08

08

சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் திரு.லசந்த விக்கிரமதுங்க அவர்களின் படுகொலைக்கு ஜனாதிபதி வன்மையான கண்டனம்

presidentmahinda.jpgசண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் திரு.லசந்த விக்கிரமதுங்க அவர்களின் படுகொலையை நானும் எனது அரசாங்கமும் மிக வன்மையாகக் கண்டிக்கின்றோம்.  ஒரு துணிச்சல் மிக்க பத்திரிகையாளரும் பலவருடங்களுக்கும் மேலாக எனக்கு மிகவும் அறிமுகமான எனது நெருங்கிய நண்பர்களில் ஒருவருமான திரு.விக்கரமதுங்கவின் அகால மரணம் எனக்கு ஆழ்ந்த அதிர்ச்சியையும் அனுதாபத்தையும் ஏற்படுத்தியது.

இது எமது நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான செயலாகும். எமது நாடு பயங்கரவாதத்திடமிருந்து தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்று நாட்டில் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் இவ்வேளையில் இவ்வாறான மிலேச்சத்தனமான செயல் நடைபெற்றிருப்பது மிகவும் வருத்தத்துக்குரியதாகும்.

இக்காட்டு மிராண்டித்தனமான நடவடிக்கைக்கு பொறுப்பானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை விசாரித்து உடனடியாக சட்டத்தின்முன் நிறுத்துமாறு நான் பொலிஸாரை பணித்துள்ளேன்.  கவலையான இச்சந்தர்ப்பத்தில் திரு.விக்கிரமதுங்க அவர்களின் குடும்பத்தாருக்கும் சண்டே லீடர் பத்திரிகை அலுவலக ஊழியர்களுக்கும் பத்திரிகைத்துறையைச் சார்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறான கோழைத்தனமான அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் ஊடக சுதந்திரத்தையும் கருத்து வெளியிடும் சுதந்திரத்தையும் உறுதியாகப் பாதுகாப்பதற்கு எனது அரசாங்கம் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் செயற்பட திடசங்கற்பம் பூண்டுள்ளது என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.

சண்டே லீடர் ஆசிரியரின் படுகொலையை தேசம்நெற் வன்மையாகக் கண்டிக்கிறது. : த ஜெயபாலன்

lasantha-02.jpgஇலங்கை அரசாங்கம் தொடர்பாகவும் தற்போது முன்னெடுக்கப்படும் யுத்தம் தொடர்பாகவும் மிகுந்த விமர்சனத்தைக் கொண்டிருந்த லசந்த விக்ரமதுங்கவின் படுகொலையை தேசம்நெற் வன்மையாகக் கண்டிக்கிறது. ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகங்கள் மீதான தாக்குதல்கள் இலங்கையில் நாளாந்த நிகழ்வுகளாகி வருகின்றது. ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தான நாடுகளில் ஒன்றாக இலங்கையும் தற்போது உள்ளது என்பதை லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை மீண்டும் ஒருமுறை நிரூபித்து உள்ளது.

இன்று காலை துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி படுகாயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சண்டே லீடரின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க பி.பகல. 2 மணியளவில் மரணமடைந்தார்.

கொழும்பின் புறநகர்ப் பகுதியான தெகிவளை – அத்துருகிரிய வீதியில் இன்று வியாழக்கிழமை காலை 10:30 மணியளவில் லசந்த விக்கிரமதுங்க மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் கடுமையான காயமடைந்த அவர், களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காத நிலையில் இன்று பிற்பகல் 2:00 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

அலுவலகம் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோதே அடையாளம் தெரியாத நபர்களின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கொழும்பில் இருந்து பிரதி புதன்கிழமை தோறும் வெளிவரும் “மோர்ணிங் லீடர்” வார ஏட்டின் ஆசிரியராகவும் லசந்த விக்கிரதுங்க உள்ளார்.

