August

August

“கே.பி அரசாங்கத்தால் நடத்தப்படும் முறை ஏற்றுக்கொள்ள முடியாதது” தவிகூ தலைவர் வீ ஆனந்தசங்கரி

a_sangary.jpgவிடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள மன்னிப்பும். அவரை நடத்தி வருகின்ற முறையும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் திரு.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு’வின் முன் சாட்சியமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“இடம்பெயர்ந்த மக்களும், விடுதலைப் புலி போராளிகளும் இன்னும் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில் குமரன் பத்மநாதனுக்கு அரசாங்கம் பரிவு காட்டி வருகின்றது. 10500 இளைஞர்கள் இன்னமும் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எமது பிள்ளைகளான அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தவறு” எனக் குறிப்பிட்ட அவர் அரசாங்கம் கே.பியிலும், அவரது ஆதரவாளர்களிலும் தங்கியிருப்பது குறித்தும் எச்சரிக்கை செய்தார்.

 கே.பி இலங்கையின் அபிவிருத்திக்காக முதலீடு செய்யப்போவதாக கூறப்படும் பணம் சட்டவிரோதமாகவும், பாவ காரியங்களூடாகவும் சேர்க்கப்பட்டவையாகும். அப்பணத்தை அபிவிருத்திக்கு பயன்படுத்துவதன் மூலம் மேற்படி பாவத்தில் அரசாங்கமும் பங்கு கொள்ளக்கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வாழும் மக்களின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாகவும்,  இராணுவத்தினர் மத்தியில் வாழும் அம்மக்கள் சட்டியிலிருந்து அடுப்பிற்குள் விழுந்த நிலையிலுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

புனர்வாழ்வு அளிக்கப்பட்டுவரும் 10,000 பேரையும் விடுவிக்க வேண்டும் – நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் ஆனந்தசங்கரி சாட்சியம்

தடுத்து வைக்கப் பட்டுப் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வரும் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் பத்தாயிரம் பேரையும் விடுவித்து அவர்களை சமூகமயப்படுத்த வேண்டுமென்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

முன்னாள் ஜே. வி. பி. உறுப்பினர்களைப் புனர்வாழ்வளித்து விடுவித்ததைப்போல், புலி உறுப்பினர்களையும், விடுவிக்க வேண்டுமென்று குறிப்பிட்ட அவர், குழுவொன்றை அமைத்து அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்துகொண்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்றார்.

அத்துடன் வடக்கில் மக்களின் சுதந்திரமான இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்து வதற்காக அங்கு சிவில் நிர் வாகத்தை முழுமையாக ஏற் படுத்த வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக் குழுவின் பகிரங்க அமர்வில் ஆனந்தசங்கரி நேற்று சாட்சியமளித்தார். குழுவின் தலைவர் – முன்னாள் சட்டமா அதிபர் சீ.ஆர்.டி. சில்வா தலைமையில் நடைபெற்ற விசாரணையில் சுமார் 45 நிமிடம் சாட்சியமளித்த கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி, குழுவின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.

“தடுத்து வைக்கப்பட்டுள்ள 10 ஆயிரம் பேரும் எமது அப்பாவி பிள்ளைகள். அவர்கள் தவறாக வழிநடத்தப்பட்டு இந்த நிலைக்கு ஆளாகியுள்ளார்களே தவிர எந்தக் குற்றமும் அறியாதவர்கள். அவர்கள் உடலால் சரணடைந்திருந்தாலும் அவர்கள் உணர்வால் சரணடையவில்லை. அவர்கள் அப்பாவிகள். அவர்களைப் பெற்றோரிடம் ஒப்படைத்தால், அவர்கள் சமூகமயப் படுத்துவார்கள். யுத்தம் முடிவடைந்திருக்கும் நிலையில் எமது மக்கள் சுதந்திரமாக அவர்களின் சொந்த மண்ணில் வாழ வேண்டும். இது எமது நாடு. எமது மண். நாம் இந்த நாட்டையே நேசிக்றோம். நான் இந்த நாட்டையே பிரதிநிதித்துவப் படுத்துகிறேன்.

