22

22

பிரபாகரன் மலேஷியாவில்?

Pirabakaran_Vதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மலேஷியாவுக்குத் தப்பிச் சென்றுவிட்டார் என்று பரவியுள்ள தகவலைத் தொடர்ந்து, அவரைத் தேடும் பணியில் தீவிரமாக மலேஷிய போலீஸ் மற்றும் கமாண்டோ படை இறங்கியுள்ளனர் என சில செய்திகள் குறிப்பிடுகின்றன. வன்னிப் பகுதியில் பெரும் நிலப்பரப்பை சிங்கள ராணுவம் ஆக்கிரமித்துவிட்ட நிலையில் புலிகள் எந்தவித எதிர் தாக்குதலும் நடத்தாமல் உள்ளனர்.

இன்னும் சில கிலோ மீட்டர்கள் மட்டுமே புலிகளின் வசம் உள்ளதாம். இந்நிலையில், பிரபாகரன் மற்றும் முக்கிய தளபதிகள் அனைவரும் ஈழப்பகுதியிலிருந்து தப்பி மலேஷியா அல்லது தாய்லாந்துக்கு தப்பிச் சென்றுவிட்டிருக்கக் கூடும் என்று உளவு அமைப்புகள் தெரிவித்ததாக  தகவல்கள் குறிப்பிடுகின்றன. இந்தத் தகவல் வெளியானதும் மலேஷிய போலீஸ் மற்றும் ராணுவம் ஊஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

‘பிரபாகரன் மலேஷியாவுக்குள் நுழைய வாய்ப்பில்லை. ஆனால் நாங்கள் இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. எனவே நாடு முழுக்க தேடுதல் வேட்டையைத் தொடங்கிவிட்டோம்’ என அந்நாட்டின் காவல்துறை உயர் அதிகாரி மூசா ஹூஸைன் கூறியுள்ளார். ஆனால் இதுகுறித்து தாய்லாந்து அரசு எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.

‘பிரபாகரன் ஒருபோதும் ஈழத்தைவிட்டு வெளியேற மாட்டார். இது திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரம். உண்மை என்னவென்று நாளை தெரியும்’, என்று புலிகளுக்கு ஆதரவான அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன.—–

ஒபாமாவின் 2வது பதவிப்பிரமாணம்

us_obama-003.jpgசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் செய்த பிழையால், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மீண்டும் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். அமெரிக்க நேரப்படி புதன்கிழமை இரவு 7.35 மணிக்கு ஜான் வெள்ளை மாளிகையின் மேப் அறையில் பதவிப்பிரமாண நிகழ்ச்சி நடைபெற்றது.

செவ்வாய்க்கிழமை நடந்த பதவியேற்பு விழாவின்போது ‘faithfully’ என்ற வார்த்தை தவறான இடத்தில் உச்சரிக்கப்பட்டு விட்டதால், மறுபடியும் பதவிப்பிரமாணம் எடுத்த நிகழ்ச்சி நடந்துள்ளது. நீதிபதியின் இந்த பிழையால் ஒபாமாவின் அதிபர் பதவி சட்டப்பூர்வமானதா என்ற பிரச்சினை பின்னாளில் வந்து விடக் கூடாது என்பதற்காக இந்த 2வது பதவிப்பிரமாணம் நடந்துள்ளது.

ஆனால், உண்மையில், பதவிப்பிரமாணம் எடுக்காமலேயே அன்றைய தினம் ஒபாமா அதிபராகி விட்டார் (அமெரிக்க சட்டப்படி, பதவியேற்பு தினத்தன்று, பிற்பகல் 12 மணி முதல், அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் தானாகவே அதிபராகி விடுவார்) என்பது குறிப்பிடத்தக்கது.

ஒபாமாவின் 2வது பதவிப்பிரமாணம் குறித்து வெள்ளை மாளிகை வழக்கறிஞர் கிரேக் கிரேக் வெளியிட்ட அறிக்கையில், பதவி்ப்பிரமாண நிகழ்ச்சி எந்தவித பிரச்சினையும் இன்றி முடிந்தது. பொருத்தமான முறையில் அதிபர் ஒபாமா பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

அரசியல் சட்டத்திலேயே பதவிப்பிரமாணம் குறித்து தெளிவாக உள்ளது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், குழப்பம் ஏதும் இருக்கக் கூடாது என்பதற்காகவும் இந்த 2வது பதவிப்பிரமாண நிகழ்ச்சி நடைபெற்றது. 2வது முறை நடந்த பதவிப்பிரமாணத்தையும் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸே செய்து வைத்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிலாரி அமைச்சரானார்:

இதற்கிடையே, அமெரிக்க வெளியுறவு அமைச்சராகியுள்ளார் ஹில்லாரி கிளிண்டன். ஒபாமா அதிபராகி விட்டதைத் தொடர்ந்து அவரது அமைச்சரவையில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். வெளியுறவுத்துறை அமைச்சர் பதவிக்கு ஹில்லாரி கிளிண்டனின் பெயரை செனட் சபைக்கு முன்மொழிந்தனர். அதில், 94 – 2 என்ற வாக்குகள் அடிப்படையில்,ஹில்லாரியின் நியமனம் ஏற்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஹில்லாரி அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

அவரது கணவரும், முன்னாள் அதிபருமான பில் கிளிண்டன் கைகளில் பைபிளைப் பிடித்துக் கொள்ள அதன் மேல் கை வைத்தபடி ஹில்லாரி பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

”இறுதிவரை போராடி மீண்டெழுவோம் என்ற நம்பிக்கை எமக்குண்டு.” : பா. நடேசன்

nadesan.jpgஈழத்தின் தற்போதைய கள நிலவரம் தான் என்ன? அதை அறிந்து கொள்ள சில தொடர்பாளர்களை நாம் அணுகினோம். “நிலைமை மோசமாகத்தான் இருக்கிறது. இராணுவக் குண்டுவீச்சு அப்பாவி பொதுமக்களைத்தான் அதிகம் காவு கொள்கிறது. புலிகள் தரப்பில் இன்னும் பெரிய யுத்தம் தொடங்கப்படவில்லை. தற்கொலைப்படையான கரும்புலிகள் இன்னும் களமிறங்கவே இல்லை.
புலிகளின் முன்னணி தளபதிகளும் இன்னும் களமாட வரவில்லை. புலிகளின் முழுவேகத் தாக்குதல் தொடங்கும்போதுதான் என்ன நடக்கும் என்பது தெரியும். அதை இப்போதே கணிப்பது கடினமானது. இந்தக் கவலை இராணுவத்திற்கும் இருக்கிறது” என்றனர் அவர்கள்.

