21

21

மக்கள் இடம்பெயர்வதற்கான பாதுகாப்பு வலயங்கள்

wanni.jpgமுல் லைத்தீவில் புலிகளால் பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் இடம்பெயர்வதற்கான பாதுகாப்பு வலயங்களை இராணுவம் பிரகடனப்படுத்தியுள்ளது.

புதுக்குடியிருப்பு, இரணைப்பாளை, ஆனந்தபுரம், வலைஞர்மடம், அம்பலவன்பொக்கனை, மாத்தளன், முள்ளிவாய்க்கால், வள்ளிபுனம், தேவிபுரம், மூங்கிலாறு, உடையார் கட்டு, சுகந்திரபுரம், கைவேலி, ரெட்பானா கிராமம் ஆகிய இடங்களில் தற்போது ஏராளமான மக்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ளனர். குறித்த மக்கள் மனிதக் கேடயங்களாக பயன்படுத்தும் நோக்கில் புலிகளால் பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பிரதேசங்களை சேர்ந்தவர்கள். இந்த நிலையில் இவர்களை தேவிபுரம், உடையார்கட்டு, சுகந்திரபுரம், சுகந்திரபுரம் கொலனி, சுகந்திரபுரம் மத்தி, கைவேலி வடக்கு, இருட்டு மடு போன்ற இடங்களுக்கு செல்லுமாறும் இந்த இடங்கள் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் படைத்தரப்பு அறிவித்துள்ளது.

குறித்த பிரதேசங்கள் யுத்த சூனியப் பிரதேசமாகவும் இராணுவத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அப்பிரதேசங்களை நோக்கி மக்கள் இடம்பெயர்வதன் மூலம் யுத்தத்தின் தாக்கங்களிலிருந்து விடுபட்டுக்கொள்ள முடியுமாக இருக்கும். ஆயினும் புலிகள் தங்களால் மனிதக் கேடயங்களாக குறித்த மக்களை பயன்படுத்தி வரும் நிலையில் அவர்கள் இடம்பெயர அனுமதிப்பார்களா என்பதே கேள்விக்குறியாகும். முல்லைத்தீவு பிரதேசத்தில் விசேட பாதுகாப்பு வலயங்கள் பிரகடனப்படுத்தப்பட்டு இடம்பெயர்ந்த மக்களை குறித்த வலயங்களுக்கு செல்லுமாறு படைத்தரப்பு அறிவித்துள்ளது

அமெரிக்காவின் 44வது அதிபராக பதவியேற்றார் பராக் ஒபாமா: நாடு முழுவதும் விழாக்கோலம் (படம் இணைப்பு) – ஏகாந்தி

obama.jpgவாஷிங்டன் நகரில் நடந்த கோலாகல விழாவில், அமெரிக்காவின் அதிபராக, பராக் ஒபாமா நேற்று (20.01.2009) பதவி ஏற்றார். கருப்பர் இனத்தைச் சேர்ந்தவர், அமெரிக்க அதிபராக பதவியேற்பது இதுவே முதல் முறை.

கடும் பொருளாதார நெருக்கடியையும், வேலை இழப்பையும் அமெரிக்கா சந்தித்துவரும் நிலையில், 44வது அதிபராக ஒபாமா பதவியேற்பது, அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

கென்ய நாட்டைச் சேர்ந்த கருப்பின தந்தைக்கும், அமெரிக்காவின் கென்சாசை சேர்ந்த வெள்ளையின தாய்க்கும் பிறந்தவர் ஒபாமா. தந்தை கருப்பர் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால், ஒபாமாவும் கருப்பர் இனத்தவராக கருதப்படுகிறார். அவர் ஹவாயிலும், இந்தோனேசியாவிலும் சில காலம் வளர்ந்தவர். சாதாரண பணியாளராக வாழ்க்கையை துவக்கி, அமெரிக்காவின் மிக உயரிய பதவியை அடைந்துள்ளார்.

