தென் மாகாண சபை நேற்று நள்ளிரவுடன் கலைக்கப்பட்டுள்ளது. இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு அரச அச்சகக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த மாகாண சபையின் பதவிக் காலம், எதிர்வரும் 15ஆம் திகதியுடன் நிறைவடைய இருக்கின்ற நிலையிலேயே நேற்று நள்ளிரவுடன் கலைக்கப்பட்டுள்ளது. கலைக்கப்பட்ட தென் மாகாண சபை தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்வது மற்றும் தேர்தல் நடத்துவதற்கான திகதி குறித்து இன்னும் சில தினங்களுக்குள் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலைத் தவிர, ஏனைய 7 மாகாண சபைகளின் பதவிக் காலம் நிறைவடைவதற்கு முன்னரே அந்த மாகாண சபைகள் கலைக்கப்பட்டு, அவற்றிற்கான தேர்தல்கள் நடத்தப்பட்டதுடன், அதில் 6 மாகாண சபைகளில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றியீட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.