19

19

பிரித்தானியாவில் இருந்து தொகையாக தமிழர்களைத் திருப்பி அனுப்பத் திட்டம்!!!

Stop_the_War_on_Asylumபிரித்தானியாவில் இருந்து அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்களை தொகையாகத் திருப்பி அனுப்ப பிரித்தானிய அரசு முற்பட்டு உள்ளது. ஏற்கனவே இலங்கை அரசாங்கத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டின்படி தற்போது இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவதனை பிரித்தானிய உள்துறை அமைச்சு முடுக்கிவிட்டு உள்ளது. இதன் முதற்கட்டமாக ஜனவரி 15 அன்று 50 பேர் வரை விசேடமாக பதிவு செய்யப்பட்ட விமானத்தில் இலங்கைக்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.

இது தொடர்பாகவும் பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் தொடர்பான விரிவான கட்டுரையும் விரைவில் வெளிவரும். அதற்கு முன்னதாக சட்டவல்லுனர் அருண் கனநாதன் அரசியல் தஞ்சம் தொடர்பான தேசம்நெற் வாசகர்களின் கேள்விக்கு பதிலளிக்க கேள்விகளுக்கு முன் வந்து உள்ளார். அரசியல் தஞ்சம் தொடர்பான உங்கள் கேள்விகளை கருத்துக் களம் பகுதியில் பதிவு செய்யவும்.

Related News:

அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்ட மறக்கப்பட்ட மக்கள் – ஒரு பார்வை : த ஜெயபாலன்

பிரித்தானியவின் தஞ்சம் வழங்கும் செயன்முறை (asylum system) மனிதத் தன்மையற்றது

இலங்கை தமிழர் பிரச்சனையை திருமாவளவன் காங்கிரஸ் கட்சியை எதிர்க்கும் பிரச்சனையாக்கிவிட்டார் – கருணாநிதி

karunanithi.jpgஇலங்கை தமிழர் பிரச்சனையை திருமாவளவன் காங்கிரஸ் கட்சியை எதிர்க்கும் பிரச்சனையாக்கிவிட்டதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். ‘முரசொலி’ யில் அவர் எழுதியுள்ள கடிதத்தில்,

50 ஆண்டு கால வேதனை வரலாறு கொண்ட இலங்கைத் தமிழர் பிரச்சனையில் தமிழ்நாட்டில் ஒட்டு மொத்தக் கருத்து என்றும், அதே நேரத்தில் தனித்தனி கட்சிகளின் அணுகுமுறை என்றும், பல்வேறு கோணங்களில் மக்களுக்கு திசைகள் அறிவிக்கப்பட்டு, அவர்களைத் திண்டாட்டத்திலும், திகைப்பிலும் தள்ளி விடப்படுகிற செயல்கள் பஞ்சமில்லாமலே நடைபெற்று வருகின்றன.

அனைத்துக் கட்சிகளை ஒருங்கிணைத்து அறவழியில் எத்தனை எழுச்சியைத் தமிழ் மக்கள் வாயிலாக உணர்த்த வேண்டுமோ, அந்த வழிகளில் எல்லாம் உணர்த்தி விட்டு, பிரதமரையே சந்தித்து, வெளியுறவுத் துறை அமைச்சர், இலங்கை சென்று முயற்சி மேற்கொள்வது என்ற திட்டத்துடன் இந்த அறப்போரில் ஒரு அத்தியாயம் முடிவுற்றது.

ஆனால் அந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படாததற்கான காரணங்களை முழுமையாக அறிந்து கொள்ளாத நிலையில், தமிழ்நாட்டில் உள்ள சில கட்சிகளின் நடவடிக்கைகள் காரணமாக, இது ஏதோ இலங்கைத் தமிழரைப் பாதுகாக்கும் பிரச்சினை என்றில்லாமல், காங்கிரஸ் கட்சியை எதிர்க்கும் பிரச்சனை என்ற கோணத்தில் திருப்பி விடப்பட்டுள்ளது.

