2009

2009

27, 28ம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு

images-elc.jpgஊவா மாகாண சபை, யாழ்ப்பாணம் மாநகரசபை, வவுனியா நகர சபை என்பனவற்றுக்கான தபால்மூல வாக்களிப்பு எதிர்வரும் 27, 28ம் திகதிகளில் நடைபெறும் என தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த மூன்று தேர்தல்களுக்கும் தபால் மூலம் வாக்களிக்கவென 33,000 ஆயிரம் விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன என மாவட்ட தேர்தல் அலுவலகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விண்ணப்பங்களில் தபால்மூலம் வாக்களிக்க தகுதிபெற்றவர்களை தெரிவு செய்ய வேண்டிய நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றது.

“13 வது திருத்தச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட மாகாண சபையின் அமைச்சர் அதனையே எதிர்ப்பது கேலிக் கூத்தான செயல்’

13 வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல் செய்தால் அரசாங்கத்தில் இருந்து விலகப் போவதாக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஜாதிக ஹெல உறுமய எச்சரித்திருப்பது ஒரு கேலிக்குரிய விடயமே என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான கலாநிதி ந.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்;

அரசியலமைப்பின் 13 வது திருத்தச் சட்டத்தினால் உருவாக்கப்பட்ட மேல் மாகாணசபையில் அமைச்சராக இருந்துவருகின்ற உதய கம்மன்பில 13 வது திருத்தச் சட்ட அதிகாரங்களைக் கொண்டே அவரது அமைச்சுப் பணிகளை அமுல் செய்துவருகின்ற போது அதனை எதிர்த்து அரசில் இருந்து வெளியேறுவதாக கூறுவது கேலிக்கூத்தான செயல்.

மாகாணசபையில் எம்முடன் இருந்து வருகின்ற இனிய நண்பரான உதய கம்மன்பில தனது அரசியல் நாடகத்துக்காக இவ்வாறான அறிக்கைகளை இடையிடையே வெளியிட்டு அரசியல் நடத்திவருவது வழக்கமாகிவிட்டது. அரசாங்கத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் ஜாதிக ஹெல உறுமய இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்வைப்பேன் எனக்கூறும் இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக சவால்விடுவது எவ்வகையில் பொருத்தமானதாகும்.

வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் அன்று 13 வது திருத்தத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதாலும் மாகாண அதிகாரங்களையும் அமுல்படுத்த முடியாததாலும் அன்றைய வடக்கு,கிழக்கு மாகாண முதலமைச்சர் அ.வரதராஜப் பெருமாள் இந்தியாவுக்கு ஓடினார் என்பதை உதய கம்மன்பில்ல, அறிந்திருப்பார். அமைச்சர் சம்பிக்க ரணவக்க அன்று ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் அரசு வெளியிட்ட அதிகாரப் பரவலாக்கல் தொடர்பான ஜனநாயக மக்கள் கூட்டணி விஞ்ஞாபனத்தில் கையெழுத்திட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வன்னிச் சிறுவர்களின் கல்வி அபிவிருத்திக்கு 1,058 மில்லியன் ரூபா செலவில் திட்டம்

visvawarnapala.jpgயுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள வடபகுதிச் சிறுவர்களின் கல்வியை மேம்படுத்த 1,058 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் பேராசிரியர் விஸ்வவர்ணபால தெரிவித்தார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு கல்வியைக் கைவிட்ட பிள்ளைகளின் விபரங்கள் தற்போது திரட்டப்பட்டு வருகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.

இவ் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் உயர்தர மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் முகமாக உயர்கல்வி பயிற்சிகள் ஆரம்பிப்பதற்காக யாழ்ப்பாணம், வவுனியா பல்கலைக்கழகங்களுக்கு 23 மில்லியன் ரூபா செலவில் பிரிவும் அமைக்கப்படவுள்ளது.

யாழ்.பல்கலைக்கழகத்தில் வைத்தியப் பிரிவு ஒன்றும் விடுதி ஒன்றும் அமைக்க 90 மில்லியன் ரூபாவும் தொழில்நுட்பக் கல்விப்பிரிவும், கல்வி நிர்வாகப் பிரிவுக் கட்டிடமும் அமைக்க 609 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

உயர்கல்விப் பாடத்திட்டங்களை மேம்படுத்தவும், புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தவும் 30 மில்லியன் ரூபாவும் யாழ்.உயர்தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தை அபிவிருத்தி செய்ய 14.15 மில்லியன் ரூபாவும், வவுனியாவில் உயர்தொழில்நுட்ப நிலையம் அமைக்க 65 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

