2025

2025

வடக்கு மாகாண கல்வி அமைச்சில் உணவிலும் ஊழல் மோசடி – ஆசிரியர் முன்சேவை பயிற்சியில் பல மில்லியன் ஊழல்.?

மாணவர்களுக்கான இலவச உணவில் ஊழல், பெண் ஆசிரியர்களிடமும் அடாவடி- கொட்டடி அதிபருக்கு எதிராக அனுரவிடம் முறைப்பாடு

ஊழலில் ஈடுபட்டுவந்த யாழ். கொட்டடி நமசிவாய வித்தியாலய அதிபர் வினாசித்தம்பி சிவனேசனுக்கு எதிராக ஜனாதிபதி அனுர குமாரதிசநாயக்கவிடம் கடிதம் மூலம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 7 வருடங்களுக்கும் மேலாக அங்கு பணியாற்றும் அதிபர் வி. சிவனேசன் மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச உணவு உட்பட பல்வேறு விடயங்களில் முறைகேடு செய்துள்ளார். இது தொடர்பில் இரு வருடங்களுக்கு முன்பே எழுத்து மூல முறைப்பாட்டை பாடசாலையின் பழைய மாணவர்கள், பெற்றோர் மற்றும் சமூக மட்ட அமைப்பினர் இணைந்து ஆளுநருக்கு வழங்கியிருந்தபோதும் உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இதையடுத்தே ஜனாதிபதிக்கு இதுகுறித்து கடிதம் மூலம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தாய்மையடைந்திருந்த ஆங்கில ஆசிரியர் ஒருவரை மலசல கூடத்தில் வைத்து பூட்டியமை, பெண் ஆசிரியர் ஒருவரை மாணவர்கள்  முன்னிலையில் அடிக்க முற்பட்டமை போன்ற குற்றச்சாட்டுகளும் அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவங்கள் தொடர்பில் வலயக்கல்வி பணிமணைக்கு புகாரளிக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக இவற்றைத் தட்டிக்கேட்கும் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிபரின் வினைத்திறனற்ற செயற்பாட்டால் மாணவர்களது எண்ணிக்கையும் வீழ்ச்சி அடைந்துள்ளது. 2015இல் 400 மாணவர்களாக இருந்த தொகை 2022இல் 202 ஆக குறைவடைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 6மாணவர்கள் மாத்திரமே தரம் 1இல் சேர்ந்துள்ளனர்.

வடக்கில் கஸ்டப் பிரதேச பாடசாலைகளை முன்வைத்து இவ்வாறான பல ஊழல் முறைகேடுகள் தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றன. இவற்றில் கோட்டக்கல்வி, வலயக்கல்வி என மேல்மட்டத்தினரும் தொடர்புபட்டிருப்பதால் இவை மூடிமறைக்கப்படுகின்றன என தேசம்நெற்க்கு ஆசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த நிலை தொடர்பில் மேலும் குறிப்பிட்ட அந்த ஆசிரியர்.  பாடசாலையில் வழங்கப்படும் இலவச உணவுக்காக பாடசாலை செல்லும் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட மாணவர்கள் பலர் வடக்கில் உள்ளனர். இவர்கள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளமையை கவனத்தில் கொண்டே உலக உணவுத்திட்டத்தின் ஏற்பாட்டிலும் மேலும் பல புலம்பெயர்  தன்னார்வ அமைப்புக்களின் ஏற்பாட்டிலும் மாணவர்களுக்கான இலவச உணவுத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. சத்துணவாக முட்டை, மீன், நெத்தலி ஆகியவற்றை கட்டாயமாக உள்ளடக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தாலும் கூட பல பாடசாலைகளில் இவை நடைமுறைப்படுத்தப்படுவது கிடையாது. உதவித்திட்டங்களை வழங்குவோர் கண்காணிப்பு விஜயங்களை மேற்கொள்ளும் போது விதவிதமான உணவுகள் வழங்கப்படுகின்றது. குறித்த உணவுக்கான பணம் ஏதோ ஒருவகையில் களவாடப்படுகிறது. சில பாடசாலைகளில் மாணவர்களின் இலவச உணவுக்காக வழங்கப்படும் பணத்தில் தான் மதில் கட்டுதல் தொடங்கி ஆசிரியர் அதிபர் கௌரவிப்பு விழாக்கள் நடத்தப்படுகிறது என தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் கல்வி அமைச்சில் பல குறைபாடுகள் காணப்படுவதாக வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன், வன்னி மாவட்ட தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களான ஜெகதீஸ்வரன், திலகநாதன் ஆகியோர் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருவதும் கவனிக்கத்தக்கது. அண்மையில் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்ட வடக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கான முன்சேவைப்பயிற்சி செயலமர்வுகள் கோப்பாய் தேசிய கல்வியற்கல்லூரியில் நடைபெற்றிருந்தது. 10 நாட்களுக்கான மொத்த செலவு சுமார் 90 லட்சம் ரூபாய் என வடக்கு மாகாண கல்வி திணக்கள பணிப்பாளர் நிகழ்வு அங்குரார்ப்பண விழாவில் தெரிவித்திருந்ததாகவும் எனினும் உணவின் தரம் மிகக்கீழான நிலையில் காணப்பட்டதாகவும் பல ஆசிரியர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.நாளொன்றுக்கு ஆசிரியர் ஒருவருக்கான உணவுக்கான பணம் ரூபாய் 2000 வரை செலவிடப்படுதாக கூறிய போதும் கூட அதற்கேற்றதான உணவு வழங்கப்படவில்லை என ஆசிரியர்கள் சிலர் முன்சேவை பயிற்சி காலத்தின் போதே ஏற்பாட்டுக்குழுவினருடன் முரண்பட்டுள்ளதையும் அறிய முடிகிறது. எனினும் இது தொடர்பில் பயிற்சிக்காக அழைக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களிடம் பேசிய வடக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் பணிப்பாளர் திரு கந்தையா பிரட்லி ஜெனட் ஆசிரியர்கள் தாபன விதிக்கோவைக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் எனவும் அது மீறினால் கடுமையான சூழ்நிலைகளை சந்திக்க வேண்டி வரும் எனவும் பகிரங்கமாக எச்சரித்திருந்தததாக அறிய முடிகிறது. குறித்த முன்சேவை பயிற்சி செயற்றிட்டத்தில் சுமார் 20 லட்சம் ரூபாய் வரையில் ஊழல் இடம்பெற்றுள்ளதாகவும்  அறிய முடிகிறது.