ஹாவர்டு பல்கலைக் கழகத்தில் வக்கீலாக பட்டம் பெற்றவர். இதுவரை, இனப் பாகுபாடு காரணமாக அடிமைகளாகவும், அதைத் தொடர்ந்து இரண்டாம் தர குடிமக்களாகவும் தாங்கள் பாவிக்கப்படுவதாக கருதிவரும் ஆப்ரிக்க அமெரிக்கர்கள் மத்தியில், ஒபாமா அதிபராக பதவியேற்றது எதிர்பார்ப்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்கும் முன் ஒபாமாவை, வெள்ளை மாளிகையின் வடக்கு போர்டிகோவில் வரவேற்றார், பதவி விலகிய அதிபர் புஷ். பின் அங்கிருந்து, பதவியேற்பு விழா நடக்கும் அரங்குக்கு இருவரும் சென்றனர். கடந்த 1861ம் ஆண்டு, அமெரிக்க அதிபராக ஆபிரகாம் லிங்கன் பதவியேற்ற போது, அவர் பயன்படுத்திய பைபிள் புத்தகத்தில் கைவைத்தபடியே, அதிபர் பதவியேற்பு உறுதிமொழியை எடுத்துக் கொண்டார் ஒபாமா. பதவியேற்பு விழாவை ஒட்டி, காபிடல் அரங்கம் பகுதி முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. உளவுத்துறையை சேர்ந்தவர்கள், குறிபார்த்து சுடுவதில் பெரும் திறமை பெற்றவர்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு இருந்தனர். எந்தவித அசம்பாவிதங்களும் நடக்காத வகையில், விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அமெரிக்கா மட்டுமின்றி, வெளிநாட்டில் வசிக்கும் அமெரிக்கர்களும் லட்சக்கணக்கில், அங்கு குழுமியிருந்து, ஒபாமாவுக்கு வாழ்த்து கோஷங்கள் எழுப்பினர். வாஷிங்டன் நகரம் மட்டுமின்றி, அமெரிக்கா முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. இலங்கை நேரப்படி இரவு 10.00 மணிக்கு அமெரிக்க காபிடல் கட்டடத்தின் மேற்கு அரங்கில் இசை நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. அமெரிக்க அரசின் கடற்படை பேண்டு குழுவினர், சான் பிரான்சிஸ்கோ , சான் பிரான்சிஸ்கோ கிரிஸ் இசைக்குழு அமைப்பினர் கலந்து கொண்டு இசை நிகழ்ச்சியை பிரமாதப்படுத்தினர்.

கலிபோர்னியாவை சேர்ந்த ஜனநாயகக் கட்சி செனட்டர் டயயானி பெயன்ஸ்டீன், கூட்டு பார்லிமென்ட் கமிட்டியின் தலைவர் என்ற வகையில் வரவேற்புரை ஆற்றி, விழாவை துவக்கி வைத்தார். துணை அதிபர் ஜோ பிடெனுக்கு சுப்ரீம் கோட் இணை நீதிபதி ஜான் பால் ஸ்டீவன்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பின், ஜான் வில்லியம்சின் இசை நிகழ்ச்சி நடந்தது.

நாட்டின் முதல் பெண்மணியாகும் மிச்சேல், ஆபிரகாம் லிங்கன் பயன்படுத்திய பைபிளை எடுத்து வந்து, கையில் பிடித்திருக்க, அதன் மீது கைவைத்தபடி பதவி பிரமாணம் எடுத்தார் புதிய அதிபர் ஒபாமா. சரியாக 10.38 மணிக்கு அவர் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். 10.45 மணிக்கு உரை நிகழ்த்தினார். பின்னர் வெள்ளை மாளிகைக்கு சென்றார். ஒபாமா பதவியேற்பு விழாவை ஒட்டி நகரின் மையப்பகுதிகளில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, வாகனப் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது, 47 வயதாகும் ஒபாமாவிடம் இருந்து, சிக்கலான நிலையை சந்தித்துவரும் அமெரிக்கர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எதிர்கட்சியினர், கடுமையான விஷயங்களில் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ஏற்கனவே, ஒபாமா அழைப்பு விடுத்திருந்தார்.

ஒபாமாவின் பேச்சிலிருந்து …

நாம் அனைவரும் மிகப் பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் உள்ளோம். இதை அனைவரும் அறிவோம். அமெரிக்கா இத்துடன் முடியப் போகிறது, இதை தவிர்க்க முடியாது என்ற அச்சம் உள்ளது.

பொருளாதாரம் பலவீனமடைந்துள்ளது. கடந்த காலத்தில் பொறுப்பற்றதனமாகவும், வீம்பாகவும் நடந்து கொண்டதால் ஏற்பட்ட நிலை இது. அதேசமயம், அடுத்த தலைமுறைக்கு நமது நாட்டை கொண்டு செல்லத் தவறியதும், மாற்று வாய்ப்புகள் குறித்து யோசிக்காததுமே இந்த நிலைக்கு இன்னொரு முக்கிய காரணம்.

பொருளாதார நெருக்கடியால் பலர் வீடுகளை இழந்துள்ளனர். வேலைகள் போயுள்ளன. வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. நமது சுகாதார செலவுகள் அதிகரித்து விட்டன. பள்ளிகள் கூட சரிவர செயல்படாத அவல நிலை. எரிபொருள் நிலையும் கவலை அளிக்கிறது.

நமது நாடு போரில் ஈடுபட்டுள்ளது. வன்முறை, துவேஷம், தீவிரவாதத்திற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இப்போது நமக்கு என்ன தேவை என்றால், பொறுப்புணர்ச்சியுடன் கூடிய செயல்பாடுகள்தான். ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ஒரு அங்கீகாரம் தேவை. அவரவர் கடமையை சிறப்பாக செய்ய வேண்டும். நமது நாட்டுக்கு, நமது உலகுக்கு நாம் செய்ய வேண்டிய கடைமையை நாம் செய்வோம்.

பொருளாதாரத்தை சீரமைக்க வேண்டிய பொறுப்பு நாம் அனைவருக்கும் உண்டு. பொருளாதாரத்தை சரி செய்ய உறுதியான, விரைவான நடவடிக்கை தேவைப்படுகிறது.

