2009

2009

கந்தளாயில் மூன்று புலி சந்தேக நபர்கள் கைது

_arrested.jpgபுலி களுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை கந்தளாய் சேருவில பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். பொலிஸ் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட மூவரும் இளைஞர்கள் என்று தெரிவித்த அவர் கையடக்கத் தொலைபேசி, கணனி உட்பட உபகரணங்களை கைப்பற்றியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மாவடிச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த இந்த மூன்று இளைஞர்களும் தங்களது கையடக்கத் தொலைபேசியில் புலிகளின் கீதங்களை பதிவு செய்துள்ளதுடன் புலிகள் தொடர்பான ஆவணங்களை கணனியில் வைத்துள்ளனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

புளொட் அமைப்பினர் ஆண்டுதோறும் அனுஷ்டித்துவரும் வீரமக்கள் தினம்.

plote-colombo.jpgபுளொட் அமைப்பினர் ஆண்டுதோறும் அனுஷ்டித்துவரும் வீரமக்கள் தினம் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் இன்று 16ம்திகதி வியாழக்கிழமை வரையிலுமான நான்கு நாட்கள் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அ.அமிர்தலிங்கம் அவர்கள் புலிகளால் கொல்லப்பட்ட தினமான ஜூலை 13ம் திகதி தொடங்கி புளொட் அமைப்பின் செயலதிபர் க.உமாமகேஸ்வரன் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட தினமான ஜூலை 16ம் திகதி வரையிலான காலப்பகுதியை வீரமக்கள் தினமாக புளொட் அமைப்பினர் பிரகடனப்படுத்தி வருடாவருடம் அனுஷ்டித்து வருகின்றனர்.

இந்த வகையில் வீரமக்கள் தினம் இடம்பெறும் தினங்களில் அஞ்சலி நிகழ்வுகள் அஞ்சலிக் கூட்டங்களைத் தவிர புளொட் அமைப்பினரால் சிரமதானம், இரத்ததானம், அன்னதானம், தண்ணீர் பந்தல், நலன்புரி நடவடிக்கை என்பனவும் கடந்த இருபது ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அத்துடன் ஐரோப்பிய நாடுகளில் குறிப்பாக சுவிஸ்லாந்தில் வீரமக்கள் தின நிகழ்வுகள் கடந்த 20வருட காலமாக மிகவும் சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. சுவிஸ்லாந்தில் வீரமக்கள் தினத்தினை அனுஸ்டிப்பது மாத்திரமன்றி சுவிஸ்வாழ் தமிழ் மாணவ மாணவியருக்கான போட்டிப் பரீட்சைகள், விளையாட்டுப் போட்டிகள் என்பன நடத்தப்பட்டு பரிசில்கள் வழங்கி மாணவ மாணவியரை கௌரவிக்கும், ஊக்குவிக்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றுவருகின்றது. சுவிஸ்வாழ் புலம்பெயர் மாணவ, மாணவியருக்கு பாடப்புத்தகங்களும் வழங்கப்பட்டு வருகின்றது.

புளொட் அமைப்பினரால் ஜூலை 13முதல் ஜூலை 16வரை அனுஸ்டிக்கப்படும் வீரமக்கள் தினத்தை முன்னிட்டு வவுனியா, யாழ்ப்பாணம், மன்னார், திருமலை, மட்டக்களப்பு, புத்தளம், கொழும்பு ஆகிய மாவட்டங்களிலுள்ள புளொட் காரியாலயங்களிலும், கிளைக் காரியாலயங்களிலும் வீரமக்கள் தின நிகழ்வுகள் கடந்த 13ம் திகதிமுதல் இன்று 16ம் திகதிவரை நடைபெற்றுள்ளது. இந்த வகையில் கொழும்பு பம்பலப்பிட்டியிலுள்ள புளொட் தலைமைக் காரியாலயத்திலும் கடந்த 13ம் திகதிமுதல் 16ம் திகதியான இன்றுவரையில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வந்தது.

வீரமக்கள் தினத்தின் இறுதி நாளான இன்றும் மௌனஅஞ்சலி மற்றும் மலராஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் வீரமக்கள் தினத்தை முன்னிட்டு கொழும்பு பம்பலப்பிட்டி மாணிக்கப்பிள்ளையார் கோவிலில் அமரர் உமாமகேஸ்வரன் அவர்களுக்கு விசேட பூசை வழிபாடு இன்றுகாலை 8.00மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து கொழும்பு புளொட் தலைமைக் காரியாலயத்தில் மங்கள விளக்கேற்றல், மலராஞ்சலி மற்றும் மௌனஅஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. இதில் புளொட் முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலர் பங்கேற்றிருந்தனர். வீரமக்கள் தினத்தை முன்னிட்டு கொழும்பின் பல பாகங்களிலும் வீரமக்கள் தின சுவரொட்டிகளைக் காணக்கூடியதாக இருந்தது.