ஊழல் மலிந்து போயுள்ள வடக்கின் அனைத்து அரச துறைகளிலும் தான் முதலில் சிஸ்டம் சேஞ்ச் வரவேண்டும் என அண்மையில் தேசம் திரை நேர்காணலில் முன்னாள் பேராசிரியர் சுப்பிரமணியம் சிவகுமார் தெரிவித்திருந்தார். பாசாலை அதிபர் தொடங்கி மாகாண கல்வி திணைக்களத்தின் அதிகாரிகள் வரை உணவுத்திட்டம் என்ற பெயரில் ஊழல் செய்வது கல்விச்சமூகத்தின் நிலை தொடர்பில் முகஞ்சுழிக்க வைத்துள்ளது. ஊழல் ஒழிப்பு என்ற கொள்கையுடன் நாட்டில் ஆட்சியேற்றுள்ள  புதிய அரசாங்கம் இவ்வாறான ஊழல்களுக்கு எதிராக கடும்நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது தொடர்பான முழுமையான தேசம் திரை காணொளிக்கு

போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் முறைப்பாடு அளிக்க E-Traffic செயலி !

போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் முறைப்பாடு அளிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள டிஜிட்டல் தளமான E-Traffic செயலியை இலங்கை காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த செயலி நேற்று (01) பொலிஸ் தலைமையகத்தில் பதில் பொலிஸ் மா அதிபர் (IGP), சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவினால் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. e-Traffic செயலியானது போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் தொடர்புடைய சம்பவங்களை நிகழ்நேரத்தில் புகாரளிக்க பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கிறது.

பயன்பாட்டின் கேமரா மற்றும் வீடியோ விருப்பங்களைப் பயன்படுத்தி பயனர்கள் குற்றங்களின் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களைப் பதிவேற்றலாம். இந்த சமர்ப்பிப்புகள் உடனடி நடவடிக்கைக்காக காவல்துறை தலைமையகத்திற்கு நேரடியாக அனுப்பப்படும்.

இந்த செயலியை இலங்கை காவல்துறையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் [www.police.lk](http://www.police.lk) பதிவிறக்கம் செய்யலாம்.

அமைச்சர் சரோஜா சாவித்திரி வெலிக்கடை சிறைச்சாலைக்கு கண்காணிப்பு விஜயம் !

சிறுவர்கள் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி பால்ராஜ் புத்தாண்டு (2025) முதல் நாளில் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர், அங்குள்ள பெண் கைதிகளை சந்தித்துத்து பேசினார்.