2011 ஆம் ஆண்டில் இவ் அபிவிருத்தித் திட்டம் நிறைவுபெறும் எனவும் இத்திட்டத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி ஆகியன நிதியுதவி வழங்கியுள்ளன எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

பிரிட்டிஷ் தூதரக அதிகாரிகள் மீது வழக்கு தொடர இரான் எண்ணம்

iran-br.gifஇரானின் அதிபர் தேர்தலுக்குப் பின்னர் நடந்த போராட்டங்களில் பங்கேற்றார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், தெஹ்ரானில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தின் சில பணியாளர்கள் மீது வழக்கு விசாரணை நடத்தப்படும் என்று இரானின் அதிசக்தி மிக்க தேச பாதுகாவலர் சபையின் தலைவர் அயதுல்லா அகமது ஜன்னதி கூறியுள்ளார்.

தடுத்துவைக்கப்பட்ட அந்த இரானிய பிரஜைகள் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளதாக, வெள்ளிக்கிழமை தொழுகையின் பின்னர் உரையாற்றியபோது அயதுல்லா ஜன்னதி கூறியுள்ளார்.

அயதுல்லாவின் இந்த கருத்து குறித்து தாம் அவசர விளக்கம் கேட்டிருப்பதாக பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் கூறியுள்ளார். பிரிட்டிஷ் தூதரக பணியாளர்களில் 7 பேர் விடுவிக்கப்பட்டதை அடுத்து இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேலும் இருவர் குறித்து தாம் மிகுந்த கவலை அடைந்துள்ளதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.

யாழ்நகரில் கலைஞர்களை கௌரவிக்க ஏற்பாடு

jaffna.jpgயாழ்ப் பாணம் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட நாடகத் தயாரிப்பாளர்கள் , அண்ணாவிமார்கள் மற்றும் பல்துறை சார்ந்த கலைஞர்கள் அனைவரும் யாழ்.பிரதேச செயலகத்தால் நடத்தப்படவிருக்கும் கலாசார விழாவில் கௌரவிக்கப்படவுள்ளனர்.
இதனால், இந்தப் பிரதேச செயலர் பிரிவிற்குள் இருக்கின்ற மேற்படி கலைஞர்கள் தங்கள் விபரங்கள் அடங்கிய விண்ணப்பப்படிவத்தை பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தருக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மூத்த கலைஞர்கள் எவராவது இதுபற்றி அறியாதிருப்பார்களாயின் அவர்கள் தொடர்பான விபரங்களை அறிந்தோர் அந்த விபரங்களைக் கலாசாரப் பேரவைக்கு அனுப்பிவைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

தோட்ட தொழிலாளர் சம்பள அதிகரிப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவு

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நேற்று கொழும்பில் நடந்தது. முதலாளிமார் சம்மேளன கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

சம்பள கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக நேற்று நடை பெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் முறுகல் நிலை தோன்றியதையடுத்து முடிவுகள் எடுக்கப்படாமல் கூட்டம் கலைந்தது.

இதையடுத்து இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட இ.தொ.கா, இ.தே.தோ.தொ. சங்கம், பெருந்தோட்ட தொழிற்சங்கக் கூட்டமைப்பு என்பன இது தொடர்பாக தத்தமது தொழிற்சங்கங்களோடு கலந்தாலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு எடுப்பது எனவும், ஒரு பொது கூட்டு நடவடிக்கையை மேற்கொள்வது எனவும் தீர்மானித்துள்ளன.

இத்தகவலை இ.தொ.கா. வெளியிட்டுள்ளது.

நேற்றைய பேச்சுவார்த்தையின் போது இன்றைய வாழ்க்கை சுமைக்கு ஏற்ப குறைந்த பட்சம் 500 ரூபா சம்ள உயர்வு தோட்டத் தொழிலாளர்க்கு வழங்கப்பட வேண்டும் என தொழிற்சங்கங்கள் கூட்டாக வலியுறுத்தின. இது தொடர்பான கருத்து பரிமாற்றத்தின் போது முதலாளிமார் சம்மேளனம் வருடத்திற்கு 12%  சம்பள அதிகரிப்பு வழங்க முன்வந்தது. இதனை முழுமையாக நிராகரித்த கூட்டு ஒப்பந்தம் சார்ந்த கைத்தொழிற் சங்கங்கள் மேல் நடவடிக்கைகளுக்காக பேச்சுவார்த்தையை முடித்துக் கொண்டன.