தேர்தல் கூட்டணி, வெற்றி தோல்வி, ஆட்சி மாற்றம் என்பன போன்ற அரசியல் கட்சி தத்துவப் பிரச்சனைகளில் இலங்கைத் தமிழர் பிரச்சனையையும் ஒரு சில தலைவர்கள் இணைத்துக் குழப்புவது, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு பிரச்சினையை விட்டு, வெகு தொலைவு போய் விட்டதாகவே தெரிகிறது. வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கை சென்று வருவதற்கு இயலாத காரணம் எதுவும் இருந்தாலும் அதனையும் வெளிப்படையாகத் தெரிவித்திருக்கலாம். அல்லது எது தக்க காலம், நேரம் என்பதையாவது எடுத்துரைத்திருக்கலாம். அப்படியெதுவும் நடைபெறாதது, மாநில அரசைப் பொறுத்தவரையில் வேதனையான நிலையாக உணரக் கூடியதுதான்.

இப்போது வெளியுறவுத் துறைச் செயலாளர் இலங்கை சென்று ராஜபக்சேவை சந்தித்துப்பேசி விட்டு வந்துள்ளார். அதன் விபரங்களும் சரியாக வெளிவரவில்லை. ஒருவேளை பிறகு வரக்கூடும். கடந்த காலத்து ஜெயவர்த்தனே-ராஜீவ் ஒப்பந்தம் பரிசீலிக்கப்படலாம் என்பது போன்ற செய்திகள் உள்ளனவே தவிர, அது வரையில் போர் நிறுத்தம் என்று கூட அறிவிக்கப்படவில்லை. போர் சிங்கள ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் என்ற பெயரால் அப்பாவித் தமிழர்கள் அன்றாடம் அங்கே உயிர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஜெயவர்த்தனே-ராஜீவ் காந்தி உடன்பாடு பற்றிப் பேசி முடிக்கிற வரையில் போர் நிறுத்தப்படுகிற முயற்சியை மேற்கொள்வதில் பெரிய தவறு ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை.

அந்த ஒப்பந்தம் பற்றிய கருத்துக்களையும், உடன்பாடு பற்றிய எண்ணங்களையும், ஒப்புதலையும் இலங்கைத் தமிழர்கள் மீது இங்கிருந்து நாம் திணித்திட முனைவதில்லை என்ற நிபந்தனையுடன் அணுகுவதே ஆரோக்யமானது மட்டுமல்ல, அமைதி வழியும், அமைதி நிலையும் இலங்கையில் “மறு பிறவி” எடுப்பதற்கு ஏற்றதுமாகும். இது எப்படி உருவாகும், எப்படித் தீர்வாகும் என்ற வினாக்களுக்கு விடை கிடைப்பதற்கு முன்னர் இப்போது நம்மைப் பொறுத்தவரையில், நமது தமிழ் மாநில அரசைப் பொறுத்த வரையில் இதனை மையமாக வைத்து ஏதேனும் விஷப் பரிசோதனைகளில் இறங்கி இதனை வீழ்த்தி விட்டுத் தாங்கள் ஆட்சிக்கு வந்து விடலாமா என்றும் அவர்களோடு சேர்ந்து நாமும் பலன் பெற முடியுமா என்றும் சில மூளைகள் யோசனையில் ஈடுபட்டிருக்கின்றன.

அம்மையார் ஜெயலலிதாவின் அறிக்கைகளில் இந்த ஆண்டு முடிவதற்குள் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி மலரும் என்றும், சட்டமன்றத்துக்கும் எப்படியாவது தேர்தல் வரவழைக்க வேண்டும் என்பது தான் அவரது விருப்பம் என்றும், விரைவில் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தல் வருவதற்கும் அவர் எல்லா முயற்சிகளையும் எடுத்துக் கொண்டிருப்பதாக தனது தொண்டர்களுக்கு உறுதி அளிப்பது எதற்காக என்று எல்லோர்க்கும் புரியுமென நம்புகிறேன்.

மாநிலத்தில் இன்னும் இரண்டு ஆண்டுகள் வரை நீடித்திட வேண்டிய கழக ஆட்சியை, இது போன்ற பிரச்சினைகளில் வன்முறை அராஜகம் போன்ற கிளர்ச்சிகளை உசுப்பி விட்டு, கலைத்து விடலாம் என்று அவர் கருதுகிறார். அப்படிக் கலைத்தால் இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக, நாம் மூன்றாவது முறையாக ஆட்சியை இழக்க நேரிடலாம்.