புதிய வேலைகளை உருவாக்குவதோடு, புதிய வளர்ச்சிக்கான அடிக்கல்லையும் நாம் நாட்டியாக வேண்டும்.

நிறைய சாலைகளையும், பாலங்களையும், மின் கட்டமைப்புகளையும் நாம் கட்டுவோம். நமது வர்த்தகத்தை தூக்கி நிறுத்துவோம். அறிவியலை மதிப்புமிக்க இடத்திற்கு உயர்த்துவோம். தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்தி மருத்துவத்திற்கு ஆகும் செலவுகளைக் குறைப்போம்.

நமது வாகனங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் தேவையான எரிபொருளை சூரியன், காற்று, மண்ணிலிருந்து எடுப்போம்.

நமது பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை புதிய தலைமுறைக்கு ஏற்றபடி மாற்றுவோம். இவை அனைத்தையும் நம்மால் செய்ய முடியும். நாம் நிச்சயம் செய்வோம்.

கிறிஸ்தவர், முஸ்லிம்கள், யூதர்கள், இந்துக்கள் மற்றும் மத நம்பிக்கை இல்லாதவர்களை உள்ளடக்கிய நாடே அமெரிக்கா. இதில், எந்த மதமும் ஏற்றத்தாழ்வு உடையதல்ல.

நாம் பல்வேறு மொழி, கலாசாரத்தால் பிணைக்கப்பட்டிருக்கிறோம். நாம் மனிதநேயத்துடனும், அமைதியுடனும் நமது வெற்றிகளை படைப்போம்.

அமெரிக்கா அனைத்து நாடுகளுக்கும் நண்பன். அந்த வகையிலேயே நாம் நடந்து கொள்வோம்.

நாம் இன்று சந்தித்துக் கொண்டிருக்கும் சவால்கள் உண்மையானவை. மிகக் கடுமையானவை. பல சவால்கள் உள்ளன. ஆனால் அவற்றை எளிதில் சமாளிக்க முடியாது. குறுகிய காலத்தில் அவற்றை சமாளிப்பது இயலாத காரியம். ஆனால் அமெரிக்கா இவற்றை சந்திக்கும், சமாளிக்கும் என்றார் ஒபாமா.

பிபிசி உலக சேவையின் அனுசரணையில் நடத்தப்பட்ட புதிய கருத்துக்கணிப்பு ஒன்றில் கலந்துகொண்டவர்களில் 67 வீதமானவர்கள், பராக் ஒபாமா அவர்கள் அதிபராக தெரிவு செய்யப்பட்டமையால், அமெரிக்காவுக்கும், உலகின் ஏனைய நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேம்படும் என்று கூறியிருக்கிறார்ர்கள். கடந்த கோடைகாலத்தில் நடத்தப்பட்ட இதுபோன்ற முன்னைய கருத்துக்கணிப்பு ஒன்றில், இந்த விடயத்தில் எந்தவிதமான நம்பிக்கையும் காண்பிக்காத ரஷ்யா, துருக்கி, எகிப்து மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெருந்தொகையான மக்கள் கூட தற்போதைய கருத்துக்கணிப்பில் அதிபர் பராக் ஒபாமாவின் தெரிவின் காரணமாக மிகுந்த எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

அவர் தொடர்பில் அதீத நம்பிக்கையுடனான கருத்து வெளியிட்டவர்கள் ஐரோப்பியர்கள்தான். உதாரணமாக, ஜேர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களில் 80 வீதமானவர்கள் ஏனைய நாடுகளுடனான உறவுகள் மேம்படும் என்பதில் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.

ஒபாமா போன்ற ஒரு அதிபர், உலக பொருளாதார நெருக்கடிக்கே தனது நிகழ்ச்சித்திட்டத்தில் முன்னுரிமை கொடுக்க வேண்டுமென்றே பெரும்பான்மையினர் விரும்புவதாகவும் இந்த கருத்துக்கணிப்பு தெளிவாகக் கூறுகிறது. ஆனால், அவர் எதிர்கொள்கின்ற சவால்களின் ஒரு சமிக்ஞையாக, உலகெங்கும் பெருந்தொகையானவர்கள், உலக காலநிலைமாற்றம், மத்திய கிழக்கு அமைதி மற்றும் இராக் விவகாரம் ஆகிய பிரச்சினைகளையும் அவர் முன்னுரிமை கொடுத்து தீர்த்து வைக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.

இதில் வித்தியாசமான விசயம் என்னவென்றால், ஒபாமா எந்த விடயத்துக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதில், அமெரிக்க மக்களுக்கும், உலகின் ஏனைய நாடுகளின் மக்களுக்கும் இடையில் கருத்தில் வேறுபாடு இருக்கிறது.
உலக பொருளாதார நெருக்கடிக்கே ஒபாமா முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று அமெரிக்க மக்களும் ஒப்புக்கொள்வதாக இந்தக் கருத்துக்கணிப்பு கூறுகின்ற போதிலும், உலகின் ஏனைய மக்களைப் போலல்லாது, அமெரிக்கர்கள் ஆப்கானிஸ்தான் பிரச்சினைக்கே அடுத்த இடத்தை தருகிறார்கள். வெறுக்கப்பட்ட கடந்த 8 வருட புஷ்ஷின் ஆட்சியின் மூலமான பலனை ஒபாமா பூரணமாக அடைந்திருக்கிறார் என்று இந்த கருத்துக்கணிப்பை ஏற்பாடு செய்தவர்கள் கூறுகிறார்கள். ஆனால், தற்போதுள்ள உற்சாகத்துடனான இந்த எதிர்ப்பார்ப்புக்களை அவர் தக்க வைத்துக்கொள்வது என்பது அவருக்கு பெரும் சவாலாகத்தான் இருக்கும்.

