கு செட்டிக்குளம் மெனிக்பாம் பண்ணையிலுமாக ஐந்து நலன்புரி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

இடம்பெயர்ந்து வருகின்றவர்களுக்கு தனித்தனியாக வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டு அவற்றில் அவர்கள் குடியமர்த்தப்படுவார்கள். சகல அமைச்சுகளும் இணைந்து இந்த வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளன. மீள்குடியேற்ற அநர்த்த நிவாரண அமைச்சு இந்த வேலைத்திட்டத்தை மேற்பார்வை செய்யும். கொழும்பில் நடைபெற்ற உயர் மட்ட மநாட்டில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன எனவும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

இதேவேளை, வன்னியில் இருந்து ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 3,900 பேர் வவுனியாவுக்கு வந்துள்ளனர் எனவும் இவர்களுக்கு வேண்டிய சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படும் எனவும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பீ. எம். எஸ். சாள்ஸ் தெரிவித்தார். நாளுக்குநாள் வன்னியிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்து வருவதால் உரிய வசதிகளைச் செய்யுமாறு ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

புலிகளின் 3 இலக்குகள் மீது விமானத் தாக்குதல்

mi24-1301.jpgமுல்லைத்தீவு மாவட்டத்தில் இனங்காணப்பட்ட புலிகளின் வெவ்வேறு மூன்று இலக்குகள் மீது இலங்கை விமானப் படையினர் நேற்று கடும் தாக்குதல்களை நடத்தியிருப்பதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.  விமானப்படைக்குச் சொந்தமான ஜெட் மற்றும் எம். ஐ. 24 ரக விமானங்களே கடும் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இத்தாக்குதல்கள் நேற்றுக் காலை 9 மணி தொடக்கம் 11.30 மணிக்குட்பட்ட காலப் பகுதியில் இடம்பெற்றன.

முல்லைத்தீவுக்குத் தெற்கே நேற்றுக் காலை 9 மணிக்கு முதலாவது தாக்குதல் நடத்தப்பட்டது முன்னேறிவரும் இராணுவத்தின் 59ஆம் படைப்பிரிவுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் அதற்கு எதிர்த்திசையில் தாக்குதல் நடத்தியதாக ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

இதனையடுத்து நேற்றுக் காலை 11.30 மணியளவில் முல்லைத்தீவுக்கு தெற்கே புலிகளின் முக்கியஸ்தர்கள் கூடும் இன்னுமொரு இடத்தில் விமானத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பிரமண்டான்குளத்திற்கு வட மேற்கே இரண்டு கிலோமீற்றர் தொலைவில் மணல்மேடு அமைப்பதில் ஈடுபட்டிருந்த புலிகள் மீதும் விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இவ்விமானத் தாக்குதல்கள் அனைத்தும் வெற்றியளித்திருப்பதனை விமான ஓட்டிகள் உறுதி செய்திருப்பதாகவும் மத்திய நிலையம் கூறியது.

சிரச ஊடக தாக்குதல் சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஆஜர்

sirasa-02.jpgசிரச ஊடக வலையமைப்பின் கட்டிடத் தொகுதி தாக்குதல் தொடர்பாக, சந்தேகத்தின் பேரில் கைதான ஐவர் நேற்று திங்கட்கிழமை நுகேகொட நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர். விசாரணையின் முடிவில் ஐந்து பேரையும் சரீரப் பிணையில் செல்வதற்கு நுகேகொட நீதிவான் வஸந்த ஜினதாஸ அனுமதித்தார். நடத்தப்பட்டுவரும் விசாரணையை கருத்தில் கொள்ளும் போது சம்பவம் தொடர்பான கவனத்தை பொலிஸார் வேறு திசைக்கு மாற்ற முயல்வதாக நீதிவான் குறிப்பிட்டார்.

கணிசமான அளவுக்கு வெளிநாடுகள் கவனத்தை ஈர்த்துள்ள இச்சம்பவம் ஏன் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஊடாக விசாரணை நடத்தப்படவில்லை என பொலிஸாரிடம் நீதிவான் வினவியதாக சந்தேக நபர்களின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நிஸங்க நாணயக்கார தெரிவித்தார்.

38 புலிகளின் உடல்கள் வவுனியாவில் அடக்கம்

வவுனியா ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் 38 உடல்களும் இன்று செவ்வாய்க்கிழமை வவுனியாவில் அடக்கம் செய்யப்படவுள்ளது. வன்னியில் இடம்பெற்ற போரில் உயிரிழந்த பின்னர் படையினரால் கைப்பற்றப்பட்ட இந்த உடல்கள் வவுனியா ஆஸ்பத்திரியில் ஒப்படைக்கப்பட்டன.