கொட்டதெனிய கொள்ளைக்கு சிறையினுள் இருந்து திட்டம்? – 3 பொலிஸ் குழுக்கள் தீவிரம்

கொட்டதெனிய கொள்ளைச் சம்ப வம் தொடர்பாக விசா ரணை நடத்துவதற்கென மூன்று விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர நேற்றுத் தெரிவித்தார்.

சிறைச்சாலையிருக்கும் முக்கிய புள்ளி ஒருவருக்கு இப்பாரிய கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்பிருப்ப தாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இதேவேளை, இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற ஒருவரே இக் கொள்ளையை திட்டமிடுவதில் பிரதான சூத்திரதாரியாக செயற்பட்டிருக்க வேண்டு மெனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றிருக்கும் மேற்படி தகவல்களை அடிப்படையாக வைத்து கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேகநபர்களிடமும் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்டிருக்கும் நால்வரையும் தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரணைகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

அதேவேளை, பணத்தை வான் ஒன்றில் கொழும்புக்கு எடுத்து வந்த ஐந்து பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்பாகவும் பொலிஸார் விசாரணை நடத்தி வருவதுடன் அவர்களது கையடக்கத் தொலைபேசியிலுள்ள இலக்கங்கள் குறித்தும் பரிசீலித்து வருகின்றனர்.

தப்பியோட முயற்சித்தவேளை கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களிடமிருந்தும் மயக்க மருந்து, மிளகாய்த்தூள் பொட்டலம் மற்றும் பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் கூறினர்.

கொட்டதெனியவில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இப்பாரிய கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குருணாகலில் இருந்து கொழும்புக்கு இரு நிறுவனங்களின் 10 கோடி ரூபா பணம் வாகனமொன்றில் எடுத்து வரப்பட்டபோதே திட்டமிட்டகொள்ளைக் கும்பல் இதனை ஆயுதமுனையில் செய்துள்ளது. அப்போது, அவ்வழியாக பொலிஸ் வாகனமொன்று வந்துள்ளது. அதனைக் கண்டதும் இரு கொள்ளையர்கள் ஒன்றரைக்கோடி ரூபா பணத்தைக் கொண்ட பொதியை எடுத்துக்கொண்டு வாகனமொன்றில் ஏறித் தப்பிச் சென்றுள்ளனர்.

சந்தேகம் கொண்ட பொலிஸார் சம்பவ இடத்தை நெருங்கியபோது கொள்ளைக் கோஷ்டியைச் சேர்ந்த ஏனைய நால்வரும் ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளில் தப்பியோட முயன்றுள்ளனர்.

பொலிஸார் இந்நால்வரையும் சுமார் 8 1/2 கோடி ரூபா பணத்துடன் மடக்கிப் பிடித்துள்ளனர். இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு உரிய நிறுவனத்துக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பான தீவிர விசாரணைகளை முன்னெடுப்பதற்காக கொழும்பு குற்றத்தடுப்புப் புலனாய்வு அதிகாரிகள் கொட்டதெனிய பகுதிக்கு விஜயம் செய்துள்ளனர்.

யாழ். மாநகரசபைத் தேர்தலில் இடம்பெயர்ந்தோர் வாக்களிக்க ஆறு மாவட்டங்களில் 17 வாக்களிப்பு நிலையங்கள்

election_cast_ballots.jpgயாழ். மாநகரசபைத் தேர்தலில் இடம்பெயர்ந்து வாழ்வோர் வாக்களிக்க ஆறு மாவட்டங்களில் பதினேழு வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படுமென தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. வெளி மாவட்டங்களில் இடம்பெயர்ந்து வாழும் யாழ்.மாநகரசபை வாக்காளர்களில் 6242 பேர் தமக்கு வாக்களிக்க வசதி செய்துதருமாறு தேர்தல் திணைக்களத்திடம் கோரியதையடுத்து இவர்களுக்கு கொத்தணி வாக்குச்சாவடிகளை அமைக்கமுடிவு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் வாழும் 324 வாக்காளர்கள் வாக்களிக்க மட்டக்குளி சென் ஜேம்ஸ் மகாவித்தியாலயம், பவிலியன் ஒவ் பிளசரணங்கர விளையாட்டு மைதானத்திலும் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படும். கம்பஹா மாவட்டத்தில் வாழும் 849 வாக்காளர்கள் வாக்களிக்க சென்பீற்றர்ஸ் முஸ்லிம் மகாவித்தியாலயம், தளுவ கொட்டுவ சென் அன்ரனிஸ் வித்தியாலயம் ஆகியவற்றில் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.