தமிழ் இளைஞரின் ஆயுதப் போராட்டத்துக்கான அடிப்படை காரணத்தை கண்டறிந்து தீர்வு வழங்குவது அவசியம்

youth.jpgதமிழ் இளைஞர்கள் ஏன் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தார்கள் என்பதற்கான காரணத்தை கண்டறிந்து அதற்கான தீர்வுத் திட்டத்தை முன்வைப்பதே அரசு தற்போது செய்ய வேண்டிய முக்கிய பணியென இலங்கைக்கான ஐ.நா. அபிவிருத்தித் திட்ட நிறுவனத்தின் (யூ.என்.டி.பி.) உதவிப் பணிப்பாளர் டி.எஸ். ரட்னாநாயக்க தெரிவித்தார்.

பசறை பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் “பதுளை எதிர்காலம் எமது கரங்களில்’ அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மொழிக் கொள்கை மொழி உரிமை எனும் தலைப்பிலான ஒருநாள் செயலமர்வு அமைப்பின் பணிப்பாளர் பிரபாத்குமார, உதவி பிரதேச செயலாளர் சாமர ஜெயசிங்க ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் அவர் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது;

கடந்த 1956 ஆம் ஆண்டு வரை தமிழ் மக்கள் தனி ஈழமோ தனி நாடோ கேட்கவில்லை. ஆட்சியில் சிங்கள மக்களுக்கு இருக்கும் உரிமையை தமிழ் மக்களுக்கும் வழங்க வேண்டும் என்றே கேட்டனர். ஆட்சியில் பங்கு வழங்கப்பட்டிருந்தால் இலங்கையில் கடந்த 30 வருடகாலமாக யுத்தம் நடைபெற்று இருக்காது. சிங்கள மொழிக்கு என்ன உரிமை அந்தஸ்து இருக்கிறதோ அதே உரிமையை தமிழ்மொழிக்கும் வேண்டுமென 1956 ஆம் ஆண்டுவரை தமிழ் அரசியல்வாதிகளும் தமிழ் மக்களும் கேட்டுவந்தனர்.அரச கருமமொழி என்ற போர்வையில் சிங்கள மொழியும், தமிழ் மொழியும் அரச கரும மொழியாக பிரகடனப்படுத்தப்பட்டாலும் சிங்கள மொழிக்கு வழங்கப்பட்ட மொழி உரிமை தமிழ்மொழிக்கு வழங்கப்படவில்லை. இதன் காரணமாகவே வட, கிழக்கு இளைஞர்கள் ஆயுதம் ஏந்தவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

தமிழ்மொழிக்கு இதுவரையிலும் உரிய அந்தஸ்து வழங்கப்படவில்லை. பொதுவாக வட, கிழக்கை தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் பொலிஸ் நிலையங்களில் தமிழ் மக்கள் தமது தேவைகளை சிங்கள மொழியிலே மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனவே, தான் தமிழ் மொழிக்கு உரிய அந்தஸ்து வழங்கப்படவில்லை என தமிழ் மக்கள் கருதுகின்றனர்.

இதேபோல் வட,கிழக்கில் பெரும்பான்மையாக தமிழ் மக்களும் சிறுபான்மையாக சிங்கள மக்களும் வசிக்கும் பிரதேசங்களில் சிங்கள மொழியால் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாத நிலையில் சிங்கள மக்கள் இருந்து வருகின்றனர். எனவே, தமிழ் மக்கள் தமிழ்மொழியில் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில் மொழி உரிமை வழங்கப்பட வேண்டும். எனவே, அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு தமிழ்மொழி தெரிந்து இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அரசாங்க திணைக்களங்களில் பணிபுரியும் பெரும்பான்மை இனத்தவர்கள் கட்டாயமாக தமிழ்மொழி படித்து இருக்க வேண்டும். தமிழ்மொழியில் தமிழ் மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் அல்லது அதற்கு மேலாக தமிழ்மொழி பயிற்சி வழங்கப்பட வேண்டும்.

இப்படியான சில அடிப்படை உரிமைகள் தமிழ்மொழிக்கு அரசியல் யாப்பின் மூலம் வழங்கப்பட்டிருந்தாலும் அவை செயல்பாட்டில் இல்லையென்பதே தமிழ் மக்களுடைய பிரச்சினையாக இருந்து வருகிறது. இன்று பசறை பிரதேசத்திலுள்ள சமுர்த்தி அதிகாரிகளுக்கே மொழி உரிமை குறித்து விளக்கமளிக்கப்படுகிறது. காரணம் பசறை லுணுகலை பிரதேசத்திலே தமிழ், சிங்கள மக்கள் சம அளவில் செறிந்து வாழ்ந்து வருகின்றனர். எனவே தான் பசறை, லுணுகலை ஆகிய இரண்டு பிரதேச செயலகங்களும் தெரிவுசெய்யப்பட்டு மொழி உரிமை குறித்த செயலமர்வுகளை நடத்தி வருகிறோம்.