இதேநேரம், பராக் ஒபாமாவின் பதவியேற்பு நிகழ்வைக் காணவென அமெரிக்க நேரப்படி காலை 9 மணிக்கே 20 பாகையை விட சற்று அதிகம் என்ற குளிரான காலநிலையையும் பொருட்படுத்தாமல் பல்லாயிரக் கணக்கான மக்கள் வாஷிங்டனில் நஷனல்மால் வீதியில் கூடி விட்டனர். இங்கு கூடிய மக்கள் கூட்டமானது தசாப்தங்களிலேயே மிகப் பெரிய கூட்டமென்று சில சமயங்களில் இதுவே எப்போதுமே மிக பெரிய மக்கள் திரள்வாக இருக்கக் கூடுமென்றும் அமெரிக்க ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

ஒபாமா வாழ்க்கை குறிப்பு:

முழுப் பெயர் – பாரக் ஹுசேன் ஒபாமா.
வயது – 47
பிறந்த நாள் – 1961, ஆகஸ்ட், 4.
பிறந்த இடம் – ஹோனலுலு, ஹவாய்.
படிப்பு – கொலம்பியா பல்கலைக்கழகம், ஹார்வர்ட் சட்ட பள்ளி.
மனைவி – மிச்சல் ராபின்சன் ஒபாமா.
குழந்தைகள் – மலியா (10), சாஷா (7).
மதம் – ஐக்கிய கிறிஸ்தவ சர்ச்.
கட்சி – ஜனநாயகக் கட்சி.

குடும்பம் – கென்ய தந்தைக்கும், வெள்ளையர் இன அமெரிக்க தாய்க்கும் பிறந்தவர் ஒபாமா. தந்தை பாரக் ஒபாமா சீனியர், ஹவாய் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது ஒபாமாவின் தாயான ஆன் துங்காமை மணந்தார்.

ஒபாமா பிறந்த 2 வருடத்திலேயே இருவரும் பிரிந்து விட்டனர். பின்னர் ஒபாமாவின் தந்தை கென்யாவுக்குத் திரும்பி விட்டார். அங்கு தலை சிறந்த பொருளாதார நிபுணராக அவர் விளங்கினார். 1982ம் ஆண்டு கார் விபத்தில் அவர் மரணமடைந்தார்.

ஒபாமாவின் தாயார் ஆன், இந்தோனேசியாவைச் சேர்ந்த லோலோ சொயட்டரோ என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டு இந்தோனேசியாவுக்கு இடம் பெயர்ந்தார். அங்குதான் ஒபாமா தனது 10 வயது வரை வாழ்ந்தார்.

பின்னர் ஹவாய் திரும்பிய அவர் தனது தாத்தா, பாட்டியுடன் வசித்தார்.

ஒபாமாவுக்கு அவரது தந்தையின் பிற திருமணங்கள் மூலம் 7 சகோதர, சகோதரிகள் கென்யாவில் உள்ளனர். அதேபோல அவரது தாயாரின் 2வது திருமணத்தின் மூலம், மாயா சொயோட்டரோ என்ற சகோதரி உள்ளார்.

us_obama.jpg

us_obama002-2001.jpg

obama-20-01.jpg

us_obama-003.jpg

us_obama-04.jpg

மட்டக்களப்பில் குண்டு வெடிப்பு – இருவர் பலி. 11 பேர் காயம்

batti-town.jpgமட்டக்களப்பு தலைமை பொலிஸ் நிலையத்திற்கு அண்மையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இன்று புதன்கிழமை காலை 7.30 மணியளவில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த சம்பவத்தில்  பொலிஸ்  அதிகாரி உட்பட இருவர் உயிரிழந்தாகவும்  பொலிஸ் துறையினர் உட்பட 11 பேர் காயமடைந்துள்ளதாகவும்  பொலிஸ்  ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த சம்பவத்தில் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந் பொது மகன் ஒருவர், சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த நிலையில் 2  பொலிஸார்  மற்றும் 4 சிறுவர்கள் உள்ளிட்ட 11 பேர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கர வண்டி ஒன்றில் இருந்தே இந்த குண்டு வெடிப்பு இடம்பெற்றதாக  பொலிஸ்  ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன்குண்டு வெடித்த இடத்தில் மேலதிகமாக  பொலிஸ் , இராணுவம், விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு தேடுதல் நடாத்தப்படுவதாகவும் நகரப் பகுதிக்கான போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

படகுகள் மீது தாக்குதல்

_bort.jpg முல்லைத்தீவு கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடற்புலிகளின் தற்கொலைப் படகு உள்ளிட்ட நான்கு படகுகளை இலங்கை கடற்படையினர் தாக்கி அழித்திருப்பதாக கடற்படை பேச்சாளர் கமாண்டர் டி. கே.பி. தஸநாயக்க கூறினார்.