சண்டேலீடர் பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் மூலம் தனது நற்பெயருக்கு அபகீர்த்தி ஏற்பட்டதாகக் கூறி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ச வழக்கு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ‘மிக்’ விமான கொள்வனவில் முறைகேடு இடம்பெற்றதாக அவதூறான செய்திகள் வெளியிட்டதால் தனக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்திருந்த கோதபாய ராஜபக்ச லண்டே லிடர் வெளியீட்டாளர்களுக்கும் அதன் ஆசியிரயர் லசந்த விக்கிரமதுங்கவுக்கும் எதிராக வழக்கு தொடுத்திருந்தார். அவ்வழக்கில் கோதாபய ராஜபக்ஷ பற்றிய செய்திகளை வெளியிடக் கூடாதென “சண்டே லீடர்’ பத்திரிகைக்கு கடந்த ஆண்டு டிசம்பர் நடுப்பகுதியில் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

நீதிமன்றத்தின் இவ்வுத்தரவைக் கண்டித்த பாரிஸை தளமாகக் கொண்டியங்கும் எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு (Reporters Without Border) ‘இலங்கையில் ஊடகங்கள் மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் கட்டவிழ்த்து விடப்படும் அடக்குமுறைகள் பெரும் கவலையளிக்கின்றன. அரசாங்கத்திற்கு எதிரான செய்திகளையும் ஒளி, ஒலிபரப்பு மற்றும் பிரசுரம் செய்யும் உரிமை ஊடகங்களுக்கு உண்டு.’ என அப்போது தெரிவித்து இருந்தது.

சண்டெ லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைக்கு 24 மணிநேரத்திற்கு முன் ஜனவரி 6 அன்று மகாராஜா நிறுவனத்தின் சிரச தொலைக்காட்சி தாக்குதலுக்கு உள்ளானது. மேலும் கடந்த ஆண்டு சண்டே லீடர் பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்டதும் தெரிந்ததே.

இலங்கையில் கடந்த இரு தசாப்தங்களில், 50 க்கும் அதிகமான ஊடகவியலாளர்களும் கலைஞர்களும் நேரடியாக தமது கருத்துக்களுக்காக கொல்லப்பட்டமை ஆவணப்படுத்தப்பட்டு உள்ளதாக War of Words : Freedom of Expression in South Asia – May 2005 அறிக்கையில் Article 19  என்ற ஊடக உரிமைகளுக்கான அமைப்பு தெரிவித்து உள்ளது.
 
Reporters Without Border அமைப்பு நாடுகளை பத்திரிகைச் சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு வரிசைப்படுத்தியுள்ளது. 167 நாடுகளைக் கொண்ட 2005ம் ஆண்டு வரிசைப்படுத்தலில் இலங்கை 115வது இடத்தில் உள்ளமை இலங்கையில் ஊடகங்களின் நிலையை விளங்கிக் கொள்ள உதவும்.

சண்டே லீடர் ஆசிரியரின் படுகொலையைக் கண்டித்தும் ஊடகங்கள் ஊடகவியலாளருக்கு எதிரான தாக்குதலுக்கு மற்றுப்புள்ளி வைக்கவும் கோரும் அடையாளப் போராட்டம் ஒன்றை செய்வதற்கு தேசம்நெற் முயற்சிக்கிறது. மேலதிக விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

ரயில் பாதை அருகில் சிறிய குண்டு வெடிப்பு

கல்கிசை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் பாதையோரத்தில் நேற்று இரவு சிறிய குண்டொன்று வெடித்துள்ளது. தெஹிவளை ரயில் நிலையத்திற்கும் கல்கிசை ரயில் நிலையத்திற்குமிடையில் கல்கிசை சென்.தோமஸ் கல்லூரிக்கு சமீபமாக ரயில் பாதை அருகில் இரவு 7.05 மணியளவில் இந்தச் சிறிய குண்டு வெடித்துள்ளது.