இந்த உடல்களைப் பொறுப்பேற்குமாறு சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்திடம் பொலிஸார் தெரிவித்தபோதிலும், புதுக்குடியிருப்பிலிருந்து தகுந்த பதில் வராததால் உடல்களை பொறுப்பேற்பதில் தாமதம் ஏற்படுவதாக சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் கூறியது. மிகவும் பழுதடைந்துள்ள இவை துர்நாற்றம் வீசுவதினால் மாவட்ட நீதிமன்றின் அனுமதியுடன் வவுனியாவிலேயே அடக்கம் செய்ய பொலிஸாரும் வைத்தியசாலை நிர்வாகத்தினரும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

பாக்கிஸ்தானுக்கு இந்தியா கிரிக்கட் அணி செல்லவில்லை. ஆனால், இலங்கை அணி பாகிஸ்தானிலும், இந்தியா அணி இலங்கையிலும் விளையாடுகின்றன. – ஏகாந்தி

pakistan-c-teem.jpgசர்வதேச கிறிக்கட் கட்டுப்பாட்டுசபையின் (ICC) நேர அட்டவணைப்படி இந்தக்காலகட்டங்களில் இந்திய கிறிக்கட் அணியினர் பாக்கிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள வேண்டும். ஆனால், மும்பாய் தாக்குதலையடுத்து இச்சுற்றுப் பயணம் தடையானது.

இந்நிலையில் 3 ஒரு நாள் போட்டிகளிலும் 2 டெஸ்ட் போட்டிகளிலும் பாக்கிஸ்தானுடன் விளையாட இலங்கை அணி விருப்பம் தெரிவித்தது. அதேநேரம், இலங்கைக்கான 5 ஒரு நாள் போட்டிகளிலும் 20க்கு 20 போட்டியொன்றிலும் கலந்துகொள்ள இந்தியா அணி இம்மாத இறுதியில் இலங்கை வரவுள்ளது.

மஹெல ஜயவர்தன தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் போட்டியில் விளையாடுவதற்காக தற்போது பாகிஸ்தான் சென்றுள்ளது.

இலங்கை வீரர்களுக்கு வரலாறு காணாத வகையில் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு பிரச்சினை காரணமாகவே சமீபகாலமாக பாகிஸ்தானில் விளையாட எந்த அணியும் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்தாண்டில் பாக்கிஸ்தானில் பாதுகாப்பு நிலைமையைக் காரணம் காட்டி அவுஸ்திரேலியா அணி முதலில் பயணத்தை ரத்து செய்தது. அதன் பிறகு கடந்த செப்டம்பர் மாதம் பாக்கிஸ்தானில் நடைபெற இருந்த சம்பியன் கிண்ணப் போட்டி தள்ளி வைக்கப்பட்டது. 

பாக்கிஸ்தானுக்கு இந்தியா அணி செல்வதற்கான சகல ஏற்பாடுகளும் நடைபெற்றிருந்த நேரத்திலே மும்பாய் தாக்குதல் இடம்பெற்றது. மும்பாய் தாக்குதலையடுத்து இரு நாடுகளுக்குமிடையே ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக இந்திய அணி பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்தது.

இந்நிலையில் தற்போது இலங்கை அணி அங்கு சென்று உள்ளது.

பாகிஸ்தான் – இலங்கை அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி கராச்சியில் இன்று (20) செவ்வாய்க்கிழமை நடக்கிறது. 2 வது போட்டி நாளை (21) (புதன்கிழமை)யும் 3 வது மற்றும் கடைசி போட்டி 24 ஆம் திகதியும் (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. இந்த 3 ஒரு நாள் போட்டிகளும் பகல் – இரவாக ஆட்டங்களாக நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

3 ஒரு நாள் போட்டிகளும் முடிவடைந்த பின்பு இலங்கை அணி தாயகம் திரும்பவுள்ளது.

இதைத் தொடர்ந்து இந்திய அணியுடன் இலங்கையில் 5 ஒரு நாள் போட்டிகளில் இலங்கை அணி ஆடவுள்ளது. அத்துடன்,  20க்கு 20 போட்டியொன்றும் இந்திய அணிக்கெதிராக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்திய அணியுடனான போட்டிகள் இம்மாதம் 28ஆந் திகதி தொடக்கம் பெப்ரவரி மாதம் 10ஆந் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்திய அணி இலங்கைக்கு விஜயம் செய்வது தொடர்பாக தமிழ் நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகள் பலத்த எதிர்ப்பினைக் காட்டி வருகின்றது. இலங்கையில் நடைபெறும் யுத்த நிலைமை காரணமாக இந்திய அணி இலங்கைக்குச் செல்லக் கூடாது என ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.