வடக்கில் முழுமையாக சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட வேண்டும். மக்கள் சுதந்திரமாக வாழும் சூழல் ஏற்படாத வரை நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது. எமது பிரச்சினை 50 வருடம் பழைமை வாய்ந்தது. இன்னமும் தீர்வு காணப்படவில்லை” என்று குறிப்பிட்ட ஆனந்த சங்கரி பாதிக்கப்பட்டவர்களுக்கு குறிப்பிட்ட தொகை நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மொழிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தமிழ், சிங்கள மொழிகளைப் பாடசாலை மட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டும் என்றதுடன் ஆங்கிலக் கல்வியைப் போதிப்பதற்காக இந்தியாவிலிருந்து ஆசிரியர்களைத் தருவிக்கலாம் என்றும் யோசனை தெரிவித்தார்.

ஆணைக்குழுவின் முன் நேற்று சாட்சியமளித்த எஸ். எல். குணசேகர, “புலிகள் இயக்கத்திற்கும் ஜே. வி. பி. யினருக்கும் வேறுபாடு கிடையாது. இவர்களும் வன்முறையில் ஈடுபட்டார்கள். ஆனால், இரு அமைப்புக்களின் ஒழுங்கு நடைமுறையே மாறுபட்டிருந்தது” என்று சுட்டிக்காட்டினார்.

சுகவீனமுற்றுள்ள ரணிலின் தாயாரை மகிந்த ராஜபக்ச பார்வையிட்டார்.!

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தாயாரை இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சென்று பார்வையிட்டார்.

 நோயுற்ற நிலையில் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வரும் ரணில் விக்கரமசிங்கவின் தாயார் நளினி விக்கிரமசிங்கவை நேரடியாக வைத்தியசாலைக்குச் சென்று பார்வையிட்டதோடு அவர் சுகமடைய தனது வாழ்த்துக்களையும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு ஜனாதபதி வைத்தியசாலைக்குச் சென்ற போது அங்கு ரணில் விக்கரமசிங்க இருக்கவில்லை எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.

14வயது சிறுமியை பாலியல்வல்லுறவுக்குட்படுத்திய இருவர் கைது!

14 வயது சிறுமியை பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி கட்டுகஸ்தொட்ட என்ற இடத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த 14 வயது சிறுமியின் காதலனான இளைஞன் ஒருவனும் 38 வயதான முச்சக்கரவண்டி சாரதியும் இச்சிறுமியை ஏமாற்றி அழைத்துச்சென்று பாலியல் வல்லறவிற்குட்படுத்தினர் என விசாரணகளில் தெரியவந்துள்ளது.

சம்பந்தப்பட்ட இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும், சிறுமியை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொலிஸார் விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்

பரீட்சை நிலையத்தில் செல்லிடத்தொலைபேசியைப் பயன்படுத்திய மாணவர்கள் விசாரணையில்!

தற்போது க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெற்று வரும் நிலையில், மாத்தறையிலுள்ள பரிட்சை நிலையமொன்றில் இரு மாணவர்கள் செல்லிடத் தொலைபேசியைப் பயனபடுத்தியமைக்காக விசாரணகளுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

இம்மாணவர்கள் பரீட்சையில் ஏதும் மோசடி செய்வதற்காக தொலைபேசியைப் பயன்படுத்தினரா என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும், இம்மாணவர்கள் பரிட்சைகளை பூhத்தி செய்ததும் இது குறித்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பரீட்சை ஆணையாளர் அநுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

தீர்ப்பினை அனுமதித்தார் ஜனாதிபதி – மறுப்பு பொன்சேகா

sa.jpgசரத் பொன்சேகாவை அனைத்து இராணுவ நிலைகளையும் நீக்குமாறு முதலாவது இராணுவ குற்றவியல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை ஜனாதிபதி அங்கீகரித்துள்ளதாக  இராணுவப் பேச்சாளர் கேணல் துமிந்த கமகே தெரிவித்துள்ளார்.