பெண் கைதிகளின் நலன்கள் மற்றும் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்த அமைச்சர், அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களுடன் பரிசுகளையும் வழங்கினார்.

சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரதி அமைச்சர் கலாநிதி நாமல் சுதர்ஷன, அமைச்சின் செயலாளர் கே.டி. ஆர். ஓல்கா மற்றும் அவரது அமைச்சின் ஏனைய உயர் அதிகாரிகளும் இந்த விஜயத்தில் பங்கெடுத்தனர்.

கல்விக்காக ஒதுக்கப்படும் ஒவ்வொரு மூலதனத்தையும் நாட்டின் எதிர்கால முதலீடாகவே நாம் பார்க்கின்றோம்.  – பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

உயர் கல்வியைப் பெறும் பிள்ளைகள் பாடசாலையிலிருந்து விலகுவது தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டுமெனவும் எந்தவொரு காரணங்களுக்காகவும் பிள்ளைகளுக்கான கல்வி சந்தர்ப்பங்கள் தவிர்க்கப்படுவது நிறுத்தப்பட வேண்டுமெனவும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

மஹரகம தேசிய கல்வி நிறுவனத்திற்கு அண்மையில் கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்ட போதே பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் ஹரினி அமரசூரிய,

தற்காலத்தில் பாடசாலைகளில் உயர்தர வகுப்புகளில் பிள்ளைகள் தொடர்ச்சியாக இருப்பது மிகவும் குறைவாகவே உள்ளது. விசேடமாக ஆண் பிள்ளைகள் கல்வி செயற்பாடுகளிலிருந்து விலகிச் செல்வது அதிகரித்துள்ளது. எந்தவொரு சமூக பொருளாதார காரணங்களை அடிப்படையாக கொண்டும் பிள்ளைகளுக்கான கல்வி சந்தர்ப்பங்கள் தவிர்க்கப்படுவதற்கு இடமளிக்கக்கூடாது. குழந்தை பருவ வளர்ச்சியிலிருந்து 13 வருடகால பாடசாலை கல்வி உட்பட உயர் கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்புக்கள் அனைத்து பிள்ளைகளுக்கும் பகிரங்கமாக காணப்பட வேண்டும். தனிநபர் மற்றும் சமூக பரிணாமத்தை ஏற்படுத்துவதை கல்வியின் பிரதான இலக்காகக்கொள்வது  மிக முக்கியமாகும்.

மக்கள் கோரிய சமூக பரிணாமத்தை முன்னெடுப்பதற்கென பரிணாமமடைந்த கல்வி மாற்றத்தை மேற்கொள்வதன் ஊடாக இந்த நாட்டின் பிள்ளைகளுக்கு புதிய உலகில் கால் பதிப்பதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு எமது அரசு செயற்படுகிறது. சமூகத்திற்கு பொறுப்புக்கூறும் பிரஜையை உருவாக்குவதற்கென கல்விக்காக ஒதுக்கப்படும் ஒவ்வொரு மூலதனத்தையும் நாட்டின் எதிர்கால முதலீடாகவே நாம் பார்க்கின்றோம்.

நீண்டகால பிரதிபலன்களைக் கொண்டுள்ள இந்த உணர்வுபூர்வமான வேலைத்திட்டங்கள் குறித்து தேசிய கல்வி நிறுவனத்திற்கு விசேட பொறுப்புக்கள் காணப்படுவதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மஞ்சுலா விதானபத்திரண பிரதி பணிப்பாளர் நாயகங்கள் பணிப்பாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

நத்தார் தினத்தில் கிளிநொச்சியை உலுக்கிய விபத்து – 2 வயது குழந்தையையடுத்து 34 வயது தாயும் பலி

நத்தார் தினத்தில் கிளிநொச்சியை உலுக்கிய விபத்து – 2 வயது குழந்தையையடுத்து 34 வயது தாயும் பலி !

