2009

2009

தேக்கம்காடு மைதான சோதனைச் சாவடி மூடப்பட்டது

police-traffic-stop00.jpgவவுனியா தேக்கம்காடு பொது விளையாட்டு மைதானத்திலிருந்த வாகனச் சோதனை நிலையம் அகற்றப்பட்டுள்ளது. இதேநேரம், வவுனியாவிலிருந்து மதவாச்சி செல்லும் வாகனங்கள் ஈரற்பெரியகுளத்திலுள்ள சோதனைச் சாவடியில் வழமையான சோதனை நடவடிக்கையின் பின்னர் தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்படுமென பொலிஸார் தெரிவித்தனர்.

சுமார் ஒரு வருட காலம் இந்த வாகனச் சோதனை நிலையம் செயல்பட்டது. கொழும்பிற்கு வாகனங்கள் மூலம் வெடிபொருட்கள் கடத்திச் செல்லப்படுவதாகக் கூறியே வாகனங்களைச் சோதனையிடுவதற்காக பிரத்தியேக வாகனச் சோதனை நிலையம் அமைக்கப்பட்டது.

யுத்தம் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து இந்தச் சோதனை நிலையம் அகற்றப்பட்டுள்ளது.

தமிழ் தொழில் அலுவலர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் நிலவும் தமிழ் தொழில் அலுவலர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. தொழில் திணைக்களம் புதிதாக தமிழ் தொழில் அலுவலர்களை இணைத்துக்கொள்வதற்காக இந்த விண்ணப்பங்களை கோரியுள்ளது என தொழில் அமைச்சர் அதாவுத செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

இதற்கான போட்டிப் பரீட்சைகளை எதிர்வரும் நவம்பர் மாதம் கொழும்பில் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 20 தமிழ் தொழில் அலுவலர்களை சேர்த்துக்கொள்வதற் கான போட்டிப் பரீட்சைகள் தமிழ் மொழியில் மட்டுமே நடத்தப்படவுள்ளது.

போட்டிப் பரீட்சைகளில் தெரிவாகும் தொழில் அலுவ லர் வடக்கு கிழக்கு பகுதிகளிலுள்ள தொழில் திணைக்கள அலுவலகங்களிலும், நுவரெலியா, ஹட்டன், பதுளை, அப்பு த்தளை, கம்பளை, நாவலபிட்டி, கண்டி (வடக்கு) கண்டி (தெற்கு), மத்துகம, மாத்தளை, கேகாலை, அவிசாவளை, இரத்தினபுரி, பெல்மடுல்ல ஆகிய பகுதிகளில் ஆகக் குறைந்தது 10 வருடங்கள் கடமையாற்றவேண்டும். எக்காரணம் கொண்டும், இவர்களுக்கு உள்ளக மாற்றங்கள் பெற்றுக் கொடுக்கப்படமாட்டாது.

பரீட்சை திணைக்களத்தினால் நடத்தப்படும் இப்போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க வேண்டிய தகுதியுடை யோர் ஆகஸ்ட் 31ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும். மேற்படி போட்டிப் பரீட்சை தொடர்பான விபரங்கள் கடந்த ஜுலை 31ஆம் திகதிய அரசாங்க வர்த்தமானி அறிவித்தலில் பார்க்கலாம்.

21 ஆவது தேசிய விளையாட்டு விழா மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இரு தங்கப்பதக்கம்

basketball.jpg21 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் மட்டக்களப்பு மாவட்டம் சுவட்டு மைதான நிகழ்ச்சியில் இரண்டு தங்கப்பதக்கமும் ஒரு வெள்ளிப்பதக்கமும் இரண்டு வெண்கலப்பதக்கங்களையும் பெற்றுக் கொண்டதுடன், குழுப் போட்டியில் ஒரு வெள்ளிப்பதக்கத்தையும் ஒரு வெண்கலப்பதக்கத்தையும் பெற்றுள்ளது.  இளைஞர் விவகார அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடத்தும் 21 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா நேற்று நிறைவு பெற்றது.

கடந்த 31 ஆம் திகதி முதல் நேற்றுவரை பதுளை வின்சன் டைஸ் விளையாட்டு மைதானத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் நாயகம் பாஸ்வர சேனரங்க குணரத்ன தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

மட்டக்களப்பில் இருந்து கலந்துகொண்ட போட்டியாளர்களில் 21 கிலோமீற்றர் மற்றும் 20 வயதுக்குக் கீழ்ப்பட்ட பெண்களுக்கான 5000 மீற்றர் போன்றவற்றில் வவுணதீவுப் பிரதேசத்தைச் சேர்ந்த அ.யசோதா முதலிடம் பெற்று இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்றுக்கொண்டார்.

