January

January

புலிகளை அழித்ததால் நழுவிய மகிந்த ராஜபக்சவின் நோபல் பரிசு கனவு – மகன் நாமல் கவலை !

புலிகளை அழித்ததால் நழுவிய மகிந்த ராஜபக்சவின் நோபல் பரிசு கனவு – மகன் நாமல் கவலை !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுதலைப் புலிகளுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தால் அமைதிக்கான நோபல் பரிசை வென்றிருப்பார், ஆனால் அவர் செய்ய வேண்டியதைச் செய்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். .

“விடுதலைப் புலிகளை நசுக்கியதற்காக நாமும் எங்கள் பரம்பரையும் கூட கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்ற உண்மையை நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே அறிந்திருந்தோம். எத்தகைய சவால்களை எதிர்கொண்டாலும் நாங்கள் எமது அரசியலைத் தொடர்வோம் எனவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கஜாவின் அழைப்பை புறக்கணிக்கின்றது தமிழரசுக்கட்சி !

கஜாவின் அழைப்பை புறக்கணிக்கின்றது தமிழரசுக்கட்சி !

தமிழ் தேசிய மக்கள் முன்னணித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் சிவிகெ சிவஞானத்திடம் வழங்கிய அழைப்பை தமிழரசுக் கட்சி புறக்கணிக்கின்றது. கடந்த 27ஆம் திகதி, ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரிடையே இடம்பெறவிருந்த புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பான கலந்துரையாடல் தமிழரசுக்கட்சியினர் கலந்து கொள்ளாததால் கைவிடப்பட்டிருந்தது. தாங்கள் அடுத்த பெப்ரவரி 8 வரை தமிழரசுக்கட்சியின் முடிவுக்காக காத்திருப்பதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

கொள்கை ரீதியான இணக்கப்பாடு இல்லாமல் தமிழ் கட்சிகள் ஒன்றிணைவது தொடர்பில் சிந்திக்க முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் தெரிவித்தார். ‘நாங்கள் முயற்சிகள் எடுத்தோம் தமிழரசுக் கட்சி ஐக்கியத்திற்குத் தயாரில்லை. எம் ஏ சுமந்திரன் ஐக்கியப்பட விடுகிறார் இல்லை’ என்று ஒரு கதையாடலை இதன் மூலம் அவிழ்த்துள்ளார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, அரசியலமைப்பு ஒற்றையாட்சி முறைமையாக அமைய போகிறது. அந்த நிலையில் தமிழர் தரப்பில் நாடாளுமன்றில் உள்ள 19 உறுப்பினர்களில் குறைந்த பட்சம் 10 உறுப்பினர்களாவது ஒன்றிணைந்து வரவுள்ள ஒற்றையாட்சியை எதிர்க்க வேண்டும். கட்சிகள், உறுப்பினர்கள் மற்றும் கொள்கைகள் மீது பலருக்கும் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் தமிழ் மக்களின் இருப்பை இல்லாதாக்கும் அரசியலமைப்பை தமிழ் மக்களாக நாம் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும். ஒற்றையாட்சி சிந்தனையோடு வரும் எந்த அரசியலமைப்பை ஏற்க முடியாது. சமஷ்டி தீர்வை மாத்திரமே ஏற்றுக்கொள்வோம். சமஷ்டி என்பதில் எந்த ஒளிவுமறைவும் இன்றி நேரடியாக சமஷ்டி தீர்வாகவே தீர்வுத்திட்டம் முன் வைக்கப்பட வேண்டும் என்றார்.

நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் ஊடகங்களிடம் பேசியிருந்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், சமஷ்டி தொடர்பில் பெரிதாக நாம் அலட்டிக்கொள்ள போவதில்லை என்றும் மாறாக தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சனைகள் தொடர்பில் தான் நாம் அதிக கவனம் செலுத்த முயற்சிக்கிறோம் என தெரிவித்திருந்ததும் கவனிக்கத்தக்கது

‘கல்விச் செயற்பாடுகளைத் சீர்குலைக்க வேண்டாம் – வேலை நிறுத்தத்தை நிறுத்துங்கள்’ அமைச்சர் உத்தரவு

