காலஞ்சென்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை பத்மநாதனின் பூதவுடல் தற்போது காரைதீவு இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலய மண்டபத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை தமிழ்நாடு மதுரையில் காலமான அன்னாரின் பூதவுடல் நேற்று முன்தினமிரவு கொழும்புக்குக் கொண்டு வரப்பட்டு நேற்று மாலை வரை பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து நேரடியாக அவரது சொந்தக் கிராமமான காரைதீவிலுள்ள அவரது இல்லத்திற்கு நேற்று நள்ளிரவு எடுத்துவரப்பட்டது.
இன்று காலை 8.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை இராமகிருஷ்ணமிஷன் வித்தியாலய மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள பூதவுடல், பின்னர் அங்கிருந்து தம்பிலுவில் இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு நாளை திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணி வரை மக்கள் அஞ்சலிக்காக பூதவுடல் வைக்கப்படும். அன்றைய தினம் மாலை தம்பிலுவில் பொது மயானத்தில் தகனக் கிரியைகள் நடைபெறும்.