களுத்துறை மாவட்டத்தில் வாழும் வாக்காளர்கள் 320 பேருக்கு கெனமுல்ல ஜீவன் முஸ்லிம் மத்திய கல்லூரியில் வாக்களிப்பு நிலையம் நிறுவப்படும். புத்தளம் மாவட்டத்தில் வாழும் வாக்காளர்கள் 4550 பேருக்கு இம் மாவட்டத்தில் ஏழு வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படும். இவர்களுக்கு புளிச்சங்குளம் சமத்பாறுக் மத்திய மகா வித்தியாலயம், ஸாகிரா பாத்திமா தேசியபாடசாலை, தில்லையடி மகாவித்தியாலயம் பல்விய சிங்கள மகா வித்தியாலயம், நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலயம், பலப்பிட்டிய அலக்ஸா தேசியப் பாடசாலை ஆகிய பாடசாலைகளில் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.

அநுராதபுரம் மாவட்டத்தில் வாழும் நூற்றி இருபது வாக்காளர்களுக்கு இங்கிரிகொள்ளாவ முஸ்லிம் மகா வித்தியாலயம், கட்டுகொல பொதுநோக்கு மண்டபம், அநுராதபுரம் விழிப்புலனற்றோர் செவிப்புலனற்றோர் சிறார் பாடசாலை, நச்சன்டுவ முஸ்லிம் மகா வித்தியாலயம் ஆகியவற்றில் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.

இதேவேளை, குடாநாட்டில் தென்மராட்சி கைதடி, கொடிகாமம் நலன்புரி நிலையங்களில் வாழும் வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக அரியாலை பார்வதி வித்தியாலயத்தில் வாக்களிப்பு நிலையம் அமைக்கப்படும். வெளி மாவட்டங்களில் அமைக்கப்படும் வாக்களிப்பு நிலையங்களின் வாக்குப் பெட்டிகள் அந்தந்த மாவட்ட செயலகங்களில் எண்ணப்பட்டு வாக்கு எண்ணிக்கை யாழ். மாவட்ட தேர்தல் திணைக்களத்துக்கு அறிவிக்கப்படும்.

யாழ். மாவட்டத்தில் யாழ். மாநர சபை வாக்காளர் வாக்களிக்க எழுபது வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படுமென யாழ். மாவட்ட தேர்தல் ஆணையாளர் பொன்னுத்துரை குகநாதன் தெரிவித்துள்ளார்.

வன்னி முகாம் மக்களுக்கு உதவ முன்வருபவர்களுக்கு ஆப்படிக்கும் காரைநகர் நலன்புரிச் சங்கம்!!! : த ஜெயபாலன்

kws-logo.jpg
கண்ட கண்ட ஆட்களையும் எங்களின் வீடுகளில் இருத்தவோ?’
வன்னியில் இடம்பெற்ற அவலத்தை கற்பனையிலோ எழுத்திலோ கொண்டுவர முடியாது. அந்த அவலம் அவ்வளவு கொடியது. அதிலிருந்து தப்பிய மக்கள் இன்று இலங்கை அரசு நலன்புரி முகாம்கள் என்று சொல்லும் முட்கம்பி வேலிக்குள் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். இம்முகாம்களின் நிலை பற்றி மிக விரிவாக சர்வதேச ஊடகங்களே தொடர்ச்சியாக எழுதி இலங்கை அரசின் முகத்திரையைக் கிழித்து வருகின்றன. ஆனால் மறுமுனையில் இந்த முகாம்களில் உள்ள மக்களுக்கு உதவும் நடவடிக்கைகளுக்கு லண்டனில் உள்ள சில அமைப்புகள் முட்டுக்கட்டையாகவும் உள்ளன.

குறிப்பாக காரைநகர் நலன்புரிச் சங்கம், லண்டன் அம்மன் ஆலய நிர்வாகிகள் சிலர் முகாம்களில் உள்ள மக்களுக்கு உதவ முன் வருபவர்களுக்கு எதிராக அவர்களின் நடவடிக்கைகளுக்கு எதிராக கையெழுத்து வேட்டையில் இறங்கி உள்ளனர்.