இலங்கை போன்ற சிறிய நாட்டில் யுத்தம் நடைபெறுவதை எந்தவொரு நாட்டு மக்களும் விரும்பமாட்டார்கள். ஆனால், சர்வதேச அளவில் ஆயுத வியாபாரம் செய்யும் வர்த்தகர்களே யுத்தத்தை அதிகமாக விரும்புவார்கள். இந்த சர்வதேச ஆயுத வியாபார கும்பலே இரு பக்கமும் ஆயுத வியாபாரம் மேற்கொண்டு நாட்டை சீரழிப்பவர்கள்.

இலங்கையில் தமிழ் இளைஞர்கள் ஏன் ஆயுதம் ஏந்தினர் என்பதற்கான காரணத்தை கண்டறிந்து அதற்கான தீர்வை தமிழ் மக்களுக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய காலப்பகுதி இதுவாகும்.

இந்த சந்தர்ப்பத்தை ஒருபொழுதும் அரசாங்கம் தவறவிட்டுவிடக் கூடாது. தமிழ்மொழிக்குரிய உரிமை அந்தஸ்து கட்டாயமாக வழங்கப்பட வேண்டும். அதற்கான ஒழுங்குகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். தமிழ்மொழியை சிங்களவர் படிக்க வேண்டும். அதேபோல சிங்கள மொழியை தமிழர் படிக்க வேண்டுமென்ற சட்டத்தை அரசாங்கம் கொண்டு வரவேண்டும் அல்லது பிரகடனப்படுத்தப்பட வேண்டும். பாடசாலைகளில் தரம் 1 முதல் 13 வரை சிங்கள, தமிழ் பாடங்களை கட்டாய பாடங்களாக்கப்பட வேண்டும்.

இப்படியான நுணுக்கமான சட்டத்தை அரசாங்கம் மேற்கொண்டு வரும் பட்சத்தில் தமிழ்மொழிக்கு தானாகவே உரிய அந்தஸ்து கிடைத்துவிடும்

மலை உச்சிகளில் காடுகளை வளர்த்தல்

010709rnawakka.jpgஇலங்கை யிலுள்ள மலை உச்சிகளில் காடுகளை வளர்க்கும் புதிய திட்டத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான பிரேரணையை சுற்றாடல் மற்றும் இயற்கை வள அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சமர்ப்பித்திருந்தார்.

இதன்படி கடல் மட்டத்திலிருந்து 1200 மீற்றர் உயரமான மலைப் பிரதேசங்களில் தேசிய சுற்றாடல் சட்டத்தின் கீழ் சுற்றாடல் பிரதேசமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ்க் கொண்டுவரப்படும். இதில் காடு வளர்க்கும் திட்டத்துக்கான நிதியை திறைசேரியிலிருந்தோ அல்லது வெளிநாட்டு உதவியாகவோ பெற்றுக்கொள்ளப்படும்.

இலங்கை அகதிகளின் பிள்ளைகளை அனுமதிப்பதற்கு தயாராக இருங்கள் – தமிழக பாடசாலைகளுக்கு மாநில அரசு அறிவுறுத்தல்

world-maps.jpgஇலங்கை அகதிகளின் பிள்ளைகளை அனுமதிப்பதற்கு தயாராக இருக்குமாறு தமிழக அரச பாடசாலைகளுக்கு மாநில அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அனுமதி கோரி பல்வேறு திணைக்களங்களுக்கு பாடசாலைகல்வித்துறை செயலாளர் எம்.குற்றாலலிங்கம் கடிதம் எழுதியுள்ளார்.

இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் முகாம்களின் நிலைமையில் முன்னேற்றம் ஏற்படாவிடின் அதிக எண்ணிக்கையான மாணவர்கள் வருகை தரக்கூடும் என்று ஈழம் அகதிகள் புனர்வாழ்வு அமைப்பின் பொருளாளர் எஸ்.சி.சந்திரகாசனை மேற்கோள்காட்டி , ரைம்ஸ் ஒவ் இன்டியா நேற்று தெரிவித்திருந்தது.