இறுதியாக கடந்த 19ம் திகதி இலங்கைக்கு இந்திய கிரிக்கெட் அணியை அணியை அனுப்பக்கூடாது என்று பாமகவின் வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவை சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டமொன்றினை நடத்தினர். பா.ம.க.வின் அங்கமான வழக்கறிஞர்கள் சமூகநீதி பேரவை சார்பில் இந்த  ஆர்ப்பாட்டம் சென்னை ஐகோர்ட்டு முன்பு  நடத்தப்பட்டது. சமூகநீதி பேரவை தலைவர் கே.பாலு வக்கீல்கள் சங்க தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் வக்கீல் எம்.பழனிமுத்து உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட வக்கீல்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இலங்கைக்கு,  இந்திய கிரிக்கெட் அணியை அனுப்பக்கூடாது என்றும்,   இலங்கையில் நடைபெறும் போரை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்றும்,  தமிழர்களை கொன்று குவிக்கும் இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டு ஒரு கேடா என்றும்,   இந்திய கிரிக்கெட் வாரியம் பணம் கொழிக்க தமிழன் செத்து மடியும் இலங்கைதான் கிடைத்ததா? என்றும்,  அப்பாவி தமிழன் செத்து மடிகிறான், அங்கே கிரிக்கெட் விளையாட்டு ஒரு கேடா’ என்றும் பல கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஆனால், இந்த ஆர்ப்பாட்டங்கள் எதையும் இந்திய கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.  இந் நிலையில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியக் கிரிக்கெட் அணியில் இடம்பெறும் வீரர்களின் பெயர் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

முதல் ஒருநாள் போட்டி 28 ஆம் திகதி தம்புள்ளையில் நடக்கிறது. இதற்கான இந்திய அணித் தேர்வு ஞாயிற்றுக்கிழமை மும்பையில் நடந்தது. தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் தலைமையிலான குழுவினர் வீரர்களை தேர்வு செய்தனர். அணி விபரம் வருமாறு; வீரேந்திர ஷேவாக், கௌதம் கம்பீர், சச்சின் டெண்டுல்கர், தோனி (கப்டன்)இ யுவராஜ் சிங், ரோஹித் சர்மா, யூசப்பதான்,  சகீர்கான்,  இஷாந்த் சர்மா,  ஓஜா, முனாப் பட்டேல்,  இர்பான் பதான்,  சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா,  பிரவீன் குமார். காயம் காரணமாக ஹர்பஜன் சிங் இடம்பெறவில்லை.

25 ஆம் திகதி இலங்கை வரவுள்ள இந்திய கிரிக்கெட் அணி இலங்கை அணியுடன் 5 ஒரு நாள் போட்டிகள்,  ஒரு 20 ஓவர் போட்டி என மொத்தம் 6 போட்டிகளில் விளையாடவுள்ளது.

இந்தியாவுடனான ஒரு நாள் தொடர் முடிந்த பிறகு இலங்கை அணி மீண்டும் பாகிஸ்தான் செல்லவுள்ளது. மீண்டும் பாக்கிஸ்தான் செல்லும் இலங்கை அணி பாக்கிஸ்தான் அணிக்கெதிராக  2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.

இந்த கிரிக்கட் போட்டிகளில் இலங்கை பாக்கிஸ்தானில் சுற்றுலா மேற்கொள்வது குறித்து ஆரம்பத்தில் இந்திய தமிழ்நாட்டில் சில அரசியல் கட்சிகள் பலத்த கண்டனம் தெரிவித்தமை ஞாபகமிருக்கலாம்.