பொதுவாக உரிமை மீறல்களுக்கு எதிராக அடிப்படை உரிமைகளைக் கோரி கையெழுத்துப் போராட்டங்கள் நடத்தப்படுவது வழமை. ஆனால் மாறாக தங்கள் சுயநல நோக்குகளுக்காக இந்த ஜனநாயக நடைமுறையை கையெழுத்து வேட்டையை சிலர் நடாத்த முயல்கின்றனர். நுனிநாக்கில் ஜனநாயகம் பேசும் இவர்கள் தமிழ் மக்களின் நலன்தொடர்பில் ஆபத்தானவர்களாக உள்ளனர். ஒரு சிலரின் தூண்டுதலால் முழுமையான புரிதல் இன்றி கையெழுத்து இடுவோர் ஒரு சிலரின் சுயநலன்களுக்கு துணை போய்விடுகின்றனர்.

காரைநகர் நலன்புரிச் சங்கம் ஏற்கனவே சாதியச் சங்கம் என்று பெயரெடுத்துக் கொண்டது. லண்டன் குரல் 19 (ஒக்ரோபர் 2007 – நவம்பர் 2007) இதழிலும் அதற்கு முன்னர் வெளியான இதழ்களிலும் காரைநகர் நலன்புரிச் சங்கத்தின் சாதியப் போக்குத் தொடர்பாக விரிவாக எழுதப்பட்டு இருந்தது. ( காரைநகரும் சாதிய முரண்பாடும் :காரை முகுந்தன் ) சங்கத்தின் பொதுக் கூட்டத்தில் அதன் உறுப்பினர் ஒருவரை சாதிப் பெயரைச் சொல்லி விழித்ததைத் தொடர்ந்து இச்சர்ச்சை உருவாகியது. தற்போது காரைநகர் நலன்புரிச் சங்கம் தனது சாதியச் சிந்தனைக்காக மற்றுமொரு தடவை சர்ச்சைக்குள் சென்றுள்ளது. ( காரை மக்களைத் தலைகுனிய வைத்த காரை நலன்புரிச் சங்கம் :காரை முகுந்தன் )

வன்னி முகாம்களில் உள்ள மக்களை மீளக் குடியமர்த்துவது தொடர்பாக கிழக்கு லண்டனில் நடைபெற்ற கலந்துரையாடலில் யுத்தத்தில் சம்பந்தப்படாத பகுதிகளைச் சேர்ந்தவர்களை அந்தக் கிராமத்தவர்கள் பொறுப்பெடுத்து பார்க்க முடியும் என்ற யோசனையை பி சோமசுந்தரம் முன்வைத்தார். காரைநகர் நலன்புரிச் சங்க உறுப்பினரான இவர் காரைநகரில் பல கல்வீடுகள் கைவிடப்பட்ட நிலையில் உள்ளது. வன்னி முகாம்களில் உள்ள காரைநகர் மக்களைப் பொறுப்பேற்று அவர்களை காரைநகரில் மீளவும் குடியமர்த்தலாம் என்ற யோசனையை பி சோமசுந்தரம் முன் வைத்தார். அதனைப் பலரும் அன்று வரவேற்றனர். சோமசுந்தரம் தனது யோசனையை பேச்சுடன் நிறுத்திக் கொள்ளவில்லை. உத்தியோகபூர்வமாக செயற்பாட்டிலும் இறங்கினார்.

இலங்கை அரசுக்கு தனது யோசனையை எழுதிய சோமசுந்தரம் காரைநகர் மக்களை மீளவும் காரைநகரில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கும்படி கேட்டார். சோமசுந்தரம் இலங்கை அரசைக் கேட்டுக் கொண்டதில் எந்தத் தவறும் இல்லை. ஏனென்றால் சர்வதேசமே இன்று இலங்கை அரசிடம் மக்களை மீளக் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கும் படியே கேட்கின்றது. அதற்கு பதிலளித்த இலங்கை அரசு இதுதொடர்பாக பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்துடன் தொடர்பு கொண்டு மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுக்கும்படி கேட்டிருந்தது.

