கொட்டதெனிய கொள்ளைச் சம்ப வம் தொடர்பாக விசா ரணை நடத்துவதற்கென மூன்று விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர நேற்றுத் தெரிவித்தார்.
சிறைச்சாலையிருக்கும் முக்கிய புள்ளி ஒருவருக்கு இப்பாரிய கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்பிருப்ப தாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இதேவேளை, இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற ஒருவரே இக் கொள்ளையை திட்டமிடுவதில் பிரதான சூத்திரதாரியாக செயற்பட்டிருக்க வேண்டு மெனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றிருக்கும் மேற்படி தகவல்களை அடிப்படையாக வைத்து கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேகநபர்களிடமும் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்டிருக்கும் நால்வரையும் தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரணைகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.
அதேவேளை, பணத்தை வான் ஒன்றில் கொழும்புக்கு எடுத்து வந்த ஐந்து பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்பாகவும் பொலிஸார் விசாரணை நடத்தி வருவதுடன் அவர்களது கையடக்கத் தொலைபேசியிலுள்ள இலக்கங்கள் குறித்தும் பரிசீலித்து வருகின்றனர்.
தப்பியோட முயற்சித்தவேளை கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களிடமிருந்தும் மயக்க மருந்து, மிளகாய்த்தூள் பொட்டலம் மற்றும் பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் கூறினர்.
கொட்டதெனியவில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இப்பாரிய கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குருணாகலில் இருந்து கொழும்புக்கு இரு நிறுவனங்களின் 10 கோடி ரூபா பணம் வாகனமொன்றில் எடுத்து வரப்பட்டபோதே திட்டமிட்டகொள்ளைக் கும்பல் இதனை ஆயுதமுனையில் செய்துள்ளது. அப்போது, அவ்வழியாக பொலிஸ் வாகனமொன்று வந்துள்ளது. அதனைக் கண்டதும் இரு கொள்ளையர்கள் ஒன்றரைக்கோடி ரூபா பணத்தைக் கொண்ட பொதியை எடுத்துக்கொண்டு வாகனமொன்றில் ஏறித் தப்பிச் சென்றுள்ளனர்.
சந்தேகம் கொண்ட பொலிஸார் சம்பவ இடத்தை நெருங்கியபோது கொள்ளைக் கோஷ்டியைச் சேர்ந்த ஏனைய நால்வரும் ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளில் தப்பியோட முயன்றுள்ளனர்.
பொலிஸார் இந்நால்வரையும் சுமார் 8 1/2 கோடி ரூபா பணத்துடன் மடக்கிப் பிடித்துள்ளனர். இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு உரிய நிறுவனத்துக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பான தீவிர விசாரணைகளை முன்னெடுப்பதற்காக கொழும்பு குற்றத்தடுப்புப் புலனாய்வு அதிகாரிகள் கொட்டதெனிய பகுதிக்கு விஜயம் செய்துள்ளனர்.