யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள வடபகுதிச் சிறுவர்களின் கல்வியை மேம்படுத்த 1,058 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் பேராசிரியர் விஸ்வவர்ணபால தெரிவித்தார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு கல்வியைக் கைவிட்ட பிள்ளைகளின் விபரங்கள் தற்போது திரட்டப்பட்டு வருகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.
இவ் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் உயர்தர மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் முகமாக உயர்கல்வி பயிற்சிகள் ஆரம்பிப்பதற்காக யாழ்ப்பாணம், வவுனியா பல்கலைக்கழகங்களுக்கு 23 மில்லியன் ரூபா செலவில் பிரிவும் அமைக்கப்படவுள்ளது.
யாழ்.பல்கலைக்கழகத்தில் வைத்தியப் பிரிவு ஒன்றும் விடுதி ஒன்றும் அமைக்க 90 மில்லியன் ரூபாவும் தொழில்நுட்பக் கல்விப்பிரிவும், கல்வி நிர்வாகப் பிரிவுக் கட்டிடமும் அமைக்க 609 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
உயர்கல்விப் பாடத்திட்டங்களை மேம்படுத்தவும், புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தவும் 30 மில்லியன் ரூபாவும் யாழ்.உயர்தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தை அபிவிருத்தி செய்ய 14.15 மில்லியன் ரூபாவும், வவுனியாவில் உயர்தொழில்நுட்ப நிலையம் அமைக்க 65 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
2011 ஆம் ஆண்டில் இவ் அபிவிருத்தித் திட்டம் நிறைவுபெறும் எனவும் இத்திட்டத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி ஆகியன நிதியுதவி வழங்கியுள்ளன எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.