முல்லைத்தீவு தற்போது ஐம்பத்து ஏழாயிரம் இராணுவ வீரர்களின் முழு முற்றுகையில் இருக்கிறது. புலிகள் இப்போது முப்பது சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்குள் முடக்கப்பட்டு விட்டனர். புலிகளின் கதை விரைவில் முடியப் போகிறது” என்று கொக்கரித்திருக்கிறார் இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா.

நிலைமை இப்படியிருக்க `யானை குழியில் விழப்போனால் தவளை கூட உதை கொடுக்கும்’ என்ற பழமொழிக்கேற்ப, ஈழத்தில் ஒரு சிக்கலான போர்ச் சூழல் நிலவும் நிலையில், இங்கோ கருணாவை வைத்து நீண்ட பொய்ப்பிரசாரம் ஒன்றைக் கட்டவிழ்க்கும் முயற்சி நடக்கிறது” என்று குற்றம் சாட்டுகிறார்கள் தமிழின ஆர்வலர்கள்.

இந்தச் சூழ்நிலையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவரான பா.நடேசன் அவர்களை நாம் பேட்டி கண்டோம்.

இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் சிவசங்கர மேனன், இலங்கை அதிபர் ராஜபக்ஷ சந்திப்பால் போர் நிறுத்தம் ஏற்படும் என்று நினைக்கிறீர்களா? அல்லது என்ன வகையான மாற்றம் ஏற்படும் என்று கருதுகிறீர்கள்?

“கடந்த முப்பதாண்டு காலமாக எமது மக்களின் விடுதலைப் போராட்டத்தின்போது இந்திய இராஜதந்திரிகள் பலமுறை கொழும்புக்கு வந்து சென்றுள்ளனர். ஆனால் தமிழ் மக்களின் பிரச்னைகள், அவர்கள் எதிர்கொள்ளும் அழிவுகள் அதிகரித்துச் செல்கின்றனவேயொழிய குறைந்த பாடில்லை. இம்முறை சிவ்சங்கர் மேனன் வந்திருக்கும் இந்தக் காலகட்டத்தில் ஒருபோதும் இல்லாத அளவிற்கு எமது மக்கள் மீது கண்மூடித்தனமான விமானத் தாக்குதல்கள், ஷெல் தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. பலநூறு தமிழர்கள் காயமடைந்து வரும் நிலையில், இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வசிப்பிடங்களை விட்டு அகதிகளாக காட்டிலும், மேட்டிலும் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய மனித அவலத்தின் சின்னமாக தமிழீழ தேசம் காட்சியளிக்கிறது. சிவசங்கர மேனனின் வருகையின் போதோ அல்லது பின்னரோ எந்த மாற்றமும் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. இது எமக்கும் எம் மக்களுக்கும் மிகுந்த வேதனையளிக்கிறது.”

புலிகளின் உளவுப்பிரிவு தலைவரான பொட்டு அம்மான் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்ததாக ஒரு செய்தி பரவியதே. இது உண்மையா, வதந்தியா? புலிகள் மற்றும் உலகத் தமிழர்களின் மனதிடத்தைச் சீர்குலைக்க அப்படி ஒரு செய்தி பரப்பப்பட்டதா? அதன் பின்னணி என்ன?

“அது ஒரு பொய்யான வதந்திதான். எமது விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான சக்திகள் போராட்டத்தைக் களங்கப்படுத்தவும், கொச்சைப்படுத்தவும் இதுபோன்ற பரப்புரைகளை மேற்கொள்வது வழமை. எமது மக்களுக்கும் இது பழகிப்போன ஒன்று. இதனால் உலகத் தமிழினத்தின் மனதிடம் ஒருபோதும் குலையாது. மாறாக முழுத் தமிழினமும் எமக்காக ஒருமித்து ஓங்கிக் குரலெழுப்புகிறது”.

கருணா அவரது பேட்டியொன்றில், `இலங்கைத் தமிழர்களின் இந்த அழிவுக்குக் காரணமே பிரபாகரன்தான்’. நான் ஒருவன் மட்டும்தான் அவரிடம் பேச முடியும். தனிமனிதக் கொலைகளைத் தவிர்க்க வேண்டும் என்று நான் எவ்வளவோ கூறியும் பிரபாகரன் அதைக் கேட்காமல் சர்வாதிகாரியாக நடந்து கொண்டார்’ என்றெல்லாம் கூறியிருக்கிறாரே?

“கருணா சொல்வது அப்பட்டமான பொய். தலைவர் எம் எல்லோரையும் அடிக்கடி சந்தித்துக் கதைப்பவர். மற்றவர்களின் கருத்துகளுக்கு செவி மடுப்பவர். கருணா இயக்கத்தில் இருந்த காலகட்டத்தில் மட்டக்களப்பு பகுதியில் மக்கள்மீது வெறுக்கத்தக்க வன்முறை சார்ந்த செயல்களைச் செய்ததால் பலமுறை தலைவரால் கண்டிக்கப்பட்டவர் கருணா. அவரது கூற்று கேலிக்கிடமானது. தமிழ்மக்கள் ஒருபோதும் அதைப் பொருட்படுத்த மாட்டார்கள்”.