‘கல்விச் செயற்பாடுகளைத் சீர்குலைக்க வேண்டாம் – வேலை நிறுத்தத்தை நிறுத்துங்கள்’ அமைச்சர் உத்தரவு

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் விவகாரத்தில் அரசாங்கம் தீர்வை வழங்கும். எனவே வேலை நிறுத்தங்களில் ஈடுபடாது கல்வி செயற்பாடுகளை தடையின்றி முன்னெடுத்துச் செல்ல ஒத்துழைக்குமாறு அரசாங்கம் கோரியுள்ளது. நேற்று செவ்வாய்கிழமை (28) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து அறிக்கையொன்றைக் கோருவதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டது. கல்வி அமைச்சு வெகு விரைவில் இவ்விவகாரத்தில் தலையிட்டு பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்கும். எனவே எவ்வித வேலை நிறுத்தங்களும் இன்றி பல்கலைக்கழக நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லுமாறு கோருகின்றோம். எந்தவொரு பிரச்சினைக்கும் வேலை நிறுத்தங்களுக்குச் செல்வதற்கு முன்பு எம்முடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க முடியும் எனவும் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

விரிவுரையாளர்களானாலும், மாணவர்களானாலும் எந்த சந்தர்ப்பத்திலும் எம்முடன் கலந்துரையாட முடியும். அரசாங்கத்துடன் கலந்துரையாடுவதற்கு யாருக்கும் எவ்வித தடைகளோ கட்டுப்பாடுகளோ இல்லை. கடந்த காலங்களில் பல்வேறு காரணிகளுக்காக வேலை நிறுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதால் கல்வி கற்பதற்குரிய சந்தர்ப்பங்கள் இழக்கப்பட்டுள்ளன. எனவே பல்கலைக்கழக கட்டமைப்பில் எவ்வித பிரச்சினைகளையும் ஏற்படுத்தாமல், கல்வி செயற்பாடுகளை தடையின்றி முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதே எமது தேவையாகும். அதற்கு தேவையான சகல ஒத்துழைப்புக்களையும் நாம் வழங்குவோம் என்றார் அமைச்சர் நளிந்த.

கலைப்பீடாதிபதி சி ரகுராம், தான் எடுத்த முடிவுக்கு எதிராக பேரவை முடிவெடுத்ததால் கொதிப்படைந்து போட்ட நாடகமே பதவி விலகல். பின்னர் தன்னுடைய சார்பு மாணவர்களைத் தூண்டிவிட்டு, மீண்டும் பதவிக்கு வர கோரிகை வைக்கும் போராட்டத்தை முன்னெடுத்தார். அதற்காக ஆசிரியர் சங்கத்தில் சி ரகுராமுக்கு ஆதரவாக நின்ற காமுகப் பேராசிரியர்கள் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்க, ஏனையவர்களும் வேறு வழியின்றி களத்தில் இறங்க வேண்டியதாயிற்று.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் மாணவிகள் மீது திணிக்கப்பட்டுள்ள பாலியல் லஞ்சம், அங்குள்ள பெண் விரிவுரையாளர்கள் எதிர்கொள்கின்ற பாலியல் லஞ்சம் மற்றும் மோசடிகள் தொடர்பில் சுயாதீன விசாரணை ஒன்றுக்கு கல்வி அமைச்சு உத்தரவிட வேண்டும். உயர்கல்வி வரை இலவசக் கல்வி. ஆனால் பட்டதாரி மாணவர்கள் பேராசிரியர்களின் பழிவாங்கல்களால் மாதக் கணக்கில் வகுப்புத் தடை போடப்படுகின்றனர். தற்போது மாணவர் ஒன்றியத் தலைவர் எஸ் சிவகஜனுக்கு எழுந்தமானமாக வகுப்புத் தடை வழங்கப்பட்டுள்ளது. முன்னர் சி ரகுராமின் செல்லப்பிள்ளையாக இருந்த எஸ் சிவகஜனுக்கும் கலைப்பீடாதிபதி ரகுராமிற்கும் இடையேயான முரண்பாடு, தற்போது போதைப் பொருளுக்கு எதிரானதாக காண்பிக்கப்பட்டு வருகின்றது.

