ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.
2 வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. கடந்த மாதம் 18 ந் தேதி தொடங்கிய இந்த போட்டியில் 8 அணிகள் கலந்து கொண்டன. லீக் ஆட்டங்கள் முடிவில் டெல்லி டேர்டெவில்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன.
முதல் அரை இறுதியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. நேற்று நடந்த 2 வது அரை இறுதி ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டி ஜோகனஸ்பர்க்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணிக்கு தொடங்கி நடக்கிறது. இதில் கில்கிறிஸ்ட் தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணியும், கும்பிளே தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.
கடந்த ஆண்டு நடந்த முதலாவது ஐ.பி.எல். போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி கடைசி இடமும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 7 வது இடமும் பிடித்தது குறிப்பிடத்தக்கது.