நான் எவ்வளவோ கூறியும் பிரபாகரன் கேட்காமல் யாழ்ப்பாண முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தி, நூறுகோடி ரூபாய் மதிப்பிலான முஸ்லிம்களின் சொத்துக்களைச் சூறையாடினார். புலிகள் இயக்கத்தில் உள்ள தளபதி பானு அந்தத் தாக்குதலை நடத்தினார். அதுபோல இந்திய அமைதிப் படை வெளியேறிய பின் இங்கிருந்த டி.என்.ஏ. எனப்படும் தமிழ்தேசிய இராணுவத்தைச் சேர்ந்த 1200 தமிழ் இளைஞர்களை பிரபாகரனின் உத்தரவின்பேரில் பதினெட்டு நாளில் நாங்கள் கொன்றோம். பல தமிழ்த் தலைவர்களின் கொலைகளுக்கு முழுக்காரணமும் பிரபாகரன்தான்’ என்று கருணா கூறியிருக்கிறாரே?

“யாழ்ப்பாண முஸ்லிம்கள் எமது சகோதரர்கள். எம்முடன் இரத்தமும் சதையுமாக வாழ்பவர்கள். எமது விடுதலைப் போராட்டத்துக்குக் களங்கம் ஏற்படுத்த நினைத்த சில தீயசக்திகள்தான் எமது இயக்கத்தின் பெயரைப் பயன்படுத்தி அம்மக்களை வெளியேற்றினர். எங்கள் தலைவர் அப்போது பாதுகாப்பு காரணங்களுக்காக தூர இடமொன்றில் இருந்தார். இந்தச் சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டதும் இந்தக் குற்றத்தைப் புரிந்தவர்கள் மீது பாரிய நடவடிக்கை எடுக்கக் கட்டளையிட்டார். இன்றும் அந்த மக்களை மீளவும் அவர்களது வாழ்விடத்தில் குடியேறுமாறு நாம் கூறிவருகிறோம். ஆனால் யாழ்ப்பாணம் மீண்டும் எங்கள் கட்டுப்பாட்டில் வந்தபிறகே அவர்கள் அங்கு வந்து எம் அரவணைப்பில் வாழ விரும்புவதாகக் கூறுகிறார்கள்.

தமிழ் தேசிய இராணுவத்தில் இருந்த இளைஞர்களையும், கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு எதிராகவும் கருணா எடுத்த நடவடிக்கைகள் பற்றி அங்குள்ள மக்களிடம் கேட்டால் தெரியும். கருணா அரசியல் ஞானமற்ற, பழமைக் கருத்துக்களில் ஊறிய எதையும் இராணுவவாதக் கண்ணோட்டத்துடன் அணுகக் கூடிய நபர். தற்போது அவர் அரசபடைகளின் ஒட்டுக்குழுவாகச் செயல்படுவதையும் இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அவரது சமூக விரோதச் செயல்களுக்காக எமது தலைமைப் பீடம் நடவடிக்கை எடுக்க முயன்றபோதுதான் அவர் தப்பியோடி அரசப்படைகளிடம் சரணடைந்தார். எந்தவித அரசியல் தெளிவோ, கொள்கைப் பற்றோ இல்லாத, தனது சுகபோகங்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்யும் ஒரு நபராகவே அவரை நாம் பார்க்கிறோம்.”

`பிரபாகரன் எந்தப் போர்க்களத்திற்கும் வந்ததே இல்லை. பிரபாகரன் ஒரு டம்மி ஆள் போலத்தான்’ என்கிறாரே கருணா? அப்படியா?

“இது அவரது கனவுலக கற்பனைவாத கட்டுக் கதையாகும். எமது தலைவரின் போர்த்திறமையை அரசப்படைகளிள் தளபதிகளே வாயாறப் புகழ்ந்திருக்கிறார்கள். இந்திய அமைதிப்படையின் தளபதிகளும் பாராட்டியிருக்கிறார்கள். கருணாவின் கூற்று சித்த சுவாதீனமற்றர்களின் பேச்சைப் போன்றதாகும்.”

`புலிகளின் ஆள்பலமே கிழக்குப் பகுதிதான். அதை நான் கலைத்து விட்டேன். நான் வெளியேறிய பிறகு புலிகளுக்கு எந்த வெற்றியும் கிடைக்கவில்லை’ என்று கருணா கூறியிருப்பது உண்மையா?

“தமிழ் மக்கள் முழுவதும் எம்முடன்தான் இருக்கிறார்கள். கருணா வெளியேறிய பிறகும் நாம் பல வெற்றிகளை அடைந்திருக்கிறோம். அவரது கூற்றைப் பெரிதுபடுத்த வேண்டாம்.”

`தமிழகத்தில் உள்ள தலைவர்கள் அனைவரும் புலிகளுக்காக ஆயுதம் கடத்தி பணம் பெறுபவர்கள்’ என்று கருணா கூறியிருப்பது பற்றி…..?

“ஏலவே நான் கூறியது போல கருணா அரசியல் விவேகமோ, ஞானமோ அற்றவர். எமது விடுதலைக்காக அன்று தொட்டு இன்றுவரை குரல் கொடுத்து வரும் எம் தொப்புள்கொடி உறவுகளான தமிழகத் தலைவர்கள் பற்றி இப்படிக் கருத்துக் கூறியிருப்பதில் இருந்தே கருணா எப்படிப்பட்டவர் என்பதைத் தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.”

`இலங்கையில் தமிழ்ப் பொதுமக்களைக் காப்பாற்ற போர்நிறுத்தம் அவசியம். மக்கள் நலனை பிரபாகரன் கருத்தில் கொள்பவர் என்றால் அவர் சரணடைய வேண்டும்’ என்றும் கருணா கூறியிருக்கிறாரே?