அண்மைய யாழ் பல்கழலக்கழகப் போராட்டம் பெயரளவில் போதைப்பொருளுக்கு எதிரானது என கலைப்பீடாதிபதி ரகுராம் தரப்பால் சொல்லப்பட்டாலும், இப்போராட்டம் முற்றிலுமாக சி ரகுராமின் தனிப்பட்ட நலன்களை முன்நிறுத்தியும், கலைப்பீடாதிபதி ரகுராமிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைப் பழிவாங்கவுமே மேற்கொள்ளப்படுகின்றது. யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும் மாணவர்களின் நலன்களை முன்நிறுத்தாமல், தனிப்பட்ட கலைப்பீடாதிபதியின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளை நியாயப்படுத்தவே போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

இவ்விடயத்தில் அரசு தனது உத்தரவை மிகத் தெளிவாக அறிவுறுத்தியுள்ளது. கடந்த காலங்களில் இவ்வாறான செயற்பாடுகளால் கல்வி கற்றலுக்கான சந்தர்ப்பங்கள் இழக்கப்ட்டுள்ளது. இதனை இனிமேலும் தொடரமுடியாது என அமைச்சர் கோடிட்டு மிகத் தெளிவாகக் காட்டியுள்ளார். நாளை பேரவைக் கூட்டத்தில் இறுதியான முடிவெடுக்கப்படும் எனத் தெரிகின்றது.

படிப்பிக்க மாட்டோம்’ யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ! ‘வேலையில்லாமல் இருக்க இவர்களும் தான் காரணம்’ வேலையற்ற பட்டதாரிகள் 

படிப்பிக்க மாட்டோம்’ யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ! ‘வேலையில்லாமல் இருக்க இவர்களும் தான் காரணம்’ வேலையற்ற பட்டதாரிகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நேற்று முன்தினம் முதல் காலவரையின்றி விரிவுரைகளை புறக்கணித்து மாணவர்களுக்கு எதிரான தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பேராசிரியர் ரகுராம் மீள கலைப்பீடாதிபதி பதவியை ஏற்க வேண்டும், விதிமுறை மீறல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிராக பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் கடந்த காலத்திலே உறுதியான நடவடிக்கைகளை எடுக்க தவறியமை குறித்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள பெருமளவான வேலையில்லா பட்டதாரிகளை தொழில் உலகிற்கு ஏற்ற திறன்கள் இல்லாமைக்கு பொறுப்புகூற வேண்டியவர்கள் இந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட பேராசிரியர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அண்மையில் வடக்கு கிழக்கில் உள்ள பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புக்களை வழங்குமாறு கோரிய போராட்டங்களில் ஈடுபட்ட பட்டதாரி ஒருவர் தேசம்நெட்க்கு தெரிவிக்கையில், இறுதியாக வழங்கப்பட்ட அரச நியமனங்களில் எமது வயது ஒத்த – பிரிவை சேர்ந்த ஏனைய பல்கலைக்கழகங்களில் கற்றவர்களுக்கு நியமனம் கிடைத்த போதும் என்னுடன் கிட்டத்தட்ட 400ற்கும் அதிகமானோருக்கு நியமனம் வழங்கப்படவில்லை. காரணம் பல்கலைக்கழக கல்வியை முடிக்க காலதாமதமானதே காரணம். இதற்கான காரணம் விரிவுரையாளர்களின் சம்பள உயர்வு கோரிய போராட்டங்கள், வினாத்தாள் திருத்தங்களுக்காக மூன்று அல்லது நான்கு மாதங்கள் எடுக்கும் விரிவுரையாளர்களின் சோம்பேறித்தனம், தேவையற்ற வகுப்புத் தடைகள் போன்றனவே காரணம் என விசனம் வெளியிட்டிருந்தார்.

விரிவுரையாளர்கள் ஆடம்பரமான வாழ்க்கை கவர்ச்சிகரமான சம்பளம் என திளைக்கிறார்கள். ஆனால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு கற்க வரும் பெரும்பாலான மாணவர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகள். போரால் பாதிக்கப்பட்ட பகுதிகள் – வறுமையான குடும்பங்கள் ஆகியவற்றை சேர்ந்தவர்கள். இவர்களுக்கான கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்காமல் தமது இஷ்டத்துக்கு போராட்டங்கள் செய்து மாணவர்களின் எதிர்கால வாழ்வை சீரழிக்கும் விரிவுரையாளர்களுக்கு எதிராக பல மாணவர்களும் தமது அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர்.