“இலங்கையின் முகாம்களில் சுமார் 3 இலட்சம் அகதிகள் உள்ளனர். அவர்கள் வெளியேறுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. அவர்களின் சொந்தக்கிராமங்களில் அவர்களை மீளக்குடியேற்றுமாறு இலங்கை அரசாங்கத்திடம் இந்தியா கோரிக்கை விடுத்து வருகிறது. இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. முகாம்களுக்குள் பாடசாலைகள் இருக்கின்றபோதும் அவை பொருத்தமானவையாக இல்லை. ஒழுங்கானபாடசாலைகளில் தமது பிள்ளை கல்வி கற்பதையே பெற்றோர் விரும்பக்கூடும். அதனால் இங்கு (தமிழகம்) வருவதற்கு அவர்கள் விரும்புவார்கள் என்று சந்திரகாசன் கூறியுள்ளார்.

இதேவேளை 29 ஜூன் 2009 திகதியிடப்பட்ட கடிதமொன்று பாடசாலை கல்விச் செயலாளரால் பாடசாலைக் கல்வி, ஆரம்பக்கல்வி, ஆதிதிராவிடர், பழங்குடிநலன், வருவாய் நிர்வாகம், பின்தங்கிய வர்க்கத்தினர், மிகப்பின்தங்கிய வர்க்கத்தினர், சிறுபான்மையினர் நலன், சமூகநலன், போஷாக்கு உணவு செயல்திட்ட திணைக்களங்கள் ஆகியவற்றின் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

12 ஆம் வகுப்பு வரை இலங்கை அகதிகளின் பிள்ளைகளை பாடசாலைகளில் அனுமதிக்குமாறு அக்கடிதத்தில் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. புதிதாக அனுமதிக்கப்படும் பிள்ளைகளுக்கு சீருடை, பாடசாலைப் புத்தகங்கள், தொப்பிகள், நண்பகல் உணவு என்பனவற்றை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை விவகாரம்; தலைமை தாங்குமாறு அமெரிக்க ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்

இலங்கையில் அண்மையில் முடிவடைந்த யுத்தத்தின்போது இடம்பெற்றதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரிக்க சர்வதேச ஆணைக்குழுவொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவிடம் 6 முன்னணி மனித உரிமைக்குழுக்கள் கேட்டுள்ளன.

இது தொடர்பாக ஒபாமாவிற்கு இந்த அமைப்புகள் கடிதம் எழுதியிருப்பதாக “ஸீநியூஸ் கொம்’ தெரிவித்திருக்கிறது. யுத்தத்தின் போது இலங்கை அரசபடையினராலும் விடுதலைப்புலிகளாலும் சர்வதேச மனிதாபிமான சட்டம் பாரதூரமான முறையில் மீறப்பட்டதை தாங்கள் ஆவணப்படுத்தியுள்ளதாக ஓபாமாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்த அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன சர்வதேச விசாரணைக்குழு ஒன்றுக்கு பகிரங்கமாக அழைப்பு விடுக்குமாறும் அதனை வென்றெடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவை ஒபாமாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன.

அத்துடன், இடம்பெயர்ந்த மக்களுக்கு முழுமையான பாதுகாப்பை அளிப்பதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சுயாதீனமான மனித உரிமை அமைப்புகள், ஊடகங்கள் முகாம்களுக்கும் முன்னர் மோதல் இடம்பெற்ற பகுதிகளுக்கும் மற்றும் மோதலால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் உள்ள இடங்களுக்கும் முழு அளவில் செல்வதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் இந்த மனித உரிமை அமைப்புகள் ஒபாமாவை கேட்டுள்ளன.

இந்த நடவடிக்கைகள் தொடர்பாக சர்வதேச சமூகத்திற்கு அமெரிக்கா தலைமை தாங்குவது இப்போது அவசியமானது என்றும் இதன் மூலம் உயிர்தப்பியுள்ள பொதுமக்களை பாதுகாக்கவும் மனிதப் பேரனர்த்தத்துக்கு பொறுப்பானவர்களை பதிலளிக்கும் கடப்பாடுடையவர்களாக்க இது தேவையெனவும் நேற்று முன்தினம் எழுதியுள்ள கடிதத்தில் இந்த அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இவ்வாறு செய்வதற்கு தவறுவதானது பெறுபேறுகள் குறித்து அச்சம் இல்லாமல் அரசாங்கங்கள் பாரிய அடாவடித்தனங்களில் ஈடுபடுவதை ஊக்கிவிப்பதாக அமையும். ஆதலாலேயே இந்தத்தருணத்தில் தங்களின் உடனடியான நடவடிக்கை முக்கியமானது என்றும் கடிதத்தில் இந்த மனித உரிமை அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.