“தமிழக மக்களைக் கொன்றழித்து வரும் இராணுவத்தின் கருத்தும், கருணாவின் கருத்தும் இந்த விஷயத்தில் ஒரேமாதிரியாக இருக்கிறது. எமது மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை தாங்கும் எம் தலைவரைச் சரணடையுமாறு கோருவது கனவில்கூட நடக்கப் போவதில்லை. அரசின் கைக்கூலியான கருணாவின் இந்தக் கூற்றுபற்றி நாம் பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை.”

கருணாவிற்கு கிழக்கு இலங்கையில் ஆதரவு இருக்கிறதா? அங்குள்ள தமிழர்கள் அவரை வரவேற்கிறார்களா?

“மக்களால் முற்றுமுழுதாக வெறுத்து ஒதுக்கப்பட்டவர் கருணா. முன்பே நான் கூறியது போல மக்கள் விரோதச் செயல்களுக்காக எமது இயக்கம் கருணா மீது நடவடிக்கை எடுக்க முற்பட்ட போதுதான் அவர் தப்பியோடி அரசப்படைகளிடம் சரணடைந்துள்ளார்.”

முல்லைத்தீவில் நிலைமை இப்போது எப்படியிருக்கிறது? இராணுவ சுற்றிவளைப்புக்குள் புலிகள் சிக்கிவிட்டார்கள். போராளிகளின் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது’ என்கிறதே இராணுவத் தரப்பு. இதிலிருந்து எப்படி மீண்டெழப் போகிறீர்கள்?

“நாம் எவ்வித முற்றுகைக்குள் இருந்தாலும் எமது மக்களின் சுதந்திரமான சுபிட்சமான வாழ்விற்காக உலகத் தமிழினத்தின் ஆதரவோடு இறுதிவரை போராடி மீண்டெழுவோம் என்ற நம்பிக்கை எமக்குண்டு.”

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் திருமாவளவன் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார். ஒருசில கட்சிகளைத் தவிர மற்ற கட்சிகள், அமைப்புகள் அவருக்கு ஆதரவு தெரிவித்தன. தமிழக மக்களின் இந்த ஆதரவை அங்குள்ள தமிழர்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள்?

“தமிழக மக்களை இங்குள்ள மக்கள் தமது உடன்பிறப்புகளாகவே, தொப்புள்கொடி உறவுகளாகவே பார்க்கிறார்கள். தாயகத் தமிழகத்தையும், தமிழீழத்தையும் ஒரு சிறிய கடல் நீரேரியே பிரித்து நிற்கிறது. இது வரலாற்று ரீதியாக யாராலும் மறுக்க முடியாத உண்மை.”

இந்தியாவில் மைய அரசியலில் பெரிய கட்சியாக இருக்கும் பாரதிய ஜனதா `புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்’ என்றும் தமிழீழ மக்களுக்கு ஆதரவு என்றும் பேசி வருகிறதே? அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

“எமது விடுதலைப் போராட்டம் நீதியானது, நியாயமானது, தர்மத்தின்பாற்பட்டது என்ற உண்மையை அவர்கள் புரிந்துள்ளார்கள் என்பதாகவே பார்க்கிறேன்”.

மீண்டும் முதல் கேள்விக்குத் தொடர்பான இன்னொரு கேள்விக்கு வருகிறேன். இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் வருகை தவிர்க்கப்பட்டு அந்தத் துறையின் செயலாளர் இலங்கை வந்ததை ஏமாற்றமாக எடுத்துக் கொள்ளலாமா? அங்குள்ள தமிழர்கள் இதை எப்படிப் பார்க்கிறார்கள்?

“இங்குள்ள தமிழர்கள் இந்தியாவிலிருந்து கொழும்பிற்கு யார் வந்தாலும் ஒரே மாதிரியாகவே பார்க்கிறார்கள். இன்னும் விளக்கமாகச் சொல்வதானால் எவ்வளவு திறமை வாய்ந்த இராஜ தந்திரிகள் இங்கு வந்தாலும் அவர்களை சிங்கள இராஜ தந்திரிகள் ஏமாற்றி விடுவார்கள் என்ற கருத்துப்படவே பார்க்கிறார்கள்.”
 
நன்றி: குமுதம்

வைகோ – உண்ணாவிரதப் போராட்டம்

22-vaiko.jpgஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு செய்யும் துரோகத்தைக் கண்டித்தும், ராணுவ உதவிகளைத் தடுப்பதற்கும் பிப்ரவரி 12ம் தேதி நாடாளுமன்றம் கூடும் நாளில் டெல்லியில் நாடாளுமன்றம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக மதிமுக பொதுச் செயலாளர்  வைகோ கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

முல்லைத் தீவில் 6 லட்சம் ஈழத் தமிழர்கள், சிங்கள ராணுவத்தின் கோரத் தாக்குதலால் மரணத்தின் பிடியில் சிக்கி உள்ளனர். இடைவிடாத பீரங்கித் தாக்குதல் வேறு. இரவு பகலாக விமானக் குண்டு வீச்சு, அதிலும் உலக நாடுகள் தடை செய்துள்ள கொத்துக் குண்டுகளை வீசுகிறது. நேற்று மட்டும் 37 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றுள்ளனர். ஜனவரி 7ம் தேதி காஸா பகுதியில் ஒரு கட்டிடத்தின் மேல் இஸ்ரேல் குண்டு வீசியதில் 45 பேர் கொல்லப்பட்டபோது, உலக நாடுகள் அதற்கு எதிர்ப்பாக கடும் கண்டனத்தை தெரிவித்தன. ஆனால் 6 கோடித் தமிழ் மக்களாகிய நாம், 20 கல் தொலைவில் கடலுக்கு அப்பால் படுகொலைக்கு உள்ளாகும் ஈழத் தமிழர்களைக் காக்கக் கதியற்றுப் போனோம்.