 அதே நேரம் தனக்கெதிரான முதலாவது இராணுவ நீதிமன்ற தீர்ப்பை தான் ஏற்றுக்கொள்ளவில்லை என ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்

நாளை மடுமாதா ஆலயத் திருவிழா

madu.jpgகத்தோலிக்க மக்களின் புனித தலமாக விளங்கும் மருதமடு மாதா ஆலயத்தின் ஆகஸ்ட் விண்ணேற்புத் திருவிழா நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

காலை 6.30 மணிக்கு கூட்டுத் திருப்பலியை தமிழ், சிங்கள, இலத்தீன் மொழிகளில் மன்னார் ஆயர் அதி.வணஇராயப்பு ஜோசப் ஆண்டகை தலைமையில் ஆறு ஆயர்கள் இணைந்து ஒப்புக்கொடுப்பார்கள். அதனையடுத்து அன்னையின் திருச்சொரூப பவனியும் வழிபாடும் ஆசீரும் வழமை போல நடைபெறும்.

கடந்த 6 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான இத்திருவிழாவுக்கு நேற்று வெள்ளிக்கிழமை வரை ஒரு இலட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வந்துள்ளனர். இன்று சனிக்கிழமை மாலை நற்கருணை வழிபாடு, பவனி, ஆசீர் நடைபெறும். இம்முறை வழமையைவிட பெருமளவு பக்தர்கள் வரவுள்ளதால் மடுத்÷தவாலயத்தைச் சூழவுள்ள காட்டுப்பகுதிகள் துப்புரவு செய்யப்பட்டுள்ளன. கூடாரங்கள் அமைத்து மக்கள் தங்கியுள்ளனர்.

குடிநீர் மற்றும் பாவனைக்குரிய நீர்த் தட்டுப்பாடு நிலவுவதாகவும் தொண்டர் அமைப்புகளின் உதவியுடன் அவற்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கண்ணிவெடிகள் அகற்றப்படாது எச்சரிக்கை குறியீடுகள் காணப்படும் இடங்களில் மக்களை நடமாடவேண்டாம் என பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

பொன்சேகா குற்றவாளி: இராணுவ நீதிமன்று தீர்ப்பு

sf.jpgசரத் பொன்சேகா குற்றவாளியென முதலாவது இராணுவ நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது.அவரின் பதவி நிலைகள், பதக்கங்களைப் பறிப்பதற்கான தண்டனையை விதித்துள்ளது. இந்தத் தீர்ப்பு, முப்படைகளின் பிரதம தளபதியான ஜனாதிபதியின் அங்கீகாரத்தின் பின் நடைமுறைக்கு வரும்.

இதன்படி, இத்தகைய சூழ்நிலையில் இராணுவ அதிகாரியொருவர் பதவி நீக்கம் செய்யப்படும் பொழுது, அவருக்கு கிடைத்த பதவி நிலைத் தரம் மற்றும் கெளரவ விருதுகள் அனைத்தையும் இழப்பார்.

சரத் பொன்சேகா மீது விசாரணை நடத்தி வந்த முதலாவது இராணுவ நீதிமன்றம், அவர் சேவையில் இருந்தபோது அரசியலில் ஈடுபட்டாரென்ற குற்றச்சாட்டின் மீதே இந்தத் தீர்ப்பு வழங்கியதாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். இராணுவ நீதிமன்றத்தில் குற்றச்சாட்டிற்கான தீர்ப்பு ஜெனரல் பொன்சேகாவுக்கு வாசிக்கப்பட்டதாக இராணுவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏ.எவ்.பி.செய்திச் சேவை தெரிவித்தது.