திட்டமிட்டு, இந்த அம்மையார் நடத்திட முனையும் `அரக்கு மாளிகை சதி’யை நாம் புரிந்து கொண்டு தானிருக்கிறோம். இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக நாம் மீண்டும் ஏதாவது செய்ய வேண்டும் என்று ஜனவரி 12ம் நாள் என்னிடம் விவரித்து முடிவெடுக்க வேண்டுமென்று என் வீட்டுக்கு வந்த டாக்டர். ராமதாஸ், கி.வீரமணி, தொல். திருமாவளவன் ஆகிய மூவரும், `முதல்வர் எடுக்கிற முடிவை ஏற்று அவ்வாறு திட்டம் வகுப்போம்’ என்று தான் உறுதி அளித்தனர்.

உடனடியாக டெல்லியுடன் பேசுமாறு வேண்டினர். நானும் அன்று திருமங்கலம் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையைக் கூட கவனிக்க நேரமில்லை. அந்த மூவருடனும் அந்தச் சமயத்திலும் ஒரு மணி நேரம் என்கிற அளவுக்கு பேசி, அனுப்பி வைத்தேன்.

ஆனால் என்னைக் கலந்தே எதுவும் நடவடிக்கை என்று சென்றவர்கள், என்னைக் கலந்து பேசாமலே அந்த மூவரில் ஒருவர், நண்பர் தொல்.திருமாவளவன் தன்னிச்சையாக உண்ணாவிரதம் என அறிவிக்கப்பட்ட நிலையில், உண்ணாவிரதப் பந்தலில், சிங்கள அரசை விட இங்குள்ள காங்கிரஸ் கட்சியுடன் தான் தமக்குப் போராட்டம் என்பது போல விரிவுரைகள் ஆற்றிக் கொண்டிருந்தனர்.

இலங்கைத் தமிழர் பிரச்சனையின் உயிரோட்டத்தை எப்படி அங்கே போராளிகளுக்குள் நடந்த சகோதர யுத்தம் பலவீனப்படுத்தியதோ, அதைப் போலவே, இலங்கைத் தமிழர்களுக்காக வாதாடிடும் நமக்குள்ளேயும் `சகோதர யுத்தங்கள்’ எல்லாம் மொத்தப் பிரச்சினையை மூளியாக்கி விடுகிற கதை நடப்பதற்குத் தான் காரணமாகி வருகின்றன.

எப்படியோ, மூவர் கூடி முதல்வருடன் பேசினோமே, அடுத்த நாளே, இப்போது உண்ணா நோன்பு அறிவிக்கிறோமே என்று கூட எண்ணாது, அரசு பேருந்துகள் பல எரிக்கப்பட்டனவே இத் துணை அவசரத்துடன், இப்போது நிறுத்திக் கொண்டிருக்கிறோமே என்பதை சற்றுக் கூட சிந்திக்காமல் `இலங்கை தேசியக் கொடி எரிப்பு’ என்று திருமாவளவன் அறிவித்திருப்பது ஏன் என்று நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஆனால் அவருக்குப் புரிகிறதோ இல்லையோ, இந்த ஆட்சியைக் கவிழ்க்க வேண்டுமென்று திட்டமிட்டு செயல்படுகிறவர்களுக்கு ஒன்று புரிகிறது.

தமிழ்நாட்டையே ஸ்தம்பிக்க வைக்கும் போராட்டத்தை கருணாநிதி நடத்த வேண்டும் என்பதையும், காங்கிரஸ் ஆட்சிக்கு இனி இங்கே இடமே இல்லை என்று சபதம் செய்வதையும், அப்படியொரு ஒட்டு மொத்தமான அராஜகப் புரட்சி மூலமாகவாவது, கருணாநிதியை வீட்டுக்கு அனுப்பி விட முடியாதா என்ற கவலை மிகுந்த ஆவலால் தானே தவிர வேறல்ல.

உடன் பிறப்பே கேரளத்து மாவலி மன்னனை வீழ்த்தியோர் கதையை மறந்து விட முடியுமா?

கருணாநிதி வீட்டுக்குப் போகவும் தயார், தமிழர்களின் ஒட்டுமொத்த நல் வாழ்வுக்காக காட்டுக்குப் போகவும் தயார். அது இலை தழை நிறைக் காடாகவும் இருக்கலாம், அல்லால் இடு காடாகவும் இருக்கலாம், எதுவாயினும் ஏற்பதில் எனக்கொரு மகிழ்ச்சியே! அதுவும் என் நாட்டுக்காக-நண்பர்களினால் கிடைத்தால், இரட்டிப்பு மகிழ்ச்சியே!