இதனை காரைநகர் நலன்புரிச் சங்கத்திற்கு சோமசுந்தரம் தெரியப்படுத்தினார். இது தொடர்பாக காரைநகர் நலன்புரிச் சங்கம் மே 31 2009ல் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. அதனைத் தொடர்ந்து காரை மக்களை மீளக்குடியமர்த்துவது தொடர்பாகவும் பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தடன் பேசுவதற்கும் ஒரு உபகுழுமைக்கப்பட்டது. அதில் சோமசுந்தரம் பிரபல வானொலி அறிவிப்பாளர் தயானந்தா ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர். ஆனால் உப குழுவோ அல்லது காரைநகர் நலன்புரிச் சங்கமோ மேற்கொண்டு நடவடிக்கையில் இறங்க மறுத்தனர். இலங்கைத் தூதரகத்துடன் வன்னி முகாம்களில் உள்ள மக்கள் பற்றி பேசுவதற்கு ஏற்பாடு செய்யுமாறு கோரும் கடிதம் ஒன்று தயாரிக்கப்பட்டு ( Letter_Prepared_for_SLHC )அனுப்பப்பட முடிவெடுக்கப்பட்ட போதும் அதனை காரைநகர் நலன்புரிச் சங்கம் அனுப்பி வைக்கவில்லை.

சோமசுந்தரம் தானே நேரடியாக மின் அஞ்சலில் அக்கடிதத்தை அனுப்பி வைத்தார். அதற்கு யூன் 16 2009ல் பதிலளித்த இலங்கைத் தூதரகம் யூன் 26 2009ல் சந்திப்பதற்கு நேரத்தை ஏற்பாடு செய்து வழங்கியது.

இதற்கிடையே இந்த உப குழு அமைக்கப்பட்ட பின் காரைநகர் நலன்புரிச் சங்கத்தை சேர்ந்த சிலர் இந்த மீளக் குடியமர்த்த எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராக செயற்பட ஆரம்பித்தனர். ‘தூதரகத்துடனோ துரோகக் கும்பல்களுடனோ சங்கம் தொடர்புகொள்வதை நிறுத்துமாறு தயவாகக் கேட்டுக்கொள்கிறோம்.’ என்று லண்டன் வாழ் காரைநகர் மக்கள் என்ற பெயரில் பிரசுரம் ஒன்றை வெளியிட்டு பலரிடம் கையெழுத்தும் பெறப்பட்டு உள்ளது. ( Karai_Diasporas_Petition ) இந்தப் பிரசுரத்தை காரைநகர் நலன்புரிச் சங்கத்தின் செயலாளர் சிவா ரி மகேசன் சோமசுந்தரத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் கையழுத்து இட்டவர்களின் பட்டியலை செயலாளர் சிவா ரி மகேசன் வெளியிடவில்லை. கையெழுத்து இட்டவர்களின் பட்டியலை சோமசுந்தரம் கேட்டிருந்த போதும் இதுவரை அப்பட்டியல் வழங்கப்படவில்லை.

இலங்கை அரசு வன்னி மக்களைத் தடுத்த வைத்துள்ள நிலையில் அவர்களிடம் பேசுவதற்கு என்ன உள்ளது என்பது நியாயமானதாக இருந்தாலும் கடிதத்தின் உள்நோக்கம் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. மேலும் காரைநகர்ச் சங்கத்தின் கடந்தகால வரலாறும் சந்தேகத்திற்குக் காரணமாக இருக்கின்றது.

இந்தச் சூழ்நிலையில் தொடர்ந்தும் இந்த உபகுழுவில் இருப்பது அர்த்தமற்றது என்று கூறி பி சோமசுந்தரம் யூன் 21 2009ல் உப குழுவில் இருந்து வெளியேறினார். தான் மக்களுக்குச் செய்ய வேண்டியதை சுயாதீனமாக சிறிய அளவில் செய்வேன் என்றும் அவர் தனது ராஜினாமாக் கடிதத்தில் தெரியப்படுத்தி இருந்தார்.

யூன் 22 2009ல் இலங்கைத் தூதரகத்திற்கு காரைநகர் நலன்புரிச் சங்கத்தின் செயலாளர் சிவா ரி மகேசன் அச்சந்திப்பில் தவிர்க்க முடியாத காரணங்களால் தங்கள் உறுப்பினர்கள் கலந்தகொள்ள முடியாது எனத் தெரிவித்து பதில் எழுதினார். ( KWS_Letter_to_SLHC )

இச்சம்பவங்கள் பற்றி சிவா ரி மகேசனுடன் யூலை 4ல் தொடர்பு கொண்ட போது காரைநகர் நலன்புரிச் சங்கத்தின் கீழ்மட்ட உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தமையால் தாங்கள் மேற்கொண்டு செயற்பட முடியவில்லை என சிவா மகேசன் லண்டன் குரலுக்குத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் ‘அந்த மக்கள் முகாம்களுக்கு வெளியே வந்தபின் அவர்கள் உதவிகளை வழங்க விரும்புகிறார்கள்’ என்றார். உதவி தேவைப்படும் போது தானே செய்ய வேண்டும். இப்போது தானே அவர்களுக்கு உதவி தேவை என்ற திருப்பிக் கேட்ட போது ‘அவர்களுடைய ஆதரவு இன்றி தாங்கள் செயற்பட முடியாது’ என்றும் சிவா மகேசன் தெரிவித்தார். 