இச்சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றது. தாக்குதலையடுத்து இரண்டு கடற்புலிகளின் சடலங்களை கடற்படையினர் மீட்டிருப்பதாகவும் கமாண்டர் தெரிவித்தார். முல்லைத்தீவு கடற்கரையோரமாக கடற்புலிகளின் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை அவதானித்த இலங்கை கடற்படையினர் அப்படகுகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எட்டு படகுகளில் நான்கு படகுகள் முற்றாக எரிந்துள்ளன. இதில் ஒன்று தற்கொலைப் படகென கடற்படை பேச்சாளர் கூறினார். ஏனைய நான்கு படகுகளும் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளன. கடற் படையினருக்கும் கடற்புலிகளுக்குமிடையே சில நிமிடங்கள் இடம் பெற்ற மோதல்களால் கடற்படையின் படகொன்று சிறு சேதங்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

அதே நேரம் முல்லைத்தீவு கடற்பரப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்கரும்புலிகளால் சிறிலங்கா கடற்படையின் சுப்பர் டோறா தாக்கி மூழ்கடிக்கப்பட்டதில் 15 கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளது:
 
இது தொடர்பாக விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்துள்ளதாவது: முல்லைத்தீவு கடற்பரப்பில் தாக்குதல் மற்றும் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா கடற்படையின் டோறாக்கள் மற்றும் சுப்பர் டோறாக்கள் அணி மீது நேற்று திங்கட்கிழமை இரவு 11:28 நிமிடத்துக்கு கடற்கரும்புலிகள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் கடற்கரும்புலிகளால் சிறிலங்கா கடற்படையின் உயர்வலு சுப்பர் டோறா பீரங்கிப் படகு தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளது. இதில் 15 கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகள் தரப்பில் கடற்கரும்புலி லெப்.கேணல் நிதி மற்றும் கடற்கரும்புலி கப்டன் வினோதன் ஆகிய இரு கடற்கரும்புலிகள் வீரச்சாவடைந்துள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ. தே. கட்சி சமர்ப்பித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக இன்று அறிவிக்கப்படும் – சபாநாயகர்

speaker.jpgஅரசாங்கத்திற்கு எதிராக ஐ. தே. க. சமர்ப்பித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை செல்லுபடியற்றதாகிவிட்டதா? இல்லையா? என்பது தொடர்பாக இன்று (21 ஆம் திகதி) சபையில் அறிவிப்பதாக சபாநாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்கு பண்டார நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எதிரணிப் பிரதம கொறடாவும், கம்பஹா மாவட்ட எம்.பி.யுமான ஜோசப் மைக்கல் பெரேரா எழுப்பிய ஒழுங்குப் பிரச்சினைக்கு பதிலளிக்கும் வகையிலேயே சபாநாயகர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பாராளுமன்றம், சபாநாயகர் தலைமையில் நேற்றுக் காலை 9.30 மணிக்கு கூடியது. சபை அமர்வின் வழமையான ஆரம்ப நிகழ்வைத் தொடர்ந்து எம்.பி. ஜோசப் மைக்கல் பெரேரா இந்த ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பினார். அரசாங்கத்திற்கு எதிராக நாம் முன்வைத்த நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது. இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையின் தற்போதைய நிலையை சபாநாயகர் தெளிவுபடுத்த வேண்டும் என்று எம்.பி. ஜோசப் மைக்கல் பெரேரா சபையில் கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து சபையில் கடும்வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இச்சமயமே சபாநாயகர் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையின் தற்போதைய நிலை தொடர்பாக (நாளை) இன்று சபையில் அறிவிப்பதாகத் தெரிவித்தார்.

இலங்கை – அமெரிக்க பரஸ்பர ஒத்துழைப்பு செயற்பாடுகளால் அண்டை நாடுகளுக்கு பாதிப்பில்லை

sl-parlimant.jpgஇலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இருதரப்பு பரஸ்பர ஒத்துழைப்பு செயற்பாடுகள், அண்டைய நாடுகளுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாதென்று வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தெற்காசிய நாடுகளுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் இலங்கையில் அமெரிக்கா ஏவுகணைத்தளம் அமைப்பதற்கு இடமளிக்கப் படமாட்டாதென்றும் அமைச்சர் போகொல்லாகம தெரிவித்தார்.

ஜே. வி. பி. பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்கவின் கேள்வியொன்றுக்குப் பதில் அளித்த அமைச்சர், அமெரிக்க இராணுவத்தின் பசுபிக் பிராந்தியத்திற்கான கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கொனற் தலைமையிலான தூதுக்குழுவினர், கிழக்கில் பாடசாலைகளைப் புனரமைக்கவும், பயங்கரவாதம் மீண்டும் தலையெடுக்காதிருக்கவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவே இலங்கை வந்ததாகக் கூறினார்.