அதே நேரம் ஜனாதிபதி அனுரா யாழ் வருகையை மேற்கொள்கையில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை மேற்கொள்ள யாழ் வேலையற்ற பெரும்பாலும் கலைப்பீடப் பட்டதாரிகள் ஈடுபடவுள்ளதாக அவர்களின் சார்பில் பேசவல்ல கெ டெனீஸன் தெரிவித்துள்ளார். இச்சங்கத்தினர் அரசாங்கம் எவ்வித போட்டிப் பரீட்சைகளும் இன்றி திறமைகள் பற்றிய நேர்காணல்களுமின்றி தங்களுடைய பட்டப்படிப்பு சான்றிதழுக்கு வேலை வழங்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். கடந்த கால அரசுகள் காலத்துக்கு காலம் தங்கள் வாக்கு வங்கியை நிரப்புவதற்கு அரச பணிகளில் லட்சக்கணக்காணோரை நியமித்து நாடு அவர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கே தள்ளாடும் நிலையை ஏற்படுத்தி உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான ஒரு வேண்டுகோளை கிழக்கு மாகாண வேலையில்லாப் பட்டதாரிகள் சங்கம் கிழக்கு ஆளுநரிடம் முன்வைத்த போது அவர் அதனை ஏற்க மறுத்துவிட்டார். புதிய ஆட்சேர்ப்புக்கள் வருகின்ற பட்சத்தில் துறைசார்ந்தே முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தற்போது முன்வைத்துள்ள கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவித்தார். வரப்போகும் வேலை வாய்ப்புகளுக்கு பலரும் ஆர்வம் காட்டுவதால் அரசு நியாயமான முறையில் நடந்துகொள்ளும் மற்றவர்களுக்கும் வாய்ப்பளிக்கப்படும் எனவும் அங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இரண்டரை லட்சத்துக்கு ஏலம் போன ஒரு மாம்பழமும் ! புலம்பெயர் செல்வச் செருக்கை காட்ட வழிவிடும் ஆலயங்கள் !

இரண்டரை லட்சத்துக்கு ஏலம் போன ஒரு மாம்பழமும் ! புலம்பெயர் செல்வச் செருக்கை காட்ட வழிவிடும் ஆலயங்கள் !

புத்தூர் கலைமதி ஆலடி முருகன் ஆலயத்தில் மாம்பழம் ஒன்று 2 இலட்சத்து 46 ஆயிரம் ரூபாவுக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.

ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் ஐந்தாம் நாள் மாம்பழத் திருவிழாவில் ஏலம் விடப்பட்ட மாம்பழமே இவ்வாறு விற்பனையாகியுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதமளவில் வவுனியா, உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவின் போது மாம்பழமொன்று 2,85,000 ரூபாய்க்கு ஏலத்திற்கு விற்பனை செய்யப்பட்டிருந்தமையும் கவனிக்கத்தக்கது.

அண்மைய காலங்களில் புலம்பெயர் தேசங்களில் இருந்து வருகை தரும் பலர் தங்களது பணச்செருக்கை காண்பிக்க ஆலயங்களில் பல லட்சங்களில் சேலை வாங்குதல், மாம்பழம் வாங்குதல், கோயில்களின் வரலாற்று சிறப்பை சிதைத்து கோயில்களை இடித்து பெரிதாக்க நிதியுதவி வழங்கல் போன்ற இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.

போரால் பாதிக்கப்பட்ட ஓர் மக்கள் கூட்டம் வாழும் நிலத்தில் அடிப்படை வாழ்க்கை செலவுகளை கூட நடாத்தி முடியாமல்- பிள்ளைகளின் கல்வி செலவை கொண்டு நடாத்த முடியாமல் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் திண்டாடிக்கொண்டிருக்கும் நிலையில், புலம்பெயர்ந்து சென்ற சிலருடைய ஆடம்பரமான நடவடிக்கைகள் தொடர்பில் பலரும் விசனம் வெளியிட்டு வருவதையும் அவதானிக்க முடிகிறது.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்துக்கு உட்பட்ட 15 பிரதேச செயலர் பிரிவுகளில் போதிய உணவு இன்றி 13 ஆயிரத்து 888 பேர் உள்ளனர் என்று 2023ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம் வெளியிட்டிருந்த புள்ளிவிவரங்கள் தெரிவித்திருந்தன