இலங்கையில் தமிழ் மக்களுக்கெதிராக யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தியாவால் மறுக்கப்பட்ட ஒரு போட்டி தொடரில் இலங்கை அணி கலந்துகொள்வதினூடாக இலங்கை அரசாங்கத்துக்கும்,  பாக்கிஸ்தான் அரசாங்கத்துக்கும் இடையில் யுத்த உறவுகள் இருப்பதாக கூறியே இந்த கண்டனங்கள் ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்டன. இந்த கண்டனங்கள் எதையும் இந்தியாவின் மத்திய அரசோ,  இந்திய கிரிக்கட் வாரியமோ கண்டுகொள்ளவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் இந்திய கிரிக்கட் அணி இம்மாத இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

தர்மபுரத்தில் நிலத்தின் கீழ் புலிகளின் டீசல் களஞ்சியத் தொகுதி

_army.jpg முல்லைத்தீவு தர்மபுரம் பிரதேசத்தில் நிலக்கீழ் அமைக்கப்பட்டிருந்த புலிகளின் பாரிய டீசல் களஞ்சிய தொகுதியை பாதுகாப்புப் படையினர் நேற்று கண்டுபிடித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். ஒவ்வொன்றும் 225 லீற்றர்களைக் கொண்ட 300 பிளாஸ்டிக் பீப்பாக்களுக்குள் இந்த டீசல் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்த இராணுவப் பேச்சாளர், அவை சுமார் இரண்டு வருடங்களுக்கு போதுமானவையெனவும் குறிப்பிட்டார். கடந்த 15ம் திகதி வியாழக்கிழமை தர்மபுரம் நகருக்குள் பிரவேசித்த இராணுவத்தின் 58வது படைப் பிரிவினர் கடந்த நான்கு நாட்களாக இந்தப் பிரதேசத்தில் பாரிய தேடுதல் நடவடிக்கைகளுக்கு மத்தியில் தமது நிலைகளை பலப்படுத்தி வருகின்றனர்.

இங்கிருந்து தொடர்ந்தும் முல்லைத்தீவை நோக்கி நாளுக்கு நாள் முன்னேறிச் செல்லும் இராணுவத்தின் 58வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவிந்திர டி சில்வா தலைமையிலான படைப்பிரிவினரே டீசல் களஞ்சியசாலைத் தொகுதியையும் கண்டு பிடித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். விடுவிக்கப்பட்ட இந்த தர்மபுரம் பிரதேசத்திலிருந்தே புலிகளின் குண்டு தயாரிக்கும் பிரதேசம் ஒன்றையும், மூன்று மாடிகளைக் கொண்ட பாரிய நிலக்கீழ் முகாம் ஒன்றையும் படையினர் கைப்பற்றியிருந்தனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். படையினரால் கைப்பற்றப்பட்ட பாரிய டீசல் களஞ்சியசாலைத் தொகுதி தொடர்பாக மேலும் தெரியவருவதாவது :-

சுமார் ஒரு ஏக்கர் பரப்புள்ள பாரிய தென்னந் தோப்பின் கீழ் நிலத்திலிருந்து சுமார் ஒன்றரை அடிக்கு கீழாகவே இந்த களஞ்சியத் தொகுதி அமைக்கப்பட்டுள்ளது. இலை, குலைகளால் மிகவும் தந்திரமான முறையில் இந்த டீசல் பீப்பாக்கள் நிலக் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.  இந்த டீசல் களஞ்சியத்திற்கு அடையாளமாக அந்த தென்னந் தோப்பிலுள்ள மரங்களில் சில குறியீடுகளும், அது களஞ்சியப்படுத்தப்பட்ட திகதி மற்றும் அதன் தொகை என்பன எழுதப்பட்டிருந்ததாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புலிகள் தமது போக்குவரத்து நடவடிக்கைகளுக்காகவும், படையினரின் கடுமையான தாக்குதல்களை தவிர்க்கும் வகையில் புலிகளால் அமைக்கப்படும் பாதுகாப்பு முன்னரங்கு நிலைகள், மண் அரண்கள் அமைப்பதற்குத் தேவையான உபகரணங்களை பாவிப்பதற்கும் இங்கிருந்தே டீசல் எடுத்துச் சென்றிருக்கலாம் எனவும் பாதுகாப்புப் படையினர் சந்தேகிப்பதாக இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

படையினரால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளின் போது ஷெல் குண்டுகள் விழுந்து எரி பொருட்கள் தீப்பற்றிக் கொள்ளாத வகையில் நிலத்தின் கீழ் வெட்டப்பட்ட நீரோடையொன்றிலேயே டீசல் பீப்பாக்கள் வைக்கப்பட்டு மேலே மணல் மற்றும் காய்ந்த தென்னம் ஓலைகளால் அவை மூடப்பட்டிருந்ததாகவும் படையினர் தெரிவித்தனர்.