குண்டு வெடித்த போது ரயில் பாதையில் ரயில் எதுவும் செல்லாத அதேநேரம், குண்டு வெடிப்பால் ரயில் பாதைக்கு எதுவித சேதமும் ஏற்படவில்லை. குண்டு வெடித்ததையடுத்து உடனடியாக அப்பகுதிக்கு படையினரும் பொலிஸாரும் வந்து சேர்ந்ததுடன் கரையோரப் பகுதியூடான ரயில் போக்குவரத்தையும் நிறுத்தினர். இதையடுத்து அந்தப் பகுதியில் படையினரும் பொலிஸாரும் தேடுதல்களையும் நடத்தினர். சில மணிநேரத்தின் பின் ரயில் போக்குவரத்து வழமைக்குத் திரும்பியது

ரோ உளவுப்படையைச் சேர்ந்த விமானம் கிளிநொச்சியை வான் வழி ஆய்வு செய்தது?

air.jpgகிளிநொச்சியை இலங்கை ராணுவம் கைப்பற்றிய அடுத்த நாள், இந்தியாவின் ரோ உளவுப் பிரிவைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் கொண்ட குழுவொன்று பாக்கு நீரினைப் பகுதியில் இரகசிய வான் வழி ஆய்வை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அரசின் உத்தரவுப்படி இந்த இரகசிய வான் வழி ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.  ரோ உளவுப் பிரிவின் வான்வெளி ஆய்வு மையத்திற்குச் (Air Research Centre- ஏ.ஆர்.சி.) சொந்தமான விமானம் மூலம் இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளது.

சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு இந்த விமானம் சென்னை விமான நிலையத்திலிருந்து கிளம்பிச் சென்றுள்ளது. இந்த இரகசிய ஆய்வை, இலங்கை அரசு விடுத்த வேண்டுகோளின்படி ரோ உளவுப் பிரிவு மேற்கொண்டதா என்பது குறித்து இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இதுகுறித்து ரோ உளவுப் பிரிவின் நெருங்கிய வட்டாரத் தகவல்கள் கூறுகையில், அதி நவீன கருவிகளுடன் கூடிய அந்த உளவு விமானம், இலங்கை கடற்கரைக்கு மிக அருகே தாழ்வாக பறந்து சென்று ஆய்வு மேற்கொண்டது. பின்னர் மீண்டும் சென்னை திரும்பாமல் வேறு ஒரு விமான நிலையத்திற்கு அந்த விமானம் போய் விட்டதாக தெரிவிக்கிறது

ஏ.ஆர்.சியிடம் போயிங், கல்ப்ஸ்ட்ரீம் மற்றும் எம்பிரேயர்ஸ் ரக விமானங்கள் உளளன. இந்த விமானங்களில் அதிக உயரத்தில் பறந்தபடி, மிகத் துல்லியமாக படம் பிடிக்கும் அதி நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த விமானங்கள் 40 ஆயிரம் அடி உயரம் வரைக்கும் பறக்கக் கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விமானங்களில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் சாட்டிலைட் கேமராக்களுக்கு இணையான துல்லியத்துடன் செயல்படக் கூடியவை. அடர்ந்த மேகக் கூட்டமாக இருந்தாலும் கூட அதைத் துளைத்துக் கொண்டு இலக்கை சரியாக கணித்து துல்லியமாக படம் பிடித்துக் காட்டும். 40 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தாலும் கூட, தரையில் நடக்கும் ஒரு நபரையோ அல்லது ஒரு வாகனத்தையோ மிகத் துல்லியமாக படம் பிடிக்கும் திறன் கொண்டது இந்த வகை கேமராக்கள்.

ஏ.ஆர்.சியின் விமானங்களை ஓட்ட தனியாக பைலட்டுகள் உள்ளனர். இந்திய விமானப்படை விமானிகள் கூட இந்த வகை விமானங்களை ஓட்டுவதற்கு அழைக்கப்படமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மிக மிக ரகசியமான பணி என்பதால் இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்கள் மற்றும் விமானப்படை விமானங்களை ஏ.ஆர்.சியின் விமானங்கள் பயன்படுத்திக் கொள்வது வழக்கம். இதற்கென தனியாக விமான நிலையம் எதுவும் கிடையாது.