இலங்கைக்கும் அமெரிக்காவுக்குமிடையில் பாதுகாப்பு ஒப்பந்தம் எதுவும் கிடையாது.

பாதுகாப்பு செயற்பாடுகள் தொடர்பான பரஸ்பர ஒத்துழைப்பு, சேவை பரிமாற்றம் தொடர்பாகவே பாதுகாப்புச் செயலாளருக்கும், அமெரிக்கத் தூதுவருக்கு மிடையில் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.  இது குறித்த கலந்துரையாடல்களையும், செயற்பாடுகளையும் முன்னெடுக்கும் நோக்கில்தான் மேஜர் ஜெனரல் கொனற் தலைமையிலான குழுவினர் கடந்த ஜனவரி 13 ஆம் திகதி இலங்கை வந்தார்கள். ஜே. வி. பி.யினர் கற்பனை செய்யும் காரணங்களுக்காக அவர்கள் இலங்கை வரவில்லை இவ்வாறு 89 நாடுகளுடன் அமெரிக்கா உடன்படிக்கை செய்து கொண்டுள்ளது.

கிழக்கில் சமூக, பொருளாதார அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் பாதுகாப்புத்தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள் என்று தெரிவித்த அமைச்சர் போகொல்லாகம, ஜே. வி. பி. உறுப்பினர் அனுரகுமார எழுப்பிய கேள்விகளுக்குத் தனித்தனியாகவும் பதில் அளித்தார்.

அமெரிக்க இராணுவத்தின் பசுபிக் பிராந்தியத்திற்கான கட்டளைத் தளபதியொருவர் என்ன நோக்கத்திற்காக இலங்கை வந்தார். எப்போது வந்தார், இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் அவர் ஆற்றும் பணிகள் யாவை, எப்போது திருப்பிச் செல்வார்? என்றெல்லாம் அனுரகுமார எம்.பி. கேள்வி எழுப்பினார்.

இதற்கு மேலும் பதிலளித்த அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, பாடசாலைக் கட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்காக வந்தார்கள். 14 ஆம் திகதி மாலைதீவு சென்று மீண்டும் வந்தார்கள். 18 ஆம் திகதி நாடு திரும்பிவிட்டார்கள். வேறு எந்த இராணுவ செயற்பாடுகளுக்கும் அவர்கள் இலங்கைக்கு வரவில்லை. அதேநேரம், பயங்கரவாதத்திற்கு எதிராக எந்தவொரு சர்வதேச நாட்டுடனும் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு இலங்கை தயாராக உள்ளது என்றும் தெரிவித்தார்.

திருமலையில் ஏவுகணை பொருத்த அமெரிக்கக் குழு கவனம் செலுத்துகிறதா? -அநுர திஸாநாயக்க

parliment_inside.jpg திருகோணமலைக்கு அண்மையிலுள்ள தீவுகளில் ஏவுகணைகளைப் பொருத்துவது குறித்து அமெரிக்க இராணுவக்குழு கவனம் செலுத்துவதாகத் தெரிகிறது. இது தொடர்பான உண்மை நிலையை அரசாங்கம் வெளியிடவேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) யின் பாராளுமன்றக் குழுத் தலைவர் அநுர திஸாநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் விசேட அறிக்கை விடுத்து உரையாற்றும் போது குறிப்பிட்டார்.

அவ்வறிக்கை வருமாறு:-

அமெரிக்க இராணுவத்தினர் பசுபிக் பிராந்தியத்துக்கான கட்டளை குழுவொன்று தற்போது இலங்கை வந்திருப்பதாகத் தெரியவருகிறது. மேஜர் ஜெனரல் தோமஸ் எல். கொனன்ட்டின் தலைமையில் வந்திருக்கும் இந்த குழுவில் தெற்காசிய நாடுகள் தொடர்பான இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் பெட்ரிகோ, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராலயத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுகளின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கமாண்டர் லோரன்ஸ் ஸ்மித் ஆகியோர் அடங்குகின்றனர்.

இவர்கள் திருகோணமலையை மையமாகக் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர். அவர்களது வருகையின் நோக்கம் யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்த கிழக்குமாகாண மக்களின் மீள்குடியேற்றல் மற்றும் புனரமைத்தல் தொடர்பான விடயங்கள் எனக்கூறப்படுகிறது. இலங்கையில் யுத்தம் நடைபெற்ற பிரதேசங்களை புனரமைப்பதற்காக இராணுவ அதிகாரிகளை இங்கு அனுப்புவதன் நோக்கம் என்ன வென்று புரியவில்லை.

இற்றைக்கு 40 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் யுத்த நடவடிக்கைகளுக்காக இலங்கையைப் பயன்படுத்தும் திட்டம் இருந்தது. இலங்கையில் அமெரிக்க ஏவுகணைகளை திருகோணமலையில் பொருத்தும் முயற்சியொன்று 1978ல் மேற்கொள்ளப்பட்டது. என்றாலும் அது வெற்றியளிக்கவில்லை. 1985ல் மீண்டும் திருகோணமலை துறைமுகத்தை அண்மித்து முகாமொன்றை அமைக்க அமெரிக்கா முயற்சித்தது. மக்கள் எதிர்த்தமையால் அது கைவிடப்பட்டது.