தற்போது நடைபெறும் தமிழ் இன அழிப்பு யுத்தத்தை, இந்தியாவின் மத்திய அரசு கொடிய நோக்கத்தோடு திட்டமிட்டு ஊக்குவித்து உதவுகிற மன்னிக்க முடியாத துரோகத்தைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. உலகெங்கும் உள்ள தமிழர்களின் உள்ளங்கள் பதறுகின்றன. அங்கமெல்லாம் நடுங்குகிறது. ராஜபக்சே அரசு மூர்க்கத்தனமான இனக் கொலையில் ஈடுபட்டுள்ளது.

ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு செய்யும் துரோகத்தைக் கண்டித்தும், ராணுவ உதவிகளைத் தடுப்பதற்கும், ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள கொடுந்துயரத்தைப் போக்க அனைத்து மட்டங்களிலும் ஆதரவைத் திரட்டவும் பிப்ரவரி 12ம் தேதி இந்திய நாடாளுமன்றம் கூடும் நாளில் டெல்லியில் நாடாளுமன்றத்துக்கு அருகே மதிமுக சார்பில் என் தலைமையில் உண்ணாநிலை அறப்போர் நடைபெறும் என்று கூறியுள்ளார் வைகோ.

பொதுமக்களின் பாதுகாப்பு வலயமாக முல்லைத்தீவில் 35 ச.கி.மீ பிரதேசம் – துண்டுப் பிரசுரம் மூலம் மக்களுக்கு இராணுவம் அழைப்பு

safe-zone.jpgவிடுவிக்கப்படாத பிரதேசத்தில் தங்கியிருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பு பகுதிக்குள் வருவதற்கு ஏதுவாக முல்லைத்தீவு பகுதியில் சுமார் 35 சதுர கிலோமீற்றர் பகுதியை பாதுகாப்பு வலயமாக அரசு பிரகடனப்படுத்தியுள்ளது.

முல்லைத்தீவு தேவிபுரத்தை மையமாகக்கொண்டு ஏ 35 பாதையில் புதுக்குடியிருப்பு- பரந்தன் பாதையையும் உடையார்கட்டு சந்தி தொடக்கம் மஞ்சள் பாலம் வரையிலான பகுதியையும், இருட்டுமடு முதல் தேவிபுரம் வரையிலான பகுதியையும் உள்ளடக்கியதாக 35 சதுரகிலோமீற்றர் பகுதியை உடனடியாக அமுலுக்கு வரும் விதத்தில் அரசு பொதுமக்கள் தங்கும் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தியுள்ளது.

விடுவிக்கப்படாத பிரதேசத்தில் இருக்கும் பொதுமக்களின் பாதுகாப்புக்கும் இராணுவத்தினரே பொறுப்புக்கூற வேண்டியவர்களாக இருப்பதால் பாதுகாப்பு வலயத்தினுள் வருமாறு பொதுமக்களிடம் இராணுவத்தினர் கேட்டுக் கொள்கின்றனர். விடுவிக்கப்படாத பகுதிகளிலுள்ள மக்கள் பாதுகாப்பு பிரதேசத்துக்குள் வருமாறு வலியுறுத்தும் துண்டுப்பிரசுரங்கள் விமானம் மூலம் விடுவிக்கப்படாத பகுதியிலுள்ள மக்களுக்கு போடப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாயணக்கார தெரிவித்தார்.

இப் பாதுகாப்பு பிரதேசத்துக்குள் பிரவேசிப்பதற்குரிய பகுதிகளையும் இராணுவத்தின் துண்டுப்பிரசுரங்களில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

துண்டுப்பிரசுரங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள உள்நுழையும் பகுதிகள் வருமாறு:- வன்னிப் பிரதேசம் ஏ-35 புதுக்குடியிருப்பு, பரந்தன் பாதையில் உடையார்கட்டு சந்தி மற்றும் மஞ்சள் பாலம் வரையில் 4 கி.மீ தூரத்தில் உள்ள இருட்டுமடு மற்றும் பிரதேசம் (09 23 17.20 வ மற்றும் 080 36 25.70 கி) இருட்டுமடு கிழக்கில் இருந்து தேவிபுரம் வரையில் (09 23 17.40 மற்றும் 080 40 53.60 கி) பிரதேசம் உடனடியாக நடைமுறைக்கு கொண்டுவரும் நிமித்தம் பாதுகாப்பு வலயமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்றும் மஞ்சள் பாலம் (09 20 21.80 வ மற்றும் 080 39 15.20 கி) பிரதேச ஏ-35 பிரதான பாதை எல்லையாகும்.

வவுனியாவில் நான்கு ஏக்கரில் 3 தற்காலிக பாடசாலைகள்
 
கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளிலிருந்து வவுனியா அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் வரும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கென சுமார் 4 ஏக்கர் நிலப் பரப்பில் மூன்று தற்காலிக பாடசாலைகள் கட்டப்படவுள்ளன. வவுனியா மெனிக் பாம் பகுதியில் தலா 150 ஏக்கர் நிலப்பரப்பில் மூன்று முகாம்கள் அமைக்கப்படவுள்ளன. இம்முகாமில் தங்கவைக்கப்படும் பொதுமக்களின் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைக்காகவே மூன்று பாடசாலைகள் அமைக்கப்படுவதாக வவுனியா வலய கல்விப் பணிப்பாளர் திருமதி வீ. ஆர். ஏ. ஒஸ்வல்ட் தெரிவித்தார்.

அரச கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளவர்களுள் சுமார் 200 ஆசிரியர்களையும் மேற்படி பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைக்காக இணைத்துக் கொள்வதற்கான நியமனக்கடிதங்களும் கையளிக்கப்படவுள்ளன. வன்னியில் சுமார் 55,000 மாணவர்களும் 2500 ஆசிரிய ர்களும் உள்ளதாகவும் இவர்கள் அனைவரும் வவுனியா அரச கட்டுப்பாட்டுக்குள் வரும் பட்சத்தில் மேற்படி பாடசாலைகளிலேயே அனுமதிக்கப்படுவர் என்றும் அவர் தெரிவித்தார்.