சென்னைக்கு ஏ.ஆர்.சி. விமானம் வந்தது கூட ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. எங்கிருந்து வந்தது என்பது கூட விமான நிலைய அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப் படவில்லையாம். இலங்கையின் கோரிக்கையின்படியே இந்த உளவு வான் வழி ஆய்வை ரோ உளவுப் பிரிவு மேற்கொண்டதாக நம்பப்படுகிறது.

இன்று மாகாண சபை முதலமைச்சர்களின் 25வது மாநாடு தொடர்பான விசேட கூட்டம்

cm.jpgமாகாண சபை முதலமைச்சர்களின் 25ஆவது மாநாட்டு ஏற்பாடுகள். தொடர்பாக கலந்துரையாடும் விசேட கூட்டமொன்று இன்று (வியாழக்கிழமை) மட்டக்களப்பு மாவட்ட செயலக மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 25ஆவது முதலமைச்சர்கள் மாநாட்டினை இம்முறை மட்டக்களப்பு நகரில் நடத்துவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தமை தெரிந்ததே.

இதன் பிரகாரம் மட்டக்களப்பு மாநகர சபையும், மாவட்ட செயலகமும் இணைந்து முதலமைச்சர்கள் மாநாட்டினை சிறப்பாக நடத்துவது தொடர்பான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் ஆலோசனைகளுக்கு அமைவாக மாவட்டத்தில் உள்ளூர் திணைக்களத் தலைவர்களின் ஒத்துழைப்புடன் மாநாட்டு ஏற்பாடுகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பளையை நோக்கி படையினர் தொடர்ந்தும் முன்னேற்றம் -தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம்

army.jpgமுகமாலையில் புலிகளின் முன்னரங்கு பாதுகாப்பு நிலைகளைக் கைப்பற்றியுள்ள படையினர் தொடர்ந்தும் தெற்குநோக்கி கடும் தாக்குதல்களைத் தொடுத்தவாறு முன்னேறி வருவதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது. முகமாலையில் 600 மீற்றர் தூரத்தைக் கைப்பற்றிய படையினர் பளையை நோக்கி தொடர்ந்தும் முன்னேறி வருகின்றனர்.

யாழ் – கண்டி ஏ – 9 வீதியில் தெற்கு நோக்கி முன்னேறும் படையினர் இந்த வீதியை தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு இன்னமும் 20 கிலோமீற்றர் தூர பிரதேசத்தைக் கைப்பற்ற வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா ஓமந்தையிலிருந்து கிளி நொச்சி ஆனையிறவு தெற்குப் பிரதேசம் வரை ஏ-9 வீதி படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

இந்நிலையில் வடமுனையிலிருந்து ஆனையிறவு நோக்கி இராணுவத்தின் 53 ஆம், 58ஆம் படைப்பிரிவினர் முன்னேறி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் காலையும், மாலையும் இடம்பெற்ற மோதல்களில் புலிகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன் அவர்களின் மூன்று சடலங்களையும் கைப்பற்றியதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பேச்சாளர் தெரிவித்தார். இதில் இராணுவத்திற்குச் சிறு சேதம் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.  

ஈ.பி.டி.பி.யின் பெயரை தவறான செயலுக்கு பயன்படுத்தினால் உடனடியாக அறிவிக்கவும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவிப்பு

epdp-121208.jpgஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பெயரால் அல்லது அதன் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் பெயரால் எவரும் கப்பம் கோரியோ, கடனுக்கு பொருட்கள் மற்றும் காசு கோரியோ அல்லது நிதி, நன்கொடைகள் கோரியோ வந்தால் அவ்விடயம் தொடர்பாக உடனடியாக தனக்கு அறிவிக்கும்படி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக்கொண்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை யாழ். வர்த்தகப் பிரமுகர்களை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியபோதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இக்கோரிக்கையை முன்வைத்தார்.