கிளிநொச்சியில் டிப்பர் வாகனத்தில் விபத்துள்ளான குடும்பம்: மகளை தொடர்ந்து  தாயும் பலி! - ஐபிசி தமிழ்

கிளிநொச்சி  நகரில் கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்ற டிப்பர்  – மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த குடும்பத்தில் மகளை தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த தாயும் உயிரிழந்துள்ளார். குறித்த தாய் நேற்று 02 உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது. சம்பவத்தில் சாவகச்சேரி கல்வயல் பகுதியைச் சேர்ந்த கஜன் யாழினி வயது 34 என்ற இளம் தாய் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி கிளிநொச்சி நகரில் இருந்து இரணைமடு நோக்கிப் பயணித்த டிப்பர் ரக வாகனமொன்று அதற்கு முன்பாக பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காயமடைந்ததுடன் அவர்களில் 2 வயது குழந்தை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்ததது.  விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் டிப்பர் ரக வாகனத்தின் சாரதி மதுபோதையில் இருந்துள்ளார். பின்னர் அவர் பிரதேச மக்களால் பிடிக்கப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சிகிச்சை பெற்றுவந்த  தாயார் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளதுடன் தந்தையும் மூத்த மகளும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புத்தாண்டில் அமெரிக்காவில் 15 பேரை பலியெடுத்த பயங்கரவாத தாக்குதல் – குற்றவாளியாக அமெரிக்க இராணுவவீரர் !

புத்தாண்டில் அமெரிக்காவில் 15 பேரை பலியெடுத்த பயங்கரவாத தாக்குதல் – குற்றவாளியாக அமெரிக்க இராணுவவீரர் !

நியுஓர்லியன்சில் டிரக்கை வேகமாக செலுத்தி பொதுமக்கள் மீது மோதி 15 பேரை கொலை செய்த சம்சுட் டின் ஜபார் என்பவர் அமெரிக்க இராணுவத்தில் 13 வருடங்களாக பணிபுரிந்தவர் எனவும் அவர்  ஆப்கானிலும் பணிபுரிந்தவர் எனவும் கார்டியன் தகவல்கள் வெளியிட்டுள்ளது.

அமெரிக்க இராணுவம் புதன்கிழமை வெளியிட்டுள்ள தகவல்கள்  நியுஓர்லியன்ஸ் தாக்குதலை மேற்கொண்ட நபர் யார் என்பதை  வெளிப்படுத்தியுள்ளன. அமெரிக்க அதிகாரிகளும் நியுஓர்லன்ஸ் அதிகாரிகளும் ஜபார் தனியாக செயற்படவில்லை என கருதுவதாகவும் அவரின் சகாக்களை தேடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.ஜபாரின் டிரக்கில் ஐஎஸ் அமைப்பின் கொடி காணப்பட்டது இது பயங்கரவாத தாக்குதல் என்ற அடிப்படையில் விசாரணைகளை மேற்கொள்கின்றோம் என எஃப்.பி. ஐ தெரிவித்துள்ளது.

ஜபார் 2007 முதல் 2015 சம்சுட் – தின் – ஜபார் அமெரிக்க இராணுவத்தின் மனிதவள பிரிவில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் பணிபுரிந்தவர் எனவும் இதன் பின்னர் அவர் அமெரிக்க இராணுவத்தின் பிரிவில் இணைந்து 2020வரை தகவல்தொழில்நுட்ப நிபுணராக பணியாற்றியிருந்தவர் எனவும் சேவைகால இறுதியில் சார்ஜன்டாக பதவி வகித்தார் எனவும் அறிய முடிகிறது.  ஜோர்ஜியா மாநில பல்கலைகழகத்தில் 2015 முதல் 2017 வரை கல்விகற்ற ஜபார் தகவல் தொழில்நுட்ப பட்டதாரி என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 21ஆம் திகதி ஜேர்மனியிலுள்ள கிறிஸ்மஸ் சந்தையொன்றுக்குள் வைத்தியர் ஒருவர் காரைச் செலுத்தி தாக்குதலை ஏற்படுத்தியதில் ஐவர் உயிரிழந்ததுடன் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘கிளீன் சிறீலங்கா திட்டம்‘ – மக்கள் முதல் இந்த நாட்டின் அத்தனை உயிர்களுக்குமானது – ஜனாதிபதியின் காத்திரமான உரை !

ஒரே ஆண்டில் இலங்கையை விட்டு வெளியேறிய மூன்று லட்சம் பேர் !

ஒரே ஆண்டில் இலங்கையை விட்டு வெளியேறிய மூன்று லட்சம் பேர் !

இலங்கை வரலாற்றில் அதிகளவானோர் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்ற ஆண்டாக 2024ஆம் ஆண்டு பதிவாகியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. 2024ஆண்டில் 312,836 பேர் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது. 185,162 ஆண் தொழிலாளர்களும் 127,674 பெண் தொழிலாளர்களும் இவ்வாறு தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் 2022ஆம் ஆண்டு அதிகளவானோர் தொழிலுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றதாகவும், கடந்த 6 வருடங்களில் 13 இலட்சம் இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊடகங்கள் மீது தணிக்கை விதிக்கும் என்.பி.பி அரசாங்கம்..?