முதலில் மூவரும் கலந்து யோசிப்போம்-அதில் ஒரு முடிவெடுப்போம் என்பது பின்னர் தனித்தனியே முடிவெடுத்து அறிவித்து அதற்கேற்ப செயல்படுவது, என்னையே இறுதியாகப் பழி கூறத்திட்டமிடுவது நல்ல அரசியல் தந்திரங்களாக இருக்கலாம். அதற்கு நான் ஒருவன் மயங்கி பலிக்கடா ஆகத் தயாராக இருக்கலாம். ஆனால் அறிஞர் அண்ணா அவர்கள் வளர்த்து எம்மிடம் அளித்து விட்டுப் போன இந்த இயக்கத்தை ஆம், ஒரு கோடி உறுப்பினர் கொண்ட இந்த இயக்கத்தை பலியிட முனைவோருக்குத் துணை போக நான் தயாராக இல்லை. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

இலங்கைப் பிரச்னையில் கருணாநிதியுடன் சேர்ந்து திருமாவளவன் நாடகம்: ஜெயலலிதா

jayalalitha-1701.jpgஇலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து தமிழக முதல்வர் கருணாநிதியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலர் திருமாவளவனும் சேர்ந்து நாடகமாடுவதாக அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் தற்போது நிலவும் முக்கியப் பிரச்னைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக முதல்வர் கருணாநிதியும் திருமாவளவனும் சேர்ந்து நடத்திய நாடகம்தான் உண்ணாவிரதப் போராட்டம்.இதனால்,இலங்கையில் போர் நிறுத்தமும் ஏற்படவில்லை இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு எந்தத் தீர்வும் காணப்படவில்லை. தமிழகத்தில் பொதுச் சொத்துகளுக்குச் சேதம் ஏற்படுத்தியதும் தமிழகத்தில் உள்ள மக்களை அச்சுறுத்திக் காயப்படுத்தியதும்தான் இந்தப் போராட்டத்தின் பலன்கள்.

நான்கு நாள்களாக பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.உண்ணாவிரதப் போராட்டம் முடிந்த பிறகு, “தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாயும்” என்று காவல்துறை அறிவித்தது.இதிலிருந்தே இதற்குப் பின்னணியில் திமுக இருப்பது தெளிவாகியுள்ளது.

ஐந்து லட்சம் இலங்கைத் தமிழர்கள் மரணத்தின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும்போது,குடும்பத்துடன் மகிழ்ச்சியாக புத்தாண்டு கொண்டாடினார் முதல்வர் கருணாநிதி.இதுபோன்ற கண்துடைப்பு நாடகங்களைக் கண்டு தமிழக மக்கள் இனியும் ஏமாறக்கூடாது. இவ்வாறு ஜெயலலிதா தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகமே ஸ்தம்பித்துப் போகும் அளவுக்கு 10 நாட்களுக்கு போராட்டம் நடத்தப்படும் – டாக்டர் ராமதாஸ்

இலங் கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகமே ஸ்தம்பித்துப் போகும் அளவுக்கு 10 நாட்களுக்கு போராட்டம் நடத்தப்படும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

நேற்று மாலை பழச்சாறு கொடுத்து திருமாவளவனின் உண்ணாவிரதப் போராட்டத்தை டாக்டர் ராமதாஸ் முடித்து வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், இந்த உண்ணாநிலைப் போராட்டத்தை முடித்துக்கொள்ளும்படி, நான் நேற்று இதே மேடையில் கேட்டுக்கொண்டேன். அதற்கு திருமாவளவன், இன்று போய் நாளை வா என்று கூறிவிட்டார். ஆகையால் இன்று வந்து இருக்கிறேன். இன்று வெறுமனே போகமாட்டேன். பழச்சாறு கொடுத்து உண்ணாநிலைப் போராட்டத்தை முடித்து வைத்து விட்டுத்தான் செல்வேன்.