மேற்படி மாணவர்களுக்குத் தேவையான பாடசாலை சீருடைகள் நேற்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நிமல் பண்டார வவுனியா வலய கல்விப் பணிப்பாளரிடம் தெரிவித்துள்ளதுடன் தேவையான பாடநூல்கள் அப்பியாசப் புத்தகங்கள், பாடசாலை உபகரணங்கள் அனைத்துமே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மெனிக்பாம் பகுதியில் முல்லைத்தீவு, கிளிநொச்சி மக்களை தற்காலிகமாக குடியமர்த்தும் பகுதிகளிலேயே மேற்படி பாடசாலைகளும் அமைக்கப்படுகின்றன. கல்வி அமைச்சு இவர்களுக்கான சகல நிதி உதவிகளையும் வழங்கி வருவதாக அமைச்சின் செயலாளர் நிமல் பண்டார தெரிவித்தார்.

க.பொ.த (சா/த) பரீட்சை: வன்னி மாணவர்களுக்கென வவுனியாவில் பரீட்சை நிலையம்

க. பொ. த. சாதாரண தர புதிய பாடத் திட்டத்திற்கமைவான கணிதப் பாட இரண்டாம் பகுதி பரீட்சைக்குத் தோற்றும் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மாணவர்களுக்காக இரண்டு பரீட்சை நிலையங்கள் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ளன.

வவுனியா செட்டிக்குளம் மற்றும் நெலுக்குளம் பகுதியில் இரண்டு பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் சுமார் 1000 மாணவர்களுக்குரிய வினாத்தாள்கள், பரீட்சை அனுமதி அட்டைகளும் ஆயத்தநிலையில் வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா கல்வி வலய பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்தது.

வன்னியில் இப்பரீட்சை நடைபெறாது என்பதால் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வரும் மாணவர்களுக்கு பரீட்சைகளை நடத்த கல்வி அமைச்சு பணிப்புரை வழங்கியுள்ளது. இதற்கமைய வலயப் பணிப்பாளர் திருமதி வீ. ஆர். ஏ. ஒஸ்வல்ட் ஏற்பாடுகளை செய்துள்ளார்.

வன்னியிலிருந்து வெளியேறியோருக்காக இராமநாதன், அருணாசலம், கதிர்காமர் பெயரில் குடியேற்றக் கிராமங்கள் – அரசாங்கம் அறிவிப்பு

வன்னியிலிருந்து வெளியேறி இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துள்ள தமிழ் மக்களுக்காக மூன்று குடியேற்றக் கிராமங்களை உடனடியாக அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மெனிக் பார்ம், மெனிக் பார்ம் 2, ஓமந்தை ஆகிய பகுதிகளில் இதற்காக 750 ஏக்கர் நிலப் பரப்பு கொண்ட காணி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வருட இறுதிக்குள் சகல வசதிகளையும் கொண்ட இந்த மூன்று இடங்களிலும் வீடமைப்புத் திட்டங்களை ஏற்படுத்தி அங்கு அகதி முகாம்களில் தங்கியிருக்கும் அனைவரையும் குடியமர்த்தத் திட்டமிட்டிருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் இப்பகுதியில் அகதி முகாம்கள், இடைத்தங்கல் முகாம்கள் அனைத்தையும் மூடி விட அரசு தீர்மானித்துள்ளது. மெனிக்பார்மில் 150 ஏக்கரும் மெனிக் பார்ம் 2 இல் 450 ஏக்கரும் ஓமந்தையில் 150 ஏக்கரும் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு உட்பட முழு வன்னிப் பிரதேசமும் விடுதலைப்புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட போதிலும் அங்கு சொந்த இடங்களுக்கு தமிழ் மக்கள் திரும்பிச் செல்ல கணிசமான காலமெடுக்கும் என்பதால் குறிப்பிட்ட காலத்துக்கு அந்த மக்களை இந்த குடியேற்றக் கிராமங்களில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இக் குடியேற்றக் கிராமங்களுக்கு மறைந்த தமிழ்த் தலைவர்களின் பெயர்களே சூட்டப்படவிருக்கின்றன. பொன்.இராமநாதன் விடுதலைபுரம், பொன்.அருணாசலம் விடுதலைபுரம், கதிர்காமர் எழுச்சி நகர் எனப் பெயரிடப்பட்டுள்ளன. இங்கு குடியமர்த்தப்படுவோருக்கு சகல வசதிகளும் பெற்றுக் கொடுக்கப்படும். சமைத்த உணவு, உலர் உணவுகள், விளையாட்டு வசதி, தொலைபேசி வசதி, தொலைக்காட்சி, வானொலி என்பனவும் வழங்கப்படவுள்ளன. அத்துடன் அவர்களுக்கு தொழில் வாய்ப்புகள் உறுதி செய்யப்படும் வரை ஒவ்வொருவருக்கும் நாளாந்தம் நூறு ரூபா கைச்செலவுக்காக வழங்கவும் அரசு தீர்மானித்துள்ளது. சுமார் 30 ஆயிரம் பேருக்கு முதற் கட்டமாக இந்த வசதிகள் பெற்றுக் கொடுக்கப்படும். இம்மாத இறுதியில் இதன் ஆரம்பக் கட்டப் பணிகள் தொடக்கி வைக்கப்படும். இத்திட்டத்துக்கான சகல பொறுப்புகளும் ஜனாதிபதியின் ஆலோசகரும், பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவின் மேற்பார்வையில் இடம்பெறுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை

sl-parlimant.jpgஅரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய தேசியக்கட்சியினால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை, செயலிழந்துள்ளதாக சபாநாயகர் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.  ஐக்கியதேசியகட்சியின் முன்வைத்த நம்பிக்கையில்லாப்பிரேரணையை தாம் விவாதத்திற்கு எடுத்துக்கொண்ட வேளையில், ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் இருக்கவில்லை என சபாநாயகர் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்ற நீதிமுறைகளையும் பொதுநலவாய நாடுகளின் சட்டமுறைகளையும் கருத்திற்கொண்டு இந்த தீர்மானத்தை தாம் மேற்கொண்டதாக தெரிவித்தார்.