வன்னி முகாம்களில் உள்ள காரை மக்களை காரைநகரில் உள்ள கைவிடப்பட்ட வீடுகளில் மீளக்குடியமர்த்துவது பற்றிய யோசனையை சோமசுந்தரம் முன்வைத்த போது உடனேயே எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. ‘கண்ட கண்ட ஆட்களையும் எங்களின் வீடுகளில் இருத்தவோ?’ எனச் சிலர் முறுகியதாக லண்டன் குரலுக்கு செய்திகள் எட்டின. அதுபற்றி சிவா மகேசனிடம் காரைநகரில் கைவிடப்பட்டுள்ள லண்டனில் வாழும் ‘உயர் சாதி’ இனரின் வீடுகளில் ஏனைய சாதிக்காரர்கள் குடியிருப்பதை தடுப்பதற்காகவா இந்த முயற்சி கைவிடப்பட்டதா? என்று கேட்ட போது, சிவா மகேசன் முற்றாக அதனை மறுத்தார். ‘சாதிப் பிரச்சினை அங்கு ஒரு விடயமாகப் பார்க்கவில்லை’ என்றார் சிவா மகேசன்.

ஆனால் ‘கையெழுத்து வைத்து இதனை எதிர்த்தவர்கள் பெரும்பாலும் காரையில் உள்ள தங்கள் வீடு வளவுகளில் ஏனைய சாதியினர் வந்துவிடுவார்கள் என்பதாலேயே எதிர்த்தனர். அதற்கு அவர்கள் வைக்கும் காரணங்கள் நொண்டிக் காரணங்களைக் கூறுகின்றனர்’ என இத்திட்டத்தை ஆதரித்தவர்கள் லண்டன் குரலுக்குத் தெரிவித்தனர். ‘கையெழுத்து இட்டவர்கள் யார் என்ற பட்டியலை வெளியிட்டால் இந்த உண்மை வெளியே வந்துவிடும்’ என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். புது றோட்டு – களபூமி என்று பிரிந்து நிற்கும் உயர் சாதி உப பிரிவுகள் இரண்டும் இந்த காரையில் உள்ள கல்வீடுகளில் வன்னி முகாம்களில் உள்ளவர்கள் குடியமர்த்தப்படுவதை கடுமையாக எதிர்ப்பதில் ஒன்றாகவே செயற்படுவதாகவும் குடியேற்றத் திட்டத்தை ஆதரிப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

பிரபல கர்நாடக இசைக் கலைஞர் டி.கே.பட்டம்மாள் காலமானார்

pattammal.jpgசுமார் 65 ஆண்டுகள் கர்நாடக இசையில் கொடிகட்டிப் பறந்த பிரபல கர்நாடக இசைக் கலைஞர் டி.கே.பட்டம்மாள் தமது 90 ஆவது வயதில் இன்று சென்னையில் காலமானார் இவர் சிறிது காலம் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார். காஞ்சிபுரத்தில் பிறந்த இவர் அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன் உட்பட உலக நாடுகள் பலவற்றில் கச்சேரிகள் நடத்தியுள்ளார். பல திரைப்படங்களில் பின்னணியும் பாடியுள்ளார். கமலஹாஸனின் ‘ஹே ராம்’ படத்தில் வைஷ்ணவ ஜனதோ பாடலை பாடியவர் இவரே.

இவரது சம கால கலைஞர்களான எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் எம்.எல். வசந்தகுமாரி ஆகியோருக்கு மிகச்சிறந்த போட்டியாளராக இவர் திகழ்ந்தார். இந்திய அரசின் பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷன் விருதுகளையும், சங்கீத நாடக அகாடமி விருது, சங்கீத சாகர ரத்னா விருது மற்றும் சங்கீத கலாநிதி விருதினையும் இவர் பெற்றார்; என்பது குறிப்பிடத்தக்கது

இலங்கை-தென்னாபிரிக்க ஜனாதிபதிகள் எகிப்தில் சந்திப்பு

sa-sl.jpgஎகிப்தில் நடைபெறும் அணிசேரா நாடுகளின் 15ஆவது உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காகச் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜெகப் ஸமாவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இரு தலைவர்களுக்குமிடையிலான இந்த சினேகபூர்வ சந்திப்பு இன்று எகிப்தின் ஷார்ம் அஷ்ஷெய்க்கில் நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சந்திப்பின்போது இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம மற்றும் தென்னாபிரிக்க வெளிவிவகார அமைச்சர் மெய்ட் இன்கோனா மஷபேன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்த உச்சி மாநாட்டுக்கு வருகை தந்துள்ள உலகத் தலைவர்களைச் சந்தித்துப் பேசிவரும் ஜனாதிபதி, இலங்கையில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டமை மற்றும் நாட்டின் சமகால நிலைவரங்கள் என்பன தொடர்பாக அவர்களுக்கு விளக்கமளித்து வருகிறார்.