இலங்கை பிரச்சினை தொடர்பாக திருமாவளவன் மற்றும் அரசியல் கட்சிகளுடன் பேசி, அடுத்த கட்ட போராட்டம் தொடர்பாக நல்ல முடிவை எடுப்போம். அடுத்த கட்ட போராட்டம் என்பது ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் நடக்க வேண்டும். உலகையே உலுக்க வேண்டும்:

இந்த போராட்டத்தால் தமிழகமே செயலிழக்க வேண்டும். பேருந்து, தொடருந்து எதுவும் ஓடக்கூடாது. மருந்து, பால் விநியோகம் மட்டுமே நடக்க வேண்டும். இந்த போராட்டம் உலகையே உலுக்க வேண்டும். இதை பார்த்துவிட்டு, இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும்.

இது எனது தனிப்பட்ட முடிவு. திருமாவளவனுக்கு கூட நான் இப்படி ஒரு போராட்டத்தை கூறுவேன் என்பது தெரியாது. இதைவிட வேறு விதமான நல்ல போராட்டத்தை முதலமைச்சர் கூறினால், இதனை விட்டு விட்டு, முதல்வர் கூறும்படி போராட்டம் நடத்தலாம். முதல்வரை முன்நிறுத்தி, அவரது வழிகாட்டுதலின் பேரில் ஒரு நல்ல போராட்ட முடிவை எடுக்க வேண்டும்.

தமிழக முதல்வர், கோட்டை மற்றும் அறிவாலயத்தில் கூட்டம் போடாமல், பொதுவான இடத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் போட்டு, அதில் நாங்கள் முன்மொழிய, மற்ற கட்சிகள் வழி மொழிய செய்தால் சிறப்பாக இருக்கும்.

ஊடக அடக்குமுறைக்கு எதிராக ஜே.வி.பி. கண்டனக் கூட்டம்

jvp.jpgஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல், ஊடகவியலாளர் படுகொலை போன்றவை உட்பட அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் மாபெரும் கண்டனக் கூட்டமொன்று இன்று திங்கட்கிழமை நுகேகொடையில் நடைபெறவிருக்கின்றது.  ஜே.வி.பி.யின் ஏற்பாட்டில் நடைபெறும் இக்கண்டனக் கூட்டத்தில் பல்வேறு அமைப்புக்களின் தலைவர்களும், பிரமுகர்களும் உரையாற்றவிருப்பதாகவும் கூட்டம் மாலை 4 மணிக்கு நுகேகொடை ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள நகரசபை மைதானத்தில் நடைபெறுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிரச மீதான தாக்குதல் மூவர் பொலிஸில் சரண்

sirasa-02.jpgதெபானம பன்னிப்பிட்டியவிலுள்ள எம்.ரி.வி., எம்.பி.சி. ஊடக நிறுவனம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை மூவர் பொலிஸாரிடம் சரணடைந்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரஞ்சித குணசேகர தெரிவித்தார். கடந்த 6 ஆம் திகதி அதிகாலை எம்.ரி.வி. நிறுவனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே கோட்டே ஸ்ரீ ஜெயவர்த்தனபுர மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையிலேயே கோட்டே ஸ்ரீ ஜெயவர்த்தனபுர மாநகர சபையின் உறுப்பினர் ஒருவர் உட்பட மூவர் நேற்று இச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் சரணடைந்திருப்பதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரஞ்சித் குணசேகர தெரிவித்திருக்கிறார்

நாளை இவர் ஜனாதிபதி

obama.jpgஅமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, மனைவி, மைகெலி மற்றும் உப ஜனாதிபதி ஜோன்பைடன், மனைவி ஜிலி ஆகியோர் குடும்ப சகிதம் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் பிரவேசித்துள்ளனர். நாளை இவர்கள் ஜனாதிபதி, உப ஜனாதிபதிகளாக பதவியேற்கவுள்ளனர்.

obama.jpg

புலிகளின் 31 சடலங்கள் வைத்தியசாலையில் ஒப்படைப்பு

truck.jpgவன்னிப் போர் முனைத் தேடுதலில் கண்டெடுக்கப்பட்ட புலிகளின் 31 சடலங்கள் இராணுவத்தினரால் வவுனியா பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி தர்மபுரம், முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசங்களிலிருந்து இந்த சடலங்கள் படையினரால் கண்டுபிடிக்கப் பட்டிருந்தன.