இதன் பிரகாரம் தனது பெயரையோ, தனது அமைச்சின் பெயரையோ அல்லது தனது கட்சியின் பெயரையோ பயன்படுத்தி கப்பம் கோருதல், பணம் பறித்தல், பொருட்களை வாங்குதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடும் வகையில் எவரும் எந்தவொரு வர்த்தக நிலையங்களுக்கும் வந்தால் உடனடியாகத் தனக்கு அறிவிக்கும் படியும் இல்லையேல் பக்கத்தில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கும்படியும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்படி வர்த்தகப் பிரமுகர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இதேவேளை, தனது பெயரையும் தனது கட்சியின் பெயரையும் பயன்படுத்தி எவரேனும் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டால் அல்லது அநீதி விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டால் அவ்விடயம் தொடர்பில் உடனடியாகத் தனக்கு அறிவிக்கும் படியும் அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் அல்லது இராணுவ முகாம்களில் அறிவிக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியானது பொதுமக்களிடம் எந்தவொரு அறவீடுகளையும் மேற்கொள்வதில்லை என்பதையும் மனித நேயமற்ற செயல்களில் ஈடுபடுவதில்லை என்பதையும் இங்கு உணர்த்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறான செயற்பாடுகளுக்கு தான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

உரிமைக்கு அங்கீகாரம் தமிழரின் உரிமையை நிராகரிப்பது எப்படி? – கேள்வி எழுப்புகிறார் ஹக்கீம்

hakeem_.jpgபலஸ்தீன மக்களின் தன்னாட்சி உரிமையை ஏற்றுக்கொண்ட இலங்கை அரசாங்கத்தினால் எப்படி தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமையை நிராகரிக்க முடியுமெனக் கேள்வியெழுப்பிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் எம்.பி.யுமான ரவூப் ஹக்கீம், கிளிநொச்சி வெற்றிக்குப் பின் தமிழ் மக்களின் சுயமரியாதைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தில்  செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

கிளிநொச்சியில் படையினர் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து நாடு முழுவதும் வெற்றிக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. இதன் போது வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபடவேண்டுமென தமிழ், முஸ்லிம் மக்கள் மீது பலாத்காரம் பிரயோகிக்கப்பட்டது. இதனால், சில இடங்களில் தமிழ், முஸ்லிம் மக்கள் பலாத்காரத்துக்கு அடிபணிந்து வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபடவேண்டிவந்தது. தமிழ் முஸ்லிம் மக்கள் மீது ஒரு போதும் பலாத்காரமாக நாட்டுப் பற்றை திணிக்கக் கூடாது. தமிழ் மக்கள் சுயமரியாதையுடன் வாழ விரும்புகிறார்கள். ஆனால், கிளிநொச்சி வெற்றிக்குப் பின் அவர்களின் சுயமரியாதைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

பலஸ்தீன மக்களின் தன்னாட்சி உரிமையை ஏற்றுக்கொண்ட இலங்கை அரசினால் தமிழ் மக்களின் சுய ஆட்சிக் கோரிக்கையை, உரிமையை எவ்வாறு நிராகரிக்க முடியும்?

புலிகள் மீண்டும் எழுச்சி பெறுவதென்பது வெறும் பகல்கனவாகவே இருக்கும் – இராணுவத் தளபதி கூறுகிறார்

sarath-fonseka.jpg
பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் மீண்டும் எழுச்சி பெறுவார்கள் என்பது வெறும் பகல் கனவாகவே இருக்குமென இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி வெற்றி தொடர்பாக தொலைக்காட்சிகளுக்கு ஒரே நேரத்தில் செவ்வாய்க்கிழமை வழங்கிய விஷேட பேட்டியியொன்றிலேயே ஜெனரல் சரத் பொன்சேகா இவ்வாறு கூறியிருக்கிறார்.