பயங்கரவாதம், சமாதானம் தொடர்பாக சர்வதேச சமூகம் தனது இரட்டை நிலைப்பாட்டை கைவிட வேண்டும்

111111.jpgஅணி சேராமைக்கு நடைமுறைசார் ஆழமான முக்கியத்துவத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வழங்கியுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.  எகிப்தின் சாம் அல் சேக் இல் இடம்பெற்ற அணிசேரா நாடுகள் அமையத்தின் அமைச்சு மட்டத்திலான கூட்டத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம மேலும் உரையாற்றுகையில்;

உலகின் மிகக் குரூரமான பயங்கரவாத இயக்கத்தை தோற்கடித்து பொது மக்களை மீட்டு இலங்கையின் வடக்கையும் கிழக்கையும் முழுமையான பாதுகாப்பின் கீழ் கொண்டு வந்துள்ள இலங்கையின் வீரம்மிகு பாதுகாப்பு படைகளைப் பாராட்டினார். இலங்கையை ஒரே கொடியின் கீழ் ஒன்றுபடுத்தி அதன் ஆட்புல ஒருமைப்பாடு, சுதந்திரம், இறைமை மற்றும் வடக்கு கிழக்கிலுள்ள மக்களின் உரிமைகள் என்பவற்றை மேலும் பலமூட்டியிருக்கும் இவ்வடைவு சாத்தியமடைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஒரே குறிக்கோளுடனான கடப்பாடு, தரிசனம் மற்றும் விடாமுயற்சி என்பன வழிகோலியுள்ளன.

காலஞ்சென்ற பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையார் இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையில் அணிசேரா கொள்கையினை திடமாக ஸ்தாபிப்பதற்கு முக்கிய பங்காற்றியமையை அவர் அங்கு தெரிவித்ததோடு, அதற்காக அன்னாருக்கு புகழாரம் செலுத்தினார்.

இன்று இக்கொள்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவால் ஆதரித்து ஏற்றுக்கொள்ளப்பட்டு இலங்கையின் வெளியுலகிற்கான ஈடுபாட்டில் செயல் ரீதியான நோக்கெல்லை மற்றும் ஆழமான முக்கியத்துவம் என்பன வழங்கப்படுகின்றன எனவும் கூறினார்.

அமைதி மற்றும் அபிவிருத்தி பற்றிய ஒருமித்த கலந்துரையாடலில் அமைச்சர் உரையாற்றுகையில், பயங்கரவாதம், நாடுகளின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றிற்கான முக்கியமானதொரு சவாலென இனங்கண்டதோடு, அதனை எதிர்கொள்வதில் சர்வதேச சமூகம் இரட்டை நிலைப்பாட்டினை கைவிட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

உலகளாவிய சவால்கள் ஒருமித்த பதில் நடவடிக்கைகளின் தேவையின் அவசியத்தினை வலியுறுத்திய போகொல்லாகம, இவ்வாறான ஒன்றுபட்ட முயற்சிகளை முன்னெடுக்க அணிசேரா நாடுகளின் அமையம் தலைமைத்துவத்தை தாங்குமாறு அறை கூவல் விடுத்தார்.

15 ஆவது அணிசேரா நாடுகளின் அமையத்தின் உச்சி மாநாட்டிற்கு முன்பதாக இன்று இடம்பெற்ற இவ்விரு நாள் கூட்டத்தில் நிதி மற்றும் பொருளாதார நெருக்கடி, சர்வதேச சமாதானம் மற்றும் பாதுகாப்பு, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச நிதி அமைப்பு ஆகியவற்றின் சீர்திருத்தம் மற்றும் வறுமை தணிப்பு ஆகிய விடயங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு ஆராயப்பட்டன.

நேற்று இடம்பெற்ற அமைச்சு மட்டத்திலான ஒன்று கூடலின் பின்புலத்தில் அமைச்சர் போகொல்லாகம தனது தென்னாபிரிக்க மற்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சர்களை சந்தித்தார். பாகிஸ்தான் மற்றும் கொலம்பியா ராஜாங்க அமைச்சர்களும் அமைச்சருடன் இருதரப்பு சந்திப்புக்களை மேற்கொண்டார்.