துரித கதியில் முன்னேறி வரும் படையினரின் தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க முடியாத புலிகள் இவற்றை மீட்கக்கூட நேரமில்லாது அவற்றை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றிருப்பதாகவும் படையினர் சுட்டிக்காட்டினர். வன்னியிலுள்ள மக்கள் எரிபொருள் தட்டுப்பாட்டினால் பல்வேறு சிரமங்களுக்கு முகம்கொடுத்து வருவதாக பல தரப்பட்ட கருத்துக்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் புலிகளால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அனைத்து டீசலும் அரசாங்கத்தினால் வன்னி மக்களுக்காக அனுப்பி வைக்கப்பட்டதெனவும் படையினர் கூறினர்.

கிளிநொச்சியை இழந்த புலிகள் கிளிநொச்சியில் முன்னெடுத்த சகல நிர்வாக நடவடிக்கைகளையும் ஏனைய செயற்பாடுகளையும் தர்மபுரம் பிரதேசத்திலேயே முன்னெடுத்துள்ளமை இங்குள்ள தடயங்கள் மூலம் தெரிய வருவதாகவும் பாதுகாப்புப் படையினர் தெரிவிக்கின்றனர்.

மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்கும் 13 ஆவது அரசியல் திருத்தத்தை வரவேற்கிறேன் – சிவ்சங்கர் மேனன்

18-01menon.jpg
இலங்கையின் மாகாண சபைகளுக்கு அதிகாரத்தை வழங்கும் 13 ஆவது அரசியல் திருத்தம் அமுல்படுத்தப்படுவதை வரவேற்பதாக இந்திய வெளிவிவகாரச் செயலாளர் எச்.ஈ.சிவ்சங்கர் மேனன் தெரிவித்ததாக இலங்கைக்கான இந்தியத் தூதுவராலயம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வெளிவிவகார செயலாளர் சிவ்சங்கர் மேனன் கடந்த 16ஆம், 17ஆம் திகதிகளில் இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற் கொண்டிருந்தார். இது தொடர்பில் இலங்கைக்கான இந்திய தூதுவராலயம் வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இந்திய வெளிவிவகாரச் செயலாளர் இவ் விஜயத்தின் போது, இலங்கையின் வெளிவிவகாரச் செயலாளர் கலாநிதி பாலித ஹோஹண, பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ ஆகியோரைச் சந்தித்தார். அத்துடன் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடினார். மேலும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உட்பட தமிழ், முஸ்லிம் சமூகங்களின் பிரபல தலைவர்களையும் சந்தித்துள்ளார். இதன் போதான கலந்துரையாடல்கள் இரு தரப்பு உறவுகள், இலங்கையின் தற்போதைய சூழ்நிலை மற்றும் பிராந்திய அபிவிருத்தி என்பவற்றை உள்ளடக்கியதாக இருந்தது.

இக்கலந்துரையாடல்களில் துரிதமான இராணுவ வெற்றியின் மூலமாக இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் தனது விருப்பத்தை ஜனாதிபதி தெரிவித்தார். இதன் போது சிவ்சங்கர் மேனன் வடக்கு உட்பட முழுநாட்டிற்கும் சமாதான முறையில் பேச்சுவார்த்தையினூடாக தீர்வு காணும்படி வலியுறுத்தினார். அத்துடன் தமிழர் உட்பட அனைத்து சமுதாயத்திற்கும் அமைதியான வாழ்வை அளிக்கும் ஐக்கிய இலங்கைக்கு தேவையான அரசியல் புரிந்துணர்வு பற்றியும் அறிவுறுத்தினார். மேலும், இச் சந்திப்பின் போது இலங்கையின் வடக்குப் பிரதேச மனிதாபிமான நடவடிக்கை தொடர்பில் இந்தியாவின் அக்கறை உள்ளதை தெரிவித்ததுடன் இடம்பெயர்ந்த பொதுமக்களின் பாதுகாப்பு பற்றி உத்தரவாதமளிக்கும் படியும் வேண்டினார்.

அத்துடன் அம்மக்களைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தியதுடன் அவ்வாறு செய்யாவிடின் மக்களிடையே பகைமை உணர்வு ஏற்படும் என்பதையும் தெரிவித்தார். மேலும், தற்காலிக தங்குமிடம், மருந்துப் பொருட்கள் அடங்கலாக நிவாரணம், பொருட்களையும் இந்தியா வழங்க எண்ணியுள்ளது என்பதையும் தெரிவித்தார். இதன் ஒரு கட்டமாக மருந்துப் பொருட்களை ஜனாதிபதியின் செயலாளர் பசில் ராஜபக்ஷவிடம் ஒப்படைத்தார். ஏற்கனவே இந்தியாவிலிருந்து 1680 தொன் நிவராணப் பொருட்கள் ஐ.சி.ஆர்.சி.யினூடாக வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாக பராக் ஒபாமா இன்று பதவியேற்பு

obama-2001.jpg
அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாக பராக் ஒபாமா இன்று பதவியேற்கின்றார். தலைநகர் வாஷிங்டனில் இதற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமான முறையில் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதி பராக் ஒபாமா என்பதால் என்றுமில்லாதளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் ஏராளமான கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்படவுள்ளன.

கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளையொட்டி வைபவத்தில் கலந்துகொள்வோர் அனைவரையும் இரண்டரை மணி நேரத்திற்கு முன்னரே வந்து சேருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அனைவரதும் ஆடைகள், உடல்கள் சோதனை செய்யப்படவுள்ளன. வெளிநாட்டு தூதுவர்கள், அரச, மதப் பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தூதுவர்களுக்கான அழைப்பை பதவி விலகிச் செல்லும் வெளிநாட்டமைச்சர் கொண்டலிசா ரைஸ் எழுத்து மூலம் அனுப்பி வைத்திருந்தார். எனினும் ஈரான், வெனிசூலா, வடகொரியா, பொலிவியா போன்ற நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ஆனால் தான் பதவியேற்ற பின்னர் மத்திய கிழக்குப் பிரச்சினைக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதுடன் பகைமை நாடுகளுடன் உறவுகளை வளர்ப்பதில் அக்கறை செலுத்தப்போவதாக முன்னர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பதவியேற்பு வைபவங்களில் பங்கேற்கும் பொருட்டு விசேட ஆடைகள் ஒபாமாவுக்கு தயார் செய்யப்பட்டுள்ளன. இன்றைய தினம் இவ்வைபவத்தைப் பார்வையிட பெருந்தொகையானோர் நேரில் வருவர். மற்றும் தொலைக் காட்சிகளில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளன. உலகெங்கிலுமிருந்து ஏராளமான ஊடகவியலாளர்கள் வாஷிங்டனுக்கு வந்துள்ளனர். வெள்ளை மாளிகையில் குடியேறும் பொருட்டு பராக் ஒபாமா கடந்த வாரம் வாஷிங்டன் வந்தார்.  இவரது புதல்விகள் இருவரது கற்றல் நடவடிக்கைகள் வாஷிங்டனில் தொடரவுள்ளன.

அமெரிக்கவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதி பராக் ஒபாமா பதவியேற்ற பின்னர் உலக அரசியல் கொள்கைகளில் மாற்றம் ஏற்படுமென பெருமளவிலானோர் எதிர் பார்க்கின்றனர்.  இவ் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பராக் ஒபாமா இன்று பதவியேற்கின்றார். ஜனாதிபதி புஷ் பதவி விலகிச் செல்கின்றார்.

அகாஷி நாளை இரவு வருகிறார்

yasusi.jpgஜப்பானின் விசேட சமாதானத் தூதுவர் யசூசி அகாஷி இவ்வாரம் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இதன்போது இலங்கையில் மனித உரிமைகளின் தற்போதைய நிலைகுறித்தும் வன்னி மக்களின் இடப்பெயர்வு குறித்தும் கவனம் செலுத்தவுள்ளார். இலங்கையில் நான்கு நாள் விஜயத்தை மேற்கொள்ளவுள்ள அகாஷி, நாளை  புதன்கிழமை இரவு கொழும்பை வந்தடைவார். இவ்விஜயம் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலையில் நிறைவடையும்.

அகாஷியின் இவ்விஜயத்தின் போது கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உட்பட அம்மாகாண சபையின் உறுப்பினர்களையும் சந்திக்கவுள்ளதாக இலங்கையிலுள்ள ஜப்பானியத் தூதரக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ரி.எம்.வி.பி. தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விநாயகமூர்த்தி முரளிதரனை (கருணா) சந்திப்பாரா என உறுதியாகக் கூற முடியாதெனவும் தெரிவித்தனர்.

மேலும் அகாஷி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தனுக்கும் இது பற்றி அறிவித்துள்ளதாகவும் ஜப்பானிய தூதரக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அத்துடன் அகாஷி இவ்விஜயத்தின் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, வெளிநாட்டமைச்சர் ரோஹித போகொல்லாகம மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரையும் சந்தித்துக் கலந்துரையாடத் திட்டமிட்டுள்ளார்.