இந்த சடலங்களை பொறுப்பேற்குமாறு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் பொலிஸார் அறிவித்துள்ளனர். இதில் 15 யுவதிகளுடைய சடலங்களும் அடங்கியுள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர். நேற்றுக் காலை வவுனியா மாவட்ட நீதிவான் எம். ஜி. அலெக்ஸ்ராசா வைத்தியசாலைக்கு விஜயம் செய்து சடலங்கள் தொடர்பான விசாரணையினை நடத்தினார். சடலங்கள் எதுவுமே அடையாளம் காணப்படவில்லை. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் இந்த சடலங்களை பொறுப்பேற்காத பட்சத்தில் நீதிமன்றத்தின் அனுமதியுடன் அரச செலவில் அடக்கம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கிடையில் மேலும் 28 புலிகளுடைய சடலங்கள் வன்னியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நீதிவானுக்கு பொலிஸாரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் கிழக்கு பல்கலை பட்டமளிப்பு விழா இன்று

logo1.gifதென் கிழக்கு பல்லைக் கழகத்தின் 5 வது பட்டமளிப்பு விழா இன்று காலை 9.30 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

தென் கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி ஏ. ஜி. ஹுசைன் இஸ்மாயில் தலைமையில் இடம் பெறவுள்ள மேற்படி பட்டமளிப்பு விழாவில் பிரயோக விஞ்ஞான பீடத்தில் சூழல் கற்கை நெறியில் முதுநிலை பட்டத்தை நிறைவு செய்து கொண்ட 5 பட்டதாரிகளுடன் 75 விஞ்ஞான பட்டதாரிகளும், முகாமைத்துவ வர்த்தக பீடத்தில் 70 பட்டாரிகளும், கலை கலாசார பீடத்தில் 138 பட்டதாரிகளும் அரபு மொழி பீடத்தில் 2 பட்டதாரிகளுமாக மொத்தம் 285 பேர் பட்டமளித்து கெளரவிக்கப்படவுள்ளனர்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் புலிகளின் பாரிய படகு தயாரிப்பு தொழிற்சாலை படையினர் வசம்

_army.jpgமுல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்த புலிகளின் பாரிய முகாம் ஒன்றினையும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய படகு உற்பத்தி தொழிற்சாலை ஒன்றினையும் இராணுவத்தினர் நேற்று முன்தினம் கைப்பற்றியிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்று தெரிவித்தார்.

புதுக்குடியிருப்புக்குக் கிழக்கே படையினருக்கும் புலிகளுக்குமிடையில் கடந்த 42 மணித்தியாலங்களாக இடம்பெற்ற கடும் மோதல்களையடுத்து அப் பகுதியிலிருந்து எட்டு புலிகளின் சடலங்களை படையினர் மீட்டிருப்பதாகவும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.  புலிகளின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய படகுகள் தயாரிக்கும் தொழிற்சாலையினை படையினர் நேற்று முன்தினம் காலை 7 மணியளவில் முற்றுகையிட்டனர். இதில் பதினொரு படகுகள் இருந்துள்ளன. இரண்டு டோரா படகுகளும் இரண்டு வோட்டர் ஜெட்களும் ஏழு சிறிய படகுகளுமே இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டிருப்பதாக ஊடக மத்திய நிலையம் கூறியது. இராணுவத்தின் 59 ஆம் படைப்பிரிவே இதனைக் கைப்பற்றியுள்ளது.

இதேவேளை நேற்று முன்தினம் (17) மாலை 5.30 மணியளவில் படையினருக்கும் புலிகளுக்குமிடையில் இடம்பெற்ற கடும் மோதலைத் தொடர்ந்து புதுக்குடியிருப்பு கிழக்கில் அமைந்திருந்த புலிகளின் பாரிய முகாமொன்று படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பாரிய கட்டடங்களைக் கொண்டிருந்த இம்முகாமில் சாதாரண பதுங்குகுழி ஒன்றுடன் கூரைகளுடன் கூடிய பதுங்கு குழிகள் பல இருந்ததாகவும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் கூறியது.

இம்முகாமுக்குள் 40 x 20 அடி கொண்ட இரண்டு கட்டடங்களும் 20 x 30 அடி கொண்ட ஆறு கட்டடங்களும் கூரைகளுடன் கூடிய ஆறு பதுங்கு குழிகளும் காணப்பட்டதாகவும் இராணுவத்தினர் கூறினர். புதுக்குடியிருப்புக்கு கிழக்கே படையினருக்கும் புலிகளுக்குமிடையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கடும் மோதலில் புலிகளுக்கு பாரிய இழப்பு ஏற்பட்டிருப்பதுடன் படையினருக்கு சிறிய அளவிலான சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் ஊடக மத்திய நிலையம் சுட்டிக் காட்டியது.