மேலும் யாழ் . மாவட்டத்தில் போதிய உணவில்லாது இருப்போர் பட்டியலில் ஊர்காவற்றுறைப் பிரதேச செயலகம் முதலிடத்தில் உள்ளது எனவும் புள்ளிவிபரங்கள் வெளியாகியிருந்ததுடன் யாழ்ப்பாண மாவட்டத்தில் மந்த போசணை உள்ளவர்கள் எட்டாயிரத்துக்கு அதிகம் எனவும் குறித்த மாவட்ட செயலக புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டியிருந்தன.

நிறைவெறியில் தள்ளாடும் இலங்கை பொலிஸ் அதிகாரிகள் – இடமாற்றம் போதுமா?

நிறைவெறியில் தள்ளாடும் இலங்கை பொலிஸ் அதிகாரிகள் – இடமாற்றம் போதுமா?

இரு நாட்களுக்கு முன்பாக, கிளிநொச்சி ஏ9 பிரதான வீதியில் அம்மாச்சி உணவகத்திற்கு முன்பாக உள்ள பாதசாரி கடவையில் வீதியின் மறுபக்கத்திற்கு கடக்க முற்பட்ட வயோதிப பெண் ஒருவரை உந்துருளியில் பயணித்த பொலீஸார் மோதியத்தில் தலையில் படுகாயமடைந்த பெண் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். உந்துருளியில் பயணித்த இரண்டு போலீஸாரும் அதிக மது போதையில் காணப்பட்டனர். அவர்கள் பயணித்த உந்துருளியில் மதுபானங்கள் இருந்தன என தகவல்கள் வெளியாகியிருந்தன.

பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக யாழில் குடி போதையில் சிவிலில் வந்த பொலிஸார் போட்ட ரவுடித்தனம் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

வரகாபொல, தொலங்கமுவ பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்றின் மீது பொலிஸ் கெப் வண்டியால் மோதிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற குற்றத்திற்காக உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டபோது சந்தேகநபரான உப பொலிஸ் பரிசோதகர் மதுபோதையில் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

அண்மையில் பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் அதிகாரிகள் சிலர் மது போதையில் உறங்குவது போன்ற காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பாரிய சர்ச்சையா மாறியிருந்தது. எனினும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இரு பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்திருந்தார்.

இதேவேளை பொலிஸ் அதிகாரிகள் சட்டத்துக்குப் புறம்பான வகையில் செயற்படுகின்ற போது வெறுமனே இடமாற்றம் மட்டுமே தண்டனையாக வழங்கப்படுவதாக பலரும் அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர்.

இராணுவம் ஆக்கிரமித்த காணிகள் தொடர்பில் அறியத் தாருங்கள் – விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் ! பா.உ திலகநாதன் !

இராணுவம் ஆக்கிரமித்த காணிகள் தொடர்பில் அறியத் தாருங்கள் – விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் ! பா.உ திலகநாதன் !

இராணுவம் மற்றும் கடற்படையின் ஆக்கிரமிப்பில் உள்ள பொது மக்களின் காணி விபரங்களை ஒப்படைத்தால் அவற்றை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ. திலகநாதன் வவுனியாவில் ஒருங்கிணைப்பு அலுவலகம் திறந்து வைக்கும் நிகழ்வில் தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் இராணுவத்தினர் தமது தேவைக்காக வன்னிப் பிரதேசத்தில் கையகப்படுத்திய பிரதேசங்களை படிப்படியாக எமது அரசாங்கம் விடுவித்து வருகின்றது. கடந்த காலங்களிலும் இவ்வாறான காணிகளையும் எமது அரசாங்கம் விடுவித்து இருந்தது என குறிப்பிட்டுள்ள பா.உ திலகநாதன், கடந்த வாரமும் இராணுவம் மற்றும் கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்கள் தொடர்பான விரங்களை சேகரித்து இருந்தோம். எனவே அவ்வாறு கையகப்படுத்தப்பட்ட இடங்கள் இருக்குமாக இருந்தால் அது தொடர்பான விபரங்களை எமக்கு தந்துதவுமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம். அவ்வாறான இடங்களை மிக விரைவில் விடுவித்து மக்களுடைய பாவனைக்கு வழங்குவதற்கான நடவடிக்கையை எடுக்கவுள்ளோம்.“ என தெரிவித்தார்.