20 வயதுக்குக் கீழ்ப்பட்ட ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் களுவாஞ்சிக்குடிப் பிரதேசத்தைச் சேர்ந்த ச.ஜனகீரன் இரண்டாம் இடம்பெற்று வெள்ளிப்பதக்கத்தையும் 20 வயதுக்குக் கீழ்ப்பட்ட ஆண்களுக்கான பரிதி வீசுதல் போட்டியில் கலந்துகொண்ட களுவாஞ்சிக்குடி பிரதேசத்தைச் சேர்ந்த ஆ.கோகுலதாஸ் மூன்றாம் இடத்தினைப் பெற்று ஒரு வெண்கலப்பதக்கத்தினையும் 20 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான குண்டெறிதல் போட்டியில் ஏறாவூர் பிரதேசத்திலிருந்து கலந்துகொண்ட ஆர்.எஸ்.எம்.கிர்ஷான் மூன்றாம் இடம்பெற்று ஒரு வெண்கலப்பதக்கத்தினையும் பெற்றுக்கொண்டார்.

அத்துடன், ஆண்களுக்கான கபடி போட்டியில் மண்முனை வடக்கு பிரதேசத்தில் இருந்து கலந்துகொண்ட அணியினர் இரண்டாம் இடத்தினைப் பெற்று வெள்ளிப்பதக்கத்தினையும் ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டியில் ஏறாவூர் பற்று பிரதேசத்திலிருந்து கலந்துகொண்ட அணியினர் மூன்றாம் இடத்தினையும் பெற்று வெண்கலப் பதக்கத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

கரு ஜயசூரிய இன்று வவுனியா விஜயம்

karu.jpgவவுனியா நகர சபை தேர்தலுக்கான இறுதிக் கட்ட பிரசார நடவடிக்கையினை முன்னெடுப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய இன்று வவுனியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். வவுனியா செல்லும் அவர் சிவன் கோயிலில் விசேட வழிபாடுகளில் கலந்து கொள்ளவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவர் வவுனியா ரயில் நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள எல்மெரல் ஹோட்டலில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றையும் நடத்தவுள்ளதாக ஐ.தே.க. யின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

வவுனியா விஜயம் தொடர்பாக ஐ.தே.க. பிரதித் தலைவர் கரு ஜயசூய கூறுகையில், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களைத் தான் சந்திக்க உள்ளதுடன் பொதுமக்களையும் சந்தித்து பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளதாக அவர் கூறினார். 

வணங்கா மண் நிவாரணப் பொருட்களை இவ்வாரத்திற்குள் இறக்க ஏற்பாடு – இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தெரிவிப்பு

ship121212.jpgயுத்தத் தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்களால் வணங்கா மண் கப்பலின் ஊடாக அனுப்பப்பட்ட நிவாரணப்பொருட்களை, இவ்வாரத்திற்குள் இறக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது.

பொருட்களை இறக்கி, அதனை விநியோகிப்பதற்கு கொழும்புத் துறைமுகம் இணக்கம் தெரிவித்திருப்பதாகவும், இவ்வாரத்திற்குள் பொருட்களை இறக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் சுரேன் பீரிஸ் தெரிவித்தார்.

இலங்கைக்கு பாரியளவில் நிதி உதவி தேவைப்படுகிறது – கோத்தபாய

gothabaya.jpgயுத்தத் தினால் இடம்பெயர்ந்துள்ள பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உதவ இலங்கைக்கு பாரிய அளவில் சர்வதேச நிதியுதவி தேவைப்படுகிறது என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பி.பி.சி.க்கு அளித்த பேட்டி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் அமெரிக்கா, ஜப்பான் போன்றவை உட்பட நன்கொடை நாடுகளினால் உறுதியளிக்கப்பட்ட தொகையிலும் பார்க்க மிக அதிக தொகையை நாம் எதிர்பார்க்கிறோம். வடபகுதியில் அரசாங்கத்தினால் நடத்தப்பட்டு வரும் முகாம்களில் சுமார் மூன்று இலட்சம் மக்களுக்கு நிவாரணமளிப்பதற்காக இந்த உதவி தேவைப்படுகிறது. 

