வன்னியில், போரின் மத்தியிலும் கடைசி வரை பணிபுரிந்த அரச டாக்டர்கள் மூவரையும் சந்தித்துப்பேசி அவர்களின் நிலைமையை செஞ்சிலுவைச் சர்வதேசக்குழு (ஐ.சி.ஆர்.சி.)அதிகாரிகள் கேட்டறிந்தனர். அவர்களைச் சந்திப்பதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்கியதாக செஞ்சிலுவைக்குழுவின் பேச்சாளர் சரசி விஜேரத்னா தெரிவித்தார்.
ஐ.சி.ஆர்.சி. வியாழக்கிழமை மூன்று டாக்டர்களையும் நேரில் கண்டு அவர்களுடன் தனிப்பட்ட முறையில் பேசியது என்று கூறிய அவர் வேறு விவரம் எதனையும் தெரிவிக்கவில்லை. இதேவேளை அவர்களில் ஒருவர் காயமடைந்த நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று மற்றொரு தகவல் தெரிவித்தது.
கடந்த 16 ஆம் திகதி சனிக்கிழமைக்குப் பின்னர் அவர்கள் தொடர்பாக முதற் கிடைத்த தகவல் இது. அவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலைமை தொடர்பாக கருத்துக் கூறுவது செஞ்சிலுவைச் சர்வதேச குழுவின் கொள்கையல்ல என்று ஐ. சி. ஆர்.சியின் மற்றொரு அதிகாரி தெரிவித்தார். முல்லைத்தீவு, மக்கள் பாதுகாப்பு வல யத்தில் இருந்து கடந்த 16 ஆம் திகதி வெளியேறிய பின்னர் டாக்டர் தி.சத்திய மூர்த்தி, து.வரதராஜா, எஸ்.சண்முகராஜா ஆகியோர் காணாமல் போயுள்ளனர் என தகவல்கள் வெளிவந்தமை தெரிந்ததே.