அடுத்த தளபதிக்கு இந்த யுத்தத்தை விட்டு வைக்கமாட்டேன் – இராணுவத் தளபதி

sarath-finseka.jpgசித்திரைப் புத்தாண்டுக்கு முன்னதாக யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர விரும்புவதாக இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அத்துடன் இதற்கென அனைவரும் பிரார்த்திக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.

கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் உள்ள இராணுவத் தளபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் ஒன்று கூடலின் போதே லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா இந்த கருத்தை வெளியிட்டார். கடந்த வருடம் இதே போன்றதொரு ஒன்று கூடலின் போது, எனது பதவிக் காலத்துக்குள் இந்த யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்படும் எனவும் அடுத்த இராணுவத் தளபதிக்கு இதை விட்டு வைக்கப்போவதில்லை எனவும் நான் தெரிவித்திருந்தேன். எனினும் சிலர் அதை 2008 ஆம் வருடத்துக்குள் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரப்போவதாக தெரிவித்தேன் என செய்தி வெளியிட்டிருந்தனர். எனினும், எனது பதவிக்காலம் முடிவடைவதற்குள்ளேயே யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவேன் என நான் கூறியதை மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இதன் பிரகாரம் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர இன்னும் ஒருவருடம் இருக்கிறது.

எவ்வாறு இருப்பினும் யுத்தம் மிக விரைவாக முடிவடைந்து வருகிறது. எனினும் காலஎல்லையொன்றை கூறமுடியாது. இருந்தபோதிலும் அடுத்த தளபதிக்கு இந்த யுத்தத்தை விட்டு வைக்கமாட்டேன் என்பதை நான் உறுதியாக தெரிவித்துக் கொள்கின்றேன். நான் அளித்த உறுதியை நான் எப்படியும் காப்பாற்றுவேன். இந்த வருடம் யுத்தம் எப்படியாவது முடிவுக்குக் கொண்டு வரப்படும். கடந்த 17 நாட்களில் படையினர் முல்லைத்தீவை நோக்கி 17 கிலோ மீற்றர் தூரம் முன்னேறியுள்ளனர். இதில் இருந்து படையினர் மிக வேகமாக முன்னேறி வருவது புலனாகிறது. 2 வருடங்களுக்கு முன்னர் 50 வரைபடங்களை வைத்து நான் யுத்த நடவடிக்கை திட்டங்களை மேற்கொண்டு வந்தேன். ஆனால், தற்போது ஒரேயொரு வரைபடத்தை மட்டுமேவைத்து யுத்த திட்டங்களை வகுத்து வருகின்றேன். அவ்வளவு தூரம் எமது படையினர் முன்னேறியுள்ளனர். யுத்தத்தின் பிரதிபலன்களை மிக விரைவில் பார்க்க முடியும்.

2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எனது பதவிக்காலம் முடிவடையும் அதேநேரம் அதற்கு முன்னதாக யுத்தம் முடிவுக்கு வரும் என நம்புகின்றேன். சித்திரைப் புத்தாண்டிற்குள் யுத்தம் முடிவடைவதை நான் விரும்புகின்றேன். அதற்கு அனைவருக்கும் அதிர்ஷ்டம் வேண்டும். சித்திரைப் புத்தாண்டுக்குள் யுத்தம் முடிவடைய நாம் அனைவரும் பிரார்த்திப்போம் எனவும் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் பொன்சேகா இதன் போது கூறினார். இதேநேரம், இராட்சதவிலங்கு (ட்ரகன்) புலி ஒன்றை சுழற்றிப் பிடித்து விழுங்க பார்த்துக் கொண்டு இருப்பது போல் படம் ஒன்றைப் பொறித்த மேற் சட்டை ஒன்றை தான் அணிந்திருப்பதை சுட்டிக்காட்டிய இராணுவத் தளபதி இந்த மேற்சட்டையை இந்த நிகழ்வுடன் இரண்டாவது முறையாக அணிவதாகவும் அடுத்த நிகழ்வின் போது இதை அணிய வேண்டிய அவசியம் இருக்காது என தெரிவித்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