அதில் அவர் மேலும் கூறுகையில்; “புலிகளிடமிருந்து கிழக்கு வீழ்ந்த போது தற்காலிக பின்னடைவு என்றார்கள். துணுக்காய், மல்லாவி படையினர் வசமானபோதும் தற்காலிக பின்னடைவு என்றனர். கிளிநொச்சியை படையினர் நெருங்கும் போது, அது “மரணத்தின் முத்தம்’ என வர்ணித்தார்கள். கிளிநொச்சியை பிடிப்பது என்பது ஜனாதிபதியன் பகல் கனவென புலிகள் கூறினர். எனினும், நாம் கிளிநொச்சியையும் பிடித்திருக்கிறோம். எனவே, இவை அனைத்தையும் தற்காலிக பின்னடைவு என்று கூற முடியாது. கட்டுப்பாட்டில் இருந்த நிலப் பிரதேசத்தில் 90 சதவீதமான பகுதிகள் இழக்கப்படுமானால் அதை தற்காலிக பின்னடைவென்றோ அல்லது தந்திரோபாய பின்வாங்கலென்றோ கூற முடியாது. இது 10 அல்லது 20 சதவீதமாக இருந்திருந்தால் தந்திரோபாய பின்வாங்லென கூற முடியும்.

பிரபாகரன் மீண்டும் எழுச்சி பெறுவாரென்பது சிலரது கனவாக இருக்கிறது. அது தான் பகல் கனவாக இருக்குமென நான் நம்புகிறேன். இதேநேரம், கடந்த இரண்டரை வருட கால யுத்தத்தில் 15 ஆயிரம் புலிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் கிழக்கில் 2 ஆயிரம் புலிகளும் யாழ்.குடாநாட்டில் யுத்தத்தில் 1,500 புலிகளும் வடக்கில் ஏனைய 11 ஆயிரத்து 500 புலிகளும் கொல்லப்பட்டுள்ளனர். இந்த காலப்பகுதியில் சுமார் 2 ஆயிரம் படையினர் உயிரிழந்திருக்கின்றனர். பெரியதொரு கெரிலா இயக்கத்துடன் யுத்தம் புரியும்போது உயிரிழப்புகளும் காயங்களும் இன்றி யுத்தம் செய்ய முடியாது. யுத்தத்தின்போது கெரில்லா ஒருவரைக் கொல்ல படையினரில் 10 பேர் உயிரிழக்க வேண்டி வரும் என்பதே உலகில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டதொன்றாகும். எனினும், எமது நடவடிக்கைகளை பொறுத்தவரையில் 5 கெரில்லாக்கள் சாகும்போது படையில் ஒருவரே உயிரிழக்கிறார் என்பது எமக்கு வெற்றியாகும் என்று கூறினார்.

அரசியல் தீர்வு இப்போது அவசர தேவை கொழும்பை வலியுறுத்துகிறது பிரிட்டன்

kili-04.jpgகிளிநொச்சி நகரம் அரச படைகளால் கைப்பற்றப்பட்டிருக்கும் நிலையில் இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வொன்றை அவசரமாக முன்வைக்குமாறு பிரிட்டன் இலங்கையை வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் சகல சமூகங்களும் சுபிட்சமடைவதற்கு வலுவானதும் நிலையானதுமான சமாதானத்தை எட்டுவதற்கு இதுமட்டுமே வழிமுறை என்று பிரிட்டிஷ் தூதரகம் செவ்வாய்க் கிழமை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

வெளிவிவகார, பொதுநலவாய அலுவலக பிரதியமைச்சர் மல்லோபிரவுண் பிரபுவும் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் அலெக்சாண்டரும் இணைந்து இந்த அறிக்கையை விடுத்துள்ளனர். கிளிநொச்சி வீழ்ச்சி கண்ட பின்னரான நிலைமைகளை பிரிட்டிஷ் அரசாங்கம் நெருக்கமாக அவதானித்து வருகிறது. சகல சமூகங்களினதும் நியாய பூர்வமான கவலைகளை தீர்த்து வைப்பதற்கான அரசியல் தீர்வொன்றை முன்வைப்பதற்கு சகல தரப்பினரும் முன்னேற்றம் காணவேண்டியது மிகவும் அவசரமானதென்பதை தற்போதைய முன்னேற்றம் ஏற்படுத்தியுள்ளது.

மனிதாபிமான பாதிப்பு குறித்து நாம் கவலையுடன் இருக்கிறோம். சர்வதேச மனிதாபிமான சட்டவிதிகளுக்கு அமைவான கட்டுப்பாடுகளுக்கேற்ப சகல தரப்பும் செயற்படவேண்டுமென அழைப்பு விடுக்கின்றோம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.