கதிர்காம தீமிதிப்பில் 100 பேர் படுகாயம்

katharakama.jpgகதிர்காமம் முருகன் கோவிலில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தீ மிதிப்பில் 100 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். இதில் 50 பேர் மோசமான எரி காயங்களுடன் கதிர்காமம் மற்றும் அம்பாந்தோட்டை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கதிர்காம முருகன் ஆலயத்திற்கு முன்னால் இடம்பெற்ற இத் தீ மிதிப்பு நிகழ்வில் 417 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் 100 பேர் வரை காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போதியளவு அனுபவமற்றவரும் ஆசாரங்களைக் கடைப்பிடிக்காதவருமான ஒருவரின் வழிகாட்டலில் தீ மிதிப்பு இடம்பெற்றமையே இவ்வசம்பாவிதம் நிகழ காரணமென கோவில் நிர்வாகமும் பொதுமக்களும் தெரிவிக்கின்றனர்.

நொச்சிமோட்டைப் பிரதேசத்தில் நாளை மீள்குடியேற்றம் ஆரம்பம்

sri-lankan-housing.jpgவவுனியா மெனிக்பார்மில் தங்கியுள்ள இடம்பெயர்ந்தவர்களில் 1500 பேரை ஒமந்தை நொச்சிமோட்டைப் பிரதேசத்தில் மீள்குடியேற்றும் நடவடிக்கைகள் நாளை ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

இப்பிரதேசங்களில் புலிகளால் புதைக்கப்பட்ட நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளதோடு பொது மக்கள்  பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் வீதிகள் புனரமைக்கப்பட்டு நீர் மற்றும் மின்சார வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மக்கள் சுதந்திரமாக நடமாடக்கூடிய வகையில் ஒமந்தைச் சோதனைச் சாவடியை அங்கிருந்து பின்வாங்கப்பட்டு வேறு இடத்தில் அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

யாழ்-கொழும்பு ஒருங்கிணைக்கப்பட்ட ரயில் பஸ் சேவை

bussss.jpgயாழ்ப் பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையில் ஒருங்கிணைக்கப்பட்ட ரயில் பஸ் சேவை ஒன்றை நடத்த போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது.  இத்திட்டத்தின் ஓர் அங்கமாக கொழும்பு கோட்டையில் இருந்து வவுனியா வரை ரயில்சேவை இடம்பெறுகிறது. இந்த ரயில் மூலம் யாழ்ப்பாணத்துக்கு பயணத்தை மேற்கொள்ளும் பயணிகள் வவுனியாவிலிருந்து பஸ் மூலம் எஞ்சிய தூரத்தை பயணிக்க இரண்டாம் கட்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதே போன்று யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் செல்கின்றவர்களும் முதலில் பஸ் மூலம் யாழ்ப்பாணத்திலுருந்து வவுனியாவுக்குச் சென்று அங்கிருந்து ரயில் மூலம் கொழும்பு நோக்கி புறப்படவேண்டும்.

யாழ் கொழும்பு பயணத்தை மேற்கொள்ளும் பயணிகளின் வசதி கருதி போக்குவரத்து அமைச்சு இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறது. வெகு விரைவில் இத்திட்டத்தை ஆரம்பிக்க உள்ளதாக போக்குவரத்து அமைச்சு மேலும் தெரிவிக்கின்றது.

தென் மாகாண சபை கலைக்கப்பட்டுள்ளது

election000.jpgதென் மாகாண சபை நேற்று நள்ளிரவுடன் கலைக்கப்பட்டுள்ளது. இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு அரச அச்சகக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த மாகாண சபையின் பதவிக் காலம், எதிர்வரும் 15ஆம் திகதியுடன் நிறைவடைய இருக்கின்ற நிலையிலேயே நேற்று நள்ளிரவுடன் கலைக்கப்பட்டுள்ளது. கலைக்கப்பட்ட தென் மாகாண சபை தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்வது மற்றும் தேர்தல் நடத்துவதற்கான திகதி குறித்து இன்னும் சில தினங்களுக்குள் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலைத் தவிர,  ஏனைய 7 மாகாண சபைகளின் பதவிக் காலம் நிறைவடைவதற்கு முன்னரே அந்த மாகாண சபைகள் கலைக்கப்பட்டு,  அவற்றிற்கான தேர்தல்கள் நடத்தப்பட்டதுடன்,  அதில் 6 மாகாண சபைகளில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றியீட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.