எனினும் தேவையேற்படின் ஐக்கிய தேசியக்கட்சி, அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேணையை மீண்டும் முன்வைக்கலாம் என அவர் தெரிவித்தார். இதன் போது தமது இருக்கையில் இருந்து எழுந்த எதிர்க்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இன்றைய(21) தினத்திற்குள் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப்பிரேரணையை முன்வைக்க தமது கட்சி நடவடிக்கை எடுப்பதாக அறிவித்தார்.

இதன் படி அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஐ.தே.கட்சி நேற்று நாடாளுமன்ற செயலாளர் நாயகம் டம்மிக்கே கித்துல்கொடவிடம் கையளித்தது. இந்தப் பிரேரணையில் எம்.பிக்கள் ஜோசப் மைக்கல் பெரேரா, அகிலவிராஜ் காரியவசம், ரவி கருணாநாயக்க, ஆர்.குணசேகர, ஜயலத் ஜயவர்த்தன ஆகியோர் கையெழுத்திட்டனர்.

தமிழ் மக்களின் பேரவலங்கள் தொடர்பில் பார்வையிடுவதற்கு சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இரா. சம்பந்தன்

sampthan.jpgவன்னியில் உள்ள தமிழ் மக்கள் அனுபவிக்கும் பேரவலங்களை நேரில் சென்று பார்ப்பதற்காக சுயாதீனக்குழுவொன்றை அங்கு அனுப்புமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது. நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனே இந்த வேண்டுகோளை விடுத்தார்.அவர் தொடர்ந்து கூறியவை வருமாறு :-

வன்னியில் தொடரும் யுத்தம் காரணமாக சுமார் 4 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் அனைவரும் பட்டினியுடன் மரநிழல்களின் கீழ் வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.யுத்தம் ஒன்று இடம்பெறும்போது மக்கள் இடம்பெயர்வது மக்களின் விருப்பம். ஆனால், அவர்களைப் பலவந்தமாக வெளியேற்ற முடியாது. ஆனால், இப்போது நடப்பது என்ன? வன்னி மக்களின் வீடுகள் மீது குண்டுகள் போடப்படுகின்றன. அவர்களின் வீடுகள் அழிக்கப்படுகின்றன. இதன் காரணமாகவே மக்கள் வீடுகளை இழந்து இடம்பெயர்கின்றனர்.

தமிழ் மக்களை இந்த அரசு கால்களின் கீழ் போட்டு நசுக்குகின்றது. தமிழர்களை இந்த அரசு கண்ணியப்படுத்தவேயில்லை. இந்த நாட்டில் உள்ள அனைத்து இன மக்களும் சமமானவர்கள். அவர்கள் சுதந்திரமாக சந்தோசமான வாழ்வை அனுபவிக்க இடம் வழங்கப்பட வேண்டும். ஆனால், இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு அப்படியானதொரு சுதந்திர வாழ்வை வழங்கவில்லை. அடக்குமுறைகள்தான் அவர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளன. இந்த அரசு பெரியவர்களை மாத்திரமன்றி சிறிய குழந்தைகளைக்கூட கொன்றொழிக்கின்றது.  காயப்படும் மக்களுக்கு மருத்துவ வசதிகள்கூட வழங்கப்படுவதில்லை. இதைத்தான் தமிழர்களின் விடுதலை என்று அரசு சொல்கிறது.

தமிழர்களின் உரிமைகள் முற்றாக மறுக்கப்படுகின்றன. அவர்கள் மதிக்கப்படுவதேயில்லை. இதுவொரு பாரிய இனச் சுத்திகரிப்பு நடவடிக்கை. இந்த நிலைமை மோசமாவதற்கு ஜே.வி.பியும் ஒரு காரணம். ஆழிப்பேரலை பொதுக்கட்டமைப்பு மற்றும் போர் நிறுத்த உடன்படிக்கை போன்றவற்றை ஜே.வி.பியினர் எதிர்த்தனர். அந்த எதிர்ப்புகள்தான் இந்த நிலைமைக்குக் காரணம். தற்போதைய யுத்தத்தின் உண்மை நிலையை அறியும் உரிமை அனைவருக்கும் உண்டு. ஆனால், அந்த உரிமையை அரசு தடுத்து வருகிறது. இதனால், உண்மைகள் வெளிவராமல் போகின்றன.

காசாவில் யுத்தம் நடைபெறும் பகுதிகளுக்குள் ஊடகவியலாளர்கள் சென்று வருகின்றனர். அங்கு ஊடகவியலாளர்கள் செல்வதை யாரும் தடுக்கவில்லை. தாக்குதல்கள், இழப்புகள் தொடர்பான தகவல்கள் உடனுக்குடன் வெளிவந்தன. இங்கு அந்த நிலைமை இல்லை. அங்கு செல்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்குவதில்லை. இதனை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. தமிழ் மக்களின் பிரச்சினைகள் பத்திரிகைகள் மூலம் பேசப்பட்டாலும் வன்னிப் பகுதியை தனிமைப்படுத்திவிட்டு அரசாங்கத்தினால் முன் செல்ல முடியாது. இவ்விடயத்தில் சர்வதேசத்தை தலையிடுமாறு வேண்டுகின்றோம்.  வன்னியில் உள்ள மக்களின் நிலைமையை இப்போது எம்மால் தெளிவாக அறிய முடியாதுள்ளது. அங்கு அரசசார்பற்ற நிறுவனங்களும் இல்லை. இந்த நிலையில் சர்வதேச சமூகத்தின் சுயாதீன குழுவொன்று அங்கு செல்வது மிக அவசியம் – என்றார்.