அதே போன்று, தெற்காசியாவில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக “பிரம்ம புத்திர திட்டம்” என்ற பெயரில் ஒரு திட்டம் வகுக்கப்பட்டது.” வி. யி. தி அமைப்பினால் தயாரிக்கப்பட்ட இத்திட்டத்தில், திருகோணமலை துறைமுகம், அமெரிக்க இராணுவத்தை நிலை நிறுத்தக் கூடிய பூமியாக குறிக்கப்பட்டிருந்தது. ஆகவே, அமெரிக்காவின் யுத்த திட்டங்களில் திருகோணமலை முக்கிய இடமாகக் கருதப்படுகிறது.

ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவானதன் பின்னர் இலங்கைக்கும் அமெரிக்கா வுக்குமிடையில் பாதுகாப்பு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது. அதில் இலங்கையின் சார்பில் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும், அமெரிக்காவின் சார்பில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரும் ஒப்பமிட்டனர்.

அமெரிக்கா ஏனைய நாடுகளுடன் செய்து கொண்ட இதேபோன்ற ஒப்பந்தங்களில் பொதுவான அடையாளமொன்றிருந்தது. அதாவது அமெரிக்காவின் யுத்த தேவைகளுக்காக அந்த நாடுகளின் பூமியைப் பயன்படுத்த இடமளித்தல். எனவேதான், அமெரிக்காவின் இராணுவக் குழுவொன்று திருகோண மலைக்கு வந்திருப்பதில் சந்தேகம் எழுகிறது. அந்நிய நாடுகளின் யுத்த தேவைகளுக்காக எமது மண்ணை பயன்படுத்த இடமளிப்பதனால் எமது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. அதேபோன்று எமது மண்ணையும், வளங்களையும் அந்நிய இராணுவமொன்றுக்கு பயன்படுத்த இடமளிப்பது, எமது நாட்டின் இறைமைக்கும் தன்னாதிக்கத்துக்கும் பாரதூரமான அச்சுறுத்தலாகும்.

எமது நட்பு நாடுகளின் மீது யுத்தரீதியான தாக்குதல் நடத்த எமது மண்ணில் இடமளிப்பதை அனுமதிக்க முடியாது. சமீபத்தில் திருகோணமலைக்கு விஜயம் செய்த அமெரிக்க இராணுவக் குழு, திருகோணமலைக்கு அண்மித்த தீவுகளில் ஏவுகணை பொருத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. அது குறித்து இந்த உயர் சபைக்கு தெரிவிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். ஆகவே, இது குறித்த அனைத்து தகவல்களையும் இந்தச் சபையில் முன்வைக்குமாறு கேட்கின்றேன்.

பராக் ஒபாமாவுக்கு சபையில் பாராட்டு

parliment_inside.jpgஐக்கிய அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக நேற்று பதவியேற்ற பராக் ஒபாமாவுக்கு பாராளுமன்றத்தில் நேற்று நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம அரசாங்கத்தின் சார்பிலும், எம்.பிக்கள் சார்பிலும் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள பராக் ஒபாமாவுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக நேற்று பாராளுமன்றத்தில் கூறினார்.

அதேநேரம் இந்நாட்டில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் அளித்த ஒத்துழைப்புகளுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.)யின் பாராளுமன்ற குழுத் தலைவர் அனுர திசாநாயக்க நேற்று சபையில் எழுப்பிய கவனயீர்ப்பு கேள்விகளுக்கு சபாநாயகரின் அனுமதியுடன் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம பதிலளித்தார். இச்சமயமே வெளிவிவகார அமைச்சர் மேற்படி நல்வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்தார்.

வடக்கில் ஜனநாயகத்தை ஏற்படுத்த அடைந்த முன்னேற்றத்தை உலகிற்கு தெரியப்படுத்துங்கள். இராஜதந்திர பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி ராஜபக்ஷ

president.jpgவடக்கில் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் மீளக் கட்டியெழுப்புவதில் நாம் அடைந்து வரும் முன்னேற்றத்தை உலகிற்கு நீங்கள் அறிவிக்க வேண்டிய தருணம் இதுவென்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வெளிநாடுகளிலுள்ள இலங்கையின் இராஜதந்திர பிரதிநிதிகளுடனான விஷேட கூட்டமொன்றும் விஷேட செயலமர்வும் திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

வெளிவிவகார அமைச்சு ஏற்பாடு செய்திருந்த இந்த விஷேட செயலமர்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய ஜனாதிபதி ராஜபக்ஷ, வடக்கிலுள்ள அப்பாவித் தமிழ் மக்களின் நிலைமை தொடர்பாக தெரிவிக்கப்படும் தவறான தகவல்களுடனான குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் உலகத்துக்குத் தெரிவிக்க வேண்டிய காலம் இதுவெனவும் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது;