5 மாதங்களுக்கு முன்னர் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட இராணுவ நீதிமன்றத்தால் பொன்சேகா மீதான விசாரணை ஆரம்பிக்கப்பட்டது. இராணுவ சேவையிலிருந்தபோது அரசியல் நடவடிக்கைகளில் பொன்சேகா ஈடுபட்டிருந்தாரென்ற குற்றச்சாட்டு தொடர்பாக முதலாவது இராணுவ நீதிமன்ற விசாரணை இடம்பெற்றது. இந்த வாரம் இடம்பெற்ற முதலாவது இராணுவ நீதிமன்ற விசாரணைகளின் போது பொன்சேகா தரப்பு சட்டத்தரணிகள் பிரசன்னமாகியிருக்கவில்லை.

இதேவேளை, மோசடிக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பொன்சேகா மீது மற்றொரு இராணுவ நீதிமன்ற விசாரணை இடம்பெற்று வருகிறது.

கடந்த வருடம் யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து தேசிய கதாநாயகனாக பொன்சேகா புகழப்பட்டார். பின்னர் அரசியலில் இணைந்த ஜெனரல் பொன்கேசா கடந்த ஜனவரியில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியடைந்தார். ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற்ற இரு வாரங்களில் கைதுசெய்யப்பட்ட அவர், ஏப்ரலில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஜனநாயகத் தேசியக் கூட்டணி வேட்பாளராக கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்

கடல்சூரியன் கப்பலுக்குள் கனடா படை பிரவேசம் – 490 பேர் இருப்பதாக கனடா அறிவிப்பு

son-k.jpgஇலங்கை அகதிகள் இருக்கலாமென நம்பப்படும் ‘கடல்சூரியன்  கப்பலுக்குள் கனேடிய கரையோர காவல் படையினர் பிரவேசித்துள்ளதாக கனடா செய்திச் சேவை அறிவித்துள்ளது. 490 தமிழர்களுடன் கடல்சூரியன் கப்பலை இடைமறித்துள்ள கனடிய அதிகாரிகள் அவர்களை விக்டோரியாவின் கிழக்குப் பகுதியிலுள்ள சி.எப்.பி.எஸ்கியூமோட்டுக்கு பாதுகாப்புடன் கொண்டு சென்றிருப்பதாக கனடிய குளோப் அன்ட் மெயில் இணையத்தளம் தெரிவித்திருக்கிறது.

500 இலங்கையர் இருக்கலாமென ஊகங்கள் வெளியிடப்பட்டிருந்த போதும், 490 பேரே கப்பலினுள் இருப்பதாக கனடிய பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் விக்ரோவ்ஸ் அறிவித்துள்ளார். என்றாலும், இவர்கள் அனைவரும் புலிகள் இயக்க உறுப்பினர்களாக இருக்கலாமென நம்புவதாகவும் அவர் கூறினார். “இவர்கள் மீதும் மனிதக் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீதும் கனடா கடுமையான நடவடிக்கை எடுக்கும்” என்றார்.

இந்த அகதிகள் விடயத்தில் கனடா என்ன நடவடிக்கை எடுக்கிறதென்பதை மனிதக் கடத்தலில் ஈடுபடுவோர் மிகவும் கவனமாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நடவடிக்கையைப் பொறுத்து மனிதக் கடத்தலில் தொடர்ந்து ஈடுபடலாமா? இல்லையா? என்பது தான் அவர்களது அங்கலாய்ப்பாக இருக்கிறதெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, மேற்படி கடல்சூரியன் கப்பல் விடயம் தொடர்பாக அமெரிக்காவும் கருத்துத் தெரிவித்துள்ளது.

“இது தொடர்பாக கனடிய அரசுடன் பேசி வருகிறோம். அவதானித்தும் வருகிறோம். ஏதும் அவசரமான நிலை ஏற்படுமாக இருந்தால் அமெரிக்கா பொருத்தமான முறையில் பதிலளிக்கும்” என அமெரிக்க இராஜாங்கத் திணைக் களப் பேச்சாளர் நிகோல் தோம்ஸ்சன் தெரிவித்தார்.