காணாமற்போனோர், கைது செய்யப்பட்டோர் தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ்

daglas.jpgஅரசியல் காரணங்களுக்காக காணாமற் போனவர்கள் மற்றும் கைது செய்யப்பட்டு இதுவரையில் விடுதலை செய்யப்படாதவர்கள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடி, ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் வட மாகாணத் திற்கான விசேட செயலணியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கொழும்பிலும், யாழ். குடாநாட்டிலும் அரசியல் காரணங்களுக்காகக் காணாமற் போனவர்கள் மற்றும் கைது செய்யப்பட்டவர்களது உறவினர்கள் பலர் தன்னைச் சந்தித்தும் கடிதங்கள் மற்றும் தொலைபேசி வாயிலாகவும் பல முறைப்பாடுகளை முன்வைத்து வருகின்றனர் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.  அரசியல் காரணங்களுக்காக காணாமற்போனவர்கள் மற்றும் கைது செய்யப்பட்டோர் தொடர்பில் வெறுமனே அறிக்கைகளையும் பட்டியல்களையும் வெளியிட்டு குறுகிய சுயலாபம் கருதிய அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதால் எவருக்கும் எவ்விதப்பயனும் கிட்டப்போவதில்லை எனவே அரசியல் காரணங்களுக்காக காணாமற் போனோர் மற்றும் கைது செய்யப்பட்டோர் தொடர்பில் விரைவில் ஜனாதிபதியை சந்தித்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசியல் காரணங்களுக்காக காணாமற் போனவர்கள் மற்றும் கைது செய்யப்பட்டவர்களது குடும்பங்கள் பல பொருளாதார ரீதியில் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதை நான் நன்கு உணர்ந்து வருகிறேன்.  இக் குடும்பங்கள் பொருளாதார ரீதியில் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதை நன்கு உணர்ந்து வருவதால் இக்குடும்பங்களுக்கு பொருளாதார ரீதியில் உதவும் திட்டம் குறித்தும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி, விசேட அமைச்சரவைப் பத்திரம் மூலம் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவிருப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

முல்லைத்தீவு வான்பரப்பில் மர்ம விமானம்

air.jpgமுல்லைத்தீவு வான்பரப்பில் நேற்று முன்நாள் செவ்வாய்கிழமை இரவு 8:30 மணியளவில் அடையாளம் தெரியாத விமானமொன்று உட்பிரவேசித்து சென்றதனால் குழப்பங்கள் தோன்றியுள்ளன. பாக்கு நீரிணைக்கு மேலாக வந்த இந்த விமானம் மீண்டும் அதே பாதையினால் திரும்பி சென்றுள்ளதாகக் கூறப்படுகின்றது. இது தொடர்பான செய்திகள் இன்றைய இலங்கை சிங்கள, ஆங்கில நாளேடுகளில் பிரதான இடத்தைப் பெற்றுள்ளன.

இந்த மர்ம விமானம் மிகவும் உயரமாக பறந்ததாகவும், கடற்படையினர் விமானத்தை நோக்கி தாக்குதல்களை மேற்கொண்ட போதும் அது வெற்றியளிக்கவில்லை எனவும் வான்படை பேச்சாளர் விங் கொமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு வான்பரப்பில் பிரவேசித்த இவ்விமானம் பிரபாகரனை அழைத்துச் செல்வதற்காக வந்திருக்கலாம் என ஆரம்பத்தில் சந்தேகங்கள் எழுந்தன. எனினும், விமானம் மீண்டும் திரும்பி செல்வதற்கு முன்னர் முல்லைத்தீவு பகுதியில் தரையிறங்கியதா என்பது தொடர்பில் எதுவும் தெரியாதபோதும், அதிக உயரத்தில் பறந்த விமானம் தரையிறங்குவது சாத்தியமற்றது என வான்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதேநேரம், இந்த விமானம் இந்தியாவின் உளவுப் படைக்குச் சொந்தமான விமானமாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகின்றது. ஏற்கனவே கிளிநொச்சி கைப்பற்றப்பட்ட நேரத்தில்கூட  இந்திய உளவு அமைப்பான றோ வின் விமானமொன்று வன்னிப் பகுதியை கண்காணித்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த விமானம் மிகவும் பிரகாசமான வெளிச்சங்களை கொண்டிருந்ததை கடற்படையினரும் வான்படையினரும் அவதானித்ததாகவும் அது திரும்பிச் செல்லும்போது வெளிச்சங்களின்றி சென்றதாகவும் மேலும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

2006 ஜனவரி முதலாந் திகதி முதல் ஒன்பது ஊடகவியலாளர்கள் கொலை: 27 பேர் தாக்குதல் – அமைச்சர் தினேஷ் குணவர்தன

denees.jpg
ஊடகவியலாளர்கள் ஒன்பது பேர் கடந்த 2006 ஜனவரி முதலாந் திகதி முதல் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் பிரதம கொறடா அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அந்தத் திகதி முதல் இற்றைவரை 27 ஊடகவியலாளர்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதோடு, ஐவர் கடத்தப்பட்டுள்ளதாகவும் கூறிய அமைச்சர், இதில் நால்வர் மீட்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

ஐ. தே. க. உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய வாய்மூல விடைக்கான கேள்வியொன்றுக்குப் பதில் அளித்த அமைச்சர் குணவர்தன ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்ட, தாக்குதலுக்கு உள்ளான சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகக் கூறினார்.

சம்பவங்கள் இடம்பெற்ற பொலிஸ் நிலையங்கள் மற்றும் குற்றப் புலனாய்வுப் பணியகம் என்பவற்றில் விசாரணைகள் இடம் பெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.