வடக்கிலுள்ள தமிழ் மக்களின் துன்பங்கள் புலிகளால் ஏற்படுத்தப்பட்டவையாகும். அவர்கள் தமிழ் மக்களை விடுவிப்பவர்கள் என்று தவறுதலாக உரிமை கோருகின்றனர்.  ஆனால், அவர்கள் உண்மையில் தமிழ் மக்களின் அடக்குமுறையாளர்களாகும். நீங்கள் பிரதிநிதித்துவம் வகிக்கும் நாடுகளிலுள்ள மக்கள் தமிழர்கள் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்படுகின்றனர் என்பதை தெரிந்து கொள்வது அவசியம். இலங்கைப் படையினர் மனிதாபிமான படையினராக விடுதலைக்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். வடக்கு இலங்கை விடுதலை, அபிவிருத்தி என்பவற்றின் புதிய வசந்தத்தின் உதயத்திற்காக காத்திருக்கின்றது என்பதை உங்கள் மூலம் உலகம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

உலகின் தற்போதைய பொருளாதர நெருக்கடிக்கு மத்தியிலும் எமது பொருளாதாரம் சிறப்பான முறையில் ஈடுகொடுத்து வருகிறது. அங்கவீனர்கள், அநாதைகள், முதியவர்கள், வறியவர்களென சமூகத்தின் நலிந்த வர்க்கத்தினரின் பாதுகாப்பு நலனோன்பு நடவடிக்கைகளில் நாம் கவனம் செலுத்துகின்றோம். எமது பொருளாதார வளர்ச்சியில் தனியார் துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதற்கு நாம் ஊக்குவிப்பு அளித்து வருகின்றோம். அத்துடன், தனியார் துறைக்கும் அரச சேவைகளுக்கும் இடையில் ஆரோக்கியமான பொருளாதார, சமூக உறவுகளை கட்டியெழுப்ப நாம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.

ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியென்ற ரீதியில் எமது மண்ணில் இருந்து பயங்கரவாதத்தை ஒழித்து மக்களைப் பாதுகாப்பதற்குரிய உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதைத் தவிர வேறு தேர்வு இல்லை. பயங்கரவாதத்தை தோற்கடிப்பதன் மூலம் எமது நாட்டிலுள்ள சமூகங்கள் பேச்சுவார்த்தையிலீடு படுவதற்கான வழிகள் திறந்து விடப்படும். இதனால், பயமோ அச்சுறுத்தலோ இல்லாமல் தமது துன்பங்களுக்கு நியாய பூர்வமான தீர்வை கண்டு கொள்வதற்கான பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க முடியும். இதன் மூலம் நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரஜையும் கௌரவத்துடன் வாழ்வதற்கான சமாதானம் ஏற்படும்.

யாழ். குடாவில் ஊர்காவல்படையை நிறுவ அமைச்சர் டக்ளஸ் திட்டம்

daglas.jpgயாழ்.  குடாநாட்டின் சட்டம், ஒழுங்கினைப் பேணும் முகமாகவும் பல்வேறு சமூக சிர்கேடுகள் மற்றும் பாதிப்புக்களை அகற்றும் முகமாகவும் ஊர்காவற் படையினை உருவாக்கும் திட்டம் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை எடுத்துள்ளார். யாழ். தேசவள விவசாயிகள் சம்மேளனப் பிரதிநிதிகள் உள்ளிட்ட யாழ். மாவட்ட விவசாய மக்களின் பிரதி நிதிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்தார்.

யாழ். குடாநாட்டில் கட்டாக்காலி கால்நடைகள் மற்றும் காட்டு விலங்குகளால் விவசாயச் செய்கைகள் பாதிக்கப்படுவதாக, மேற்படி விவசாய மக்களது பிரதிநிதிகள் முன்வைத்த கோரிக்கை தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கட்டாக்காலி கால்நடைகளை அவ்வப் பகுதிகளிலுள்ள கிராம சேவையாளர்கள் மூலம் பிடித்து, உரிமையாளர்களை இனங் கண்டு அவற்றைக் கையளிக்கும் வரையில் கால்நடைப் பண்ணை அமைத்து அவற்றைப் பராமரிப்பதென்றும், உரிமையாளர்கள் இனங்காணப்படாத கால்நடைகளை வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மக்களின் ஜீவனோபாயத்தைக் கருத்தில் கொண்டு சட்டரீதியாக அவர்களிடம் வளர்ப்பிற்காக ஒப்படைப்பதென்றும் தான் ஆலோசித்துள்ளதாகத் தெரிவித்தார்.

காட்டு விலங்குகளிலிருந்து பாதுகாப்புப் பெறுதல் மற்றும் ஏனைய சமூக சீர்கேடுகள் மற்றும் பாதிப்புகளை இல்லாதொழிப்பதற்காக யாழ். குடாநாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் நபர்களைத் தெரிவு செய்து அவ்வப் பகுதிகளுக்கு ஊர்காவற் படையை உருவாக்கி அதனை பொலிஸ் நிலையங்களுடன் இணைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.