வடக்கு போர் நிலவரத்தால் மாகாணசபைத் தேர்தல் களையிழப்பு. மக்கள் அக்கறைப்படவில்லை; பவ்ரல்

paffre.jpgமத்திய மற்றும் மேல் மாகாண சபைத் தேர்தல்களில் மக்களுக்கு அக்கறை இல்லையெனத் தெரிவித்த பவ்ரல் அமைப்பின் தலைவர் கிங்ஸ்லி றொட்றிகோ வடபோர்முனை நிலவரத்தால் தேர்தல் களையிழந்துள்ளதெனவும் தெரிவித்துள்ளார். கொழும்பில் அமைந்துள்ள சமூக, சமய மத்திய நிலையத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பவ்ரல் அமைப்பின் தலைவர் கிங்ஸ்லி றொட்றிகோ இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;

நடைபெறவுள்ள வடமேல் மாகாண சபைத் தேர்தலில் 937 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில் 50 பேர் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இதேவேளை, மத்திய மாகாணசபை உறுப்பினர்களாக 56 பேர் தேர்ந்தெடுக்கப்படவுள்ள நிலையில் 1,310 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலுக்கு ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் ஒரு நிலையான கண்காணிப்பாளர் வீதம் 2,600 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். மேலும், தேர்தல் தொகுதி ஒன்றிற்கு இரு வாகனங்கள் வீதம் 40 தேர்தல் தொகுதிகளிலும் 80 நடமாடும் கண்காணிப்பு வாகனங்களில் 400 கண்காணிப்பாளர்கள் தேர்தல் தினத்தன்று தமது சேவையை வழங்கவுள்ளனர்.

அத்துடன், இத்தேர்தல் கண்காணிப்பிலும் சர்வோதயம் உள்ளிட்ட சிவில் சமூக அமைப்புகள் பலவும் எம்முடன் இணைந்து பணியாற்றவுள்ளனர். சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்தும் பொருட்டு ஒவ்வொரு அரசியல் கட்சியுடனும் நாம் பேச்சுகளில் ஈடுபட்டுள்ளோம். அதன் ஒரு கட்டமாக ஐ.தே.க.வுடன் நடைபெற்ற பேச்சுகள் முடிவடைந்துள்ளது. எஞ்சிய கட்சிகளுடனான பேச்சுகளும் நடத்தப்படவுள்ளது. இதேபோல் பொலிஸாரின் நடவடிக்கைகள் குறித்து பொலிஸ் திணைக்களத்துடனும் நாம் பேச்சுகளில் ஈடுபடவுள்ளோம்.

தேர்தல் கண்காணிப்பு குறித்த நடைமுறைகளை விளக்குவதற்காக பிரதேச செயலகங்களை மையமாகக் கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வேட்புமனுத் தாக்கல் செய்தது முதல் பாரதூரமான தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் இதுவரை இடம்பெறவில்லை. ஆனாலும், இரு மாகாணங்களிலும் சிறுசிறு சம்பவங்கள் இடம் பெற்றுள்ளது. எனினும், அவை தேர்தல் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு முன்னர் இடம்பெற்றுள்ளது.

அத்துடன், வேட்பு மனுத்தாக்கல் செய்தது முதல் இதுவரை தேர்தல் உஷார் நிலை அடைந்ததை அவதானிக்க முடியவில்லை. வடக்கில் நடைபெறும் படை நகர்வுகள் மீது சகலரும் அதிக கவனம் செலுத்தப்பட்டிருக்கின்றமையே இவ்வாறான உற்சாகமற்ற தன்மைக்கு முக்கிய காரணமாகும். இதேவேளை, இந்தத் தேர்தல் அவசியமா என்ற கேள்வி எழுகின்றது. ஏனெனில், மக்களுக்கு இத்தேர்தலில் அக்கறை இல்லை. மக்கள் தேர்தலை நடத்துமாறு கேட்கவில்லை அரசியல்வாதிகளிற்காகவே இத்தேர்தல் நடத்தப்படுகின்றது.

மக்களினதும் அரசியல் வாதிகளினதும் கருத்துகளை உள்வாங்கியே தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. 2 மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் முடிவடைந்துள்ளன. ஏனைய மாகாண சபைகளுக்கான தேர்தலும் நடத்தப்படவுள்ளது. கிழக்கு மாகாணத்தில் தேர்தல் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது எனத் தெரிவித்தார்.