மகிந்த ராஜபக்சவின் உடல் பொது மக்கள் பார்வைக்காக பாதுக்காக்கப்பட வேண்டும் – மகிந்த ராஜபக்ச சகா !

மகிந்த ராஜபக்சவின் உடல் பொது மக்கள் பார்வைக்காக பாதுக்காக்கப்பட வேண்டும் – மகிந்த ராஜபக்ச சகா !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உடல் எதிர்கால சந்ததியினருக்காக பொதுமக்கள் பார்வைக்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்று முன்னாள் துணை சபாநாயகர் அஜித் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

30 ஆண்டுகால உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததற்காக மஹிந்த ராஜபக்ச நாட்டின் புகழ்பெற்ற நபராக மாறினார் என தெரிவித்த அஜித் ராஜபக்ச, எனவே, அவரது மறைவுக்குப் பிறகு, மறைந்த சோவியத் தலைவர் விளாடிமிர் லெனின் மற்றும் வியட்நாமின் புரட்சிகரத் தலைவர் ஹோ சி மின் போன்ற மஹிந்த ராஜபக்சவின் உடல் பொதுமக்கள் பார்வைக்காக பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கனடாவுக்கு புலம்பெயர்ந்த விவசாயதுறைசார் அறிஞர் யாழில் மரணம்

கனடாவுக்கு புலம்பெயர்ந்த விவசாயதுறைசார் அறிஞர் யாழில் மரணம்

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து கனடாவில் வாழும் விவசாயத்துறை நிபுணர் டொக்டர் பொன்னுத்துரை ரவிச்சந்திரநேசன் யாழில் திடீர் மரணமடைந்துள்ளார். இவர் கனடா ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் விவசாய ஆராய்ச்சியாளராக பணிபுரிகிறார். கலாநிதி பொன்னுத்துரை ரவிச்சந்திரநேசன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் ஒரு் காலப்பயணமாக இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.

இவ்விஜயத்தின் போது ,, வடமாகாணத்தின் புவியியல் மற்றும் காலநிலை மற்றவர்கள் “ தொடர்பிலான சொற்ப்பொழிவுகளை நிகழ்த்த இருந்தார். அவ்வாறான ஒரு சொற்பொழிவை ரவிச்சந்திர நேசன் கடந்த 25 ஆம் திகதி ஜனவரி யாழ்ப்பாண வேளாண் மையத்தில் நிகழ்த்திக் கொண்டிருந்த வேளையில் மயக்கமுற்று விழுந்து இறந்துள்ளார்.

இவர் யாழ்ப்பாணம் கோப்பாய் – கட்டைப் பகுதியை பூர்வீகமாக கொண்டவர். டொக்டர் ரவிச்சந்திரனின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் வட மாகாண அமைச்சருமான பொன்னுத்துரை ஐங்கரநேசனின் சகோதரர் ஆவார். இவர் இடதுசாரி கருத்தியல்பால் கொண்ட ஈடுபாட்டால் “வைகறை” என்ற பத்திரிகையை நடத்தி வந்ததாகவும், அதனால் அவர் வைகறை ரவி என்றும் அழைக்கப்பட்டார்.

நாய்க்கு தூக்கு தண்டனை கொடுத்த பெண் முல்லையில் கைது !

நாய்க்கு தூக்கு தண்டனை கொடுத்த பெண் முல்லையில் கைது !

 

தன் வீட்டு ஆட்டை கடித்த நாய் ஒன்றை தூக்கிலிட்டு கொலை செய்த சம்பவம் தொடர்பில் வடமாகாணம் – மாங்குளத்தை சேர்ந்த 48 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அண்மையில், ஒட்டுசுட்டானில் உள்ள இணக்கச்சபை ஒன்றில் விசித்திரமான தீர்ப்பு வழங்கப்பட்டதாகவும் அதில் நாய் ஒன்று தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும் சமூக ஊடகங்களில் பதிவு ஒன்று அதிகம் பகிரப்பட்டு வந்தது.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.