பாதாள உலகக் கும்பலை ஒழிக்க நீண்ட காலம் தேவையில்லை

sarath-pon-eka.jpgபாதாள உலகக் குழுக்களை ஒழிக்கத் தேவையான ஒத்துழைப்புகளை வழங்க படையினர் தயாராக இருப்பதாக தெரிவித்த கூட்டுப்படைத் தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா, பிரபாகரனை இரண்டரை வருடத்துக்குள் ஒழித்த படையினருக்கு பாதாள உலகத்தினரை ஒழிக்க நீண்ட காலம் தேவையில்லையெனவும் கூறினார்.

கூட்டுப்படைத் தலைமை அதிகாரியாக நேற்று புதன்கிழமை பதவிகளைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போதே ஜெனரல் சரத் பொன்சேகா இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;

பாதாள உலகக் கோஷ்டியினருக்கு எதிரான நடவடிக்கைகளில் புலனாய்வுத் துறையினருக்கு நாம் பங்களிப்புச் செய்து வருகிறோம். எதிர்வரும் காலங்களில் எமது ஒத்துழைப்புகள் தேவைப்படும் பட்சத்தில் அதை தொடர்ந்தும் வழங்குவோம்.  விடுதலைப் புலிகளையும் அதன் தலைவரையும் இரண்டரை வருடங்களுக்குள் ஒழித்த இராணுவத்துக்கு பாதாள உலகத்தினரை ஒழிக்க நீண்ட காலம் தேவையில்லையெனத் தெரிவித்தார்.

இலங்கை சென்று திரும்பிய குழுவின் மாநாடு ஜேர்மனியில்.

அண்மையில் நடந்தேறிய அனர்த்தங்களால் இடம்பெயர்ந்து தற்போது வன்னியில் தடுப்பு முகாம்களில் வசித்துவரும் தமிழ் மக்களின் வாழ்வியலை மேம்படுத்தும் முகமாக ஜரோப்பிய முழுமையான அமைப்பொன்றை நிறுவுவதற்காக July 17ம் திகதி தொடக்கம் 19ம் திகதி வரை Germany – Stuttgart இல் கூட்டத் தொடர் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இக்கூட்டத்திற்கு ஜேர்மனி, டென்மார்க், சுவிற்சலாந்து, பிரான்ஸ், ஜக்கிய இராச்சியம், நோர்வே போன்ற நாடுகளில் இருந்து எழுபதிற்கும் அதிகமான பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகளும், சமூக ஆர்வலர்களும் ஊடகவியலாளர்களும் கலந்து கொள்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மகாநாட்டின் ஒருங்கிணைப்பாளர்கள் கடந்த பங்குனி மாதம் ஸ்ரீலங்கா விஜயம் செய்து பசில் ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் போகொல்லாகம, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் டாக்கடர் பாலித கோகன்ன ஆகியோருடன் 3 நாட்கள் மாநாட்டில் கலந்து கொண்டதுடன், செட்டிக்குளம் தடுப்பு முகாம்களுக்கும் விஜயம் செய்தது குறிப்பிடத்தக்கது. இவ் விஜயத்தில் ஜக்கிய இராச்சியம், கனடா, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், ஜேர்மனி, சவுதி அரேபியா, சுவிற்சலாந்து, டென்மார்க் ஆகிய நாடுகளில் இருந்து 21 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

வெளிநாடுகளுக்கு விஜயம் செய்யும் இலங்கை அரசின் அதிகாரிகளை தனிப்பட்டரீதியில் சந்தித்து பேசுவதை தவிர்த்து, ஒரு சர்வதேச அமைப்பாக இயங்குவதே இக்குழுவின் முக்கிய நோக்கம்.

மார்ச் மாதத்தில் கொழும்பில் இடம்பெற்ற மாநாட்டை தொடர்ந்து தற்போது அவுஸ்திரேலியாவில் இக்குழு இயங்கத் தொடங்கியுள்ளது. ஜரோப்பாவில் அமையவிருக்கும் இக்குழு அவுஸ்திரேலியா மற்றும் ஏனைய நாடுகளில் அமையவிருக்கும் குழுவுடன் இணைவாக பணிபுரியும் எனத் தெரியவருகின்றது.

வன்னி முகாம்களின் நிலை தொடர்ந்தும் மோசமானதாக உள்ள நிலையில் ஏற்பாட்டாளர்கள் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.