ஊடகங்கள் மீது தணிக்கை விதிக்கும் என்.பி.பி அரசாங்கம்..?

ஊடகங்களுக்கு தணிக்கை விதிக்கும் எண்ணம் புதிய அரசாங்கத்திற்கு இல்லை என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர், டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ இலங்கை இலத்திரனியல் ஒலிபரப்பாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் ஊடக அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தெரிவித்துள்ளார்.

ஊடகங்களும் அரசாங்கமும் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும். மக்களுக்காக ஊடகங்களை முறையாக நிர்வகிக்கும் பொறுப்பை அரசாங்கம் நிறைவேற்றுவதாகவும் ஊடகங்கள் மீது தணிக்கை விதிக்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் வெகுஜன ஊடக அமைச்சு பொறுப்பற்ற, செயலிழந்த இடமாக மாற்றப்பட்டுள்ளதால் வெகுஜன ஊடக அமைச்சை சரியான இடத்திற்கு கொண்டுசெல்வதே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான நோக்கம் என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.

ஊடகங்கள் சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் செயற்படக்கூடிய சூழலை உருவாக்கி ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை இலத்திரனியல் ஒலிபரப்பாளர்கள் சங்கத்தின் அதிகாரிகள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அபிவிருத்தி திட்டங்களை கண்மூடித்தனமாக வடக்கு மக்கள் எதிர்க்கின்றனர் – ஆளுநர் வேதநாயகன் விசனம் !

அபிவிருத்தி திட்டங்களை கண்மூடித்தனமாக வடக்கு மக்கள் எதிர்க்கின்றனர் – ஆளுநர் வேதநாயகன் விசனம் !

கறைபடியாத கரங்களுடன் இருந்தால்தான் பொதுமக்களுக்கு சிறப்பான சேவையைச் செய்ய முடியும். கௌரவ ஜனாதிபதி அவர்களும் இதைத்தான் வலியுறுத்தியிருக்கின்றார்கள். எங்கள் அரசாங்கப் பணியாளர்கள் மக்களுக்கு சேவைவழங்கும் வகையில் எதிர்காலத்தில் தங்களை மாற்றிக்கொள்வதற்குத் தயாராகவேண்டும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வடக்கு மாகாண விவசாய அமைச்சும், முல்லைத்தீவு மாவட்டச் செயலகமும் இணைந்து நடத்திய உலக மண் தின நிகழ்வில் உரையாற்றிய போது தெரிவித்துள்ளார்.

பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர் வேதநாயகன் தனதுரையில், எமது மாகாணத்தில் விவசாயிகள் தங்களை இன்னமும் ஏழை விவசாயிகள் என்று விளித்துக்கூறிக்கொண்டிருக்கின்றனர். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவேண்டும். அவர்களுக்கு நவீன முறைமையிலான விவசாயத்தை அறிமுகப்படுத்தவேண்டும். அபிவிருத்திகளை முன்னெடுக்கும்போது கண்மூடித்தனமாக எதிர்க்கின்றார்கள். அபிவிருத்திகளை முன்னெடுக்கும்போது ஆகக்குறைந்த சூழல் பாதிப்பு இருக்கும். அதை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவுக்கு குறைத்து நாம் செய்யவேண்டும். அதைவிடுத்து எல்லாவற்றையும் எதிர்க்கும் மனநிலையில் நோக்கிக் கொண்டிருந்தால் நாம் முன்னேற முடியாது.

பல அரசு அதிகாரிகள் பிழையானவற்றுக்கு பழகிவிட்டார்கள். எங்கள் வடக்கு மாகாணமும் அதிலிருந்து விதிவிலக்கானது அல்ல. நேர்மையானவர்கள் பழிவாங்கப்படுகின்றார்கள் அல்லது பந்தாடப்படுகின்றார்கள். அதைப்போலத்தான் வசதிபடைத்த செல்வாக்கானவர்கள் அரச திணைக்களங்களுக்கு வந்தால் அவர்களுக்கு மரியாதையுடன் விரைந்து சேவை வழங்கும் அதிகாரிகள், ஏழை எளிய மக்கள் வந்தால் அலைக்கழிக்கின்றனர். இந்த நிலைமை மாறவேண்டும். புதிய அரசாங்கம் மக்கள் நேய சேவையைக் கொண்டு செல்லவே விரும்புகின்றது. அரச அதிகாரிகள் அதற்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொள்ளவேண்டும், என்று ஆளுநர் குறிப்பிட்டார்.