கனேடிய வன்கூவர் சன் செய்திச் சேவையின் தகவல்படி கப்பலில் பயணித்த ஒருவர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.  எனினும், யாரென்ற விடயம் வெளி யாகவில்லை. அதேவேளை, கப்பலில் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவென விக்டோரியாவில் வைத்தியசாலை ஒன்று தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

கப்பலில் வருபவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்க வேண்டாம் என இலங்கையின் உயர்ஸ்தானிகர் கனேடிய அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.

கடல்சூரியன் கப்பலை எச்.எம்.சி.எஸ்.வின்னிபஹ் கப்பலே இடைமறித்திருக்கிறது. வின்னிபெஹ் பலதடவைகள் கடல்சூரியனுடன் தொடர்புகொள்ள முயற்சித்தது. தொடர்பாடல்களை ஏற்படுத்திக்கொண்ட பின்னர் கப்பலில் அகதிகள் இருப்பதாக கடல்சூரியன் அறிவித்தது என்று அவர் கூறியுள்ளார்.  கப்பலானது எஸ்கியூமோட் துறைமுகத்துக்குக் கொண்டு செல்லப்படுமென்பதை கனடாவின் போக்குவரத்துத்துறை உறுதி செய்தது.

நியூஸிலாந்தை வீழ்த்தியது இலங்கை அணி

sri-lankan-cricketers.jpgஇந்தியா, இலங்கை, நியூசிலாந்து அணிகள் மோதும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடக்கிறது. முதல் போட்டியில் இந்திய அணியை, நியூசிலாந்து வீழ்த்தியது. நேற்று தம்புள்ளவில் நடந்த 2 வது போட்டியில் நியூசிலாந்து, இலங்கை அணிகள் மோதின. நியூஸிலாந்து அணியை இலங்கை அணி 3 விக்கெட்டுகளால் தோற்கடித்தது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 48.1ஓவர்களில் 192  ஓட்டங்களடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 40.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 195 ஓட்டங்களைப் பெற்றது.

உபுல் தரங்க ஒரு நாள் அரங்கில் 17 வது அரை சதம் கடந்தார். 9 பவுண்டரிகளுடன் 70 ஓட்டங்கள் சேர்த்து தரங்க இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராகத் தெரிவானார்.

100 விக்கெட்

நேற்றைய போட்டியில், நியூசிலாந்து வீரர் கப்டிலை அவுட்டாக்கிய இலங்கை வீரர் மலிங்கா, ஒரு நாள் போட்டிகளில் 100 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். தவிர, இந்த இலக்கை எட்டும் இலங்கையின் 11 வது வீரரானார்.

இதுவரை 68 போட்டிகளில் பந்து வீசிய மலிங்கா, 102 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் மிகக் குறைந்த போட்டிகளில் 100 விக்கெட்டுகளை எட்டிய முதல் இலங்கை வீரர் என்ற பெருமை பெற்றார்.

மரண தண்டனையை சட்டத்திலிருந்து நீக்க நடவடிக்கை எடுப்பது அவசியம் -நீதியமைச்சு செயலாளர் தெரிவிப்பு

images-00.jpgமரண தண்டனையை சட்டத்திலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென நீதியமைச்சின் செயலாளர் சட்டத்தரணி சுகத கம்லத் தெரிவித்தார். மரண தண்டனை ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. இது ஒருபோதும் குற்றங்களை குறைத்துவிட உதவப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்ற ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது, நீதிமன்றத்தீர்ப்புகள் சுயாதீனமாக அமைய வேண்டும். இதில் எத்தரப்பினரதும் அழுத்தங்கள் இருக்க முடியாது. நீதித்துறையின் கெளரவம் இதன்மூலம் பாதுகாக்கப்படல் வேண்டும்.